Showing posts with label பகீரதன். Show all posts
Showing posts with label பகீரதன். Show all posts

Thursday, June 20, 2019

உபவாஸ மகிமை! - அநுசாஸனபர்வம் பகுதி – 103

The glory of Fasting! | Anusasana-Parva-Section-103 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 103)


பதிவின் சுருக்கம் : உபவாஸத்தின் சிறப்பு மற்றும் பிராமண வாக்கின் சிறப்பு ஆகியவற்றைக் குறித்துப் பிரம்மனுக்கும் பகீரதனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "பல்வேறு வகைக் கொடைகள், ஆன்ம அமைதி, வாய்மை, கருணை, ஒருவன் மணந்து கொண்ட மனைவியிடம் நிறைவடைவது, கொடையின் பலன்கள் ஆகியவற்றைக் குறித்து நீர் எங்களுக்குச் சொன்னீர்.(1) ஓ! பாட்டா, தவங்களைவிட யாருடைய பலமும் மேன்மையானதல்ல என்பதை நீர் அறிவீர். உயர்ந்த தவமாக அமைவது எது என்பதைக் குறித்து எங்களுக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(2)

Tuesday, May 31, 2016

மன்னன் பகீரதன்! - துரோண பர்வம் பகுதி – 060

King Bhagiratha! | Drona-Parva-Section-060 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 30)

பதிவின் சுருக்கம் : பகீரதனின் கதையைச் சொன்ன நாரதர்; கங்கையை மகளாய் அடைந்த பகீரதன்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, மன்னன் பகீரதனும் இறந்ததாகவே நாம் கேட்டிருக்கிறோம். கங்கையின் கரைகளைத் தங்கத்தால் ஆன படித்துறைகளால் மறைத்து, அவற்றைத் தன் பெயரால் “பாகீரதம்” [1] என்று அழைக்கச் செய்தான்.


[1] “பகீரதப் படித்துறை {Bhagirath Ghat} என அழைக்கப்படும் இவை, அந்தப் புனிதமான ஓடையை எளிதாக அடையக்கூடிய வழிகளாகும் {படித்துறைகளாகும்}” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரையும் விஞ்சிய அவன் {பகீரதன்}, தங்க அபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஆயிரம் {1000} காரிகையரை பிராமணர்களுக்கு ஆயிரம் முறை தானமளித்தான். அந்தக் காரிகையர் அனைவரும் தேர்களில் இருந்தனர். ஒவ்வொரு தேரிலும் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு தேருக்குப் பின்பும் நூறு {100} பசுக்கள் இருந்தன. ஒவ்வொரு பசுவுக்கு பின்பும் (பல) செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் இருந்தன.

மன்னன் பகீரதன், தன் வேள்விகளில் அபரிமிதமான பரிசுகளைக் கொடுத்தான். அந்தக் காரணத்துக்காகவே பெரும் மனிதக் கூட்டம் அங்கே கூடியது. இதனால் பீடிக்கப்பட்ட கங்கை வலியை மிகுதியாக உணர்ந்து, “என்னைக் காப்பாயாக” என்று சொல்லி அவனது {பகீரதனின்} மடியில் அமர்ந்தாள். பழங்காலத்தில் இப்படிக் கங்கை அவனது மடியில் அமர்ந்ததால், எப்படித் தெய்வீக நர்த்தகி ஊர்வசி அவனது மகளாக அறியப்பட்டாளோ, அதே போல அவளும் {கங்கையும்} அவனது {பகீரதனது} பெயரால் {பாகீரதி என்று} அழைக்கப்பட்டாள். மன்னனின் மகளான அவள் {கங்கை}, (ஒரு மகனைப் போல அவனது மூதாதையருக்கு முக்தி அளித்ததன் விளைவாக) அவனது மகனாகவும் [2] ஆனாள்.

[2] பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்த நிகழ்வை வனபர்வம் பகுதி 108 மற்றும் 109ல் காணலாம் 

இனிமையான பேச்சும், தெய்வீக ஒளியும் கொண்ட கந்தர்வர்கள் மனம்நிறைந்து போய், முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியோர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவை யாவையும் பாடினர். இப்படியே, ஓ! சிருஞ்சயா, பெருங்கடலை அடையும் கங்கா தேவி, (பிராமணர்களுக்கு) அபரிமிதமான பரிசுகளுடன் வேள்விகளை நடத்தியவனும், இக்ஷ்வாகுவின் வழித்தோன்றலுமான தலைவன் பகீரதனைத் தன் தந்தையாகத் தேர்ந்தெடுத்தாள்.

அவனது வேள்விகள் எப்போதும் இந்திரனின் தலைமையான தேவர்களால் (அவர்களின் இருப்பால்) அருளப்பட்டிருந்தன. தேவர்கள், அந்த வேள்விகளுக்கு உதவும் பொருட்டுத் தடைகள் அனைத்தையும் அகற்றித் தங்களுக்குரிய பங்குகளைப் பெற்றுக் கொண்டனர்.

பெரும் தவத்தகுதியைக் கொண்ட பகீரதன், பிராமணர்கள் விரும்பிய நன்மைகளை, அவர்களை அசையவிடாமல், அவர்கள் எங்கிருந்து கேட்டனரோ அங்கேயே கொடுத்தான். பிராமணர்களுக்குக் கொடுக்கமுடியாதது என அவனிடம் ஏதும் இருக்கவில்லை. அனைவரும் தாங்கள் ஆசைப்பட்ட அனைத்தையும் அவனிடம் பெற்றுக் கொண்டனர்.

இறுதியாக அந்த மன்னன் {பகீரதன்}, பிராமணர்களின் அருள் மூலமாகப் பிரம்ம லோகத்திற்கு உயர்ந்தான். சூரியனின் கதிர்களிலேயே வாழ்ந்த முனிவர்கள் எந்நோக்கத்திற்காகச் சூரியனிடமும், சூரியனின் அதிதேவதையிடமும் {பணிவிடை செய்யக்} காத்திருந்தனரோ, அதே நோக்கத்திற்காக மூவுலகங்களின் ரத்தினமான தலைவன் பகீரதனுக்காகவும் அவர்கள் காத்திருந்தனர் [3].

[3] வேறொரு பதிப்பில், பின்வருவது வேறு பாடமாகச் சொல்லப்பட்டுள்ளது: “எந்த மரங்கள் சொர்க்கத்தை நோக்கிப் பகீரதனைத் தொடர்ந்து சென்றனவோ, அவைகள் இன்னமும் ஈசுவரனான அவ்வரசனை அனுசரித்து வருவதற்கு விருப்பமுள்ளவைகளும் வணங்கினவைகளுமாக நிற்கின்றன”

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கும்} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {பகீரதனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English

Tuesday, February 25, 2014

பகீரதன் மகளாகிய கங்கை! - வனபர்வம் பகுதி 109

Bhagiratha made Ganga as his daughter! | Vana Parva - Section 109| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பகீரதனிடம் சிவன் கங்கையைத் தாங்கிக் கொள்வதாக ஏற்பது; விண்ணிலிருந்த கங்கை மண்ணில் பாய்வது; பகீரதன் கங்கைக்கு வழி காட்டி கடலை அடையச் செய்தது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பகீரதன் சொன்னதைக் கேட்ட அந்த அருளப்பட்ட தெய்வம் {சிவன்}, தேவலோகவாசிகளுக்கு ஏற்புடையதைச் செய்ய எண்ணி அம்மன்னனிடம் {பகீரதனிடம்}, "அப்படியே ஆகட்டும். ஓ! மனிதர்களைக் காப்பவர்களில் மிகவும் நேர்மையானவனே, ஓ! பெரும் பலம்வாய்ந்த வலுத்த கரம் கொண்டவனே (இளவரசனே), சுத்தமானவளும், அருளப்பட்டவளும், தெய்வீகமானவளுமான தேவர்களின் நதி {கங்கை} வானத்தில் இருந்து வீழும்போது, உனக்காக நான் அவளைத் தாங்கிக் கொள்கிறேன்" என்றான். இப்படிச் சொல்லிய அவன் {சிவன்}, வித்தியாசமான ஆயுதங்களை உயர்த்திப் பிடித்தவாறு, பரிதாபகரமான முகங்களுடன் இருந்த தனது சேவகர்களுடன் பனி மலைக்கு  வந்தான். அங்கேயே நின்றவாறு மனிதர்களில் மிகவும் போற்றத்தக்க பகீரதனிடம், "ஓ! பலம் நிறைந்த கரங்கள் கொண்டவனே (இளவரசனே), மலைகளின் மன்னனுடைய {சைலராஜன் = மலைகளின் மன்னன்} மகளான அந்த நதியை {கங்கையை} வேண்டிக் கொள். நதிகளில் மிகவும் போற்றத்தக்க அவள் {கங்கை} உலகத்தின் மூன்றாவது பகுதியில் {சொர்க்கத்தில்} இருந்து வீழும் போது, நான் அவளைத் தாங்கிக் கொள்வேன்" என்றான் {சிவன்}.

சிவனால் உச்சரிக்கப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மன்னன் {பகீரதன்} (இதயத்தில்) பக்தியுடன் தனது வணக்கங்களைச் செய்து, தனது சிந்தனையைக் கங்கையை நோக்கித் திருப்பினான். பிறகு அந்தக் காண்பதற்கினிய (நதி) சுத்தமான நீரைக் கொண்டவள் மன்னனால் {பகீரதனால்} நினைக்கப்பட்டதும், அந்தப் பெரும் தெய்வம் (சிவன்), (வீழும் தன்னைப் பெற) நிற்பதைக் கண்டு, திடீரென வானத்தில் இருந்து கீழே வந்தாள். வானத்தில் இருந்து அவள் குதித்ததைக் கண்ட தேவர்கள் பெரும் தவசிகளுடனும், கந்தர்வர்களுடன், பாம்புகளுடனும், யக்ஷரகளுடனும் பார்வையாளர்களாக அங்கே கூடி நின்று பார்த்தனர். பிறகு பனி மலையின் மகளான கங்கை வானத்தில் இருந்து கீழே வந்தாள். மீன்களும் சுறாக்கள் நிறைந்த நீர்ச்சுழிகளுடன் பொங்கிப் பெருக வந்தாள்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கடலை நோக்கிச் சென்ற அவள் {கங்கை} தன்னை மூன்று ஓடைகளாகப் பிரித்துக் கொண்டாள். அவளது நீர் நுரைக்குவியலால் சூழப்பட்டிருந்தது. பல வெண் நாரைகளின் அணிவகுப்பைப் போல இருந்தது அது {நுரைக்குவியல்} இருந்தது. நுரை எனும் ஆடையை உடுத்திச் செல்லும் அவள் {கங்கை} ஓரிடத்தில் விரிந்தும், வேறிடத்தில் வளைந்தும், சில இடங்களில் தடுமாறியும் செல்லும் மது மயக்கத்திலுள்ள மங்கையைப் போல இருந்தாள். இன்னும் பிற இடங்களில் அவள் தனது நீரடிப்பின் தன்மையால் பெரும் கர்ஜனை செய்தாள். வானத்தில் இருந்து விழும்போதே இதுபோன்ற பல விதமான செயல்கள் புரிந்து பூமியை அடைந்த அவள் {கங்கை} பகீரதனிடம், "ஓ! பெரும் மன்னா {பகீரதா}, நான் செல்ல வேண்டிய பாதையை எனக்குக் காண்பி. ஓ பூமியின் தலைவா, நான் உனக்காகவே இந்தப் பூமியில் இறங்கினேன்" என்றாள் {கங்கை}.

அதனால், ஓ! மனிதர்களில் மிகவும் போற்றத்தக்கவனே {யுதிஷ்டிரா}, இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் பகீரதன், பெரும் பலம்வாய்ந்த சகர மைந்தர்களின் உடல்களை அந்தப் புனிதமான நீர்,  நிறைக்கும் பொருட்டு அந்த உடல்கள் {உடல்களின் எச்சம்} கிடந்த இடத்தின் வழியாக செல்லுமாறு தனது பாதையை அமைத்துக் கொண்டான். மனிதர்களால் வழிபடப்பட்ட சிவன், கங்கையைத் தாங்கிக் கொண்ட பணியைச் சாதித்ததும், மலைகளில் போற்றத்தக்க கைலாசத்துக்குத் தேவர்களுடன் சென்றான். பிறகு அந்த மனிதர்களின் பாதுகாவலன் {பகீரதன்} கங்கையை அழைத்துக் கொண்டு கடலை அடைந்தான். வருணனின் வசிப்பிடமான அந்தக் கடலும் விரைவில் நிரம்பியது.

பிறகு அம்மன்னன் {பகீரதன்} கங்கையைத் தனது மகளாகச் சுவீகரித்துக் கொண்டு, தனது மூதாதையர்கள் பெயரில் நீர்க்கடன் செலுத்தி, இதய விருப்பம் நிறைவடைந்தவன் ஆனான். ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, நீ கேட்டுக் கொண்டதற்கிணங்க, கங்கை மூன்று ஓடைகளாகப் பிரிந்து ஓடி, பூமியை அடைந்து, எப்படி கடலை நிரப்பினாள்; குறித்த காரியத்திற்காக அகஸ்தியர் எப்படிக் கடலைக் குடித்தார்; அந்தணர்களைக் கொன்ற வாதாபியை அகஸ்தியர் எப்படி அழித்தார் என்ற வரலாற்றுகளைச் சொல்லிவிட்டேன்" என்றார் லோமசர்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Monday, February 24, 2014

கங்கையின் அருள் பெற்ற பகீரதன்! - வனபர்வம் பகுதி 108

Bhagiratha attained grace from Ganga! | Vana Parva - Section 108| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தனது மூதாதையர்களின் நிலையை அறிந்த பகீரதன், ஆட்சியை அமைச்சரிடம் ஒப்படைத்து விட்டு இமயத்தில் தவம் செய்வது; கங்கையைக் கண்டு அவளது அருளைப் பெறுவது; கங்கை சொன்ன நிபந்தனை; பகீரதன் சிவனை நோக்கி தவம் இருந்தது; பகீரதன் சிவனின் அருளைப் பெற்றது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பெரும் பலம்வாய்ந்த வில்லையும், பலம்வாய்ந்த தேரையும் கொண்ட அம்மன்னன் {பகீரதன்}, அச்சூழ்நிலையில் தலைமையேற்று (அரியணை ஏறி) இந்த உலகத்தின் ஆன்மாவாகவும், அதன் கண்களுக்குக் காண்பதற்கு இனியவனாகவும் இருந்தான். அந்தப் பலம் நிறைந்த கரங்கள் கொண்டவன் பலம்வாய்ந்த ஆன்மாக் கொண்ட கபிலரால் தனது மூதாதையர்களுக்கு ஏற்பட்ட துயரமான நிலையையும், அவர்கள் தேவலோகம் அடைய முடியாத நிலையையும் அறிந்தான். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா} அவன் மன்னனுக்குரிய தனது அரச கடமைகளை அமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டு தவமியற்ற பனி நிறைந்த மலையை {இமயத்தை} அடைந்தான்.


ஓ! மனிதர்களில் புகழ்மிக்கவனே {யுதிஷ்டிரா}, தவ வாழ்வின் மூலம் தனது பாவங்களை அழித்து, அதன் காரணமாகக் கங்கையின் உதவியை அடைய அவன் {பகீரதன்} மலைகளில் முதன்மையான இமயத்தை அடைந்தான். அங்கே அவன் {பகீரதன்} அதன் சிகரங்களில் வித்தியாசமான தாதுக்களைக் கண்டான். அங்கே மேகத் துளிகள் சிதறி காற்றோடு பயணித்தன. நதிகள், தோப்புகள், (நகரத்தில் இருக்கும் பல} அரண்மனைகள் போன்ற பாறை முடுக்குகளுடன் அம்மலை இருந்தது. குகைகளிலும், பள்ளங்களிலும் சிங்கங்களும் புலிகளும் பதுங்கியிருந்தன. வித்தியாசமாக ஒலியெழுப்பும் பலவண்ண பறவைகளால் அவ்விடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அங்கே வண்டுகளும், அன்னங்களும், நீர்க்காக்கைகளும், நீர்க்கோழிகளும், மயில்களும், நூறு இறகுகள் கொண்ட பறவைகளும், ஜீவஞ்சீவங்களாலும், குயில்களாலும், கருத்த நிறம் கொண்ட சக்கோரங்களாலும், குஞ்சுகளிடம் அன்பொழுகும் பறவைகளாலும் அவ்விடம் நிறைந்திருந்தது.

அந்த மலையில் நீர்நிறைந்த அழகிய இடங்களில் தாமரைகள் அடர்ந்திருப்பதைக் கண்டான் {பகீரதன்}. அங்கே நாரைகளின் இனிய ஒலிகளுடன், கின்னரர்களும் அப்சரஸ்களும் கற்பாறைகளில் அமர்ந்திருந்தனர். முக்கியமான இடங்களை ஆக்கிரமித்த யானைகள் அங்கிருந்த மரங்களைத் தங்கள் துதிக்கைகளால் திருடின. வித்தியாதர்கள் அங்கே அடிக்கடி வந்து சென்றனர். பலதரப்பட்ட ரத்தினங்கள் நிறைந்து, கடும் விஷம் கொண்ட பிரகாசிக்கும் நாக்குடைய பாம்புகள் நிறைந்தும் இருந்தது அம்மலை. அந்த மலையில் சில பகுதிகள் தங்கம் போலவும், மற்றவை வெள்ளி போவும் பிரகாசித்தன. சில இடங்களில் அது (பழுப்பு நிற) அஞ்சன {மருந்துக்} குவியல் போலவும் காட்சி அளித்தது. அந்தப் பனி நிறைந்த மலையில் மன்னன் {பகீரதன்} தன்னை அமர்த்திக் கொண்டான். மனிதர்களில் மிகவும் புகழத்தக்க அவன் அந்த இடத்தில் அமர்ந்து கடும் தவம் இயற்றினான். ஆயிரம் {1000} வருடங்களுக்கு அவன் நீர், கனி மற்றும் கிழங்குகள் தவிர வேறு எதையும் உட்கொள்ளவில்லை. இருப்பினும் தேவர்களின் கணக்குப்படி ஆயிரம் வருடங்கள் கழிந்ததும், பெரும் நதியான கங்கை, பொருளுரு கொண்டு {பௌதீக உருவெடுத்து [material form]}, அவனுக்கு (தெய்வீகக்) காட்சியளித்தாள்.

கங்கை {பகீரதனிடம்}, "ஓ! பெரும் மன்னா, நீ என்னிடம் என்ன விரும்புகிறாய்? நான் உனக்கு எதை அருள வேண்டும்? ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே அதை என்னிடம் சொல்! நீ சொல்வதை நான் செய்கிறேன்" என்றாள். இப்படிச் சொல்லப்பட்ட அம்மன்னன் {பகீரதன்}, அந்தப் பனிநிறைந்த மலையின் மகளான கங்கையிடம், "ஓ! வரமருளுபவளே! ஓ பெரும் நதியே, எனது தந்தையின் தந்தைகள், குதிரையைத் தேடிய போது, கபிலரால் மரணத் தேவன் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டார்கள். சகரனின் அந்த அறுபதாயிரம் மகன்களின் பலம் வாய்ந்த ஆன்மா, கம்பீரமான கபிலரால் ஒருக்கணத்தில் அழிக்கப்பட்டன. இப்படி அழிக்கப்பட்டதால் அவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை. ஓ! பெரும் நதியே, நீ அவர்களின் உடலில் உனது நீரைத் தெளிக்காத வரை அவர்களுக்கு முக்தி கிடையாது. ஓ! அருளப்பட்ட தேவதையே, சகரனின் மகன்களான எனது மூதாதையார்கள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல். ஓ! பெரும் நதியே, அவர்கள் நிமித்தமாகவே நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றான்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "உலகத்தால் வணங்கப்படும் தேவதையான கங்கை, மன்னனின் {பகீரதனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு மிகவும் திருப்தி கொண்டு பகீரதனிடம், "ஓ! பெரும் மன்னா! நீ என்னிடம் கேட்பதை நான் செய்யத் தயாராக இருக்கிறேன்; அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், நான் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கும் போது, நான் விழும் வேகம் தாங்க முடியாததாக இருக்கும். ஓ! மனிதர்களின் பாதுகாவலா {பகீரதா}! தெய்வங்களில் மிகவும் போற்றத்தக்க கருநீல மிடறு {தொண்டை} கொண்ட அந்தப் பெருந்தலைவனான சிவனைத் தவிர, அந்த வேகத்தைத் தாங்கும் சக்தி கொண்டவர் மூவுலகிலும் வேறு யாருமிலர். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே (இளவரசனே)! தவம் பயில்வதன் மூலம் அந்த வரங்கள் அருள்பவரான சிவனின் உதவியை அடைய முயற்சி செய். அந்தத் தெய்வம் எனது வீழ்ச்சியைத் தனது தலையில் தாங்கிக் கொள்வார். ஓ! மன்னா {பகீரதா}, உனது தந்தைகளுக்கான சேவையின் நிமித்தமான உனது விருப்பத்தை அவர் நிறைவேற்றுவார்" என்றாள் {கங்கை}.

இதைக் கேட்ட பெரும் மன்னனான பகீரதன் கைலாச மலைக்குச் சென்று கடும் நோன்புகள் நோற்று, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அருளைக் கொடுப்பவனின் (சிவனின்) உதவியைப் பெற்றான். ஓ! மனிதர்களின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அந்த மனிதர்களில் சிறந்தவன் {பகீரதன்}, தனது மூதாதையர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் பெறுவதின் பொருட்டு, விழும் கங்கையைச் சிவன் தாங்கும் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, February 23, 2014

குதிரையை மீட்ட அன்சுமான்! - வனபர்வம் பகுதி 107

Ansuman retrieved the horse! | Vana Parva - Section 107| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பாத்திரங்களில் பாதுகாக்கப்பட்ட சுரைக்காய் விதைகள் அறுபதாயிரம் மகன்களாகச் சகரனுக்கும் விதரப்ப்ப இளவரசிக்கும் பிறத்தல்; சகரனுக்கும் சிபி இளவரசிக்கும் அசமஞ்சன் பிறத்தல்; கபிலரின் கோபத்துக்கு இலக்காகி அறுபதாயிரம் மகன்கள் இறத்தல்; அசமஞ்சனைச் சகரன் நாடு கடத்தல்; அன்சுமான் வேள்விக் குதிரையை மீட்டல்; அன்சுமானுக்குத் திலீபன் பிறத்தல்; திலீபன் ஆட்சிக்கட்டிலில் அமர்தல்; திலீபன் கானக வாழ்வு மேற்கொண்டு பகீரதனை மன்னனாக நியமித்தது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னர்களில் நேர்மையானவனே {யுதிஷ்டிரா}, வானத்தில் இருந்து இறங்கிய இச்சொற்களைக் கேட்ட அவன் {சகரன்}, ஓ! பாரதக் குல மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, நம்பிக்கையுடன் அந்தக் குரல் வழிகாட்டியபடியெல்லாம் செய்தான். பிறகு அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {சகரன்}, விதைகளைத் தனியாகப் பிரித்து எடுத்து, (சுரைக்காயின் அந்தப் பகுதிகளை) சுத்திகரிக்கப்பட்ட நெய் நிரம்பிய பாத்திரங்களில் வைத்தான். பிறகு அவற்றைப் பாதுகாத்தலின் பொருட்டு ஒவ்வொரு பாத்திரத்திற்கும் {குடத்திற்கும்) ஒரு செவிலியை நியமித்தான்.


ஓ! பூமியின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, பிறகு நீண்ட காலத்திற்குப் பிறகு, ருத்திரனின் {சிவனின்} கருணையால் அளவிடமுடியாத சக்தியும் மிகுந்த பலமும் வாய்ந்த அறுபதாயிரம் {60000} மகன்கள் பிறந்தனர். அவர்கள் பயங்கரமானவர்களாகவும், அவர்களது செயல்கள் இரக்கமற்றும் இருந்தன. அவர்கள் அனைவரும் வானத்தில் உயர்ந்து செல்லும் சக்தி படைத்திருந்தனர். அவர்கள் கணக்கிலடங்காதவர்களாக இருந்ததால், தேவர்கள் உட்பட அனைவரையும் மதிக்காமல் இருந்தனர். அவர்கள் பராக்கிரமம் மிக்கவர்களாகவும், போர் வெறியர்களாகவும் இருந்ததால், தேவர்களையும், கந்தர்வர்களையும், ராட்சசர்களையும் விரட்டும் ஆற்றல் பெற்றிருந்தனர்.

சகரனின் மந்த புத்தி கொண்ட மகன்களால் தொல்லைக்குள்ளான மக்கள் அனைவரும் தேவர்களுடன் சேர்ந்து பிரம்மனைப் புகலிடமாகக் கொள்ள அவனிடம் {பிரம்மனிடம்} சென்றனர். பிறகு அவர்கள் அனைத்து உயிரினங்களின் அருளப்பட்ட பாட்டன் {பிரம்மன்}, "இந்த மனிதர்களுடன் நீங்களும் உங்கள் வழியில் செல்லுங்கள். ஓ! தேவர்களே, குறுகிய காலத்தில், பெரிதும் பயங்கரமான சகரன் மகன்களின் மிகக் கோரமான அழிவு, அவர்களது தீச்செயல்களின் விளைவாகவே ஏற்படும்" என்று சொன்னான். ஓ! மனுவின் மகன்களின் {மனிதர்களின்} தலைவா {யுதிஷ்டிரா}, இப்படிச் சொல்லப்பட்ட தேவர்களும் மனிதர்களும் பாட்டனிடம் {பிரம்மனிடம்} விடைபெற்றுக் கொண்டு, எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பிச் சென்றனர்.

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பிறகு பல நாட்கள் கழித்து, பெரும் பலம் மிக்க மன்னன் சகரன், குதிரை வேள்வியின் சடங்குகளை ஆரம்பிக்க {பிரதிஷ்டை செய்ய} ஏற்றுக் கொண்டான். அவனது குதிரை, அவனது மகன்களின் பாதுகாப்புடன் உலகம் முழுவதும் சுற்ற ஆரம்பித்தது. காண்பதற்குப் பயங்கரமான நீரற்ற கடலை அடைந்ததும், நன்றாகப் பாதுக்காக்கப்பட்டிருந்தும் அந்தக் குதிரை (அது நின்ற இடத்திலேயே) திடீரென மறைந்து போனது. ஓ! மதிப்பிற்குரிய ஐயா {யுதிஷ்டிரா}, பிறகு சகரனின் மகன்கள் அந்த அற்புதமான குதிரை களவாடப்பட்டதாக உணர்ந்து, தனது தந்தையிடம் சென்று, தான் பார்த்துக் கொண்டிருந்தபோதே அக்குதிரை எப்படிக் களவாடப்பட்டது என்பதை உரைத்தனர்.

அதன் பேரில் அவன் {மன்னன் சகரன்} அவர்களிடம், "செல்லுங்கள். அனைத்து முக்கியமான இடங்களிலும் குதிரையைத் தேடுங்கள்" என்றான். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் தந்தையின் கட்டளையின் பேரில் அவர்கள் அனைத்து முக்கியமான இடங்களிலும், பூமியின் முழுப் பரப்பிலும் குதிரையைத் தேடினர். ஒற்றுமையுடன் தேடிய சகரனின் மகன்களால், அந்தக் குதிரையையோ, அல்லது அதைத் திருடிய நபரையோ கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவர்கள் திரும்பி வந்து, கரங்கள் கூப்பித் தங்கள் தந்தையின் {மன்னன் சகரனின்} முன்பு நின்று, "ஓ! மனிதர்களின் பாதுகாவலரே {சகரரே}, ஓ! பூமியின் ஆட்சியாளரே, ஓ! மன்னா, உமது கட்டளையின் பேரில் நாங்கள் மலைகள், காடுகள், கடல்கள், தோப்புகள், தீவுகள், ஆறுகள், சிற்றாறுகள், குகைகள் ஆகியன கொண்ட முழு உலகத்தையும் ஒன்று சேர்ந்து தேடிவிட்டோம். ஆனால் எங்களால் அக்குதிரையையோ, அல்லது அதைக் களவாடிய கள்வனையோ கண்டுபிடிக்க முடியவில்லை" என்றனர். இந்த வார்த்தைகளைக் கேட்ட அம்மன்னன் {சகரன்} கடுங்கோபத்தால் உணர்விழந்து, விதியால் ஆட்கொள்ளப்பட்டு, "அனைவரும் செல்லுங்கள். இனிமேல் திரும்பாதீர்கள்! குதிரையை மீண்டும் தேடுங்கள். என் மகன்களே, அந்த வேள்விக்குதிரை இல்லாமல் நீங்கள் மீண்டும் திரும்பக்கூடாது" என்றான்.

அந்தச் சகரனின் மகன்கள், தங்கள் தந்தையின் கட்டளையை ஏற்று மீண்டும் முழு உலகத்தையும் தேட ஆரம்பித்தனர். இப்போது அந்த வீரர்கள் பூமியின் பரப்பில் ஒரு பிளவைக் கண்டனர். அந்தப் பள்ளத்தை அடைந்த சகரனின் மகன்கள் அதைத் தோண்ட ஆரம்பித்தனர். மண்வெட்டிகளுடனும், துளறுகளுடனும் {கோடரிகளுடனும்} மிகுந்த முயற்சியுடனும் கடலைத் தோண்டிக் கொண்டே சென்றனர். வருணனின் வசிப்பிடம் {கடல்} இப்படிச் சகரனின் ஒன்றுபட்ட மகன்களால் பெரும் துயரத்துடன் எல்லாப் புறங்களிலும் தோண்டப்பட்டது. பேய்களும், பாம்புகளும், ராட்சசர்களும், மற்றப் பிற அசையும் உயிரனங்களும் சகரனின் மகன்களால் கொல்லப்பட்டபோது துயரத்தால் அலறினர். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அசையும் உயிரினங்கள் தங்கள் உடலில் இருந்து தலைகள் வெட்டப்பட்டும், தோலுரிக்கப்படும், எலும்புகளும் இணைப்புகளும் உடைக்கப்பட்டும் அழிக்கப்பட்டன.

அந்த வருணனின் வசிப்பிடத்தை {கடலை} தோண்டிக் கொண்டே சென்ற அவர்கள், அந்த வேலையில் பெரும் காலத்தைச் செலவழித்தும் குதிரையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, பிறகு வடகிழக்கு கடற்பகுதிக்கு சென்ற சகரனின் மூர்க்கமான மகன்கள் பாதாள உலகம் வரை தோண்டிக் கொண்டே சென்று கடைசியாகத் தரைப்பரப்பில் உலவி கொண்டிருந்த குதிரையைக் கண்டனர்.

அங்கே அவர்கள், பிரகாசக் குவியலாக இருந்த பெருமைமிக்கக் கபிலரைக் கண்டனர். சுடர்களுடன் கூடிய நெருப்பைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்த அவரைக் {கபிலரைக்} கண்ட அவர்கள், குதிரையையும் கண்டு மகிழ்ந்தனர். அவர்கள் தங்கள் விதியால் உந்தப்பட்டு, மூர்க்கமடைந்து பெருமைமிக்கக் கபிலரை மதிக்காமல் குதிரையைக் கைப்பற்ற முனைந்தனர். பிறகு ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, கபில வாசுதேவன் என்று பெரும் முனிவர்களால் அழைக்கப்படும் தவசிகளில் நேர்மைமிக்கக் கபிலர், கடும் பார்வை பார்த்தார். பிறகு அந்தப் பெரும் தவசி அவர்களை நோக்கி நெருப்புச் சுடர்களை அனுப்பி, அந்த மந்த புத்தி கொண்ட சகரனின் மகன்களை எரித்துப் போட்டார்.

பெரும் தவங்கள் பயின்ற நாரதர், அவர்கள் சாம்பலாக்கப்பட்டதைக் கண்டு, சகரனிடம் வந்து அத்தகவலைத் தெரிவித்தார். புனிதரின் {நாரதரின்} வாயால் இந்தப் பயங்கரமான செய்தியைக் கேட்ட மன்னன் {சகரன்}, ஒரு மணி நேரம் மிகுந்த சோகத்துடன் இருந்தான். பிறகு அவன் {சகரன்}, சிவன் ஏற்கனவே சொன்னதை நினைத்துப் பார்த்தான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பிறகு அசமஞ்சன் மகனும், தனது பேரனுமான அன்சுமானை அழைத்து இந்த வார்த்தைகளில் பேசினான் {சகரன்}. "அளவிடமுடியாத பலம் கொண்ட எனது அறுபதாயிரம் மகன்கள் கபிலரின் கோபத்தைப் பெற்று, என் காரியமாகத் தங்கள் இறப்பைச் சந்தித்தனர். ஓ களங்கமற்ற குணம் கொண்ட எனது மகனே {பேரனே, அன்சுமானே}, எனது கடமையை நான் செய்யும் பொருட்டும், எனது குடிகளுக்கு நல்லது செய்ய விரும்பியும் உனது தந்தையையும் {அசமஞ்சனையும்} நான் கைவிடலாயிற்று" என்றான்.

யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னார், "ஓ! அறப்பயிற்சிகளையே தனது முழுச் செல்வமாகக் கொண்ட தவசியே {லோமசரே}, மன்னர்களில் முதன்மையான சகரன் ஏன் பராக்கிரமம் கொண்ட தனது சொந்த மகனைக் கைவிட்டான்? (பிற மனிதர்கள் அனைவருக்கும்) அது சிரமமான செயல் ஆயிற்றே" என்று கேட்டான்.

லோமசர் சொன்னார், "சகரனுக்குச் சிபி இளவரசி அசமஞ்சன் என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றெடுத்தாள். அவன், நகர மக்களின் பலமற்ற குழந்தைகளைக் கழுத்தைப் பிடித்துக் கதறக் கதற நதிக்குள் தூக்கி தூக்கி வீசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அதன்பேரில் நகரமக்கள் பெரும் பீதி அடைந்து துயரத்துடன் ஒருவரை ஒருவர் சந்தித்து, கூப்பிய கரங்களுடன் சகரனிடம் வந்து, "ஓ! பெரும் மன்னா! எதிரி படைகளின் மூர்க்கமான தாக்குதில் இருந்து எங்களைக் காப்பவன் நீயே. ஆகையால் அசமஞ்சன் மூலம் எங்களுக்கு வரும் பயங்கரமான ஆபத்துகளில் இருந்து காப்பதே உனக்குத் தகும்" என்றனர். அந்த மனித ஆட்சியாளர்களில் மிக நேர்மையானவன் {சகரன்}, தனது குடிகளிடம் இருந்து இந்தப் பயங்கரச் செய்தியைக் கேள்விப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு எதுவும் பேசாமல் சோகத்துடன் இருந்தான். பிறகு தனது அமைச்சர்களிடம், "இந்த நாளே எனது மகனான அசமஞ்சனை இந்த நாட்டை விட்டுத் துரத்த வேண்டும். எனக்கு ஏற்புடையதை நீங்கள் செய விரும்பினால் இதை உடனடியாகச் செய்யுங்கள்" என்றான். ஓ! மனிதர்களின் பாதுகாவலனே {யுதிஷ்டிரா}, அந்த அமைச்சர்களும் மன்னன் சொன்னது போலவே அவன் உத்தரவை விரைவாக நிறைவேற்றினர். பெருமைமிக்கச் சகரன் தனது நகரவாசிகளின் நன்மையை நோக்கில் கொண்டு, தனது மகனை எப்படி நாடு கடத்தினான் என்பதை நான் உரைத்துவிட்டேன். இனி பெரிய பலம் வாய்ந்த வில்லைக் கொண்ட {பேரன்}அன்சுமானுக்குச் சகரன் என்ன சொன்னான் என்பதைச் சொல்கிறேன் கேள்..

சகரன், "ஓ! எனது மகனே {பேரன் அன்சுமானே}, உனது தந்தையை {அசமஞ்சனை} கைவிட்டதை நினைத்தும், எனது மகன்களின் மரணத்தைக் குறித்தும், குதிரையை மீட்பதில் வெற்றியடையாததைக் குறித்தும் துயர் நிறைந்த இதயத்துடன் இருக்கிறேன். ஆகையால், ஓ! பேரனே, துயரத்தில் துன்புறுத்தப்பட்டும், எனது அறச்சடங்குகளில் ஏற்பட்ட தடையால் குழம்பியும் இருக்கிறேன் நான். ஆகையால் நீ அந்தக் குதிரையைத் திரும்பக் கொண்டு வந்து என்னை நரகத்தில் இருந்து காக்க வேண்டும்" என்று கேட்டான். பெருமைமிக்கச் சகரனால் இப்படிச் சொல்லப்பட்ட அன்சுமான் துயரத்துடன் பூமி தோண்டப்பட்ட இடத்திற்குச் சென்றான். பிறகு அதே பாதை வழியாக அவன் கடலுக்குள் நுழைந்து சிறப்புமிக்கக் கபிலரையும், குதிரையையும் கண்டான். ஒளிக்குவியல் போலத் தனது வகைக்கு நேர்மையாக இருந்த அந்தப் பழம்பெரும் தவசியைக் கண்டு, தனது தலையைத் தரையில் பதித்து வணங்கி, தனது வருகைக்கான காரணத்தைச் சொன்னான்.

ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அன்சுமானிடம் திருப்தி கொண்ட அற ஆன்மா கொண்ட தவசியான கபிலர், தன்னிடம் ஏதாவதொரு உதவியைக் கோரும் படி கேட்டார். முதலில் அவன் வேள்விக்குத் தேவையான குதிரையைக் கேட்டான். இரண்டாவதாகத் தனது தந்தைமாரின் ஆன்ம சுத்தியைக் கேட்டான். பிறகு அந்தப் பெரும் பலம் வாய்ந்த தவசிகளின் தலைவரான கபிலர் அவனிடம், "நீ விரும்பும் எதையும் என்னால் அருளமுடியும் ஓ! களங்கமற்றவனே (இளவரசனே). நற்பேறு உனதாகட்டும்! உன்னில் பொறுமையும், உண்மையும், நேர்மையும் நிலைத்திருக்கின்றன. உன்னைக் கொண்டு சகரன் தனது விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொள்வான். நீயே உனது தந்தைக்கு (உண்மையான) மகன். உனது திறனால் சகரனின் மகன்கள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள். (தெய்வநிந்தனையின் விளைவுகளால் ஏற்பட்ட மரணத்தில் இருந்து அவர்கள் மீட்கப்படுவார்கள்.)

சகரனின் மகன்களைச் சுத்திகரிக்கும் நோக்குடன் வரும் உனது மகனின் மகன் {பகீரதன்} (பெரும் தவப்பயிற்சிகளின் பொருட்டு) பெரும் தெய்வமான சிவனின் உதவியைப் பெற்று, (அதன் காரணமாக) மூன்று (தனி) ஓடைகளாகப் பாயும் நதியான கங்கையை (இந்த உலகத்திற்குக்) கொண்டு வருவான். ஓ! மனிதர்களின் தலைவா {அன்சுமானே}, நற்பேறு உனதாகட்டும்!~ இந்த வேள்விக் குதிரையை நீ அழைத்துச் செல், பெருமைமிக்கச் சகரனின் வேள்விச் சடங்குகளை முடி மகனே" என்றார் {கபிலர்}.

இப்படிச் சிறப்புமிக்கக் கபிலரால் சொல்லப்பட்ட அன்சுமான் தன்னுடன் குதிரையை அழைத்துக் கொண்டு, பலம் வாய்ந்த மனம் கொண்ட சகரனின் வேள்விச் சாலைக்குத் திரும்பி வந்தான். பிறகு உயர் ஆன்ம சகரனின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான். சகரன் அவனது உச்சியை முகர்ந்து பார்த்தான். பிறகு அவன் {பேரன் அன்சுமான்} தான் கண்ட மற்றும் கேட்ட சம்பவங்கள் அனைத்தையும் சகரனின் மகன்கள் அழிவையும் சொன்னான். குதிரை வேள்விச்சாலைக்குத் திரும்பக் கொண்டு வரப்பட்டதையும் தெரிவித்தான். இதைக் கேட்ட மன்னன் சகரன், தனது மகன்கள் குறித்து மேலும் வருத்தமடையாமல் இருந்தான். பிறகு அவன் அன்சுமானை புகழ்ந்து, கௌரவித்து, தனது வேள்விச் சடங்குகளை முடித்தான்.

அவனது வேள்வி முடிந்ததும் சகரன் அனைத்து தேவர்களால் மரியாதையுடன் வாழ்த்தப்பட்டான். பிறகு அவன் {சகரன்} வருணனின் வசிப்பிடமான கடலைத் தனது மகனாக ஆக்கிக் கொண்டான். அந்தத் தாமரைக் கண்ணன் (மன்னன் சகரன்) நீண்ட காலத்திற்குத் தனது நாட்டை ஆண்டு, பிறகு அனைத்து பொறுப்புகளையும் அரியணையையும் தனது பேரனிடம் {அன்சுமானிடம்} கொடுத்துவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.  ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அதே போல ஆன்மாவால் அறம்சார்ந்தவனான அன்சுமானும், கடலின் நுனி வரை இருந்த முழு உலகத்தையும், தனது தந்தையின் தந்தையுடைய பாதச்சுவடுகளைப் பின்பற்றி ஆண்டான். திலீபன் என்று அழைக்கப்பட்ட அவனின் {அன்சுமனின்} மகன் அறம் கொண்டவனாக இருந்தான். அரசுரிமைக்கான கடமைகளை அவன் {திலீபன்} மேல் சுமத்திவிட்டு அன்சுமான் தனது உயிரை விட்டான்.

தனது மூதாதையர்களுக்கு ஏற்பட்ட துன்பகரமான விதிப்பயனை அறிந்த திலீபன் மிகவும் துக்கமுற்று, அவர்களை மீட்கும் வழிகளை நினைத்துப் பார்த்தான். அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {திலீபன்} கங்கையைக் கீழே (மனித உலகுக்கு) இறக்க மிகவும் முயற்சி செய்தான். தன்னால் இயன்றவரை அவன் முயன்றாலும், அவனால் தான் விரும்பியவாறு அதைக் {கங்கையைக்} கொண்டுவர முடியவில்லை. அவனுக்கு {திலீபனுக்கு) பகீரதன் என்ற பெயரில் அழகான மகன் பிறந்தான். அவன் அறவாழ்வுடனும், உண்மையுடனும், தீய எண்ணங்கள் அற்றவனுமாக இருந்தான். திலீபன் அவனை மன்னனாக நியமித்து, கானக வாழ்வை மேற்கொள்ளச் சென்றான். ஓ! பாரதக் குலத்தின் கொழுந்துகளில் சிறந்தவனே, பிறகு அந்த மன்னன் (திலீபன்), தன்னை வெற்றிகரமான தவ வழிகளில் ஈடுபடுத்தி, இறுதிக் (குறித்த) காலத்தில் கானகத்தில் இருந்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான். 


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்