Sunday, December 28, 2014

அபிமன்யு உத்தரை திருமணத்திருவிழா! - விராட பர்வம் பகுதி 72

The Nupital festival of Abhimanyu and Uttara! | Virata Parva - Section 72 | Mahabharata In Tamil

(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 47)






பதிவின் சுருக்கம் : உத்தரையை மருமகளாக ஏற்றது ஏன் என்று அர்ஜுனன் விராடனுக்குச் சொன்னது; அர்ஜுனனின் திட்டத்தை விராடன் ஏற்பது; அபிமன்யு உத்தரை திருமணத்திற்காக அர்ஜுனனும் விராடனும் நண்பர்களையும் உறவினர்க்ள அனைவரையும் அழைத்தது; கிருஷ்ணனுடன் கூடிய யாதவர்கள் அனைவரும் பெருஞ்செல்வத்துடன் அங்கே வந்தது; காசி மன்னனும், சைப்பியனும் படைகளுடன் வந்தது; துருபதன் தனது உறவினர்களுடன் வந்தது; அபிமன்யு உத்தரை திருமணம் நிறைவு பெற்றது; அந்தணர்களுக்கு யுதிஷ்டிரன் வழங்கிய கொடை...

விராடன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “ஓ! பாண்டவர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நான் உனக்குத் தந்த எனது மகள் உத்தரையை நீ ஏன் மனைவியாக ஏற்க விரும்பவில்லை?” என்று கேட்டான்.

அதற்கு அர்ஜுனன் {விராடனிடம்}, “நான் உமது அந்தப்புரத்தில் வசித்தபோது, உமது மகளை {உத்தரையைப்} பார்ப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு எப்போதும் வாய்த்தது. தனிமையிலோ, துணையுடனோ இருக்கும்போதெல்லாம் அவளும் {உத்தரையும்} என்னை ஒரு தந்தையை நம்புவது போல நம்பினாள். பாடலையும் ஆடலையும் நன்கு அறிந்ததால், நான் அவளால் விரும்பப்பட்டு, மதிக்கப்பட்டேன். உண்மையில் உமது மகள் என்னை அவளது பாதுகாவலனாகவே [1] எப்போதும் கருதுகிறாள். ஓ! மன்னா, அவள் பூப்படையும் வயதை அடைந்தும் கூட நான் அவளுடன் ஓர் ஆண்டு முழுவதும் வாழ்ந்தேன். இந்தச் சூழ்நிலையில், நீரோ, பிற மனிதர்களோ அவள் மீதோ என் மீதோ காரணமில்லாமலேயே சந்தேகங்கொள்ள இஃது ஏதுவாக இருக்கும்.


[1] ஆங்கிலத்தில் Protector என்று இருக்கிறது. அது Preceptor என்று இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். Preceptor என்றால் ஆசான் என்று பொருள் வரும். வேறு பதிப்புகளில் உத்தரை தன்னை ஆசானாகக் கருதுகிறாள் என்று அர்ஜுனன் சொல்வதாக வருகிறது.

எனவே, ஓ! மன்னா {விராடரே}, என் உணர்வுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தித் தூய்மையாக இருக்கும் நான், ஓ! ஏகாதிபதி {விராடரே}, உமது மகளை {உத்தரையை} எனக்கு மருமகளாய்க் கொடுக்குமாறு உம்மிடம் இரந்து கேட்கிறேன். இப்படியே நான் அவளது தூய்மையை அங்கீகரிக்கிறேன். ஒரு மகனுக்கும் அந்த மகனின் சுயத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லாதது போலவே, ஒரு மருமகளுக்கும் மகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே, இவ்வழியைப் மேற்கொள்வதால் அவளது தூய்மை நிரூபிக்கப்படும். நான் அவதூறுக்கும், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் அஞ்சுகிறேன். எனவே, ஓ! மன்னா {விராடரே}, நான் உமது மகள் உத்தரையை எனது மருமகளாக ஏற்கிறேன். ஆயுத அறிவுடையவர்கள் அனைவரையும் விஞ்சியவனும், அழகில் தெய்வீக இளமையைக் கொண்டவனுமான அந்த வலிய கரங்கள் கொண்ட அபிமன்யு, சக்கரம் தாங்குபவனான வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குப்} பிடித்தமான மருமகனாவான். ஓ! மன்னா {விராடரே}, உமக்கு மருமகனாகவும், உமது மகளுக்குக் கணவனாகவும் தகுந்தவன் அவனே {அபிமன்யுவே}”, என்றான் {அர்ஜுனன்}.

விராடன் {அர்ஜுனனிடம்} ,“அறத்தில் நிலைபெற்ற விவேகியும், குருக்களில் சிறந்த குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்} சொல்வதால் இது தகுந்ததே. ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, இதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, அதைச் செய்வாயாக. தனது மருமகனின் தந்தையாக {தனது சம்பந்தியாக} அர்ஜுனனைக் கொண்டிருப்பவன் தனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறியவனாக இருப்பான்” என்றான் {விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த ஏகாதிபதி {விராடன்} இதைச் சொன்னதும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், மத்ஸ்ய மன்னனுக்கும் {விராடனுக்கும்}, அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அந்த ஒப்பந்தத்திற்குத் தனது ஏற்பைத் தெரிவித்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு, வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} அழைப்பை அனுப்பினான். விராடனும் அதையே செய்தான். பதிமூன்றாம் வருடத்தின் நிறைவுக்குப் பிறகு, அந்த ஐந்து பாண்டவர்களும், விராடனின் நகரங்களில் ஒன்றான உபப்லாவியத்தில் {Upaplavya} தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். பாண்டுவின் மகனான பீபத்சு {அர்ஜுனன்}, ஆனர்த்த நாட்டில் இருந்து தாசார்ஹ குலத்தின் மக்கள் பலரையும், அபிமன்யுவையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} அழைத்து வந்தான்.

யுதிஷ்டிரனுக்கு மிக நெருங்கிய நண்பர்களான காசியின் மன்னனும், சைவியனும் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணி* துருப்புகளுடன் அங்கே வந்தனர். வலிமைமிக்கத் துருபதன், திரௌபதியின் வீரமிக்க மகன்களுடனும், வீழ்த்தப்பட முடியாத சிகண்டியுடனும், ஆயுதம் தாங்குபவர்களில் முதன்மையான ஒப்பற்ற திருஷ்டத்யும்னனுடனும், ஓர் அக்ஷௌஹிணி* துருப்புகளுடனும் வந்தான். அங்கு வந்த மன்னர்கள் அனைவரும் அக்ஷௌஹிணி தலைவர்களாக மட்டும் இல்லாமல், வேள்விகளில் அந்தணர்களுக்கு அபரிமிதமாகக் கொடையளிப்பவர்களாகவும், வேத அறிவுடன் வீரம் கொண்டவர்களாகவும், போரில் மரணத்தைத் தழுவத் தயாராக இருப்பவர்களாகவும் இருந்தனர்.

*அக்ஷெளணிக்கான குறிப்பு:
- See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section2a.html
முனிவர்கள், ``'ஓ சூதரின் குமாரனே {சௌதியே}, அக்ஷௌஹிணி என்பது என்ன? அதில் எத்தனை குதிரைகள், காலாட்கள், தேர்கள், யானைகள் இருக்கும். முழுவதும் கூறு,” என்றனர்.

18 அக்ஷௌஹிணி படைகள்
சௌதி சொன்னார்,'ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்கள், மூன்று குதிரைகள் அடங்கியது ஒரு பட்டி, மூன்று பட்டிகள் ஒரு சேனாமுகம், மூன்று சேனாமுகங்கள் ஒரு குல்மம் என்றழைக்கப்படும். மூன்று குல்மாக்கள் ஒரு கணம், மூன்று கணங்கள் ஒரு வாகினி, மூன்று வாகினிகள் சேர்ந்தது ஒரு பிருதனை என்றழைக்கப்படும். மூன்று பிருதனாக்கள் சேர்ந்தது ஒரு சம்மு, மூன்று சம்முக்கள் ஒரு அனீகினி, பத்து அனீகினிக்கள் சேர்ந்ததுதான் ஒரு அக்ஷௌஹிணி. ஓ அந்தணர்களே, கணிதவியலாளர்கள், ஒரு அக்ஷௌஹிணியில் இருபத்து ஓராயிரத்து எண்ணூற்று எழுபது {21870} தேர்களும், அதே எண்ணிக்கையில் யானைகளும் {21870}, ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து முன்னூற்றி ஐம்பது {109350} காலாட்படைவீரர்களும்,  அறுபத்தைந்து ஆயிரத்து அறுநூற்று பத்தும் {65610} குதிரைகளும் ஆகும். ஓ அந்தணர்களே! இதுதான் ஒரு அக்ஷௌஹிணியின் கணக்காகும் என்று எண்களின் இலக்கணப்படிச் சொல்கிறார்கள். இந்தக் கணக்குப்படி கௌரவர்களும் பாண்டவர்களுமாக பதினெட்டு{18} அக்ஷௌஹிணி படைகள் இருந்தன.
 - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section2a.html }

அவர்கள் வந்ததைக் கண்ட அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, முறைப்படி அவர்களை வணங்கி, அவர்களது துருப்புகளையும், பணியாட்களையும், சுமை தூக்கிகளையும் மகிழ்வித்தான். அவன் {விராடன்} தனது மகளை {உத்தரையை} அபிமன்யுவுக்கு அளிப்பதில் மிகவும் மகிழ்ந்திருந்தான். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மன்னர்கள் வந்த பிறகு, மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அங்கு வந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, ஹலாயுதன் {பலராமன்}, ஹ்ருதிகனின் மகன் கிருதவர்மன், சத்யகனின் மகன் யுயுதானான், ஆனாத்ருஷ்டி, அக்ரூரர், சாம்பன், நிசடன் ஆகியோருடன் வந்தான். எதிரிகளை அழிப்பவர்களான அவர்கள் {அந்த யாதவர்கள்} தங்களுடன் அபிமன்யுவையும், அவனது தாயையும் {சுபத்திரையையும்} அழைத்து வந்தனர். ஒரு வருடம் முழுவதும் துவாரகையில் வசித்த இந்திரசேனனும் மற்றவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்ட பாண்டவர்களின் தேர்களைத் தங்களுடன் கொண்டு வந்தனர். அந்த விருஷ்ணிகளில் புலியான பெரும் பிரகாசமிக்க வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தொடர்ந்து, பத்தாயிரம் {10,000} யானைகளும், பத்தாயிரம் {10,000} தேர்களும், பத்து கோடி {10,00,00,000 Hundred Million} குதிரைகளும், பத்தாயிரம் கோடி {10000,00,00,000 Hundred Billion} காலாட்படையினரும், பெரும் சக்தி கொண்ட எண்ணற்ற விருஷ்ணிகளும், அந்தகர்களும், போஜர்களும் அங்கே வந்தனர்.

ஒப்பற்ற பாண்டுவின் மகன்கள் ஒவ்வொருவருக்கும், எண்ணற்ற அடிமைப்பெண்களையும், ரத்தினங்களையும், ஆடைகளையும் கிருஷ்ணன் கொடுத்தான். பிறகு மத்ஸ்ய மன்னன் {விராடன்} மற்றும் பாண்டவர் குடும்பங்களின் திருமணத் திருவிழா ஆரம்பித்தது. பாண்டவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சங்குகள், கைத்தாளங்களும், கொம்புகளும், பேரிகைகளும் மற்றும் பிற இசைக்கருவிகள் விராடனின் அரண்மனையில் ஒலிக்கத் தொடங்கின. பல்வேறு வகையான மான்களும், தூய்மையான விலங்குகளும் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டன. பல்வேறு வகையான மதுவகைகளும், மரங்களில் இருந்து எடுக்கப்பட்ட போதைச் சாறுகளும் அபரிமிதமாகச் சேகரிக்கப்பட்டன. பாடுவதில் வல்லவர்களும், பழங்கதைகள் அறிந்தவர்களுமான நாடகக் கலைஞர்களும், புலவர்களும், துதிபாடிகளும் மன்னர்களுக்காகக் காத்திருந்து, அவர்களது புகழையும் குல வரிசைகளையும் {வம்ச வரலாறுகளையும்} பாடினர்.

சமச்சீரான உடல்கள் மற்றும் கால்கள் கொண்ட முதிர்வயது பெண்கள், திருமண முடிச்சுக் கட்டப்படும் இடத்திற்கு {திருமண மண்டபத்திற்கு} சுதேஷ்ணையின் தலைமையில் வந்தனர். அழகிய நிறமும், அற்புத ஆபரணங்களும் கொண்ட அந்த அழகிய பெண்களுக்கு மத்தியில், அழகிலும், புகழிலும், காந்தியிலும் கிருஷ்ணையே {திரௌபதியே} முதன்மையானவளாக இருந்தாள். பெரும் இந்திரனின் மகளைப் போல அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த இளவரசி உத்தரையை அழைத்துக் கொண்டு அவர்கள் அனைவரும் அங்கே வந்தனர்.

பிறகு, குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, சுபத்திரையின் மூலம் பிறந்த தனது மகன் {அபிமன்யு} சார்பாக, குறைகளற்ற அங்கங்கள் கொண்ட விராடனின் மகளை {உத்தரையை} ஏற்றுக் கொண்டான். இந்திரனைப் போல அங்கே நின்று கொண்டிருந்த பெரும் மன்னனான குந்தியின் மகன் யுதிஷ்டிரனும் அவளை {உத்தரையை} தனது மருமகளாக ஏற்றுக் கொண்டான். அவளை ஏற்றுக் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தன் முன் ஜனார்த்தனனைக் {கிருஷ்ணனைக்} கொண்டு, சுபத்திரையின் ஒப்பற்ற மகனின் {அபிமன்யுவின்} திருமண விழாவை நடத்தச் செய்தான்.

பிறகு அவனுக்கு {அர்ஜுனனுக்கு}, விராடன், காற்றின் வேகம் கொண்ட ஏழாயிரம் {7000} குதிரைகளையும், சிறந்த வகையிலான இருநூறு {200} யானைகளையும், பெருஞ்செல்வத்தையும் (வரதட்சணையாகக்) கொடுத்தான். சுடர்விடும் நெருப்புக்குள் தெளிந்த நெய்யை நீர்க்காணிக்கையாகக் கொடுத்து, இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்கு} மரியாதை செலுத்திய விராடன், பாண்டவர்களுக்குத் தனது நாடு, படை, கருவூலம், மற்றும் தன்னையே காணிக்கையாகக் கொடுத்தான்.

திருமணம் நிறைவு பெற்றதும், தர்மனின் மகனான யுதிஷ்டிரன், மங்காப்புகழ் கொண்ட கிருஷ்ணன் கொண்டு வந்த செல்வத்தை அந்தணர்கள் அனைவருக்கும் காணிக்கையாகக் கொடுத்தான். மேலும், ஆயிரக்கணக்கான பசுக்களையும், பல்வேறு வகைகளிலான ஆடைகளையும், அற்புத ஆபரணங்களையும், வாகனங்களையும், படுக்கைகளையும், பல்வேறு வகைகளிலான இனிய பானங்களையும், பல்வேறு இனங்களிலான சிவந்த பானங்களையும் கொடுத்தான். அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தணர்களுக்கு, நிலக்கொடையும், ஆயிரக்கணக்கான கால்நடைகளையும் உரிய சடங்குகளுடன் அளித்தான். ஆயிரக்கணக்கான குதிரைகளையும், தங்கம் மற்றும் பிற வகைச் செல்வங்களையும் அதிகமாக, வயது முதிர்ந்தவர்கள் அனைவருக்கும் கொடுத்தான். மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, நன்கு உண்டு மகிழ்ச்சியுடனிருந்த மனிதர்களால் நிரம்பிய அந்த மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} நகரம், பெரும் திருவிழா நடைப்பதைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது” என்றார் {வைசம்பாயனர்}.

****************** கோஹரணப் பர்வம் முற்றிற்று ******************
********* விராட பர்வம் முற்றிற்று *********
இப்பதிவின் PDF பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்