Showing posts with label விபாண்டகர். Show all posts
Showing posts with label விபாண்டகர். Show all posts

Saturday, March 01, 2014

சாந்தையை மணந்த ரிஷ்யசிருங்கர் - வனபர்வம் பகுதி 113

Rishyasringa married Santa! | Vana Parva - Section 113| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீட்டிய திட்டத்தின்படி விலைமகள்கள் ரிஷ்யசிருங்கரை லோமபாதனிடம் அழைத்துச் செல்வது; லோமபாதன் தனது மகளை ரிஷ்யசிருங்கருக்கு மணமுடித்துக் கொடுத்தது; கோபத்துடன் வந்த விபாண்டகர் சாந்தமடைந்தது.

விபாண்டகர் {ரிஷ்யசிருங்கரிடம்} சொன்னார், "ஓ மகனே {ரிஷ்யசிருங்கா}, அவர்கள் ராட்சசர்கள். அவர்கள் அழகான உருவம் எடுத்து அற்புதமாக நடந்து செல்வார்கள். நிகரில்லாத பலமும், பெரும் அழகும் கொண்டவர்கள் அவர்கள். தவப்பயிற்சிகளுக்குத் தடங்கல்கள் ஏற்படுத்துவதே அவர்களது தவம். ஓ! எனது மகனே, அவர்கள் அன்பு உருவம் கொண்டு பல வழிகளில் ஏமாற்றுவார்கள். அந்தக் கடுமையானவர்கள், காடுகளில் வசிக்கும் தவசிகளை அருள் நிறைந்த உலகில் இருந்து (அவர்கள் நற்செயல்கள் மூலம் அவற்றை வென்றிருந்தாலும்) விலக்குகின்றனர்.


தனது ஆன்மாவை முழு கட்டுக்குள் வைத்து, நேர்மையானவர்களின் உலகை அடைய விரும்புபவர்களுக்கு இவர்களிடம் எந்தக் காரியமும் இல்லை. அவர்களது செயல்கள் தீங்கானவை. தவத்திற்கு தடை ஏற்படுத்தி மகிழ்பவர்கள் அவர்கள். பக்தி நிறைந்த மனிதர்கள் அவர்களைக் காணக் கூடாது. ஓ மகனே! அந்தப் பானகங்களும் அருந்தத்தக்கவை அல்ல. அவை நேர்மையற்றவர்களால் பருகப்படும் சாராயமாகும். பிரகாசமாகவும், மணமிக்கதாவும், பல வண்ணங்களில் இருக்கும் இந்த மலர்மாலையும் தவசிக்களுக்கானது இல்லை.

அவர்கள் தீய பேய்கள் என்று சொல்லித் தனது மகனுக்குத் தடையை ஏற்படுத்திய பிறகு, விபாண்டகர் அவளைத் தேடி அலைந்தார். மூன்று நாட்கள் தேடியும் அவள் எங்கிருக்கிறாள் என்ற சுவடுகளை அறியாத அவர் மீண்டும் தனது ஆசிரமத்திற்கே திரும்பினார். அதே வேளையில், காசியபரின் மகன் {விபாண்டகர்} கனிகள் சேகரிக்கச் சென்றிருந்தார். அப்போதும் அந்த விலைமகள் மீண்டும் ரிஷ்யசிருங்கரைப் பழைய முறையிலேயே மயக்க வந்திருந்தாள். ரிஷ்யசிருங்கர் அவளைக் கண்டதும் வெகுவாக மகிழ்ந்து அவளிடம் விரைவாகச் சென்று, "எனது தந்தை திரும்புவதற்கு முன்னர், நாம் உமது ஆசிரமத்திற்குச் செல்லலாம்" என்றார்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அந்த விலை மகள்களின் திட்டத்தின்படி காசியபரின் {விபாண்டகரின்} ஒரே மகனைத் தங்கள் மிதக்கும் ஆசிரமத்திற்குள் நுழையச் செய்து, அந்த ஓடத்தை ஓடச் செய்தனர். பிறகு பலவிதமான செயல்கள் மூலம் அவரை மகிழ்ச்சியூட்டிக் கொண்டே, கடைசியாக அங்க மன்னன் அருகே வந்தனர். மிகுந்த வெண்ணிறம் கொண்ட அந்த மிதக்கும் ஓடத்தை நீரிலேயே விட்டு, ஆசிரமத்திலிருந்து கண்ணுக்கெட்டும் தூரத்தில் நிறுத்தி மிதக்கும் ஆசிரமம் என்ற பெயரிலேயே மிக அழகான கானகத்தை உருவாக்கினான் {லோமபாதன்}. இருப்பினும் அம்மன்னன், விபாண்டகரின் ஒரே மகனை {ரிஷ்யசிருங்கனை} அரண்மனையின் ஒரு பகுதியில் வைத்திருந்தாலும், பெண்களை அருகில் விடவில்லை. பிறகு அவன் {அங்க மன்னன் லோமபாதன்} மழை வானத்தில் இருந்து கொட்டுவதைக் கண்டான். உலகம் நீரால் நிரம்பியது.

இதய விருப்பம் நிறைவேறிய லோமபாதன் தனது மகளாகிய சாந்தையை ரிஷ்யசிருங்கருக்கு மணம் முடித்துக் கொடுத்தான். அவரது தந்தையின் {விபாண்டகரின்} கோபத்தைத் தணிக்கும் பொருட்டு, அவர் தனது மகனைக் காண வரும் வழியில் மாடுகள் இருக்கவும், நிலங்கள் உழப்பட்டு இருக்கவும் பார்த்துக் கொண்டான். அம்மன்னன் {லோமபாதன்}, அப்படி நிறைய கால்நடைகளை நிறுத்திவிட்டு, அவர்களிடம்  {பணியாளர்களிடம்} பின்வருமாறு சொன்னான்.

"அந்தப் பெரும் முனிவரான விபாண்டகர் தனது மகனைக் குறித்து உங்களிடம் விசாரிக்கும்போது, நீங்கள் குவிந்த கரங்களுடன் அவரிடம் இந்த கால்நடைகளும், உழப்பட்ட நிலங்களும் உமது மகனுடையதே. நாங்கள் அவர் சொல்வதற்குக் கீழ்ப்படியும் அடிமைகள்" என்றும் சொல்லவேண்டும் என்றான் {லோமபாதன்}. கடும் கோபம் கொண்ட அந்தத் தவசி பழங்களையும், கிழங்குகளையும் சேகரித்து தனது ஆசிரமத்திற்குத் திரும்பி தனது மகனை {ரிஷ்யசிருங்கரைத்} தேடினார். அவரைக் காணாததால் மிகுந்த கோபத்திற்குள்ளானார். கோபத்தால் துன்புறுத்தப்பட்ட அவர், இது மன்னனுடைய செயல்தான் என்று சந்தேகப்பட்டார். ஆகையால், அவர் சம்பை நகரத்துக்குச் சென்று மன்னனையும், அவனது நகரத்தையும், மொத்த நாட்டையும் எரித்துவிட எண்ணினார்.

வழியில் மிகவும் களைத்துப் போய் பசியுடன் இருந்த அவர் {விபாண்டகர்}, அந்த கால்நடைகள் நிரம்பிய இடத்திற்கு வந்தார். அங்கே அவர் சரியான முறையில் மாடுமேய்ப்பவர்களால் உபசரிக்கப்பட்டு, அந்த இரவை ஒரு மன்னனைப் போல கழித்தார். இப்படிப்பட்ட பெரும் விருந்தோம்பலைப் பெற்ற அவர், அவர்களிடம், "ஓ இடையர்களே, யாருடையவர்கள் நீங்கள்" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இந்தச் செல்வம் அனைத்தையும் எங்களுக்கு உமது மகன் {ரிஷ்யசிருங்கர்} கொடுத்தார்" என்றனர். பிறகு பல இடங்களில் மனிதர்களில் சிறந்த பலரால் அவர் {விபாண்டகர்}  பெரிதும் மதிக்கப்பட்டார். தனது மகன் அங்கே சொர்க்கத்தில் இருக்கும் இந்திரனைப் போல இருப்பதைக் கண்டார். (மேகத்திலிருந்து) வெளியேறும் மின்னலைப் போல இருந்த தனது மருமகளான சாந்தையையும் கண்டார். மாட்டு மந்தைகளும், குக்கிராமங்களும் தனது மகனுக்குக் கிடைத்திருப்பதைக் கண்டும், சாந்தையைக் கண்டும் அவரது பெரும் எதிர்ப்பு நிலை சாந்தப்படுத்தப்பட்டது.

ஓ மனிதர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பூமியின் தலைவனிடம் விபாண்டகர் தனது பெரும் திருப்தியை வெளிப்படுத்தினார். சூரியனையும், நெருப்பையும் பழிக்கும் சக்தி கொண்ட அந்த பெரும் தவசி {விபாண்டகர்} தனது மகனிடம் {ரிஷ்யசிருங்கரிடம்} "உனக்கு ஒரு மகன் பிறந்ததும், மன்னனுக்கு ஏற்புடையது அனைத்தையும் நீ செய்த பிறகு, தவறாமல் காட்டுக்கு வந்துவிடு" என்றார். ரிஷ்யசிருங்கரும் தனது தந்தை சொன்னபடியே செய்து, தனது தந்தையின் இடத்திற்கே திரும்பினார்.

ஓ மனிதர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, வானத்தில் இருக்கும் ரோகிணி நட்சத்திரம் சந்திரனுக்குக் காத்திருப்பதைப் போல, பெரும்பேறு பெற்ற அருந்ததி வசிஷ்டருக்குக் காத்திருப்பது போல, லோபமுத்திரை அகஸ்தியருக்குக் காத்திருப்பது போல, நளனுக்குக் கீழ்ப்படிந்த மனைவியான தமயந்தியைப் போல, இடியைத் தாங்குபவனுக்கு {இந்திரனுக்கு} சச்சி இருப்பது போல, முத்கலருக்கு நாராயணனின் மகளான இந்திரசேனை {நளாயனி} இருப்பது போல, கானகத்தில் வாழ்ந்த ரிஷ்யசிருங்கருக்காக சாந்தை பாசத்துடன் காத்திருந்தாள். இதுதான் அவருக்குச் சொந்தமான ஆசிரமம். இந்தப் பெரும் தடாகத்திற்கு அழகு சேர்க்கும் இது புனிதமான புகழைப் பெற்றிருக்கிறது. இங்கே உனது கடன்களைச் செய்து விருப்பம் நிறைவேறியவனாகு. உன்னைச் சுத்தகரித்துக் கொண்ட பிறகு, உனது பாதையை வேறு புனிதமான இடங்களின் பால் திருப்பு" என்றார் {லோமசர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Friday, February 28, 2014

பெண்ணை வர்ணித்த ரிஷ்யசிருங்கர் - வனபர்வம் பகுதி 112

Rishyasringa described the woman! | Vana Parva - Section 112| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தன் தந்தையான விபாண்டகரிடம், தான் சந்தித்த அயல் மனிதரைக் குறித்து ரிஷ்யசிருங்கர் சொல்வது…

ரிஷ்யசிருங்கர் {தந்தை விபாண்டகரிடம்} சொன்னார், "இன்று இங்கே தலையில் முடி நிறைந்த கூந்தலுடைய ஒரு ஆன்மிக மாணவர் வந்தார். அவர் உயரமாகவும் இல்லை கட்டையாகவும் இல்லை. அவர் நல்ல மனமுடையவராகவும், பொன்னிறமாகவும், தாமரை இதழ்களைப் போன்ற பெரிய கண்களையுடையவராகவும், தேவரைப் போலப் பிரகாசிக்கும் அழகுடன் இருந்தார். சூரியனைப் போன்று அவர் அழகில் பிரகாசித்தார். அவரது பார்வை அருள் நிறைந்து கருமையுடன் இருந்தது. சடைபின்னிய அவரது கூந்தல் நீலமும் கருப்பும் கலந்து நீளமாகவும், நறுமணம் பூசப்பட்டும், தங்க இழைகள் பின்னப்பட்டும் இருந்தது.


அவரது கழுத்தில் வானத்தில் மின்னும் மின்னலைப் போன்ற அழகிய ஆபரணம் ஒன்று இருந்தது. அவருடைய கழுத்துக்குக் கீழே ஒரு முடி கூட இல்லாத இரண்டு சதைப் பந்துகள் மிக அழகிய உருவத்துடன் இருந்தன. அவருடைய இடை கொடிபோன்று மெலிதாகவும், நாபி அழகாகவும், விலாப்புறம் மென்மையாகவும் இருந்தன. எனது இடையில் இருக்கும் மேகலையைப் போல {அரைஞான் கயிறு} போல அவரது ஆடைக்குக் கீழே ஒரு தங்க இழை இருந்தது. அவரது பாதங்களில் அழகிய உரு கொண்ட ஏதோ ஒன்று {கொலுசு} கிளு கிளு சத்தத்தை உண்டாக்கியது. இந்த ஜெபமாலையைப் போல அவரது மணிக்கட்டிலும் இருந்த ஆபரணங்களும் அதே போன்ற ஒலியை எழுப்பின.


ஆபரணங்களுடன் அவர் நடக்கும்போது, நீரில் மகிழ்ச்சியாகத் திளைக்கும் அன்னங்கள் எழுப்பும் ஒலியைப் போல ஒரு ஒலி எழுகிறது. அவர் தனது மேனியில் அற்புதமான வடிவமைப்புடன் கூடிய ஆடை அணிந்திருந்தார். எனது ஆடைகள் அவருடையதைப் போல அழகாக இல்லை. அவரது முகம் காண்பதற்கு அழகாக இருந்தது. அடக்கப்பட்ட அவரது குரல் இதயத்துக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவரது பேச்சு ஆண்குயிலின் பாட்டுக்கு இணையாக இருந்தது. அதைக் கேட்டபோது, அந்த இசை உள்ளிருக்கும் ஆன்மாவைத் தொட்டது. இளவேனிற்காலத்துக் காடு, தென்றலால் தழுவப்படும்போது எப்படி அருள் நிறைந்து இருக்கிறதோ அப்படி, ஓ தந்தையே {விபாண்டகரே}, காற்று அவர் மீதும் படும்போது அற்புதமான நறுமணத்தைக் கொடுக்கிறது.


தலையில் நன்றாக முடியப்பட்ட கேசமும், முன் நெற்றியில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட வகிடும் அவருக்கு இருக்கின்றன. அவருடைய இரண்டு கண்களும் சக்கரவாகப் பறைவைகளைப் போன்ற மிகுந்த அழகாக இருக்கின்றன. அவருடைய வலது கையில் ஒரு விசித்திரமான பழம் {பந்து} வைத்திருந்தார். அது தரையை அடைந்து, மீண்டும் மீண்டும் ஆச்சரியமான வகையில் வானத்திற்கு எழுகிறது. அவர் அதை அடித்து, தன்னைத் தானே சுற்றி, தென்றலால் நகர்த்தப்படும் மரம் போலச் சுழன்றார். ஓ! தந்தையே, நான் அவரைக் கண்ட போது, தேவர்களின் குமாரன் என நினைத்தேன். எனது இன்பமும் மகிழ்ச்சியும் அளவற்றதாக இருந்தது.

அவர் எனது உடலை அணைத்துக் கொண்டு, எனது சடா முடியைப் பிடித்து, எனது வாயை நோக்கிக் குனிந்து, அவரது வாயுடன் எனது வாயையும் பொருத்தி, மிகவும் இனிமையான ஒரு சத்ததை உண்டாக்கினார். அவர் தனது கால்களைக் கழுவ நீருக்காகக் கவலை கொள்ளவில்லை. என்னால் கொடுக்கப்பட்ட கனிகளையும் அவர் மதிக்கவில்லை. தான் கடைப்பிடிக்கும் ஆன்மிக நோன்பு இதுதான் என்று அவர் என்னிடம் சொன்னார். உயர்ந்த மனிதரான அவர் நான் பருக மிகுந்த மனம் உள்ள பானம் ஒன்றைக் கொடுத்தார். நான் அதனால் பெரும் இன்பத்தை அனுபவித்தேன். எனது கால்களுக்கு அடியில் தரை நகர்வதைப் போல உணர்ந்தேன்.

தங்க இழையால் கட்டப்பட்ட இந்த அழகிய மாலை அவருக்கே சொந்தமானது. அவர் ஆர்வத்துடனும் பக்தியுடனும் மாலைகளைப் பிரித்துப் போட்டு அவரது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அவருடைய பிரிவு எனது இதயத்துக்குச் சோகத்தைக் கொடுக்கிறது. எனது உணர்வுகள் எரிச்சலைக் கொடுக்கின்றன. அவரிடம் எவ்வளவு விரைவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம். என்னுடன் இங்கே நடந்து திரிய எனக்கு அவர் வேண்டும். ஓ தந்தையே, இந்தக் கணமே என்னை அவரிடம் செல்ல விடுங்கள். அவர் பயிலும் ஆன்மிகப் பயிற்சி என்ன வகையானது? உயர்ந்த பக்தியுடைய அவருடன் அதே போன்ற வாழ்வு வாழ விரும்புகிறேன்.

வர் எவ்வகைத் தவம் புரிகிறாரோ அவ்வண்ணமே தவம் புரிய எனக்கு விருப்பமிருக்கிறது. அவரைக் காணாமல் இருப்பதனால் எனது மனம் துன்பமடைகிறது" என்றார் {ரிஷ்யசிருங்கர்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


ரிஷ்யசிருங்கரிடம் வந்த விலைமகள் - வனபர்வம் பகுதி 111

The courtesan came to Rishyashringa! | Vana Parva - Section 111| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

மன்னன் லோமபாதனிடம் உறுதி கூறி வந்த விலைமகள் ஒரு மிதக்கும் ஆசிரமத்தை அமைத்து, ரிஷ்யசிருங்கர் இருக்கும் இடத்தை அடைதல்; ரிஷ்யசிருங்கர் விலைமகளை உபசரித்தல்; சிறிது நேரம் விளையாடிவிட்டு செல்லல்; விலைமகளைப் பிரிந்ததும் ரிஷ்யசிருங்கர் சோகத்துடன் அமர்ந்திருத்தல்.; ரிஷ்யசிருங்கரின் தந்தையான விபாண்டகர் கேட்ட கேள்வி….

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, மன்னனின் {லோமபாதனின்} நோக்கத்தை நிறைவேற்ற, அவனது உத்தரவின் பேரிலும், தனது திட்டம் நிறைவேறும் பொருட்டும், அவள் {விலைமகள்} ஒரு மிதக்கும் ஆசிரமத்தைத் {ஓடத்தில் ஆசிரமம்} தயார் செய்தாள். அந்த மிதக்கும் ஆசிரமத்தில் பலதரப்பட்ட கனிகள் மற்றும் மலர்களுடன் கூடிய செயற்கை மரங்களும், இனிமையான பழங்கள் கொடுக்கக்கூடிய அழகிய புதர்களும், கொடிகளும், மந்திரத்தால் வரவழைக்கப்பட்டது போன்று பார்ப்பதற்கு இனிமையாக மனதைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தன. அவள் அந்த ஓடத்தைக் காசியபர் மகனின் {விபாண்டகரின்} ஆசிரமத்திற்கு அருகே கட்டி, அந்தத் தவசி {விபாண்டகர்} வாடிக்கையாக வெளியே செல்லும் நேரத்தை அறிந்து வர ஆட்களை அனுப்பினாள். அவள் {விலைமகள்} ஒரு சந்தர்ப்பத்தைக் கண்டு, ஒரு திட்டம் தீட்டி, தொழிலால் விலைமகளான, சாமர்த்தியசாலியான தனது மகளை {விலைமகளை} அனுப்பினாள். அந்தப் புத்திசாலிப் பெண்ணும், அந்த ஆன்மிக மனிதனின் {ரிஷ்யசிருங்கரின்} அருகே அந்த ஆசிரமத்திற்குச் சென்று அந்தத் தவசியின் மகனைக் கண்டாள்.


அந்த விலைமகள் {ரிஷ்யசிருங்கரிடம்}, "ஓ! தவசியே! ஆன்மிக அர்ப்பணிப்பாளர்கள் {முனிவர்கள்} அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். உமது ஆசிரமத்தில் கனிகளும் கிழங்குகளும் அபரிமிதமாகச் சேமிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். உம்மைக் காணவே நான் இங்கு வந்துள்ளேன். தவம்பயிலும் தவசிகளின் பயிற்சி பெருகுகிறது என்று நினைக்கிறேன். உமது தந்தையின் ஆவி தளராமல் இருக்கிறது என்றும், அவர் உம்மிடம் திருப்தியுடன் இருக்கிறார் என்றும் நினைக்கிறேன். ஓ! புரோகித சாதியைச் சேர்ந்த ரிஷ்யசிருங்கரே! உமது ஆய்வுகளைச் சரியாக முன்னெடுக்கிறீர் என்றும் நினைக்கிறேன்" என்றாள்.

ரிஷ்யசிருங்கர் {அந்த விலைமகளிடம்}, "நீர் ஒளிக்குவியல் போல ஒளிரும் காந்திமிக்கவராக இருக்கிறீர். நீர் வணக்கத்திற்குரியவர் என்று கருதுகிறேன். நான் உமது பாதங்களைக் கழுவ நீர் தருகிறேன். என்னிடம் இருக்கும் கனிகளையும் கிழங்குகளையும் நான் உமக்குத் தருகிறேன். புனிதமான புல்லால் செய்யப்பட்டு, கருப்பு மான் தோலால் மூடப்பட்ட இந்த ஆசனத்தில் திருப்தியாக, வசதியாக அமரும். உமது ஆசிரமம் எங்கே இருக்கிறது? ஓ! அந்தணரே, நீர் தேவர்களைப் போன்ற முகத்தோற்றம் கொண்டிருக்கிறீர். நீர் இப்போது கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆன்மிக நோன்பு யாது?" என்று கேட்டார்.

அதற்கு அந்த விலைமகள் {ரிஷ்யசிருங்கரிடம்}, "ஓ காசியபரின் மகனே {பேரனே}, இந்த மலைகளுக்கு அப்பால் மூன்று யோஜனை தூரத்தில் ஒரு அழகான இடத்தில் எனது ஆசிரமம் இருக்கிறது. நான் உம்மைப்போன்ற மனிதர்களால் வணங்கத்தக்கவர் அல்ல. மேலும் நான் கால் கழுவவும் நீர் வாங்குவதில்லை. நான் தான் உமக்கு வணக்கங்கள் தெரிவிக்க வேண்டும். ஓ அந்தணரே! எனது கரங்களால் உம்மைக் கட்டி அணைத்துக் கொள்வதே நான் பயிலும் எனது ஆன்மிக நோன்பாகும்" என்றாள்.

ரிஷ்யசிருங்கர் {அந்த விலைமகளிடம்}, "நான் உமக்குக் கடுக்காய் கனிகள் {gallnut}, நெல்லிக்கனிகள் {myrobalan}, காரூஷக் கனிகள் {Karusha} {இது என்ன கனியென்று தெரியவில்லை}, மணற்பாங்கான இடங்களில் விளையும் வாதுமை {பாதாம், மணிப்பன்குகள்} {Inguda} மற்றும் அத்திப்பழம் {Indian fig} போன்ற கனிந்த பழங்களைக் கொடுப்பேன். அவை உமக்குத் திருப்தியைத் தந்தால் நீர் அதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம்" என்றார்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அவர் {ரிஷ்யசிருங்கர்} கொடுத்த ஏற்புடைய அனைத்தையும் அவள் {விலைமகள்} புறந்தள்ளினாள். பிறகு பொருந்தாத உணவுவகைகளை அவருக்குக் கொடுத்தாள். அவை ரிஷ்யசிருங்கருக்கு ஏற்புடையதாகவும், அழகானவையாகவும் இருந்தன. நறுமணமிக்க ஒரு மலர்மாலையையும், அணிந்து கொள்ள ஒளிரும் ஆடைகளையும், முதல்தரமான பானங்களையும் அவருக்கு {ரிஷ்யசிருங்கருக்கு} கொடுத்து சிரித்து மகிழ்ந்தாள். பிறகு அவரோடு விளையாடி, சிரித்து மிகவும் மகிழ்ந்தாள். அவரது பார்வையில் படும்படி அவள் பந்து விளையாடிய போது உயர்ந்து செல்லும் கொடி இரண்டாக உடைந்ததைப் போல இருந்தாள். அவரது உடலைத் தனது உடலால் அடிக்கடித் தொட்டு, மீண்டும் மீண்டும் ரிஷ்யசிருங்கரை அணைத்துக் கொண்டாள்.

பிறகு அவள் {விலைமகள்} சால, அசோக, திலக மரங்களில் இருந்து குச்சிகளை வளைத்து ஒடித்தாள். மயக்கத்தில் மூழ்கிய அவள் {விலைமகள்}, நாணம் கொண்டு அந்தப் பெரும் தவசியின் மகனை மயக்கினாள். ரிஷ்யசிருங்கரின் இதயம் தன்னால் தீண்டப்பட்டதை அறிந்த அவள் திரும்பத் திரும்பத் அவரது உடலைத் தன் உடலால் தொட்டும், பார்வையை அவர் மீது செலுத்தியும் மெதுவாக அங்கிருந்து சென்றுவிட்டாள். அப்படிச் செல்லும்போது அவள் நெருப்புக்குக் காணிக்கை செலுத்த வேண்டும் என்று அவரிடம் சொல்லிச் சென்றாள்.

அவள் {விலைமகள்} சென்ற பிறகு ரிஷ்யசிருங்கர் காதலில் மூழ்கி தனது உணர்வை இழந்தார். அவரது மனம் முழுவதும் அவளிடம் இருந்ததால் அது வெறுமையா இருந்தது. அதே நேரத்தில், தனது சாதிக்குச் சரியான கல்வியைப் பெற்று, ஆன்மிகத் தவத்தைக் கடந்த அவரது {ரிஷ்யசிருங்கரின்} இதயம் சுத்தமானதாக இருந்தது. சிங்கத்தைப் போன்ற பழுப்பு நிறக் கண்களுடனும், நகத்தின் நுனிவரையுள்ள உடல் முழுவதும் முடிகளுடனும் இருந்த காசியபரின் மகன் {விபாண்டகர்} அங்கே வந்தார். அவர் வந்து, சோகத்துடனும் தனியாகப் பெருமூச்சுவிட்டபடியும், மேல்நோக்கிய கண்களுடனும் அமர்ந்திருக்கும் தனது மகனை {ரிஷ்யசிரருங்கரைக்} கண்டார்.

துயருற்றிருந்த தனது மகனிடம் {ரிஷ்யசிருங்கரிடம்} விபாண்டகர், "என் மகனே, வேள்விக்கான விறகை இன்னும் ஏன் நீ எடுத்து வரவில்லை. தினமும் செய்ய வேண்டிய சேவைகளைச் சரியாகச் செய்திருக்கிறாய், என்று நினைக்கிறேன். வேள்விக்குத் தேவையான கரண்டிகளைச் சுத்தம் செய்விட்டாயா? கொண்டு வந்திருக்கும் பொருட்களை வைத்து நெருப்புக்கு வேள்வி செய்திருப்பாய் என்று நினைக்கிறேன். எதுவும் தேவைப்படும் நிலையில் நீ இல்லை என்று நினைக்கிறேன். ஓ! மகனே {ரிஷ்யசிருங்கனே}, நீ சோகத்துடன் உணர்விழந்து இருப்பது போலத் தெரிகிறாயே. நீ ஏன் இன்று சோகமாக இருக்கிறாய்? இந்த இடத்திற்கு யார் வந்தார் என்று என்னைக் கேட்கவிடு?" என்றார் {விபாண்டகர்}


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Wednesday, February 26, 2014

பெண்களையேக் காணாத ரிஷ்யசிருங்கர்! - வனபர்வம் பகுதி 110ஆ

Rishyashringa know nothing of women! | Vana Parva - Section 110b| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

விபாண்டகருக்கும் பெண்மானுக்கும் ரிஷ்யசிருங்கர் பிறப்பது; அங்கதேசத்தின் மழையின்மை; லோமபாதன் ஆலோசனை; ரிஷ்யசிருங்கரைத் தன் நாட்டுக்கு வரவழைக்க லோமபாதன் திட்டம்; விலைமாதர்களிடம் பேசுதல்; திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதிய மங்கை...

யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், "காசியபரின் மகனான {பேரனான} ரிஷ்யசிருங்கர் எப்படிப் பெண்மானுக்குப் பிறந்தார்? வெறுக்கத்தக்க பாலியல் உறவில் பிறந்த அவர் புனிதத்தன்மையை எப்படி அடைந்தார்? {அசுரர்கள்} பலனையும் விருத்திரனையும் கொன்ற இந்திரன் எக்காரணத்தால் அவ்விளம் பிள்ளைக்குப் பயந்து, பஞ்ச காலத்தில் மழையைப் பொழிந்தான்? மானாக இருந்தவரின் மனதை ஆசைப்படும்படி செய்த புனித வாழ்வு வாழ்ந்த இளவரசி சாந்தை எவ்வளவு அழகாக இருந்தாள்? அரசமுனியான லோமபாதன் அறம்சார்ந்தவனாகச் சொல்லப்படுகிறானே, அவ்வாறிருக்க, பகனைத் தண்டித்தவனான இந்திரன் அவனது நாட்டில் ஏன் மழையைப் பொழியவில்லை? ஓ! புனிதமான தவசியே! {லோமசரே} இவை அனைத்தையும் விவரமாக, நடந்த படியே எனக்கு உரைக்க வேண்டும். ரிஷ்யசிருங்கரின் வாழ்வில் நடந்த சாதனைகளை நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.


லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அந்தண சாதியைச் சார்ந்த தவசியும், ஆன்மசாதனைகளால் தனது ஆன்மாவை பக்குவப்படுத்தியிருந்தவரும், பிறப்பைக் கொடுக்கத்தவறாத வித்துடையவரும், கற்றவரும், உயிரினங்களின் தலைவர் போலப் பிரகாசிப்பவருமான விபாண்டகருக்கு, அச்சமூட்டும் பெயர் கொண்ட ரிஷ்யசிருங்கர் எப்படிப் பிறந்தார் என்பதைக் கேள். தந்தை {விபாண்டகர்} உயர்ந்த மதிப்புக்குரியவர். அதே போல மகனும் {ரிஷ்யசிருங்கர்} பெரும் பலம்வாய்ந்த ஆவி கொண்டவர். ஆகையால் அவர் சிறியவனாக இருந்த போதிலும் முதிர்ந்தவர்களால் மதிக்கப்பட்டார்.

காசியபரின் மகனான விபாண்டகர் ஒரு பெரும் தடாகத்திற்குச் சென்று நோன்பு பயில தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தேவர்களுக்கு ஒப்பான அந்தத் தவசி இப்படியே நீண்ட காலம் நோன்பிருந்தார். ஒரு முறை நீரில் {தடாகத்தில்} தனது வாயைக் கழுவி கொண்டிருந்த போது, தேவலோக மங்கையான ஊர்வசியைக் கண்டார். அதன்காரணமாக அவரது {விபாண்டகரின்} உயிர்நீர் வெளியேறியது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே {அத்தடாகத்தில்} நீர் குடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மான், தாகமிகுதியால், தண்ணீருடன் சேர்த்து அதையும் அருந்தியது. அதன்காரணமாக அந்தப் பெண்மான் ஒரு பிள்ளையைப் பெற்றது. அந்தப் பெண்மான் உண்மையில் தேவர்களின் மகளாவாள். உலகங்களைப் படைத்த புனிதமான பிரம்மன் பழங்காலத்தில் அவளிடம், "நீ ஒரு பெண் மானாவாய். அந்த உருவத்தில் இருக்கும்போது, நீ ஒரு தவசியைப் பெற்றெடுப்பாய். அன்றே நீ விடுதலை அடைவாய்" என்றான்.

உலகப் படைப்பாளனின் வார்த்தைப் பொய்யாகாது; ஆகையால் விதியும் அவ்வாறே ஆயிற்று. அந்தப் பெண்மானிடம் பெரும் தவசியான அவரது {விபாண்டகரின்} மகன் {ரிஷ்யசிருங்கர்} பிறந்தார். தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்த ரிஷ்யசிருங்கர், தனது நாட்களைக் கானகத்திலேயே கழித்தார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}! அந்தப் பெருமைமிக்கத் தவசியின் {ரிஷ்யசிருங்கரின்} தலையில் ஒரு கொம்பு இருந்தது. அதன் காரணமாகவே, அந்தக் காலத்தில் அவர் ரிஷ்யசிருங்கர் {தலையில் கொம்புடையவர்} என்று அழைக்கப்பட்டார். தனது தந்தையைத் தவிர வேறு யாரையும் அவர் {ரிஷ்யசிருங்கர்} கண்டதில்லை ஆகையால், அவரது மனம் எப்போதும் கடமையிலேயே முழுதும் லயித்திருந்தது.

இதே காலத்தில் அங்கம் என்ற நாட்டின் {அங்கதேசத்தின்} ஆட்சியாளனாக, தசரதனின் {ரகுராமனின் தந்தையின்} நண்பனான லோமபாதன் என்ற பெயர் கொண்ட மன்னன் இருந்தான். இன்பத்தின் மீதிருந்த நாட்டத்தால் அவன் பொய்யுரைத்த குற்றத்தை அந்தணர்களுக்கு இழைத்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்தக் காலத்தில் உலகத்தின் ஆட்சியாளனான அவனை {லோமபாதனை} புரோகித வகுப்பில் {அந்தணர்கள்} அனைவரும் புறக்கணித்தனர். அவன் {அறச்சடங்குகளில் துணை புரிந்து} ஆலோசனை கூறும் புரோகிதர் இல்லாமல் இருந்தான். ஆயிரம் கண்கள் கொண்ட தேவனும் {இந்திரனும்} அவனது நாட்டில் {லோமபாதன் நாடான அங்கதேசத்தில்} மழை பொழிவதைத் திடீரென நிறுத்தினான். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அவனது மக்கள் {குடிமக்கள்} பாதிப்படையத் தொடங்கினர். தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்த மதிப்பும் திறனும் மிக்க, பண்பட்ட மனதுடைய பல அந்தணர்களிடம் சென்று, தேவர்கள் மழையைப் பொழியும்படியான உதவிக்காக, "வானம் நமக்கு எப்படி மழையை அருளும்? (இக்காரியத்துக்கு} உகந்த ஒன்றைச் சிந்தியுங்கள்" என்று கேட்டான் {லோமபாதன்}.

இப்படிக் கேட்கப்பட்ட அந்தப் பண்பட்ட மனிதர்கள் தாங்கள் கருதியதைச் சொன்னார்கள். அந்தத் தவசிகளில் ஒருவர் அம்மன்னனிடம் {லோமபாதனிடம்}, "ஓ! மன்னர்களின் தலைவா (லோமபாதா}, அந்தணர்கள் உன்னிடம் கோபமாக இருக்கின்றனர். (ஆகையால்) அவர்களைச் சாந்தப்படுத்த ஏதாவது செய். ஓ! பூமியின் ஆட்சியாளனே, பெண்களைப் பற்றியே அறியாது, எளிமையில் இனிமை கண்டு, கானகத்தில் வசிக்கும் தவசியின் மைந்தனான ரிஷ்யசிருங்கருக்கு ஆள் அனுப்பு. ஓ! மன்னா {லோமபாதா}, தவப்பயிற்சிகளில் பெருமைவாய்ந்த அவர் {ரிஷ்யசிருங்கர்}, உனது நாட்டுக்கு {அங்கதேசத்திற்கு} வந்தால், வானம் உடனே மழையை அருளும். இதில் எனக்குச் சந்தேகமே இல்லை" என்றார்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்த வார்த்தைகளைக் கேட்ட லோமபாதன், தனது பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்தான். அந்தணர்களைச் சமாதானப்படுத்திய பிறகு அவன் நாடு திரும்பினான். மன்னன் திரும்பி வந்ததைக் கண்ட மக்கள் இதயத்தில் மகிழ்ந்தனர். பிறகு அந்த அங்க மன்னன் {லோமபாதன்}, ஆழ்ந்த ஆலோசனைகள் வழங்கும் தனது அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டினான். ரிஷ்யசிருங்கரைச் சந்திப்பதற்கான திட்டத்தை வகுக்க அவன் பெரும் வலிகளைச் சந்தித்தான்.

ஓ! வழிதப்பாதவனே (இளவரசனே) {யுதிஷ்டிரனே}! அனைத்து கிளைகளிலும் ஞானம் கொண்டு, உலகக் காரியங்களில் பெரும் நிபுணத்துவம் வாய்ந்த அவனது அமைச்சர்களுடன் விவாதித்து, சாத்தியங்களை ஆராய்ந்து, கடைசியாக (தனது நோக்கம் வெற்றியடைய) ஒரு திட்டத்தை வகுத்தான். பிறகு அவன் {லோமபாதன்} நகரத்தில் இருந்த அனைத்திலும் புத்திசாலித்தனத்துடன் இருந்த விலைமகள்கள் பலருக்குச் சொல்லி அனுப்பினான். அவர்கள் வந்ததும், அந்தப் பூமியின் ஆட்சியாளன் அவர்களிடம், "அழகான பெண்களே! தவசியின் மகனான ரிஷ்யசிருங்கரின் நம்பிக்கையைப் பெற நீங்கள் ஏதாவது மயக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவரை நீங்கள் எனது நாட்டிற்கு அழைத்துவர வேண்டும்" என்றான். மன்னனின் கோபம் ஒரு புறம், தவசியின் சாபம் ஒரு புறம் எனக் கண்ட அப்பெண்கள் மிகவும் துக்கத்துடன் குழம்பி, இது தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது என்று தீர்மானித்தனர்.

இருப்பினும், அவர்களில் ஒருத்தியான ஒரு கிழட்டுப் பெண் {நரைத்த தலை கொண்டவள் என்றும் கொள்ளலாம்}, அம்மன்னனிடம் {லோமபாதனிடம்}, தவத்தையே செல்வமாகக் கொண்டவரை, இங்குக் கொண்டு வர நான் முயற்சிக்கிறேன். எனினும், அந்தத் திட்டத்திற்காக எனக்கு நீர் சில குறிப்பிட்ட {நான் விரும்பும்} பொருட்களைக் கொடுக்க வேண்டும். அப்படியென்றால்தான், தவசியின் மகனான ரிஷ்யசிருங்கரை என்னால் அழைத்துவர முடியும்" என்றாள். அதன்காரணமாக மன்னன் அவள் கேட்ட அனைத்தையும் கொடுத்தான். மேலும் அவன் {லோமபாதன்} ஏராளமான செல்வங்களையும், விதவிதமான ரத்தினங்களையும் கொடுத்தான். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, பிறகு அவள் மேலும் தாமதிக்கமால், தன்னுடன் அழகும் இளமையும் நிறைந்த பல பெண்களைக் காட்டுக்கு அழைத்துச் சென்றாள்" என்றார் {லோமசர்}


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Thursday, March 01, 2012

விபாண்டகர்

தசரத ராமன் புத்திரகாமேஷ்டி வேள்வி மூலம் பிறக்க காரணமாக இருந்த ரிஷ்யசிருங்க முனிவரின் தந்தை. காசியபரின் மகன்.

காசியபரின் மகனான விபாண்டகர் ஒரு பெரும் தடாகத்திற்குச் சென்று நோன்பு பயில தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தேவர்களுக்கு ஒப்பான அந்தத் தவசி இப்படியே நீண்ட காலம் நோன்பிருந்தார். ஒரு முறை நீரில் {தடாகத்தில்} தனது வாயைக் கழுவி கொண்டிருந்த போது, தேவலோக மங்கையான ஊர்வசியைக் கண்டார். அதன்காரணமாக அவரது உயிர்நீர் வெளியேறியது. அங்கே {அத்தடாகத்தில்} நீர் குடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மான், தாகமிகுதியால், தண்ணீருடன் சேர்த்து அதையும் அருந்தியது. அதன்காரணமாக அந்தப் பெண்மான் ஒரு பிள்ளையைப் பெற்றது. அந்தப் பெண்மான் உண்மையில் தேவர்களின் மகளாவாள். அந்தப் பெண்மானிடம் பெரும் தவசியான அவரது மகன் {ரிஷ்யசிருங்கர்} பிறந்தார்.

மஹாபாரதத்தில் விபாண்டகர் வரும் இடங்கள்
மஹாபாரதம்.3.110.5690  
மஹாபாரதம்.3.110.5692  
மஹாபாரதம்.3.111.5778  
மஹாபாரதம்.3.111.5780  
மஹாபாரதம்.3.113.5824  
மஹாபாரதம்.3.113.5834  
மஹாபாரதம்.3.113.5842  
மஹாபாரதம்.3.113.5844  
மஹாபாரதம்.3.113.5845  
மஹாபாரதம்.3.113.5858  

பட்டியல் : http://ancientvoice.wikidot.com/mbh:vibhandaka

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்