Showing posts with label சத்தியவதி. Show all posts
Showing posts with label சத்தியவதி. Show all posts

Sunday, July 19, 2015

காசி மன்னனின் மகள்களைக் கடத்திய பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 174

Bhishma took away the daughters of the Kasi king! | Udyoga Parva - Section 174 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 1)

பதிவின் சுருக்கம் : பாஞ்சாலர்களைக் கொல்வதாகத் தனக்கு உறுதியளித்துவிட்டு, சிகண்டியுடன் போரிடமாட்டேன் என்று பீஷ்மர் சொல்வதன் காரணம் என்ன என்று துரியோதனன் கேட்பது; அதற்கான பதிலாகப் பழைய நிகழ்வொன்றை பீஷ்மர் சொல்வது; சுயம்வரத்திற்குக் காத்திருந்த காசி மன்னனின் மகள்களைப் பீஷ்மர் கடத்துவது; அங்குக் கூடியிருந்த மன்னர்கள் அனைவருடனும் போரிட்டு அவர்களை வீழ்த்துவது; ஹஸ்தினாபுரம் திரும்பிய பீஷ்மர், காசி மன்னன் மகள்களைச் சத்தியவதியிடம் ஒப்படைப்பது...

துரியோதனன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதர்களின் தலைவரே {பீஷ்மரே}, ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு எதிரியாகச் சிகண்டி உம்மை அணுகிவருவதைக் கண்டாலும் அவனைக் கொல்ல மாட்டீரா? ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, "நான் சோமகர்களுடன் கூடிய பாஞ்சாலர்களைக் கொல்வேன்" என்று என்னிடம் முன்பு சொன்னீரே. ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, ஓ! பாட்டா, (தற்போதைய உமது மாற்றத்துக்கான காரணத்தை) எனக்குச் சொல்லும்" என்றான்.


பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, போர்க்களத்தில் சிகண்டியைக் கண்டாலும், நான் ஏன் அவனைக் கொல்ல மாட்டேன் என்பதை இந்தப் பூமியின் தலைவர்கள் அனைவருடன் சேர்ந்து நீயும் கேட்பாயாக!

ஓ! மன்னா {துரியோதனா}, எனது தந்தை சந்தனு உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வந்தார். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த அறம் சார்ந்த மன்னன் {சந்தனு}, உரிய நேரத்தில் இயற்கையின் கடனைத் தீர்த்தார் {இயற்கை ஏய்தினார்}. எனது உறுதி மொழியை நோற்ற நான், ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, எனது தம்பியான சித்திராங்கதனை, குருக்களின் பரந்த நாட்டின் அரியணையில் நிறுவினேன்.

சித்திராங்கதனின் மறைவுக்குப் பின், சத்தியவதியின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தும், விதியின் படியும் விசித்திரவீரியனை மன்னனாக நிறுவினேன். வயதில் இளையவனாக இருப்பினும் என்னால் முறையாக நிறுவப்பட்ட அந்த அறம்சார்ந்த விசித்திரவீரியன், ஓ! ஏகாதிபதி அனைத்திலும் என்னையே எதிர்பார்த்திருந்தான். அவனுக்கு {விசித்திரவீரியனுக்கு} திருமணம் செய்ய விரும்பிய நான், தகுந்த குடும்பத்தில் இருந்து மகள்களை {மருமகள்களை} அடையவதில் எனது இதயத்தை நிலைநிறுத்தினேன்.

(அந்த நேரத்தில்), ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, காசி ஆட்சியாளனின் மகள்களும், ஒப்பற்ற அழகுடையவர்களுமான அம்பை, அம்பிகை மற்றும் அம்பாலிகை ஆகிய மூன்று கன்னிகைகள் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்றும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, பூமியின் மன்னர்கள் அனைவரும் அதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று நான் கேள்விப்பட்டேன்.

ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அந்தக் கன்னிகையரில் அம்பை மூத்தவளாகவும், அம்பிகை இரண்டாவதாகவும், அம்பாலிகை இளையவளாகவும் இருந்தனர். காசியின் ஆட்சியாளனின் நகரத்திற்கு {வாராணசிக்கு} நானே தனித்தேரில் சென்று, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த மூன்று கன்னிகையரையும், அந்த நிகழ்வுக்காக அங்கே அழைக்கப்பட்டிருந்த பூமியின் மன்னர்கள் அனைவரையும் கண்டேன்.

பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, மோதலுக்குத் தயாராயிருந்த மன்னர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவி, அந்தக் கன்னிகையரை எனது தேரில் ஏற்றிக்கொண்டு, அங்குக் கூடியிருந்த மன்னர்கள் அனைவரிடமும் மீண்டும் மீண்டும், "சந்தனுவின் மகனான பீஷ்மன் இந்த மங்கையரைப் பலவந்தமாகத் தூக்கிச் செல்கிறான். மன்னர்களே, உங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி இவர்களை மீட்க முயற்சிப்பீராக! மனிதர்களில் காளைகளே, எனது செயல்பாட்டால் உங்கள் அனைவரையும் பார்வையாளர்களாக்கிவிட்டு, பலவந்தமாகவே நான் இவர்களைத் தூக்கிச் செல்கிறேன்," என்று சொன்னேன்.

இந்த எனது வார்த்தைகளைக் கேட்டவர்களும், பூமியின் ஆட்சியாளர்களுமான அவர்கள் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு எழுந்தார்கள். பிறகு கோபத்துடன் தங்கள் தேரோட்டிகளிடம் அவர்கள், "தேரைத் தயார் செய்யுங்கள். தேரைத் தயார் செய்யுங்கள்" என்றனர். அப்படி மீட்க எழுந்த அந்த ஏகாதிபதிகளில், தேர்வீரர்கள் மேகத் திரள் போன்ற தங்கள் தேர்களிலும், யானையில் இருந்து போரிடுபவர்கள் தங்கள் யானைகளிலும், பிறர் தங்கள் பருத்த குதிரைகளிலும் ஏறினார்கள்.

பிறகு, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அந்த மன்னர்கள் அனைவரும் எண்ணிக்கையில் பலவாக இருந்த தேர்களில் ஏறி அனைத்துப் புறத்திலும் இருந்து என்னைச் சூழ்ந்தார்கள். தானவர்கள் கூட்டத்தை வீழ்த்தும் தேவர்களின் தலைவனைப் போல நான், அனைத்துப் புறங்களிலும் இருந்து விரைந்து வந்த அவர்களை எனது கணைமாரியால் தடுத்தேன்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே, சிரித்துக் கொண்டே, நான், முன்னேறி வந்த அந்த மன்னர்களுடையதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் பல்வேறு நிறங்களிலானதுமான கொடிக்கம்பங்களை வெட்டினேன். அந்த மோதலில், குதிரைகள், யானைகள், தேரோட்டிகள் ஆகிய ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கணையால் வீழ்த்தினேன். எனது (கர) வேகத்தைக் கண்ட அவர்கள் (போரில் இருந்து) விலகி ஓடினர். பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரையும் வீழ்த்திய நான் ஹஸ்தினாபுரம் திரும்பி, எனது தம்பிக்காகக் {விசித்திரவீரியனுக்காகக்} கொண்டு சென்றிருந்த அந்தக் கன்னிகையரை சத்தியவதியிடம் ஒப்படைத்து, நான் செய்தவை அத்தனையையும் அவளிடம் {சத்தியவதியிடம்} தெரிவித்தேன்" என்றார் {பீஷ்மர்}.


Saturday, June 27, 2015

"என் நாடு! எவனுக்கு உரிமை?" என்ற பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 147

"My kingdom! whose right?" said Bhishma | Udyoga Parva - Section 147 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –76)

பதிவின் சுருக்கம் : ஹஸ்தினாபுரத்தில் இருந்து திரும்பிய கிருஷ்ணன் உபப்லாவ்யம் அடைந்தது; ஹஸ்தினாபுரத்தில் நடந்தது அத்தனையும் பாண்டவர்களிடம் தெரிவித்தது; யுதிஷ்டிரன் அதை மீண்டும் திரும்பச் சொல்லும்படி கேட்டதும், துரியோதனனிடம் பீஷ்மர் பேசிய பேச்சைக் கிருஷ்ணன் விவரித்துச் சொன்னது; பாண்டவர்களுக்குப் பாதி நாட்டைக் கொடுக்குமாறு பீஷ்மர் துரியோதனினடம் சொன்னைக் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஹஸ்தினாபுரத்தில் இருந்து உபப்லாவ்யத்திற்குத் திரும்பியவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, நடந்த அத்தனையும் பாண்டவர்களிடம் சொன்னான். நீண்ட நேரம் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} கலந்தாலோசித்து, மீண்டும் மீண்டும் ஆலோசனைகள் வழங்கிய சௌரி {கிருஷ்ணன்}, ஓய்வெடுக்கத் தனது பகுதிக்கு {மாளிகைக்குச்} சென்றான். விராடனுடன் கூடிய மன்னர்கள் அனைவரையும், அவர்கள் தலைமையில் இருந்த பிறரையும் அனுப்பிய பாண்டவர்கள், சூரியன் மறையும்போது, தங்கள் மாலைத் துதிகளைச் சொன்னார்கள். கிருஷ்ணனில் தங்கள் இதயங்களை நிலைக்க வைத்த அவர்கள், அவனைக் {கிருஷ்ணனைக்} குறித்தே சிந்திக்கலானார்கள். இறுதியாக, தாசார்ஹ குலத்துக் கிருஷ்ணனைத் தங்கள் மத்தியில் கொண்டு வந்து, தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மீண்டும் விவாதித்தார்கள்.


யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {புண்டரீகாக்ஷனே} {கிருஷ்ணா}, நாகபுரத்திற்கு {ஹஸ்தினாபுரத்தின் மற்றொரு பெயர்} சென்று, (குருக்களின்) சபையில், திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} நீ சொன்ன அனைத்தையும் எங்களுக்குச் சொல்வதே உனக்குத் தகும்" என்றான். அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "நாகபுரத்திற்குச் {ஹஸ்தினாபுரத்திற்குச்} சென்ற நான், நன்மையானவையும், {அறிவுக்குகந்த} காரணம் நிரம்பியவையும், உண்மையானவைமான சொற்களைத் திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} சொன்னேன். எனினும், தீய மனம் கொண்ட அவன் {துரியோதனன்} அவற்றை ஏற்கவில்லை" என்றான் {கிருஷ்ணன்}.

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, தவறான வழியில் துரியோதனன் நடக்க விரும்பிய போது, குருக்களில் முதிர்ந்தவரான பாட்டன் {பீஷ்மர்}, பழியுணர்ச்சி கொண்ட அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} என்ன சொன்னார்? பரத்வாஜரின் மகனான பெரும் அருள் கொண்ட ஆசான் {துரோணர்} என்ன சொன்னார்? அவனைப் பெற்றோரான திருதராஷ்டிரரும், காந்தாரியும் என்ன சொன்னார்கள்? அறமறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், எங்கள் நிமித்தமாக எப்போதும் துயர் கொண்டவரும், எங்களை மகனாகக் கருதுபவரும், எங்கள் சிறிய தந்தையுமான க்ஷத்ரி {விதுரர்}, அந்தத் திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} என்ன சொன்னார்? அந்தச் சபையில் அமர்ந்திருந்த மன்னர்கள் அனைவரும் என்ன சொன்னார்கள்?

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நடந்ததை நடந்தவாறே எங்கள் அனைவருக்கும் சொல்வாயாக. தன்னைத்தானே அறிவாளியாகக் கருதுபவனும், பேராசை மற்றும் காமத்தில் மூழ்கியிருப்பவனுமான தீய துரியோதனனுக்கு ஏற்பில்லாத வகையில், குருக்களின் தலைவர்களும் (பீஷ்மரும், திருதராஷ்டிரரும்}, குருக்களின் அந்தச் சபையில் இருந்த மற்ற பிறரும் பேசிய பேச்சுக்களை ஏற்கனவே நீ {எங்களிடம்} சொன்னாய். எனினும், ஓ! கேசவா {கிருஷ்ணா}, அவ்வார்த்தைகள் எனது நினைவில் நிற்கவில்லை. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, நான் அவ்வார்த்தைகளை மீண்டும் கேட்க விரும்புகிறேன். ஓ! தலைவா {கிருஷ்ணா}, வாய்ப்பைக் கடந்துவிடாதபடியான ஒரு வழியில் நீ செயல்படுவாயாக. {காலங்கடத்தாமல் சொல்வாயாக}. ஓ! கிருஷ்ணா, நீயே எங்களது புகலிடம், நீய எங்களது தலைவன், நீயே எங்களது வழிகாட்டியுமாவாய்!", என்றான் {யுதிஷ்டிரன்}.

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மன்னன் சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, குருக்களின் சபைக்கு மத்தியில் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்பீராக. ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரரே}, அவற்றை உமது மனத்தில் தாங்குவீராக. எனது வார்த்தைகள் முடிந்ததும், திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} உரக்கச் சிரித்தான். இதனால் பெரிதும் கோபமுற்ற பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, நமது குலம் ({குலத்தைப்} பாதுகாப்பது) குறித்து நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கேள். அதைக் கேட்ட பிறகு, ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனா}, உனது குடும்பத்திற்கு {குலத்திற்கு} நன்மையானதைச் செய்வாயாக.

ஓ! ஐயா {துரியோதனா}, ஓ! மன்னா, எனது தந்தை சந்தனு உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவராக இருந்தார். முன்பு, நானே அவரது {சந்தனுவின்} ஒரே மகனாக இருந்தேன். "ஒரே மகனாக இருப்பவன் மகன் அல்ல {ஒரே மகன் உள்ளவன் மகனில்லாதவனே} என்பதே அறிவுள்ளோர் வாக்கு. எனது குலம் அழிவடையாதிருக்கட்டும், எனது புகழ் பரவ வேண்டும்" என்பதே அவரது {சந்தனுவின்} ஆசையாக இருந்தது. இதனால், இரண்டாவது மகனைத் தான் எப்படிப் பெறுவது என்ற விருப்பம் அவரது {சந்தனுவின்} இதயத்தில் எழுந்தது. இதுவே அவரது விருப்பம் என்பதை அறிந்த நான், எனது தந்தைக்காகவும், நமது குலத்திற்காகவும், நோற்க {நோன்பு ஏற்று வாழக்} கடுமையான உறுதிமொழியைச் செய்து, காளியை {சத்யவதியை} எனது தாயாக அழைத்து வந்தேன்.

னது உறுதிமொழியின் விளைவால், நான் மன்னனாக முடியவில்லை என்பதும், எனது உயிர்வித்தை நான் மேலெழச் செய்திருக்கிறேன் என்பதும் நிச்சயமாக உன்னால் நன்கு அறியப்பட்டவையே. (நான் அதற்காக வருந்தவும் இல்லை). எனது வாக்குறுதியை நோற்று, மகிழ்ச்சியுடனும், இன்பத்துடனும் வாழ்ந்து வரும் என்னை இதோ பார்.

ஓ! மன்னா {துரியோதனா}, குரு குலத்தைத் தாங்கியவர்களில் அழகனும், வலிய கரங்களைக் கொண்டவனும், அற ஆன்மா கொண்டவனுமான விசித்திரவீரியன், எனது தம்பியாக அவளிடம் {காளி என்ற சத்தியவதியிடம்} பிறந்தான். என் தந்தை {சந்தனு} விண்ணேகியதும், என்னை நான் விசித்திரவீரியனுக்குப் பணியாளாக நிறுத்திக் கொண்டு, எனது நாட்டின் ஆட்சியாளனாக அவனை {விசித்திரவீரியனை} நிறுவினேன். ஓ! மன்னர்களுக்கு மன்னா {துரியோதனா}, பிறகு பல ஏகாதிபதிகளின் கூட்டத்தை வீழ்த்தி, தகுந்த மனைவிகளை, நான் அவனுக்குக் {விசித்திரவீரியனுக்குக்} கொணர்ந்தேன். நீ அதை அடிக்கடி கேட்டிருக்கிறாய்.

சில காலத்திற்குப் பிறகு, நான் (பெரும்) ராமரிடம் {பரசுராமரிடம்} தனிப்போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ராமரிடம் {பரசுராமரிடம்} கொண்ட அச்சத்தால், எனது தம்பி {விசித்திரவீரியன்} ஓடிவிட்டான். மேலும் அவனது குடிமக்களும் {அப்போது} அவனைக் கைவிட்டனர். இந்தக் காலத்தில் தான், அவன் தனது மனைவியரிடம் மிகவும் பற்றுக் கொண்டான். அதன் காரணமாக அவனை உருக்கு நோய் {phthisis = உடலை மெலியச் செய்யும் காச நோய்; க்ஷய ரோகம்} தாக்கியது. அவனது மரணத்தை அடுத்து, நாட்டில் அரசின்மை ஏற்பட்டது. தேவர்கள் தலைவன் {இந்திரன்}, (நாட்டின் மீது) ஒரு துளி மழையும் பொழியாமல் இருந்தான்.

பிறகு, பட்டினி என்ற அச்சத்தால் பாதிக்கப்பட்ட குடிமக்கள், என்னிடம் துரிதமாக வந்து, "உமது குடிமக்கள் அழிவின் விளிம்பில் நிற்கிறார்கள். எங்கள் நன்மைக்காக, நீர் எங்கள் மன்னனாவீராக. இந்த வறட்சியை விரட்டுவீராக. ஓ! சந்தனுவின் குலத்தைத் தழைக்க வைப்பவரே {பீஷ்மரே}, நீர் அருளப்பட்டிரும். உமது குடிமக்கள் கடுமையான மற்றும் பயங்கரமான நோய்களால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்களில் {குடிமக்களில்} வெகு சிலரே இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். ஓ! கங்கையின் மகனே {காங்கேயரே = பீஷ்மரே}, அவர்களைக் காப்பதே உமக்குத் தகும். இந்த வேதனைகளை {சித்திரவதைகளை} விரட்டுவீராக {நோய்களைப் போக்குவீராக}. ஓ! வீரரே {பீஷ்மரே}, உமது குடிமக்களை நீதியுடன் பேணிக் காப்பீராக. நீர் உயிரோடிருக்கையில், இந்த நாடு அழிவடையாதிருக்கட்டும்" என்று {குடிமக்கள்} கூறினர்.

அழுகுரலுடன் அவர்கள் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டும், எனது இதயம் கலங்காதிருந்தது. நல்லோரின் நடத்தையை நினைவுகூர்ந்த நான், எனது நோன்பைக் {வாக்குறுதியைக்} காக்கவே விரும்பினேன். பிறகு, ஓ! மன்னா {துரியோதனா}, குடிமக்கள், மங்கல குணம் கொண்ட எனது தாய் காளி {சத்தியவதி}, எனது பணியாட்கள், புரோகிதர்கள், (எங்கள் வீட்டைச் சார்ந்த) ஆசான்கள், கல்வி அறிவுள்ள பல அந்தணர்கள் ஆகிய அனைவரும் பெருந்துன்பத்தால் பீடிக்கப்பட்டு, என்னை அரியணை ஏறும்படி வேண்டினார்கள்.

அவர்கள், "(பழங்காலத்தில்) பிரதீபனால் ஆளப்பட்ட நாடு, நீ உயிரோடிருக்கையில் {நீ வாழ்ந்து கொண்டிருக்கும்போதே} அழிந்து போகலாமா? ஓ! பரந்த இதயம் கொண்டவனே {பீஷ்மா}, எங்கள் நன்மைக்காக நீ மன்னனாவாயாக" என்றனர். அவர்களால் இப்படிச் சொல்லப்பட்டவனும், துன்பம் நிறைந்து பெரிதும் பாதிக்கப்பட்டவனுமான நான், எனது கரங்களை ஒன்றாகக் குவித்து, எனது பெற்றோரிடம் {தந்தையிடம்} கொண்ட மரியாதையால், நான் ஏற்ற நோன்பைத் தெரிவித்தேன். எங்கள் குலத்துக்காகவே நான் எனது உயிர் வித்தை மேலெழுப்பி, அரியணையை உதறி வாழும் நோன்பை நோற்றேன் என்று அவர்களிடம் திரும்பத் திரும்பக் கூறினேன். அதிலும் குறிப்பாக எனது தாய்க்காகவே {சத்தியவதிக்காகவே} நான் மீண்டும் அப்படிச் செய்தேன். எனவே, நான், "நுகத்தடியில் என்னைப் பூட்ட வேண்டாம்" என்று அவர்களிடம் இரந்து கேட்டேன்.

மீண்டும் நான் எனது கரங்களைக் கூப்பி, எனது தாயைச் {சத்தியவதியைச்} சமாதானப்படுத்தும் வகையில், "ஓ! தாயே, சந்தனுவால் பெறப்பட்டு, குரு குலத்தின் உறுப்பினராக இருக்கும் நான், எனது உறுதிமொழியைப் பொய்யாக்க முடியாது" என்று சொன்னேன். இதையே நான் மீண்டும் மீண்டும் அவளிடம் {சத்தியவதியிடம்} சொன்னேன். ஓ! மன்னா {துரியோதனா}, மேலும் நான் {சத்தியவதியிடம்}, "ஓ! தாயே, குறிப்பாக உனக்காகவே நான் இந்த நோன்பை நோற்றேன்; தாய்ப்பாசத்தின் சிறந்த அடையாளமான {எடுத்துக்காட்டான} உனக்கு, ஓ! தாயே, நிச்சயம் நான் பணியாளும் அடிமையுமாவேன்" என்றேன்.

இப்படி என் தாயிடமும், {குடி}மக்களிடமும் இரந்து கேட்ட நான், பிறகு, பெரும் தவசியான வியாசரை அணுகி, எனது தம்பியின் {விசித்திரவீரியனின்} மனைவியரிடம் பிள்ளைகளைப் பெறுமாறு வேண்டினேன். உண்மையில், ஓ! மன்னா {துரியோதனா}, நானும், எனது தாயும் {சத்தியவதியும்} அந்த முனிவரை {வியாசரை} மனநிறைவு கொள்ளச் செய்தோம். இறுதியில், ஓ! மன்னா {துரியோதனா}, பிள்ளைகள் குறித்த எங்களது வேண்டுதல்களை அந்த முனிவர் {வியாசர்} அருளினார். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {துரியோதனா}, மொத்தமாக அவர் {வியாசர்} மூன்று பிள்ளைகளைப் பெற்றார்.

உன் தந்தை {திருதராஷ்டிரன்} பார்வையற்றவனாகப் {குருடனாகப்} பிறந்தான், ஒரு புலனில் பிறவிக் குறைபாடு கொண்டதன் விளைவாக, அவனால் {திருதராஷ்டிரனால்} மன்னனாக முடியவில்லை {முடியாது}. உயர் ஆன்மா கொண்டவனும், கொண்டாடப்பட்டவனுமான பாண்டுவே மன்னனானான். பாண்டு மன்னனானான் எனும்போது, அவனுடைய மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் தந்தைவழி பரம்பரை உரிமையைப் பெற வேண்டும். ஓ! ஐயா {துரியோதனா}, சண்டையிடாதே, அவர்களுக்குப் {பாண்டவர்களுக்குப்} பாதி நாட்டைக் கொடு. நான் உயிரோடு இருக்கும்போது, வேறு எந்த மனிதன்தான் ஆட்சி செய்யத்தகுந்தவன்? எனது வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே.

உங்களுக்கு மத்தியில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம். ஓ! ஐயா, ஓ! மன்னா {துரியோதனா}, உன்னிடமும், அவர்களிடமும் {பாண்டவர்களிடமும்} நான் எந்த வேறுபாடும் கொள்ளவில்லை {பாரபட்சமும் பார்க்கவில்லை}. (ஆனால் உங்கள் அனைவரையும் சமமாக விரும்புகிறேன்). நான் என்னென்ன சொன்னேனோ, அவையே, உனது தந்தை {திருதராஷ்டிரன்}, காந்தாரி மற்றும் விதுரன் ஆகியோரின் கருத்துகளுமாகும். இந்த எனது வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே. இந்தப் பூமியையும், நீ கொண்ட அனைத்தையும் அழிக்காதிருப்பாயாக" என்றார் {பீஷ்மர்}.


Wednesday, May 29, 2013

திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் பிறப்பு! - ஆதிபர்வம் பகுதி 106

The Birth of Dhritarashtra, Pandu and Vidura! | Adi Parva - Section 106 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 42)

பதிவின் சுருக்கம் : வியாசரின் மூலம் அம்பிகைக்குப் பிறந்த திருதராஷ்டிரன்; அம்பாலிகைக்குப் பிறந்த பாண்டு; பணிப்பெண்ணுக்குப் பிறந்த விதுரன்...

வைசம்பாயனர் சொன்னார், "கோசல இளவரசியின் மாதவிடாய் முடிந்ததும், சத்தியவதி தனது மருமகளை {அம்பிகையை} நீராட்டிச் சுத்தப்படுத்தி, படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே இருந்த ஆடம்பரக் கட்டிலில் தனது மருமகளை அமரச் செய்து, அவளிடம் {அம்பிகையிடம்},(1) "ஓ கோசல இளவரசியே {அம்பிகையே}, உனது கணவனின் {விசித்திரவீரியனின்} அண்ணன் இன்று உனது கருவறைக்குள் உனது குழந்தையாக நுழைவான். இன்றிரவு அவனுக்காகத் {வியாசருக்காக} தூங்காமல் காத்திருப்பாயாக" என்றாள்.(2)  தனது மாமியாரின் {சத்தியவதியின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த இனிமையான இளவரசி {அம்பிகை}, பீஷ்மரையும், குரு குலத்தின் பிற மூத்தவர்களையும் நினைத்து அந்தக் கட்டிலில் சாய்ந்திருந்தாள்.(3) அந்த உண்மை நிறைந்த அம்முனிவர் (வியாசர்), தான் அம்பிகையைக் (இளவரசிகளில் மூத்தவள்) குறித்த ஒரு வாக்கை முதலில் கொடுத்திருந்ததால், அவளது அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போதே நுழைந்தார்.(4) அந்த இளவரசி {அம்பிகை} அவரது {வியாசரது} கரிய நிறத்தையும், தாமிரக்கம்பிகள் போலச் சிவந்திருந்த சடா முடியையும், எரியும் தழல் போன்ற கண்களையும், கரடு முரடான தாடியையும் பார்த்துப் பயந்து தனது கண்களை மூடிக் கொண்டாள்[1].(5)

Tuesday, May 28, 2013

சத்தியவதி சொன்ன இரகசியம்! | ஆதிபர்வம் - பகுதி 105

The Secret revealed by Satyavati! | Adi Parva - Section 105 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 41)

பதிவின் சுருக்கம் : சத்யவதி தனக்கு ஏற்கனவே பிறந்த வியாசரைக் குறித்துப் பீஷ்மரிடம் சொன்னது; சத்தியவதியின் திட்டத்தை பீஷ்மர் ஏற்பது; வியாசரை நினைத்த சத்தியவதி; சத்தியவதியின் கூற்றை ஏற்ற வியாசர்; தன் மருமகளிடம் பேசிய சத்தியவதி...

பீஷ்மர் சொன்னார், "ஓ தாயே, பாரத அரசமரபின் தொடர்ச்சிக்கான வழிமுறை குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(1) ஒரு தகுதிவாய்ந்த பிராமணரை அழைத்து, அவருக்குச் செல்வத்தைக் காணிக்கையாகக் கொடுத்து, விசித்திரவீரியனின் மனைவியரிடத்தில் {அம்பிகை, அம்பாலிகையிடம்} வாரிசுகளை உண்டாக்கலாம்" என்றார்.(2)

"வைசம்பாயனர் தொடர்ந்தார், "சத்தியவதி மெல்லப் புன்னகைத்து, துக்கத்தால் உடைந்த குரலுடன் பீஷ்மரிடம்,(3) "ஓ பெருங்கரத்தையுடைய பாரதா {பீஷ்மா}, நீ சொல்வது உண்மைதான். உன் மீதிருக்கும் நம்பிக்கையில், நமது குலம் விருத்தியடையும் ஒரு வழியைச் சொல்கிறேன்.(4) துன்ப காலங்களில் அனுமதிக்கப்படும் நடைமுறைகளை நீ நன்கறிந்திருப்பதனால் அதை உன்னால் மறுக்க முடியாது என்று நினைக்கிறேன். நமது குலத்தில் நீயே அறம் நிறைந்தவன், நீயே உண்மை நிறைந்தவன், நீயே எங்கள் ஒரே புகலிடம்.(5) எனவே, நான் உண்மையில் என்ன சொல்கிறேன் என்பதைக் கேட்டு, எது முறையோ அதைச் செய்வாயாக. எனது தந்தை {வளர்ப்புத் தந்தை-மீனவர்} ஓர் அறம்சார்ந்த மனிதராவார். அறத்திற்காகவே அவர் ஒரு படகை வைத்திருந்தார்.(6) ஒரு நாள், எனது இளமையின் தொடக்கத்தில், நான் அந்தப் படகில் துடுப்புப் போடச் சென்றிருந்தேன். அப்போது, அறம் சார்ந்தவர்களில் முதன்மையானவரும், பெரும் ஞானமுள்ளவருமான முனிவர் பராசரர், யமுனையைக் கடக்க எனது படகில் ஏறினார்.(7)

Friday, May 24, 2013

சத்தியவதி பீஷ்மருக்கிட்ட கட்டளை! | ஆதிபர்வம் - பகுதி 103

The command of Satyavati to Bhisma! | Adi Parva - Section 103 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 39)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் பேசிய சத்தியவதி; தன் பிரம்மச்சர்ய விரதத்தை சத்தியவதிக்கு நினைவூட்டிய பீஷ்மர்...

வைசம்பாயனர் சொன்னார், "பேறற்றவளும், அவல நிலையில் இருந்தவளுமான சத்தியவதி தனது மகனை நினைத்துத் துக்கத்தில் ஆழ்ந்தாள். தனது மருமகள்களுடன் சேர்ந்து, இறந்து போன தனது மகனின் ஈமக்கடன்களை முடித்து, அழுது கொண்டிருக்கும் மருமகள்களையும், ஆயுதம் பயன்படுத்துபவர்களில் முதன்மையான பீஷ்மரையும் தன்னால் இயன்ற அளவு தேற்றினாள். தனது பார்வையை அறத்தின் கண் திருப்பி, தனது தந்தை வழி மற்றும் தாய்வழிகளையும் ஆராய்ந்து பீஷ்மரிடம்,(1,2) "பிண்டதானம், சாதனைகள் மற்றும் குரு வழி வந்த சந்தனுவின் பரம்பரைத் தொடர்ச்சி ஆகியன இப்போது உன் கைகளிலேயே இருக்கின்றன.(3) நற்செயல்களும் மோட்சமும் எப்படிப் பிரியாதனவோ, அப்படி இந்த நெடும் வாழ்க்கையில் உண்மையும் நம்பிக்கையும் பிரியாதன, அறம் உன்னிடம் இருந்து பிரியாததாக இருக்கிறது.(4) ஓ அறம் சார்ந்தவனே, அறத்தின் விதிகளை அதன் சுருதிகளுடனும், வேதங்களின் கிளைகளுடனும் நன்கறிந்தவன் நீ.(5) நீ அறத்தாலும், குடும்பச் சடங்குகளின் ஞானத்தாலும் சுக்கிரனுக்கும் அங்கீரசுக்கு நிகரானவன். உன்னால் கடுமையான சூழ்நிலைகளில் புதிய விதிகளைக் கண்டெடுக்க முடியும்.(6) எனவே, ஓ அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, உன்னையே நான் பெரிதும் நம்பியிருக்கிறேன். நான் உன்னிடம் ஒரு காரியத்தைப் பற்றிச் சொல்கிறேன். அதைக் கேட்டுவிட்டு அதன்படி நடப்பதா? வேண்டாமா? என்று நீ முடிவெடுத்துக் கொள்வாயாக.(7)

Tuesday, March 26, 2013

பராசரரின் ஆசைக்கிணங்கிய சத்தியவதி! | ஆதிபர்வம் - பகுதி 63இ

Satyavati accepted the embrace of Parasara! | Adi Parva - Section 63c | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 5)

பதிவின் சுருக்கம் : ; மீனுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தை சத்யவதியாகவும் வளர்ந்தது; சத்தியவதிக்குப் பிறந்த வியாசர்...

அந்த அப்சரஸின் மகளும், மீன் நாற்றம் கொண்டவளுமான அக் குழந்தையை மன்னன் {சேதி நாட்டு மன்னன் உபரிசரன்} மீனவர்களிடம் {செம்படவர்களிடம்} கொடுத்து, "இவள் உங்கள் மகளாக இருக்கட்டும்" என்றான்.(66,67) அந்தப் பெண்குழந்தை சத்தியவதி என்ற பெயரால் அறியப்பட்டாள். மிகுந்த அழகைக் கொடையாகக் கொண்டு, அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்டு, இனிய புன்னகை உடையவளாய், மீனவர்களின் தொடர்பால், சிறிது காலம் மீன் நாற்றத்தோடே இருந்தாள்.{அதனால் அவள் மச்சகந்தி என்றும் அறியப்பட்டாள்}(68) தனது (வளர்ப்புத்) தந்தைக்குச் சேவை செய்வதற்காக, யமுனையின் நீரில் அவள் ஓடம் செலுத்திக் கொண்டிருந்தாள். இந்த வேலையை அவள் {சத்தியவதி} செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாள், யாத்திரை செய்து கொண்டிருந்த பெரும் முனிவர் பராசரரால் சத்தியவதி பார்க்கப்பட்டாள்.(69) பேரழகைக் கொடையாகக் கொண்டவளும், துறவிகளுக்கும் ஆசையைத் தரும் வடிவம் உடையவளும், இனிய புன்னகையை உடையவளுமான அவளைக் கண்டதும் ஞானியான முனிவர் {பராசரர்} அவளை அடைய விருப்பம் கொண்டார்[3].(70)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்