Saturday, December 31, 2016

மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்! - கர்ண பர்வம் பகுதி – 04

Dhritarashtra felldown senseless! | Karna-Parva-Section-04 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : துயரால் மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்; பெண்களின் ஓலம்; பெண்கள் மயங்கிவிழுந்தது; மீண்டும் சஞ்சயனிடம் போரைக் குறித்து விசாரித்த திருதராஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இந்தப் புலனாய்வைக் கேட்ட அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், துயரின் உச்சக்கட்டத்தை உணர்ந்து, சுயோதனன் {துரியோதனன்} ஏற்கனவே இறந்துவிட்டதாகவே கருதினான். மிகவும் கலங்கிப் போன அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, உணர்வுகளை இழந்த யானையொன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தான்.(1) பெரிதும் கலக்கமடைந்தவனான அந்த ஏகாதிபதிகளில் முதனமையானவன் {திருதராஷ்டிரன்} பூமியில் விழுந்த போது, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, (அரச குடும்பத்தைச் சார்ந்த) பெண்கள் உரக்க ஓலமிட்டனர். மொத்த பூமியையும் நிறைக்குமளவுக்கு அவ்வொலி பேரொலியாக இருந்தது[1].(2) ஆழ்ந்த துயரக் கடலில் மூழ்கியிருந்த அந்தப் பாரதப் பெண்மணிகள், பெரிதும் கலக்கமடைந்த இதயங்களுடன், துயரால் எரிக்கப்பட்டவர்களாக உரக்க அழுதனர்.(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மன்னனை அணுகிய காந்தாரியும், அந்தக் குடும்பத்தின் பிற பெண்மணிகள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தனர்.(4)


[1] சுலோகங்கள் 1-ம், 2-ம் இரு வரி சுலோகங்களாக அல்லாமல் முவ்வரி சுலோகங்களாக இருக்கின்றன எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, துயரால் பீடிக்கப்பட்டுக் கண்ணீரால் குளித்து, உணர்வுகளை இழந்த அந்தப் பெண்களுக்குச் சஞ்சயன் ஆறுதல் கூறினான்.(5) (சஞ்சயனால்) ஆறுதலடைந்த அந்தப் பெண்கள், காற்றால் அசைக்கப்பட்ட வாழையைப் போல மீண்டும் மீண்டும் நடுங்கத் தொடங்கினர்.(6) விதுரனும், அந்தக் குரு வழித்தோன்றலின் {திருதராஷ்டிரன்} மீது நீரைத் தெளித்து, தன் கண்ணையே ஞானமாகக் கொண்ட [2] அந்தப் பலமிக்க ஏகாதிபதிக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஆறுதலளிக்கத் தொடங்கினான்.(7) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மெதுவாக உணர்வுகளை அடைந்து, அந்தக் குடும்பத்தின் பெண்கள் அங்கே இருப்பதை அறிந்து கொண்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, மதியிழந்த ஒருவனைப் போலச் சிறிது நேரம் முற்றிலும் அமைதியாக இருந்தான்.(8)

[2] "இது பார்வையற்ற ஒரு மனிதனைக் குறிக்கும் மதிப்புமிக்க அடைமொழியாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சிறிது நேரம் சிந்தித்து, நீண்ட பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விட்ட அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் மகன்களை நிந்தித்து, பாண்டவர்களைப் புகழ்ந்தான்.(9) தன் அறிவையும், சுபலனின் மகனான சகுனியின் அறிவையும் நிந்தித்த மன்னன், நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, மீண்டும் மீண்டும் நடுங்கத் தொடங்கினான்.(10) மீண்டும் தன் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்ட அந்த மன்னன், போதுமான மன உரத்துடன், கவல்கணன் மகனான தன் தேரோட்டி சஞ்சயனிடம் கேள்வி கேட்டான்.(11)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, நீ சொன்னதனைத்தையும் நான் கேட்டேன். ஓ! சூதா, எப்போதும் வெற்றியை விரும்பிய என் மகன் துரியோதனன், வெற்றியடையவதில் சலிப்படைந்து ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்குச் சென்றுவிட்டானா? ஓ! சஞ்சயா, திரும்பச் சொல்ல வேண்டியிருந்தாலும் கூட, இவை யாவையும் எனக்கு உண்மையாகச் சொல்வாயாக" என்றான்.(12,13)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஜனமேஜயா, மன்னனால் {திருதராஷ்டிரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சூதன் {சஞ்சயன்}, அவனிடம், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த வைகர்த்தனன் {கர்ணன்}, வலிமைமிக்க வில்லாளிகளும், போரில் தங்கள் உயிர்களை விடத் தயாராக இருந்தவர்களுமான தனது மகன்கள், தம்பிகள் மற்றும் பிற சூதப் போர்வீரர்கள் அனைவருடன் சேர்த்துக் கொல்லப்பட்டான்.(14) பாண்டுவின் புகழ்பெற்ற மகனால் {பீமனால்} துச்சாசனனும் கொல்லப்பட்டான். உண்மையில், அந்தப் போரில் கோபத்துடன் இருந்த பீமசேனனால் அவனது {துச்சாசனனின்} குருதியும் குடிக்கப்பட்டது" {என்றார் வைசம்பாயனர்}.(15)
------------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 4-ல் உள்ள சுலோகங்கள் :15

ஆங்கிலத்தில் | In English

தன் படைக்கு உற்சாகமூட்டிய துரியோதனன்! - கர்ண பர்வம் பகுதி – 03

Duryodhana incited the enthusiasm of his force! | Karna-Parva-Section-03 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களின் முகவாட்டத்தைக் கண்டு, கலங்கி நின்ற படைவீரர்கள்; படைவீரர்களுக்கு உற்சாகமூட்டிய துரியோதனன்; கர்ணனின் பெருமைகளைச் சொன்ன துரியோதனன்; அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்பட்டதைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பெரும் வில்லாளியான துரோணர் வீழ்ந்ததும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள், நிறம் மங்கியவர்களாகி, உற்சாகமற்றவர்களாகி தங்கள் உணர்வுகளை இழந்தனர்.(1) ஆயுதங்கள் தரித்திருந்தவர்களான அவர்கள் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தலையைத் தொங்கப்போட்டனர். துயரால் பீடிக்கப்பட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள், முற்றிலும் அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.(2) இவ்வாறு பீடிக்கப்பட்ட முகத்தோற்றத்துடன் கூடிய அவர்களைக் கண்ட உமது துருப்பினர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துயரால் மனங்கலங்கி மேல்நோக்கியபடி வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.(3) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் துரோணர் கொல்லப்பட்டதைக் கண்டதும், அவர்களில் பலரின் ஆயுதங்கள், இரத்தக் கறைகளுடன் அவர்களது கைகளில் இருந்து விழுந்தன.(4) மேலும், ஓ! பாரதரே, படைவீரர்களின் பிடியில் இருந்த எண்ணற்ற ஆயுதங்களும், வானத்தில் இருந்து விழும் விண்கோள்களுக்கு ஒப்பாகத் தொங்கிக் கொண்டிருந்தன[1].(5)


[1] "இந்தச் சுலோகத்தை நீலகண்டர் சரியாக விளக்கியிருக்கிறார் என நான் நினைக்கிறேன். நக்ஷத்திரானி Nakshatrani என்பதை விழும் விண்கோள்களாகப் பொருள் கொள்ளாவிடில், அந்த ஒப்பீடு பொருளற்றதாகவும், அபத்தமானதாகவும் ஆகிவிடும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "பிடிக்கப்பட்டவைகளும், நழுவுகின்றவைகளுமான அந்த ஆயுதங்கள், ஆகாயத்திலிருந்து விழுகின்றவையும் அமங்களத்தைத் தெரிவிக்கின்றவையுமான நக்ஷத்திரங்கள் போலக் காணப்பட்டன" என்றிருக்கிறது.

அப்போது துரியோதனன், ஓ! ஏகாதிபதி, முடக்கப்பட்டு உயிரற்றவர்களைப் போல இப்படி நின்று கொண்டிருந்த உமது அந்தப் படையைக் கண்டு,(6) "உங்கள் கரங்களின் வலிமையை நம்பியே நான் பாண்டவர்களைப் போருக்கு அழைத்து, இந்த ஆயுத வழியைத் தொடக்கினேன்.(7) எனினும், துரோணர் வீழ்ந்ததும், {நமக்கான} வாய்ப்பு மகிழ்ச்சியற்றதாகத் தெரிகிறது. போரில் ஈடுபடும் போர்வீரர்கள் அனைவரும் போரில் சாகிறார்கள்.(8) போரில் ஈடுபடுவதால், ஒரு போர்வீரன் வெற்றியையோ, மரணத்தையோ அடைவான். இதில் (துரோணரின் மரணத்தில்) என்ன வினோதமிருக்கிறது? ஒவ்வொரு திசையை நோக்கியும் முகத்தைத் திருப்பிப் போரிடுவீராக.(9) வலிமையும், பலமும், உயர் ஆன்மாவும் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான விகர்த்தனன் மகன் கர்ணன், தனது தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்தியபடியே போரில் திரிவதை இப்போது காண்பீராக.(10)

போரில் அந்தப் போர்வீரன் {கர்ணன்} மீது கொண்ட அச்சத்தாலேயே, கோழையான குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிங்கத்தைக் கண்ட சிறு மானைப் போல எப்போதும் பின்வாங்குகிறான்.(11) அவனே {கர்ணனே}, பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்ட வலிமைமிக்கப் பீமசேனனை, சாதாரண மனிதப் போர் முறைகளாலேயே அந்தப் பரிதாப நிலையை அடையச் செய்தான்.(12) ஆயிரக்கணக்கான மாயைகளைக் கொண்டவனும், தெய்வீக ஆயுதங்களை நன்கறிந்தவனும், துணிச்சல்மிக்கவனுமான கடோத்கசனை உரக்க முழங்கியபடியே, வெல்லப்படமுடியாத தனது ஈட்டியால் கொன்றவன் அவனே {கர்ணனே}.(13) இலக்கில் துல்லியமும், வெல்லப்பட முடியாத சக்தியும் கொண்ட அந்தப் புத்திசாலி போர்வீரனின் {கர்ணனின்} வற்றாத ஆயுத வலிமையை இன்று காண்பீராக.(14) விஷ்ணுவுக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} ஒப்பான அஸ்வத்தாமன் மற்றும் கர்ணன் ஆகிய இருவரின் ஆற்றலையும் அந்தப் பாண்டுவின் மகன்கள் இன்று காணட்டும்[2].(15) போரில் பாண்டுவின் மகன்களையும், அவர்களது துருப்புகளையும் தனித்தனியாகவே உங்கள் அனைவராலும் கொல்ல முடியும். அப்படியிருக்கையில் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் உங்களால் அடைய இயலும் சாதனை எவ்வளவு பெரியதாக இருக்க முடியும்? பெரும் சக்தியைக் கொண்டவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான நீங்கள், இன்று பெரும்பணிகளைச் சாதித்தபடியே ஒருவரையொருவர் காணப் போகிறீர்கள்" என்றான் {துரியோதனன்}.(16)

[2] "15வது சுலோகத்தின் இரண்டாவது வரியானது சில உரைகளில் வேறு விதமாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகளைச் சொன்ன உமது மகன் துரியோதனன், தனது தம்பிகளுடன் கூடி கர்ணனை (குரு படையின்) படைத்தலைவனாக்கினான்.(17) படைத்தலைமையை ஏற்றவனும், போரில் மிகக் கடுமையானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கர்ணன் உரத்த முழக்கங்களைச் செய்தபடியே எதிரியோடு போரிட்டான்.(18) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சிருஞ்சயர்கள், பாஞ்சாலர்கள், கேகயர்கள் மற்றும் விதேஹர்களுக்கு மத்தியில் அவன் {கர்ணன்} பேரழிவை ஏற்படுத்தினான்.(19) ஒன்றின் {ஒரு கணையின்} சிறகுக்கு {புங்கத்திற்கு} மிக நெருக்கமாக, வண்டுகளின் கூட்டங்களைப் போல எண்ணற்ற சரக் கணைகள் அவனது வில்லில் இருந்து வெளிப்பட்டன. பெரும் சுறுசுறுப்புடன் கூடிய பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் பீடித்து, ஆயிரக்கணக்கான போர்வீரர்களைக் கொன்ற அவன் {கர்ணன்}, இறுதியாக அர்ஜுனனால் கொல்லப்பட்டான்" {என்றான் சஞ்சயன்}.(21)
--------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 3-ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

Friday, December 30, 2016

சஞ்சயன் திருதராஷ்டிரன் உரையாடல்! - கர்ண பர்வம் பகுதி – 02

Sanjaya Dhritarashtra dialogue! | Karna-Parva-Section-02 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கர்ணன் வீழ்ந்ததைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்; திருதராஷ்டிரனின் புலம்பல்; திருதராஷ்டிரன் வருந்தக்கூடாது என்று சொன்ன சஞ்சயன்…


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கர்ணன் வீழ்ந்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியற்ற இதயம் கொண்ட கவல்கணன் மகன் {சஞ்சயன்}, காற்றின் வேகத்திற்கு ஒப்பான குதிரைகளில் அவ்விரவே நாகபுரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான்.(1) ஹஸ்தினாபுரத்தை அடைந்ததும், ஆழ்ந்த கவலையால் நிறைந்த இதயத்துடன் கூடிய அவன் {சஞ்சயன்}, சொந்தங்களோ, நண்பர்களோ {அப்போது அங்கு} இல்லாதிருந்த திருதாரஷ்டிரனின் வசிப்பிடத்திற்குச் சென்றான். துயரால் சக்தி அனைத்தையும் இழந்திருந்த மன்னனை {திருதராஷ்டிரனைக்} கண்ட அவன் {சஞ்சயன்}, கூப்பிய கரங்களுடன், தலைவணங்கி அந்த ஏகாதிபதியின் பாதங்களை வழிபட்டான்.(3)


முறையாக மன்னன் திருதராஷ்டிரனை வணங்கிய அவன் {சஞ்சயன்}, கவலையால் கூவியபடியே சொல்லத் தொடங்கினான்,(4) "ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, நான் சஞ்சயன். நீர் மகிழ்ச்சியாக இல்லையா? உமது தவறுகளால் இத்தகு துயரத்தில் வீழ்ந்தாலும், நீர் மலைப்படைய மாட்டீர் என நான் நம்புகிறேன்.(5)

விதுரர், துரோணர், கங்கையின் மகன் {பீஷ்மர்}, கேசவன் {கிருஷ்ணன்} ஆகியோர் உமது நன்மைக்கான ஆலோசனைகளைச் சொன்னார்கள். அந்த ஆலோசனைகளை நீர் மறுத்தத்தை நினைத்து இப்போது நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்.(6)

ராமர் {பரசுராமர்}, நாரதர், கண்வர் மற்றும் பிறராலும் உமது நன்மைக்கான ஆலோசனைகள் சபையில் வைத்துச் சொல்லப்பட்டன. அவை உம்மால் மறுக்கப்பட்டதை நினைத்து இப்போது நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்.(7)

உமது நன்மையிலேயே எப்போதும் ஈடுபட்ட நண்பர்களான பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரும் போரில் எதிரியால் கொல்லப்பட்டதை நினைத்து நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்" என்றான் {சஞ்சயன்}.(8)

கரங்களைக் கூப்பியபடி தன்னிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த அந்தச் சூதன் மகனிடம் {சஞ்சயனிடம்}, துயரால் பீடிக்கப்பட்டு, நீண்ட வெப்பப் பெருமூச்சுகளை விட்டபடியே இருந்த அந்த ஏகாதபதி {திருதராஷ்டிரன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(9)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் கொண்ட போர்வீரரான அந்தக் கங்கை மகனின் {பீஷ்மரின்} வீழ்ச்சியையும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான துரோணரின் வீழ்ச்சியையும் கேட்டு என் இதயத்தில் பெரும் வலியை உணர்கிறேன்.(10) பெரும் சக்தி கொண்டவரும், வசுக்களால் பிறந்தவருமான எந்த வீரர் கவசம் பூண்டு கொண்டு ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் தேர்வீரர்களைக் கொன்றாரோ,(11), பிருகுவின் மகன் {பரசுராமர்}, உயர்ஆன்மா கொண்ட எவரிடம் உயர்ந்த ஆயுதங்களைக் கொடுத்தாரோ, பிள்ளைப் பருவத்திலே எந்தப் போர்வீரர், ராமரால் {பரசுராமரால்} வில்லின் அறிவியல் பயிற்றுவிக்கப்பட்டாரோ, ஐயோ அவர் {பீஷ்மர்}, பாண்டவர்களால் பாதுகாக்கப்பட்டவனும், யக்ஞசேனன் {துருபதன்} மகனுமான சிகண்டியால் கொல்லப்பட்டாரே. இதற்காக என் இதயம் பெரிதும் வலிக்கிறது[1].(12,13)

[1] "13ம் சுலோகத்தில் நீலகண்டர் துரோணரையல்லாமல் பீஷ்மரைக் குறிப்பிட்டுச் சரியாகவே விளக்கியிருக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறு சில பதிப்புகளில் இந்தச் சுலோகம் துரோணரைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.

எந்த வீரரின் அருளின் மூலம், வலிமைமிக்கத் தேர்வீரர்களான குந்தியின் அரச மகன்களும், பூமியின் தலைவர்கள் பலரும் மகாரதர்கள்[2] ஆனார்களோ,(14) ஐயோ, துல்லியமான இலக்குக் கொண்ட அந்தப் பெரும் வில்லாளியான துரோணர், திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டதைக் கேட்டு என் இதயம் மிகவும் வலிக்கிறது.(15) அவ்விருவரும், நால்வகை ஆயுதங்களிலும் (ஆயுதங்களின் அறிவிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும்)[3] தங்களுக்கு ஒப்பாக எவனையும் கொண்டதில்லை. ஐயோ, பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டதைக் கேட்டு என் இதயம் மிகவும் வலிக்கிறது.(16) எந்தப் போர்வீரர், ஆயுத அறிவில் தனக்கு நிகராக மூன்று உலகிலும் எவனையும் கொள்ளவில்லையோ, வீரரான அந்தத் துரோணரின் கொலையைக் கேட்டு என் தரப்பின் மக்கள் என்ன செய்தனர்?(17)

[2] "ஒரு மகாரதன் என்பவன், பத்தாயிரம் வில்லாளிகளுடன் ஒரே நேரத்தில் போரிடக்கூடியவன் ஆவான் எனக் கங்குலி" இங்கே விளக்குகிறார்.

[3] "முக்தம், அமுக்தம், முக்தாமுக்தம், யந்திரமுக்தம் என்பனவே அந்த நால்வகை ஆயுதங்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். முக்தம் என்ற ஆயுதமானது கரங்களில் இருந்து வீசி எறிந்து போரிடப் பயன்படுவது; அமுக்தம் என்பது, ஒரு வாளைப் போல, கரங்களில் இருந்து வீசி எறியப்படாமல் போரிடப் பயன்படுவது; முக்தாமுக்தம் என்பது, ஒரு கதாயுதத்தைப் போல, சில வேளைகளில் வீசி எறியப்பட்டும், சில வேளைகளில் வீசி எறியப்படாமலும் போரிடப் பயன்படுவது; யந்திரமுக்தம் என்பது ஏதாவது ஓர் இயந்திரத்தில் இருந்து ஏவப்பட்டுப் போரிடப் பயன்படுவதும் ஆகும். முக்த ஆயுதங்கள் அனைத்தும் அஸ்திரங்கள் எனப்படுகின்றன. அமுக்த ஆயுதங்கள் சஸ்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

பாண்டுவின் உயர்ஆன்ம மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஆற்றலுடன் முயன்று, பலமிக்கப் படையான சம்சப்தகர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிய பிறகு,(18) துரோணரின் புத்திசாலி மகனுடைய {அஸ்வத்தாமனுடைய} நாராயண ஆயுதம் கலங்கடிக்கப்பட்ட பிறகு, (கௌரவப்) படைப்பிரிவுகள் தப்பி ஓடத் தொடங்கிய பிறகு, என் தரப்பின் மக்கள் என்ன செய்தனர்?(19) துரோணரின் மரணத்திற்குப் பிறகு, தப்பி ஓடியவர்களும், துயரக் கடலில் மூழ்கியவர்களுமான என் துருப்பினரை, ஆழ்ந்த கடலின் நடுவே கப்பல் உடைந்த கடலோடிகளுக்கு ஒப்பாக நான் நினைக்கிறேன்.(20) ஓ! சஞ்சயா, குரு படைப்பிரிவுகள் களத்தில் இருந்து தப்பி ஓடிய போது, துரியோதனன், கர்ணன், போஜர்களின் தலைவனான கிருதவர்மன், மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியன், எஞ்சியிருக்கும் என் மகன்கள் மற்றும் பிறரின் முகங்கள் எவ்வண்ணத்தை ஏற்றன?(21,22) ஓ!கவல்கணன் மகனே {சஞ்சயா}, பாண்டவர்கள் மற்றும் என் தரப்பின் போர்வீரர்களால் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றலை விளக்கியபடி, போரில் உண்மையாக நடந்தவாறே இவையாவற்றையும் எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது தவறால், கௌரவர்களுக்கு ஏற்பட்ட அனைத்தையும் கேட்டு நீர் எந்த வேதனையும் அடைய வேண்டாம். ஞானியான எவனும், விதிகொண்டு வரும் எதற்காகவும், ஒருபோதும் வலியை உணர்வதில்லை {மனம் வருந்துவதில்லை}.(24) விதி வெல்லப்பட முடியாததாகையால், மனித காரியங்கள் அடையப்படுவதாகவும், அடையப்படாததாகவும் ஆகலாம். எனவே, ஞானியான ஒருவன், தான் விரும்பிய பொருட்களை அடைந்தாலோ, வேறுவிதமானாலோ ஒருபோதும் வலியை உணர்வதில்லை" (என்றான் சஞ்சயன்}.(25)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, நான் வலியை உணரவில்லை. நான் இவை யாவற்றையும் விதியின் விளைவாகவே கருதுகிறேன். விரும்பியபடியே அனைத்தையும் நீ எனக்குச் சொல்வாயாக" என்றான்.(26)
-----------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 2-ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

Wednesday, December 28, 2016

ஜனமேஜயன் கேள்வி! - கர்ண பர்வம் பகுதி – 01

Janamejaya's enquiry! | Karna-Parva-Section-01 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : துரோணர் இறந்த பிறகு, துரியோதனனும், பிற மன்னர்களும் அவரது மகனிடம் சென்றது; கர்ணனைத் தங்கள் படைத்தலைவனாக்கிக் கொண்டு போரிடச் சென்றது; இரண்டு நாட்கள் கடும் போருக்குப் பிறகு அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்படுவது ஆகியவற்றை வைசம்பாயனர் சொல்வது; போரை விவரமாகச் சொல்லும்படி ஜனமேஜயன் கேட்டுக் கொண்டது…


ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

வைசம்பாயனர் {வியாசரின் சீடர்} சொன்னார், "ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, துரோணர் கொல்லப்பட்டதும், துரியோதனன் தலைமையிலான (கௌரவப் படையின்) அரசப் போர்வீரர்கள் அனைவரும், இதயம் நிறைந்த பெருங்கவலையுடன், துரோணர் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} சென்றனர்.(1) துரோணரின் இழப்பால் அழுதபடியே இருந்த தங்கள் உற்சாகமற்ற நிலையின் விளைவால், சக்தியை இழந்து, துயரால் பீடிக்கப்பட்ட அவர்கள், சரத்வான் மகளின் {கிருபியின்} மகனை {அஸ்வத்தாமனைச்} சுற்றி அமர்ந்தனர்.(2) சாத்திரங்களில் காணப்படும் கருத்துகளால் சற்று ஆறுதலடைந்த அந்தப் பூமியின் ஆட்சியாளர்கள், இரவு வந்ததும் தங்கள் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினர்.(3)


எனினும், ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயா}, தங்கள் வசிப்பிடங்களில் இருந்த அந்தப் பூமியின் தலைவர்களால் எந்த மகிழ்ச்சியையும் உணரமுடியவில்லை. மிகப்பெரும் படுகொலைகளை நினைத்துப் பார்த்த அவர்களால் உறங்கவும் முடியவில்லை.(4) குறிப்பாகச் சூதன் மகன் (கர்ணன்), மன்னன் சுயோதனன் {துரியோதனன்}, துச்சாசனன், சகுனி ஆகியோரால் உறங்கவே முடியவில்லை.(5) இந்த நால்வரும், உயர் ஆன்மப் பாண்டவர்களுக்குத் தாங்கள் ஏற்படுத்திய துயரங்களை நினைத்துப் பார்த்தபடியே அவ்விரவை துரியோதனனின் பாசறையில் ஒன்றாகக் கழித்தனர்.(6) முன்பு அவர்கள், பகடையாட்டத்தால் துயரில் மூழ்கியிருந்த திரௌபதியைச் சபைக்குக் கொண்டு வந்தனர்.

அதை நினைத்துப் பார்த்த அவர்கள், கவலை நிறைந்த இதயங்களுடன் பெரும் வருத்தத்தை அடைந்தனர்.(7) சூதாட்டத்தின் விளைவால் (பாண்டவர்களுக்கு) ஏற்படுத்தப்பட்ட அந்தத் துன்பங்களை நினைத்துப் பார்த்த அவர்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, உண்மையில் அவ்விரவை நூறு வருடங்களைப் போலக் கழித்தனர்.(8)

காலை விடிந்ததும், அவர்கள் அனைவரும் இயல்பு விதிகளை நோற்று, வழக்கமான தங்கள் சடங்குகளைச் செய்தனர்.(9) வழக்கமான சடங்குகளைச் செய்த பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஓரளவுக்கு ஆறுதலை அடைந்த அவர்கள், தங்கள் துருப்புகளை முறையாக அணிவகுக்கச் செய்து, போரிட வெளியே வந்து,(10) கர்ணனின் மணிக்கட்டில் மங்கல நாணைக் கட்டி, அவனைத் {கர்ணனைத்} தங்கள் படைத்தலைவனாக்கிக் கொண்டு, பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு, தயிர்ப்பாத்திரங்கள், தெளிந்த நெய், அக்ஷதங்கள் [1], தங்க நாணயங்கள், பசுக்கள், ரத்தினங்கள், நகைகள், விலைமதிப்புமிக்க ஆடைகள் ஆகியவற்றைப் பரிசாகக் கொடுத்தும், கட்டியங்கூறுவோர் {சூதர்கள்}, இசைக்கலைஞர்கள் {மாகதர்கள்}, துதிபாடிகள் {வந்திகள்} ஆகியோரை வெற்றித் துதிகளால் தங்களைப் பாடச் செய்தும், அவர்களைத் தங்களின் வெற்றிக்காக வேண்டச் செய்தனர்.(11,12) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்களும், தங்கள் காலைச் சடங்குகளைச் செய்த பிறகு, போரிடும் தீர்மானத்துடன் தங்கள் முகாமை விட்டு வெளியே வந்தனர்.(13)

[1] "அக்ஷதங்கள் என்பன, ஒருவேளை பூர்ண பாத்திரங்கள், அதாவது, சோளம் மற்றும் பிற பயனுள்ள பொருட்களால் விளிம்பு வரை நிறைந்த குறிப்பிட்ட பாத்திரங்கள் என்று பொருள் கொள்ளலாம். முழுமையாகப் பார்த்தால் இது மங்கலத்தன்மையைக் குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது, ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் ஒரு கடும்போர் தொடங்கியது.(14) கர்ணனுடைய படைத்தலைமையின் போது, குரு மற்றும் பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் நடந்த போரானது மிகக் கடுமையானதாக இரண்டு நாட்களுக்கு நீடித்தது.(15) போரில் தன் எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொன்ற விருஷன் (கர்ணன்), இறுதியாகத் தார்தராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(16) பிறகு ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பிய சஞ்சயன், குருஜாங்கலத்தில் நடைபெற்ற அனைத்தையும் திருதராஷ்டிரனுக்குச் சொன்னான்" {என்றார் வைசம்பாயனர்}.(17)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பீஷ்மர் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர் ஆகியோரின் வீழ்ச்சியைக் கேட்டவனும், அம்பிகையின் மகனுமான முதிர்ந்த மன்னன் திருதராஷ்டிரன் பெரும் துயரால் பீடிக்கப்பட்டிருந்தான்.(18) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, துரியோதனனின் நலன் விரும்பியான கர்ணனின் மரணத்தைக் கேட்டுத் துயரில் மூழ்கியும், எவ்வாறு அவன் {திருதராஷ்டிரன்} உயிரோடு இருந்தான்?(19) தன் மகன்களின் வெற்றி எவனிடம் இருக்கிறது என அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} நினைத்தானோ, அவன் {கர்ணன்} வீழ்ந்த போதும், எவ்வாறு அவனால் {திருதராஷ்டிரனால்} உயிர் தரித்திருக்க முடிந்தது?(20) 

கர்ணனின் மரணத்தைக் கேட்ட பிறகும் மன்னன் {திருதராஷ்டிரன்} தன் உயிரை விடாமல் இருந்தான் எனும்போது, எத்தகு பெரும் துயரச் சூழ்நிலைகளிலும் மனிதர்கள் தங்கள் உயிரை விடுவது மிகக் கடினமானது என்றே நான் நினைக்கிறேன்.(21) ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, சந்தனுவின் மதிப்புமிக்க மகன் {பீஷ்மர்}, பாஹ்லீகன், துரோணர், சோமதத்தன், பூரிஸ்ரவஸ், பிற நண்பர்கள், தன் மகன்கள், பேரன்கள் ஆகியோரின் வீழ்ச்சியைக் கேட்ட பிறகும், மன்னன் {திருதராஷ்டிரன்} தன் உயிரை விடவில்லை எனும்போது, ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, ஒருவன் உயிரை விடுவது என்பது மிகக் கடினமானது என்றே நான் நினைக்கிறேன்.(22,23) உண்மையாக நடந்தவாறே இவை யாவற்றையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக. என் மூதாதையரின் உயர்ந்த சாதனைகளைக் கேட்பதில் நான் நிறைவை அடையவில்லை" என்றான் {ஜனமேஜயன்}.(24)
----------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 1-ல் உள்ள சுலோகங்கள் : 24


ஆங்கிலத்தில் | In English

Wednesday, December 21, 2016

துரோண பர்வச் சுவடுகளைத் தேடி!



“ஒரே கருவில் பிறந்தோர் உறவைவிட, நல்லோருடன் நல்லோர் கொள்ளும் தோழமையே மேன்மையானது என்று விவேகிகளின் சொல்கின்றனர்”
- கர்ணனிடம் பீஷ்மர், துரோண பர்வம் பகுதி 4

துரோண வதத்தை மொழிபெயர்த்த போது, நான் நன்கறிந்த ஒரு மனிதரை இழந்தது போன்ற உணர்வை துரோணாச்சாரியரின் மறைவு எனக்குத் தந்தது. கதைகள், வரலாறுகள், புராணங்கள் ஆகியவற்றைப் படிக்கும்போது, அவற்றில் வரும் கதாப்பாத்திரங்களோடு ஒன்றி, அவர்களை நம்மில் ஒருவராக எண்ணுவது மானுட மனத்தின் இயல்பே. அவ்வகையில் துரோணர், மகாபாரதக் கால இளவரசர்களுக்கு மட்டுமல்ல; காலங்கள் நெடுகத் தோன்றிய மொத்த பாரத மனங்களுக்கும் ஆசானே என்றால் அது மிகையல்ல. துரோணரின் வதம் முடிந்த சில நாட்களுக்குள் நேர்ந்த திரு.சோ ராமசாமி அவர்களின் மறைவும், ஓர் ஆசானை இழந்த வலியையே தந்தது. கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில மகாபாரதத்தைப் படிக்கத்தூண்டியது, திரு.சோ ராமசாமி அவர்கள் எழுதிய “மஹாபாரதம் பேசுகிறது” புத்தகமே. அதனுடன் ஒன்றிப்போனவனாக இருப்பினும், இவ்வளவு நாளும் அவரோடு பேச வேண்டும் என்று கூட நான் நினைத்ததில்லை. நல்லோனாகி, மேற்கண்ட பீஷ்மரின் சொற்களை இனியாவது என் வாழ்நாளில் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.


இந்த ஞாயிறன்று துரோண பர்வம் பகுதி 203-ஐ மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் வந்தார். மொழிபெயர்ப்பதை நிறுத்திவிட்டுக் கொஞ்ச நேரம் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். ரூ.2000/- தாள்கள் சிலவற்றை எடுத்தார். “நாடெல்லாம் பணப்பற்றாக்குறைனு சொல்றாங்க. கஷ்டப்பட்டு எடுத்திருப்பீங்களே” என்று கேட்டேன். “ரெண்டு வாரத்துக்கு முன்ன இருந்தே ஒவ்வொரு நாளும் ஏடிஎம்க்குப் போய் 2000, 2000மா எடுத்தேன்” என்றார். “நேரடியா பேங்குக்கே போனா மொத்தமா எடுக்க முடியாதா?” என்று கேட்டேன். “எடுக்கலாமா இருக்கும். இருந்தாலும் யாருங்க அவ்வளவு பெரிய கியூவுல நிப்பாங்க?” என்றார். “ஏடிஎம்லையும் பெரிய கியூதானே நிக்குது?” என்று கேட்டேன். “அந்தக் கியூவுக்கு இந்தக் கியூ எவ்வளவோ பரவாயில்லைங்க” என்று சொல்லிக் கொண்டே ரூ.20,400/-ஐ என்னிடம் கொடுத்தார். துரோண பர்வத்தின் தொடக்கத்தில் பீஷ்மர், “ஆறுகளுக்குப் பெருங்கடலும், ஒளிக்கோள்களுக்குச் சூரியனும், உண்மைக்கு நேர்மையானவர்களும், விதைகளுக்கு வளமான நிலமும், அனைத்து உயிரினங்களுக்கு மேகங்களும் இருப்பது போலவே உன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீ இருப்பாயாக” என்று கர்ணனிடம் சொல்வதாக இருக்கிறது. அந்த வாக்கியத்திற்குச் சாலப் பொருந்துபவர் நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் என்றால் அது மிகையல்ல. இன்று {21.12.2016} அவருடைய பிறந்தநாள். வாழ்த்துகள் நண்பரே.

ஆதிபர்வத்தின் முதல் பகுதியான அனுக்ரமானிகா உபபர்வத்தில், மகாபாரதம் மரமென்றால், துரோண பர்வம் அதன் இலைகளைப் போன்றது என்று சொல்லப்பட்டுள்ளது. ஐந்து நாள் போரை எவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் பர்வம் என்பது பிரம்மிப்பையே ஏற்படுத்துகிறது. போர்க்களத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நடந்த தனிப்போர்களையும், ஒவ்வொரு போராளியின் உணர்வுகளையும் நுணுக்கமாகச் சொல்கிறது. ஒரு முறை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது, “அப்பாடா, கடைசில கொன்னுட்டீங்களா?” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். அருகில் இருந்து அப்படி ஆச்சரியமடைந்தது என் மனைவி லட்சுமி என்பதை அறிந்து, “ஏன்? என்னாச்சு?” என்றேன். “ஜெயத்ரதனக் கொல்லப்போறேன்னு சொல்லிக் கிளம்புன அர்ஜுனன், போறான், போறான் போயிகிட்டே இருக்கானேன்னு நினைச்சேன். கடைசியா கொன்னிட்டீங்களே?” என்றாள். அவ்வளவு விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது ஜெயத்ரதவத பர்வம். அதுபோலவே துரோண பர்வம் முழுமையும்.

துரோண பர்வத்தில் 170 பகுதிகளும், 8,909 சுலோகங்களும் உள்ளன என்றும் ஆதிபர்வத்தின் சங்கிரக உபபர்வத்தில் சொல்லப்பட்டுள்ளது. நமது மொழிபெயர்ப்பில் இந்தப் பர்வம் 204 பகுதிகளைக் கொண்டிருக்கிறது, சுலோகங்களை இன்னும் எண்ணவில்லை. கிசாரி மோகன் கங்குலியின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் அவ்வாறே இருக்கின்றன. துரோண பர்வத்தின் பகுதி 131ல் இருந்து, ஒவ்வொரு பகுதியிலும் சுலோக எண்கள் குறிக்கப்படுகின்றன. Sacred Texts வலைத்தளத்தில் உள்ள கங்குலியில் பதிப்பை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த எனக்கு, ஒரு வலைத்தளத்தில் கங்குலியின் புத்தகமே பிடிஎப் கோப்பாகக் கிடைத்தது. இரண்டாம் பதிப்பான அப்புத்தகத்தில் சுலோக எண்கள் குறிக்கப்பட்டிருந்தன. சுலோக எண்களுடன் இருப்பது, பிற்காலத்தில் மூலத்துடன் ஒப்பு நோக்க ஏதுவாக இருக்கும் என்பதற்காக, அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடியே சுலோக எண்களைக் குறித்து வருகிறேன். துரோண பர்வம் முழுமைக்கும் சுலோக எண்களைப் பின்னர்க் குறிக்க வேண்டும்.

துரோண பர்வத்தின் இடையில் பீமனிடமும், சாத்யகியிடமும் கர்ணன் பலமுறை பின்வாங்குவதைப் படித்துவிட்டு, அதைக் கண்டித்துச் சிலர் மின்னஞ்சல்களை அனுப்பினர்; சிலர் முகநூல் பின்னூட்டங்களில் அதைத் தெரிவித்தனர். கர்ணன்தான் பெரிய வீரன் என்றும், அர்ஜுனன் கோழை என்றும் பொருள்படும்படியாக அவற்றின் சாரம் இருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்னவென்றால், அவர்களில் சிலர் மகாபாரதமே பொய் என்று சொல்லிக் கொண்டிருந்ததுதான். அந்த அளவில் கர்ணன் பாராட்டுக்குரியவனே. பெரும்பாடு என்னவென்றால், இருப்பதைத் தான் நான் மொழிபெயர்க்கிறேன் என்பதை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அடுத்து வரப் போவது கர்ண பர்வம். கர்ணனின் சிறப்புகள் பலவற்றைச் அதில் சொல்லியிருந்தாலும், சில இடங்களில் கர்ணன் பின்வாங்கும் சம்பவங்களும் இருக்கின்றன. விமர்சனங்களும் வரத்தான் போகின்றன. எனினும், அப்படி விமர்சிப்பவர்களும் கூட, இந்த மொழிபெயர்ப்பின் உண்மைத்தன்மையை நிச்சயம் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

ஆதிபர்வம் இன்னும் பிழைதிருத்தம் முடியவில்லை. அதனால் அச்சுக்கு இன்னும் செல்லவில்லை. ஆடியோ கோப்புகளைப் பொறுத்தவரை திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்களின் பணிச்சுமையின் காரணமாக அது சற்றுத் தொய்வடைந்திருக்கிறது. துரோண பர்வத்தின் முழுப் பகுதிகளையும் நண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள் தொகுத்து அனுப்பி வைத்திருக்கிறார். இன்னும் கொஞ்ச நாட்களில் அதைப் பிடிஎப் ஆக்கி பதிவிறக்கத்திற்குக் கொடுக்க வேண்டும். முழு மஹாபாரதம் 7 பர்வங்களையும் சேர்த்து இதுவரை 1228 பகுதிகள் நிறைவடைந்திருக்கின்றன. எஞ்சியவை இன்னும் 887 பகுதிகள். அதில் பெரிய பர்வங்களாகச் சாந்தி பர்வம் 345 பகுதிகளும், அனுசாசன பர்வம் 145 பகுதிகளும் இருக்கின்றன.

அடுத்து வரப் போகும் கர்ண பர்வம் 96 பகுதிகளைக் கொண்டது. விரைவில் மொழிபெயர்க்கத் தொடங்க வேண்டும். டிசம்பர் மாதம் 24 & 25ம் தேதி கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெறும், 2016ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது விழாவுக்குச் செல்லப் போகிறேன். அங்குச் சென்று திரும்பியதும் தொடங்கலாம் என்று இருக்கிறேன். அனைத்தும் பரமன் சித்தம்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
21.12.2016

பின்குறிப்பு: கர்ண பர்வம் மொழிபெயர்ப்பு அனுமன் ஜெயந்தியான இன்று தொடங்கப்படுகிறது.
28.12.2016




Monday, December 19, 2016

துரோண பர்வ பலன்கள்! - துரோண பர்வம் பகுதி – 204

The fruits of Drona Parva! | Drona-Parva-Section-204 | Mahabharata In Tamil

(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 11)

பதிவின் சுருக்கம் : துரோண பர்வத்தைத் தினமும் படிப்பதனாலோ, கேட்பதனாலோ ஒருவருக்குக் கிடைக்கும் பலன்கள்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஐந்து நாட்கள் கடுமையாகப் போரிட்டவரும், பெரும் பலம் கொண்டவருமான அந்தப் பிராமணர் (துரோணர்) வீழ்ந்த பிறகு பிரம்ம லோகத்தை அடைந்தார்.(1) வேதங்களைப் படிப்பதனால் எழும் கனிகள் {பலன்கள்}, இந்தப் பர்வத்தைப் படிப்பதனாலும் கிடைக்கும். துணிவுமிக்க க்ஷத்திரியர்களின் பெரும் சாதனைகள் இதில் விளக்கப்பட்டிருக்கின்றன.(2) எவன் இந்த {துரோண} பர்வத்தைத் தினமும் படிப்பானோ, உரைப்பதைக் கேட்பானோ, அவன் கொடிய பாவங்களில் இருந்தும், தன் வாழ்வின் மிகக் கொடூரமான செயல்களில் இருந்தும் விடுபடுவான்.(3) பிராமணர்கள் இதிலிருந்து வேள்வியின் கனிகளை எப்போதும் பெறலாம். க்ஷத்திரியர்கள் இதிலிருந்து கடும்போரில் வெற்றியை அடையலாம். பிற வகைகள் (வைசியரும், சூத்திரரும்) விரும்பத்தக்க மகன்களையும், பேரர்களையும், விரும்பத்தக்க பொருட்கள் அனைத்தையும் அடையலாம்” {என்றான் சஞ்சயன்}[1].(4)

[1]  வேறொரு பதிப்பில் இந்தப் பகுதி, முந்தைய பகுதியான 203லேயே தொடர்ந்து அந்தப் பகுதியிலேயே முடிகிறது. மேலும், மேற்கண்ட வாசகங்கள் முழுமையையும் வைசம்பாயனர், ஜனமேஜயனிடம் சொல்லப்பட்டுள்ளதாக இருக்கிறது. அது பின்வருமாறு: "சூத குலத்திற்பிறந்தவனான சஞ்சயன் அரசனுக்கு இவை அனைத்தையும் உரைத்துவிட்டுக் கர்ணனுடைய வதத்தைப் பார்ப்பதற்காகச் சேனை தங்கியிருக்கும் இடத்தைக் குறித்தே சென்றான். ஜனமேஜய மகாராஜரே, மஹாபலவானான பிராம்மணர் ஐந்து நாள் முழுதும் மிக்க கோரமான யுத்தத்தைச் செய்து கொல்லப்பட்டுப் பிரம்மலோகத்தை அடைந்தார். வேதமானது நன்றாக அத்தியயனம் செய்யப்பட்டால் எந்தப் பலனுண்டோ அந்தப் பலன் இந்தப் பர்வத்தைப் படிப்பதாலுண்டாகும். இந்தப் பர்வத்தைப் படித்தலால் பயமற்றவர்களான க்ஷத்திரியர்களுக்குப் பெரிதும் தகுந்ததுமான கீர்த்தியானது உண்டாகிறது. எந்த மனிதன் இந்தப் பர்வத்தை நித்தியம் படிப்பானோ, அல்லது கேட்பானோ அவன் மஹாபாபங்களினின்றும் தன்னால் செய்யப்பட்ட கோரமான கர்மாக்களினின்றும் விடுபடுகிறான்; பிராம்மணனுக்கு யக்ஞம் செய்தால் எந்தப் பலனுண்டாமோ அந்தப் பலன் உண்டாகிறது; க்ஷத்திரியர்களுக்குக் கோரமான யுத்தங்களில் கீர்த்தி உண்டாகிறது; மற்ற இரண்டு வர்ணத்தார்களும் இஷ்டமான காமத்தையும், புத்திரர்களையும, பௌத்திரர்களையும் அவ்வாறே அபீஷ்டங்களையும் நித்தியமாக அடைகிறார்கள்" என்று வைசம்பாயனர் கூறினார்" என்றிருக்கிறது. துரோண பர்வத்தின் பலன்களை சஞ்சயன் சொல்லியிருக்க முடியாது என்பதால் மேற்கண்டது போல இவற்றை வைசம்பாயனர் இவற்றை ஜனமேஜயனிடம் சொன்னார் என்பதே சரியானதாக இருக்க வேண்டும்.

********* நாராயணாஸ்த்ரமோக்ஷ உப பர்வம் முற்றும் *********

********* துரோண பர்வம் முற்றிற்று *********


ஆங்கிலத்தில் | In English

மகாதேவனான சிவனின் மகிமை - சதருத்ரியம்! - துரோண பர்வம் பகுதி – 203

Sadarudriya - The glory of Siva, the Mahadeva! | Drona-Parva-Section-203 | Mahabharata In Tamil

(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 10)

பதிவின் சுருக்கம் : வியாசரைச் சந்தித்த அர்ஜுனன், ஜெயத்ரதன் கொல்லப்பட்ட நாளில் போரில் தனக்கு உதவி செய்த கண்ணுக்குப்புலப்படாத நபரைக் குறித்து அவரிடம் விசாரித்தது; மகாதேவனே அவன் எனச் சொன்ன வியாசர்; மகாதேவனின் தன்மைகள்; தக்ஷனின் வேள்வியை அழித்த மகாதேவன்; முந்நகரத்தை அழித்தது; இந்திரனின் கரத்தை முடக்கியது; இந்திரனுடனோடு சேர்ந்து பிரம்மனிடம் சென்ற தேவர்கள்; பிரம்மனுடன் சேர்ந்து மகாதேவனிடம் வந்த தேவர்கள்; பிரம்மனின் மகாதேவத் துதி; மகாதேவனின் பிற தன்மைகள்; மகாதேவனின் பெயர்கள் சிலவற்றின் விளக்கங்கள்; சதருத்ரியம்…


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அதிரதரான துரோணர், பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} கொல்லப்பட்ட பிறகு, அடுத்ததாக என் மகன்களும், பாண்டவர்களும் என்ன செய்தனர்?”(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அதிரதரான துரோணர் பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} கொல்லப்பட்டு குரு படையும் முறியடிக்கப்பட்ட பிறகு, குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்},(2) தன் வெற்றியின் தொடர்பாக ஓர் அற்புத தோற்றப்பாட்டை {காரண, காரிய தொடர்பைக்} கண்டு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் உலவல்களின்போது அங்கே வந்த வியாசரிடம்,(3) “ஓ! பெரும் முனிவரே {வியாசரே}, போரில் எதிரியைப் {ஜெயத்ரதனை} பிரகாசமான கணைகளால் நான் கொல்லும் போது, நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டது போன்றவனும், சுடர்மிக்க வண்ணம் கொண்டவனுமான ஒருவன் என் எதிரில், என் தேருக்கும் முன்பாகச் சென்று கொண்டிருப்பதைத் தொடர்ச்சியாக நான் கண்டேன். எங்கெல்லாம் அவன் உயர்த்தப்பட்ட தன் சூலத்துடன் சென்றானோ, அங்கெல்லாம் அவனுக்கு முன்பாகப் பகைவீரர்கள் அனைவரும் பிளக்கப்பட்டனர்.(4,5) உண்மையாக அவனால் பிளக்கப்பட்ட அவர்கள், எதிரி என்னால் பிளக்கப்பட்டதாகவே கருதினர். அவனைப் பின்தொடர்ந்தே, அவனால் ஏற்கனவே அழிக்கப்பட்டோரை நான் அழித்தேன்.(6) ஓ! புனிதமானவரே {வியாசரே}, சூலம் தரித்தவனும், சூரியனின் சக்திக்கு ஒப்பானவனுமாக என்னால் காணப்பட்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன் யார் என எனக்குச் சொல்வீராக.(7) அவன் தன் காலால் பூமியையும் தொடவில்லை, தன் சூலத்தையும் ஒரு முறையேனும் வீசவில்லை. அவனது சக்தியின் விளைவால், அவன் தாங்கியிருந்த அந்த ஒரு சூலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சூலங்கள் வெளிவந்தன”, என்றான் {அர்ஜுனன்}.(8)


வியாசர் {அர்ஜுனனிடம்}, “ஓ! அர்ஜுனா, பிரஜாபதிகளை உதிக்கச் செய்த முதற்காரணனும், பெரும் சக்தி நிறைந்தவனும், பலமிக்கவனும், சொர்க்கம், பூமி, வானம் ஆகியவற்றின் வடிவமே ஆனவனும், தெய்வீகத் தலைவனும், அண்டத்தைப் பாதுகாப்பவனும், பெரும் ஆசானும், வரங்களை அளிப்பவனும், ஈசானன் என்று அழைக்கப்படுபவனுமான சங்கரனையே நீ கண்டிருக்கிறாய். ஓ!, வரமளிக்கும் தேவனான அந்த அண்டத் தலைவனின் பாதுகாப்பை நீ நாடுவாயாக.(9,10) உயர்ந்த ஆன்மா கொண்ட ஒரே தலைவனும், (தலையில்) சடாமுடி தரித்தவனும், மங்கலத்தின் வசிப்பிடமுமான அவன் (அந்த உயர்ந்த தேவன்) மகாதேவன் {சிவன்} என்றே அழைக்கப்படுகிறான். மூன்று கண்கள் மற்றும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், மகுடத்தின் {கிரீடத்தின்} வடிவில் சடாமுடி தரித்தவனும், தோலாலான ஆடையைத் தன் மேனியில் தரித்தவனுமான அவன் ருத்ரன் என்று அழைக்கப்படுகிறான்.(11) வரமளிக்கும் அண்டத் தலைவனான அந்த உயர்ந்த தேவன், ஹரன் என்றும், ஸ்தாணு என்றும் அழைக்கப்படுகிறான். அண்டத்தில் உள்ள அனைத்திலும் முதன்மையான அவன் {சிவன்}, வெல்லப்பட முடியாதவனாகவும், அண்டத்தின் பேரின்பமாகவும், அதன் உயர்ந்த ஆட்சியாளனாகவும் இருக்கிறான்.(12)

முதற்காரணனாகவும், ஒளியாகவும், அண்டத்தின் புகலிடமாகவும் இருக்கும் அவன் {சிவன்} எப்போதும் வெற்றியாளனாகவே இருக்கிறான். அண்டத்தின் ஆன்மாவாகவும், படைப்பாளனாகவும், அண்டத்தையே தன் வடிவாகவும் கொண்ட அவன் பெரும் புகழைக் கொண்டவனாக இருக்கிறான்.(13) அண்டத்தின் தலைவனும், அதன் பெரும் ஆட்சியாளனுமான அந்தப் பலமிக்கவன், {அண்டத்தில் நடக்கும்} அனைத்துச் செயல்பாடுகளின் ஆசானாகவும் இருக்கிறான். சம்பு என்றும் அழைக்கப்படும் அவன், தான்தோன்றியும் {சுயமாகப் பிறப்பெடுப்பவனும்}, உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், கடந்தகாலம், எதிர்காலம் மற்றும் தற்காலத்தின் பிறப்பிடமும் ஆவான்.(14) யோகமும், யோகத் தலைவனும் அவனே; சர்வன் என்று அழைக்கப்படுபவன் அவனே, உலகங்கள் அனைத்தின் தலைவனுக்கே தலைவனும் அவனே. அனைத்திற்கும் மேன்மையானவன் அவனே. அண்டத்திலுள்ள அனைத்திலும் முதன்மையானவனும், அனைத்திலும் உயர்ந்தவனுமான அவன் பரமேஷ்டின் என்று அழைக்கப்படுகிறான்.(15) மூவுலகங்களையும் நிலைப்படுத்துபவனான அவனே மூவுலகங்களின் ஒரே புகலிடமாகவும் இருக்கிறான். வெல்லப்பட முடியாத அவன், அண்டத்தின் பாதுகாவலனாகவும், பிறப்பு, முதுமை, மரணம் ஆகியவற்றுக்கு (அதன் தேவைக்கு) அப்பாற்பட்டவனாகவும் இருக்கிறான்.(16)

அறிவின் ஆன்மாவாகவும், அறிவால் அறியப்பட முடியாதவனாகவும், அறிவுகள் அனைத்திலும் உயர்ந்தவனாகவும் இருக்கும் அறியப்பட முடியாதவன் அவனே. தன்னை வழிபடுவோரின் விருப்பங்களை அருள்பவன் அவனே.(17) பல்வேறு வடிவங்களிலான தேவர்களையும், குள்ளர்களான சிலரையும், சடாமுடி தரித்த சிலரையும், வழுக்கைத் தலை கொண்ட சிலரையும், குறுங்கழுத்து கொண்டோர் சிலரையும், பெரும் வயிறு படைத்தோர் சிலரையும்,(18) பெரும் உடல்களைப் படைத்தோர் சிலரையும், பெரும் பலம் கொண்டோர் சிலரையும், நீண்ட காதுகளை உடையோர் சிலரையும் தன் தோழர்களாகக் கொண்ட தலைவன் அவனே. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அவர்கள் அனைவரும் சிதைந்த முகங்களையும், வாய்களையும், கால்களையும், விசித்திரமான ஆடைகளையும் கொண்டோராவர்.(18,19) மகாதேவன் என்று அழைக்கப்படும் அந்த உயர்ந்த தேவன் இவ்வாறே தொண்டர்களால் வழிபடப்படுகிறான். ஓ! மகனே {அர்ஜுனா}, இத்தகு சக்தி கொண்ட அந்தச் சிவனே {உன் மீது தான் கொண்ட} அன்பினால் உன் முன்பாகச் செல்கிறான்.(20)

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, தெய்வீக வடிவங்களைக் கொண்ட தேவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தத் தெய்வீக மகேஸ்வரனைத் தவிர, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் அந்தக் கடும்போரில், அஸ்வத்தாமன், கர்ணன் மற்றும் கிருபர் ஆகிய அந்தப் பெரும் வில்லாளிகளால் பாதுகாக்கப்படும் அந்தப் படையைக் கற்பனையிலும் வெல்லத்துணிந்தவன், வேறு எவன் இருக்கிறான்?(21,22) தன் முன்னே மகேஸ்வரன் செல்லப்பெற்ற போர்வீரனை எவனும் எதிர்க்கத் துணியமாட்டான். இம்மூவுலகிலும் அவனுக்கு நிகராக வேறு எதுவும் கிடையாது.(23) சினமிக்க மகாதேவனின் மணத்திலேயே {வாசனையிலேயே}, போரில் எதிரிகள் நடுங்கி, உணர்வுகளற்று பெரும் எண்ணிக்கையில் வீழ்வார்கள்.(24) இதற்காகவே சொர்க்கத்தின் தேவர்கள் அவனை வணங்கித் துதிக்கின்றனர். வரமளிப்பவனும், தெய்வீகமானவனும், மங்கலகரமானவனுமான அந்த ருத்ரனை அர்ப்பணிப்புடன் வழிபடுபவர்களான நன்னடத்தைக் கொண்ட இவ்வுலக மனிதர்கள், இங்கேயும், இதற்கு அடுத்து அடையப்போகும் உயர்ந்த நிலைகளிலும் மகிழ்ச்சியை அடைகிறார்கள்.(25,26)

ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, அமைதியே ஆனவனும், ருத்ரன் என்று அழைக்கப்படுபவனும், நீல மிடறு {நீலத் தொண்டை} கொண்டவனும், மிக நுட்பமானவனும், பெரும் பிரகாசம் கொண்டவனுமான அவனை வணங்குவாயாக;(27) கபர்தின் {சடை கொண்டவன்} என்று அழைக்கப்படுபவனும், பயங்கரனும், பழுப்புக் கண்களைக் கொண்டவனும், வரமளிப்பவனுமான அவனை; பெரும் ஆணையாளனும், செஞ்சடையும், நன்னடத்தையும் கொண்டவனான அவனை; மங்கலச் செயல்களையே எப்போதும் செய்யும் அவனை;(28) விருப்பப் பொருளாய் இருப்பவனும், பழுப்புக் கண்களைக் கொண்டவனும், ஸ்தாணு என்று அழைக்கப்படுபவனுமான அவனை; புருஷன்[1] என்று அழைக்கப்படும் அவனை; பழுப்பு முடியுடன் இருப்பவனும், வழுக்கையாக {முடியற்றவனாக} இருப்பவனும்[2], மிக நுட்பமானவனாகவும், பெரும் பிரகாசத்தைக் கொண்டவனாகவும் இருக்கும் அவனை;(29) ஒளியை அளிப்பவனும், புனித நீர்நிலைகள் அனைத்தின் வடிவானவனும், தேவர்களின் தேவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான அவனை; வெளிப்படும் வடிவில் இருப்பவனும், சர்வன் என்று அழைக்கப்படுபவனும், ஏற்கத்தக்க ஆடை கொண்டவனுமான அவனை;(30) சிறந்த தலைப்பாகை, அழகிய முகம் மற்றும் ஆயிரம் கண்களைக் கொண்டவனும், மழையை அளிப்பவனுமான அவனை; மலைகளை வசிப்பிடமாகக் கொண்டவனும், அமைதியே ஆனவனும், பாதுகாவலனும், மரப்பட்டைகளைத் தன் ஆடையாகக் கொண்டவனுமான அவனை;(31) தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களைக் கொண்டவனும், மூர்க்கமானவனும், திசைப்புள்ளிகள் அனைத்தின் தலைவனுமான அவனை; மேகங்கள் மற்றும் படைக்கப்பட்ட அனைத்தின் தலைவனான அவனை;(32) மரங்கள் மற்றும் பசுக்கள் அனைத்தின் தலைவனான அவனை; மரங்களால் தன் உடல் மறைக்கப்பட்டவனான அவனை; தேவர்களின் படைத்தலைவனும், எண்ணங்கள் அனைத்தையும் ஈர்ப்பவனுமான அவனை;(33) வேள்விக் கரண்டியை {யக்ஞப்பாத்திரத்தைத்} தன் கையில் கொண்டவனும், தன்னில் சுடர்விடுபவனும், வில் தரித்தவனும், ராமனே ஆனவனுமான அவனை; பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், அண்டத்தின் தலைவனும், முஞ்சப் புல்லைத் தன் ஆடையாகக் கொண்டவனுமான அவனை; ஆயிரக்கணக்கான தலைகளையும், ஆயிரக்கணக்கான கண்களையும், ஆயிரக்கணக்கான கரங்களையும், ஆயிரக்கணக்கான கால்களையும் கொண்டவனான அவனை நீ வணங்குவாயாக.(35)

[1] உயிரினங்களின் உடலில், அல்லது இதயத்தில் வசிப்பவன் என்பது பொருள்.

[2] வேறொரு பதிப்பில், “பச்சை நிறமான கேசங்களையுடையவரும், மயிரில்லாத சிரஸையுடைவரும்” என்று இருக்கிறது.

ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உமையின் தலைவனும், முக்கண்களைக் கொண்ட தேவனும், தக்ஷனின் வேள்வியை அழித்தவனும் வரங்களை அளிப்பவனுமான அந்த அண்டத்தலைவனின் பாதுகாப்பை நாடுவாயாக;(36) படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களின் பாதுகாவலனும், எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவனும், மங்கா மகிமை கொண்டவனுமான அவனிடம்; சடாமுடி தரித்தவனும், மேன்மையான உயிரினங்களை அனைத்தையும் அசைப்பவனும், காளையைப் போன்ற நாபியை {தொப்புளைக்} கொண்டவனும், காளையையே தனது அடையாளமாகக் கொண்டவனுமான அவனிடம்;(37) காளையைப் போலப் பெருமையுடையவனும், காளைகளின் தலைவனும்; தன் கொடியில் காளையின் வடிவைக் கொண்டவனும்; நல்லோர் அனைவருக்கும் தயாளனும், யோகத்தால் மட்டுமே அணுகப்படக்கூடியவனும், காளையைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான அவனிடம்;(38) மிக மேன்மையான ஆயுதங்களைக் கொண்டவனும், விஷ்ணுவையே தன் கணையாகக் கொண்டவனும், அறத்தின் {நீதியின்} வடிவமும், மகேஸ்வரன் என்று அழைக்கப்படுபவனுமான அவனிடம்; பரந்த வயிற்றையும், பரந்த உடலையும் கொண்டவனும், சிறுத்தையின் தோலைத் தன் ஆசனமாகக் கொண்டவனும்,(39) உலகங்களின் தலைவனும், முடியற்றவனும், பிரம்மத்துக்கு அர்ப்பணிப்புள்ளவனும், பிராமணர்களிடம் அன்பு கொண்டவனுமான அவனிடம்; திரிசூலம் தரித்தவனும், வரங்களை அளிப்பவனும், வாளையும், கேடயத்தையும் கொண்டவனும், மிகவும் மங்கலகரமானவனுமான அவனிடம்;(40) பினாகை என்று அழைக்கப்படும் வில் தரித்தவனும், போர்க்கோடரியைக் கொண்டவனும்,[3] இந்த அண்டத்தின் பாதுகாவலனும், தலைவனுமான அவனிடம் பாதுகாப்பை நீ நாடுவாயாக.

[3] “இதைத்தான் தன் சீடரான பரசுராமருக்கு அளித்தான்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பாதுகாப்பை அளிப்பவனும், மான் தோல் உடுத்திய தேவனுமான அந்தத் தெய்வீகத் தலைவனின் கரங்களிலேயே நான் என்னை நிறுத்துகிறேன். வைஸ்ரவணனை {குபேரனைத்} தன் நண்பனாகக் கொண்ட அந்தத் தேவர்களின் தலைவனுக்கு வணக்கம். அற்புத நோன்புகளைக் கொண்டவனும், அற்புத வில்லாளிகளைத் தன் தோழர்களாகக் கொண்டவனும், வில் தரிப்பவனும், விரும்பும் ஆயுதமாக அந்த வில்லையே கொண்ட தேவனும், வில்லால் உந்தப்படும் கணையேயானவனும், வில்லின் நாணும், வில்லும் ஆனவனும், வில்லைப் பயன்படுத்த கற்பித்த ஆசானுமான அவனை எப்போதும் வணங்குகிறேன்.(41-43) மூர்க்கமான ஆயுதங்களைக் கொண்டவனும், தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தத் தேவனை வணங்குகிறேன். தன்னைச் சுற்றிலும் பல வில்லாளிகளைக் கொண்டவனும், பல்வேறு வடிவங்களிலானவனுமான அவனை வணங்குகிறேன்.(44) பெரும் எண்ணிக்கையிலான அற்புத வில்லாளிகளைத் தன் தோழர்களாகக் கொண்டவனும், ஸ்தாணு என்று அழைக்கப்படுபவனுமான அவனை எப்போதும் வணங்குகிறேன். முந்நகரத்தை {திரிபுரத்தை} அழித்த அவனை வணங்குகிறேன். (அசுரனனான) பகனைக் கொன்றவனை வணங்குகிறேன்.(45,46) மரங்கள் மற்றும் மனிதர்களின் தலைவனான அவனை வணங்குகிறேன். (தெய்வீகத்) தாய்மாருக்கும், கணங்கள் என்ற பெயரில் அறியப்படும் பூத இனங்களுக்கும் தலைவனான அவனை வணங்குகிறேன். பசுக்கள் மற்றும் வேள்விகளின் தலைவனான அவனை எப்போதும் வணங்குகிறேன். நீர்நிலைகள் மற்றும் தேவர்களின் தலைவனும், சூரியனின் பற்களை அழித்தவனும், முக்கண்களைக் கொண்டவனும், வரங்களை அளிப்பவனும், ஹரன் என்று அழைக்கப்படுபவனும், நீல மிடறு {தொண்டை} கொண்டவனும், தங்கச் சடாமுடி கொண்டவனுமான அவனை எப்போதும் வணங்குகிறேன்.(47,48)

இப்போது நான், என் அறிவுக்குத் தக்கபடியும், நான் கேள்விப்பட்டபடியும் உயர்ந்த ஞானியான மகாதேவனின் தெய்வீகச் செயல்கள் அனைத்தையும் உனக்குச் சொல்லப் போகிறேன்.(49) அந்த மகாதேவன் கோபம்கொண்டால், தேவர்களோ, அசுரர்களோ, கந்தர்வர்களோ, ராட்சசர்களோ எவராயிருப்பினும், அவர்கள் ஆழ்ந்த குகைகளுக்குள்ளேயே தங்களை மறைத்துக் கொண்டாலும் அமைதியை அடையமாட்டார்கள்.(50) பழங்காலத்தில் ஒரு வேள்வி செய்வதற்குத் தேவையான பொருட்களைத் தக்ஷன் சேகரித்தான். மகாதேவனோ கோபத்தால் அந்த வேள்வியை அழித்தான். உண்மையில், அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் {சிவன்} மிகக் கடுமையானவனாக ஆனான்.(51) அவன், தனது வில்லில் இருந்து ஒரு கணையை ஏவிபடியே பயங்கர முழக்கங்களைச் செய்தான். அப்போது தேவர்கள் கவலையாலும், அச்சத்தாலும் நிறைந்தனர்.(52) உண்மையில், மகாதேவன் கோபமடைந்தபோது, (உடலுடன் கூடிய) வேள்வியே {அங்கிருந்து} தப்பி ஓடியது. மகாதேவனுடைய வில்லின் நாணொலியாலும், உள்ளங்கை ஒலிகளாலும் தேவர்கள் மிகவும் அச்சமடைந்தனர்.(53) தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரும் வீழ்ந்து, மகாதேவனிடம் பணிந்தனர். நீர்நிலைகள் அனைத்தும் கலக்கமடைந்து பொங்கின, பூமி நடுங்கியது.(54) மலைகள் பிளந்தன, திசைப்புள்ளிகள் அனைத்தும், நாகர்களும் மலைப்பை அடைந்தனர். அண்டமே அடர்த்தியான இருளில் மூழ்கி அதற்கு மேல் கண்ணுக்குப் புலப்படாமல் போனது.(55)

சூரியனோடு கூடிய ஒளிக்கோள்கள் அனைத்தின் காந்தியும் அழிக்கப்பட்டன. அச்சத்தால் நிறைந்த முனிவர்கள் கலக்கத்தையடைந்து, தங்களுக்கும், உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மையை விரும்பி, சினம் ஆற்றும் சடங்குகளைச் செய்தனர். அப்போது சூரியன் அந்த வேள்வியின் முக்கியக் காணிக்கையை {புரோடாசத்தை} உண்டான். சிரித்துக் கொண்டே அவனை {சூரியனை} அணுகிய சங்கரன், அவனது பற்களைக் கிழித்தெறிந்தான். அவனிடம் பணிந்த தேவர்கள், நடுக்கத்துடனே {அங்கிருந்து} தப்பி ஓடினார்கள்.(56-58) அப்போது மகாதேவன், சுடர்மிக்கவையும், கூரியவையும், புகையோடு கலந்த நெருப்பின் தழல்களுக்கோ, மின்னலோடு கூடிய மேகங்களுக்கோ ஒப்பான கணைமாரிகளை அந்தத் தேவர்களின் மேல் குறி வைத்தான்.(59) அந்தக் கணைமாரியைக் கண்ட தேவர்கள் அனைவரும் அந்த மகேஸ்வரனிடம் பணிந்து, வேள்விகளின் கணிசமான பங்கை அந்த ருத்திரனுக்கு ஒதுக்கினார்கள்.(60) ஓ! இளவரசே {அர்ஜுனா}, அச்சத்தால் தேவர்கள் அவனது பாதுகாப்பை நாடினார்கள். கோபம் தணிந்த அந்தப் பெருந்தேவன், வேள்வியை மீண்டும் நிறுவினான்.(61) தப்பி ஓடிய தேவர்கள் திரும்பி வந்தனர். உண்மையில் இன்று வரை அவர்கள் {தேவர்கள்} மகேஸ்வரனிடம் அச்சம் கொண்டே இருக்கின்றனர்.

அதற்கும் முன்பு, வீர அசுரர்கள் சொர்க்கத்தில் மூன்று நகரங்களைக் கொண்டிருந்தனர்.(62) அந்த நகரங்கள் ஒவ்வொன்றும், சிறப்பானதாகவும், பெரியதாகவும் இருந்தன. ஒன்று இரும்பாலானதாகவும், மற்றது வெள்ளியாலானதாகவும், மூன்றாவது தங்கத்தாலனாதாகவும் இருந்தது. தங்க நகரம் கமலாக்ஷனையும், வெள்ளி நகரம் தாரகாக்ஷனையும்,(63) இரும்பாலானது வித்யுன்மாலியையும் அதனதன் தலைவர்களாகக் கொண்டிருந்தன. தன் ஆயுதங்கள் அனைத்துடன் கூடிய மகவத்தால் (இந்திரனால்) அந்நகரங்களில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.(64) (அந்த அசுரர்களால்) பீடிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் ருத்ரனின் {சிவனின்} பாதுகாப்பை நாடினார்கள். வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்டு அவனை {சிவனை} அணுகிய தேவர்கள் அனைவரும், அவனிடம்,(65) “முந்நகரத்தில் வசிக்கும் பயங்கரர்கள் பிரம்மனிடம் வரங்களைப் பெற்றிருக்கின்றனர். அவர்கள், அவ்வரங்களின் விளைவால், செருக்கால் நிறைந்து, அண்டத்தையே பெரிதும் பீடிக்கிறார்கள்.(66) தேவதேவனின் தலைவா, உம்மைத் தவிர அவர்களைக் கொல்லத் தகுந்தவர் எவரும் இல்லை. எனவே, ஓ! மகாதேவா, தேவர்களின் இந்த எதிரிகளைக் கொல்வீராக.(67) அப்போது, ஓ! ருத்ரரே, வேள்விகள் ஒவ்வொன்றிலும் கொல்லப்படும் உயிரனிங்கள் உமதே ஆகும்” என்றனர். இப்படிச் சொன்ன தேவர்களின் வேண்டுகோளை ஏற்ற மகாதேவன், அவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி “ஓ! அண்டத்தில் தலைவா {இந்திரா}, நான் இந்த அசுரர்களை வீழ்த்துவேன்” என்று சொன்னான்.

மேலும் அந்த ஹரன் {சிவன்}, கந்தமாதனம் மற்றும் விந்தியம் ஆகிய இரு மலைகளையும் தன் தேருக்கான மூங்கில்கழிகளாக்கிக் கொண்டான்.(68,69) அந்தச் சங்கரன், பெருங்கடல்கள், மலைகளுடன் கூடிய பூமாதேவியையே போருக்கான தன் தேராக ஆக்கிக் கொண்டான். பிறகு அந்த முக்கண் தேவன் {சிவன்}, பாம்புகளின் இளவரசனான சேஷனையே அந்தத் தேரின் அக்ஷமாக்கிக் கொண்டான்.(70) பினாகைதாரியான அந்தத் தேவர்களுக்குத் தேவன், சந்திரனையும், சூரியனையும் அந்த வாகனத்தின் இரு சக்கரங்களாக்கிக் கொண்டான். இந்த முக்கண் தலைவன், {பாம்புகளான} எலாபத்திரன் மற்றும் புஷ்பதந்தன் ஆகியோரை {அந்தத் தேருடைய} நுகங்களின் அச்சாணிகளாக்கிக் கொண்டான்.(71) மேலும் அந்த வீர மகாதேவன், மலய மலைகளை நுகமாகவும், பெரும் தக்ஷகனை, அந்த நுகத்தைக் {மலய மலைகளை} கழிகளோடு {கந்தமாதனம் மற்றும் விந்தியத்தோடு சேர்த்துக்} கட்டும் நாணாகவும், மற்ற உயிரினங்களைக் குதிரைகளின் பூட்டாங்கயிறுகளாகவும் ஆக்கிக் கொண்டான்.(72) அந்த மகேஸ்வரன், நான்கு வேதங்களையே நான்கு குதிரைகளாக்கிக் கொண்டான். மேலும் மூவுலகங்களின் அந்தத் தலைவன், துணை வேதங்களை அதன் கடிவாளங்களாக்கிக் கொண்டான்.(73) அந்த மகாதேவன், காயத்ரி மற்றும் சாவித்ரியை கடிவாளக் கயிறுகளாகவும், ஓம் என்ற ஓரசையை {ஓங்காரத்தைச்} சாட்டையாகவும் {குறடாவாகவும்}, பிரம்மனைச் சாரதியாகவும் ஆக்கிக் கொண்டான்.(74) மந்தர மலைகளை வில்லாகவும், வாசுகியை நாண்கயிறாகவும், விஷ்ணுவைத் தன் அற்புதக் கணையாகவும், அக்னியை அந்தக் கணையின் தலையாகவும்,(75) வாயுவை அந்தக் கணையின் இரு சிறகுகளாகவும், யமனை அதன் வாலின் இறகுகளாகவும், மின்னலைச் சாணைக்கல்லாகவும், மேருவைக் கொடிமரமாகவும் ஆக்கிக் கொண்ட சிவன்,(76) தெய்வீக சக்திகள் அனைத்தாலுமான அந்த அற்புதத் தேரில் ஏறி முந்நகரத்தை {திரிபுரத்தை} அழிக்கப் புறப்பட்டான்.

உண்மையில், தாக்குபவர்களில் முதன்மையானவனும், அசுரர்களை அழிப்பவனும், அளவிலா ஆற்றலைக் கொண்டவனும், அழகிய போர்வீரனுமான அந்த ஸ்தாணு, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, தேவர்களாலும், தவத்தையே செல்வமாகக் கொண்ட முனிவர்களாலும் துதிக்கப்பட்டு,(77,78) தன் பெயரிலேயே அழைக்கப்பட்ட சிறப்பான, ஒப்பற்ற {மஹேஸ்வரம் என்ற} வியூகத்தை அமைத்துக் கொண்டு, ஆயிரம் வருடங்கள் அசையாமல் நின்றிருந்தான்.(79) எனினும், அந்த முந்நகரங்களும் ஒன்றாகச் சேர்ந்து ஆகாயத்தில் வந்த போது, தலைவனான அந்த மகாதேவன், மூன்று முடிச்சுகளை {கணுக்களைக்} கொண்ட அந்தப் பயங்கரக் கணையால் அவற்றைத் துளைத்தான்.(80) யுகநெருப்பால் ஈர்க்கப்பட்டதும், விஷ்ணு மற்றும் சோமனால் ஆனதுமான அந்தக் கணையைத் தானவர்களால் பார்க்கவும் முடியவில்லை.(81)

அந்த முந்நகரம் {திரிபுரம்} எரிந்தபோது, தேவி பார்வதி அதைக் காண அங்கே வந்தாள். அப்போது வழுக்கைத் தலையில் ஐந்து கொத்து முடியுடன் கூடிய பிள்ளை ஒருவன் அவளது {பார்வதி தேவி} மடியில் அமர்ந்தான்.(82) அந்தப் பிள்ளை யார் எனத் தேவர்களிடம் அந்தத் தேவி {பார்வதி} கேட்டாள். அப்போது பொறாமையினால் சக்ரன் {இந்திரன்} அந்தப் பிள்ளையைத் தனது வஜ்ரத்தால் தாக்க முயன்றான்.(83) (பிள்ளையாக இருந்த) அந்தத் தெய்வீகத் தலைவனான மகாதேவன், சிரித்துக் கொண்டே, சினத்துடன் கூடிய அந்தச் சக்ரனின் கரத்தை விரைவாக முடக்கினான்.(84) அப்போது, தேவன் சக்ரன் {இந்திரன்}, முடங்கிய தன் கரத்துடனும், தேவர்கள் அனைவரின் துணையுடனும் மங்கா மகிமை கொண்ட தலைவன் பிரம்மனிடம் வேகமாகச் சென்றான்.(85) அந்தப் பிரம்மனைத் தங்கள் தலையால் வணங்கிய அவர்கள், கூப்பிய கரங்களுடன் அவனிடம் {பிரம்மனிடம்}, “ஓ! பிரம்மரே, ஏதோ ஓர் அற்புத உயிரினம், பார்வதியின் மடியில் பிள்ளையின் வடிவில் எங்களால் காணப்பட்டான். ஆனால் அவனால் நாங்கள் வணங்கப்படவில்லை. நாங்கள் அனைவரும் அவனால் வெல்லப்பட்டோம். எனவே, அவன் யாராக இருக்கக்கூடும் என்பதைத் தங்களிடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.(86,87) உண்மையில் அந்தச் சிறுவன், போரிடாமலேயே புரந்தரனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட எங்கள் அனைவரையும் மிக எளிதாக வென்றான்” என்றனர்.

அவர்களது இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், பிரம்மத்தை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவனுமான பிரம்மன்,(88) ஒரு கணம் சிந்தித்து, அளவிலா சக்தி கொண்ட அந்தச் சிறுவன், தெய்வீகச் சம்புவையன்றி {சிவனின்றி} வேறு யாரும் அல்ல என்பதைப் புரிந்து கொண்டான். பிறகு சக்ரனைத் தங்கள் தலைமையில் கொண்ட அந்தத் தேவர்களில் முதன்மையானோரிடம் பேசிய பிரம்மன்,(89) “அந்தப் பிள்ளை, அசைவன மற்றும் அசையாதன அடங்கிய மொத்த அண்டத்தின் தலைவனான தெய்வீக ஹரனாவான் {சிவனாவான்} . மஹேஸ்வரனுக்கு {சிவனுக்கு} மேன்மையாக வேறு எதுவும் இல்லை.(90) உங்கள் அனைவராலும் உமையுடன் காணப்பட்ட அந்த அளவிலா காந்தி கொண்டவன், அந்தத் தெய்வீகத் தலைவன், உமையின் நிமித்தமாகவே அந்தப் பிள்ளையின் வடிவை ஏற்றிருக்கிறான்.(91) நாம் அனைவரும் அவனிடம் {சிவனிடம்} செல்வோமாக. தெய்வீகமானவனும், சிறப்புமிக்கவனுமான அவனே மொத்த உலகத்தின் உயர்ந்த தலைவனாவான்.(92) தேவர்களே, உங்களால் அண்டத்தின் ஆசானை {சிவனை} அறிந்து கொள்ள முடியவில்லை” என்றான் {பிரம்மன்}.

பிறகு, பாட்டனுடன் {பிரம்மனுடன்} கூடிய தேவர்கள் அனைவரும் காலைச் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய அந்தப் பிள்ளையிடம் சென்றனர். மஹேஸ்வரனைக் கண்டு, உயர்ந்தவன் அவனே என்பதை உணர்ந்தவனான பாட்டன் பிரம்மன் இவ்வாறு அவனைத் துதித்தான்:(93,94) “ஓ! தலைவா, வேள்வி நீயே, அண்டத்தின் இருப்பிடமும் வசிப்பிடமும் நீயே. பவன் நீயே, மகாதேவன் நீயே, (அனைத்தின்) வசிப்பிடமும் நீயே, உயர்ந்த புகலிடமும் நீயே.(95) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய இந்த மொத்த அண்டத்திலும் படர்ந்தூடுருவியிருப்பவன் நீயே. ஓ! புனிதமானவனே, ஓ கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தின் தலைவா, ஓ! உலகத்தின் தலைவா, ஓ! அண்டத்தின் பாதுகாவலா, உன் கோபத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} உன் அருள் கிட்டக்கட்டும்” என்றான் {பிரம்மன்}.(96)

வியாசர் {அர்ஜுனனிடம்} தொடர்ந்தார், “தாமரையில் பிறந்த பிரம்மனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மகேஸ்வரன் நிறைவை அடைந்தான். தனது அருளைத் தர விரும்பிய அவன் உரக்கச் சிரித்தான்.(97) பிறகு உமை மற்றும் ருத்ரன் ஆகிய இருவரையும் தேவர்கள் (துதியால்) நிறைவு செய்தனர். வஜ்ரதாரியான சக்ரனின் கரம் இயல்பு நிலையை அடைந்தது.(98) தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், காளையைத் தன் அடையாளமாகக் கொண்டவனுமான அந்தத் தெய்வீகத் தலைவன் தேவர்களிடம் நிறைவை அடைந்தான்.(99) ருத்ரன் அவனே, சிவன் அவனே, அக்னி அவனே, அனைத்தும் அவனே, அனைத்தின் அறிவையும் கொண்டவன் அவனே. இந்திரன் அவனே, காற்றும் அவனே, அசுவினி இரட்டையர்களும் அவனே, மின்னலும் அவனே.(100) பவன் அவனே, பர்ஜன்யம் அவனே, மகாதேவனும் அவனே, பாவமற்றவனும் அவனே. சந்திரன் அவனே, ஈசானன் அவனே, சூரியன் அவனே, வருணன் அவனே.(101) காலன் அவனே, அந்தகன் அவனே, மிருத்யு அவனே, யமனும் அவனே[4]. பகலும் அவனே, இரவும் அவனே. அரைத்திங்கள் {பக்ஷம்} அவனே, மாதம் அவனே, பருவங்களும் {ருதுக்களும்} அவனே. காலை, மாலை, சந்திப் பொழுதுகள் அவனே, வருடம் அவனே.(102) தாத்ரி அவனே, விதாத்ரியும் அவனே, அண்டத்தின் ஆன்மா அவனே, அண்டத்தில் நடைபெறும் அனைத்துச் செயல்களைச் செய்பவனும் அவனே. உடலற்றவனாக இருப்பினும்,  தேவர்களின் உடல்களாக இருப்பவன் அவனே.(103)

[4] "இந்தச் சொற்களனைத்தும் மரணம் அல்லது அழிப்பவனையே குறிக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தேவர்கள் அனைவராலும் துதித்துப் போற்றப்படும் பெருங்காந்தி கொண்டவன் அவனே. ஒருவனாகவும், பலராகவும், நூறாயிரம் பேராகவும் இருப்பவன் அவனே.(104) வேதங்களை அறிந்த பிராமணர்கள் இரு வடிவங்களைக் கொண்டவன் அவன் எனச் சொல்கின்றனர்.  பயங்கரனும், மங்கலனும் அவனே. இந்த இரு வடிவங்களும் கூடப் பலவகைப்பட்டதாகும்.(105) அக்னி {நெருப்பு}, விஷ்ணு மற்றும் சூரியன் ஆகியோர் அவனது பயங்கர வடிவங்களாவர். நீரும், ஒளியும், சந்திரனும் அவனது மங்கல வடிங்களாகும்.(106) வேதங்களின் பல்வேறு அங்கங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், ஆன்மாவைக் குறித்த அறிவியல்கள் ஆகியவற்றின் உயர்ந்த புதிரே {ரகசியமே} இந்தத் தேவன் மகேஸ்வரனாவான்.(107) மகாதேவன் அப்படிப்பட்டவனே. மேலும் அந்தத் தேவன் பிறப்பற்றவனாவான். ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அந்தத் தேவனின் குணங்கள் அனைத்தையும், ஆயிரம் வருடங்கள் நான் தொடர்ந்து சொன்னாலும், என்னால் அவற்றைப் பட்டியலிட முடியாது. தீய கோள்கள் அனைத்தாலும் பீடிக்கப்பட்டிருந்தாலும், பாவங்கள் அனைத்தின் கறைபடிந்திருந்தாலும்,(108-110) அந்தப் பெரும் பாதுகாவலனை நாடினால், வேண்டுவதில் நிறைவைக் கொடுத்து, அவர்களுக்கு முக்தியையும் அவன் அருள்வான். உயிர், உடல்நலம், செழுமை, செல்வம், மற்றும் பல்வேறு வகையான ஆசைப் பொருட்கள் அனைத்தையும் அருளி {அவற்றை} மீண்டும் அவனே எடுத்துக் கொள்கிறான். இந்திரனிலும், பிற தேவர்களிலும் காணப்படும் செழிப்பு அவனுடையதே.(111)

எப்போதும் இவ்வுலகில், மனிதர்களின் நன்மை மற்றும் தீமையிலேயே அவன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். அவனது மேன்மையின் விளைவால், அவன் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் அவனால் அடைய முடியும்.(112) மகேஸ்வரன் என்று அழைக்கப்படும் அவன், உயர்ந்தவர்களின் தலைவனாகவும் இருக்கிறான். பல வகைகளிலான பல வடிவங்களில் அவனே அண்டத்தில் படர்ந்தூடுருவியிருக்கிறான்.(113) அந்தத் தேவனின் வாய் {வடவாமுகம்} பெருங்கடலில் இருக்கிறது. அந்த வாயானது {வடவாமுகமானது} பெண் குதிரையுடைய தலையின் வடிவை ஏற்று, நீரின் வடிவில் வேள்விக்காணிக்கைகளைக் குடிக்கிறது என்பது நன்கு அறியப்பட்டதே.(114) இந்தத் தேவன் எப்போதும் சுடலைகளிலேயே {சுடுகாடுகளிலேயே} வசிக்கிறான். துணிவுமிக்கவர்களைத் தவிர வேறு யாராலும் செல்ல முடியாத இடங்களிலேயே அந்த உயர்ந்த தலைவனை {ஈஸ்வரனை} மனிதர்கள் வழிபடுகின்றனர்.(115)

இவ்வுலகில் மனிதர்களால் பேசப்பட்டு, வழிபடப்படும் இந்தத் தேவனின் சுடர்மிக்கப் பயங்கர வடிவங்கள் பலவாகும்.(116) உலகங்கள் அனைத்திலும் இந்தத் தேவனின் உண்மையான பெயர்களும் பலவாகும். அவனது மேலாதிக்கம், அவனது எல்லையற்ற ஆற்றல் மற்றும் அவனது செயல்பாடுகளால் நிறுவப்பட்டனவே அப்பெயர்கள் ஆகும்.(117) முடிவிலியான ருத்திரன் என்று அழைக்கப்படும் அந்தப் பெரும் தேவனை மதிக்கும் விதமாகச் சதருத்ரியம் என்று அழைக்கப்படும் பாடலானது வேதங்களில் பாடப்பட்டுள்ளது.(118) அந்தத் தேவன், மனித மற்றும் தெய்வீக விருப்பங்கள் அனைத்துக்கும் தலைவனாவான். அவன் எல்லையற்ற ஆற்றல் கொண்டவனும், உயர்ந்த ஆசானுமாவான். உண்மையில் அந்தத் தேவனே பரந்த அண்டத்தில் படர்ந்தூடுருவியிருக்கிறான்.(119) பிராமணர்களும், முனிவர்களும் அவனை உயிரினங்கள் அனைத்தின் முதற்பேறாகச் சொல்கின்றனர். அவனே தேவர்களில் முதன்மையானவன்; அவனது வாயிலிருந்தே காற்று உண்டானது.(120)

(அண்டத்தின்) உயிரினங்களை எப்போதும் பாதுகாப்பதாலும், அவற்றோடு விளையாடுவதாலும், அவனே உயிரினங்கள் அனைத்தின் தலைவன் என்பதாலும், அவன் பசுபதி {பசு – உயிரினம், பதி – தலைவன் = பசுபதி – உயிரினங்களின் தலைவன்} என்று அழைக்கப்படுகிறான்.(121)

லிங்கச் சின்னமானது எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்பதாகக் கருதப்படுவதாலும், அவன் எப்போதும் உலகத்தை மகிழ்விப்பவன் என்பதாலும், அவன் மகேஸ்வரன் என்று அழைக்கப்படுகிறான்.(122) நிமிர்ந்து நிற்பதாகக் கருதப்படும் அவனது லிங்கச் சின்னத்தையே முனிவர்களும், தேவர்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும் எப்போதும் வழிபடுகின்றனர்.(123) அவ்வழிபாடே மகேஸ்வரனை மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. உண்மையில் சங்கரன் (அப்படிப்பட்ட வழிபாட்டால்) மகிழ்ச்சியும், அன்பும், பேரின்பமும் கொள்கிறான்.(124)

கடந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் ஆகியவற்றைப் பொறுத்து அந்தத் தேவன் அசையும் மற்றும் அசையாத தன் வடிங்கள் பலவற்றை அடைவதால் அவன் பஹுரூபன் (பல வடிவங்களைக் கொண்டவன்) என்று அழைக்கப்படுகிறான்.(125)

ஒரே கண்ணைக் கொண்ட அவன் பிரகாசத்தால் சுடர்விட்டு எரிகிறான், அல்லது தன் உடலின் அனைத்துப் பக்கங்களிலும் பல கண்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறான். மேலும் கோபத்தால் அவன் உலகங்களைக் கொள்வதன் காரணத்தால் அவன் சர்வன் என்று அழைக்கப்படுகிறான்.(126)

புகையைப் போன்ற வடிவத்தைக் கொண்டவன் அவன் என்ற காரணத்தால் {அவன் தூமர வண்ணத்தில் இருப்பதால்} அவன் தூர்ஜடி என்று அழைக்கப்படுகிறான். தேவர்களான அந்த விஸ்வேதேவர்கள் அவனில் இருக்கும் காரணத்தால் அவன் விஸ்வரூபன் என்றும் அழைக்கப்படுகிறான்.(127)

ஆகாயம், நீர் மற்றும் பூமி ஆகிய மூன்று தேவியரும் அந்த அண்டத்தலைவனைப் புகழ்ந்து அவனை நாடும் காரணத்தால் அவன் திரியம்பகன் என்று அழைக்கப்படுகிறான்.(128)

அனைத்து வகைச் செல்வங்களையும் எப்போதும் அதிகரிப்பதாலும், மனிதர்களின் செயல்பாடுகளில் அவர்களின் நன்மையை விரும்புபவன் என்ற காரணத்தாலும் அவன் சிவன் என்று அழைக்கப்படுகிறான்.(129)

ஆயிரம் கண்களை, அல்லது பத்தாயிரம் கண்களை, அல்லது அனைத்துப் பக்கங்களிம் அவற்றை அவன் கொண்டிருக்கிறான். பரந்த இந்த அண்டத்தைக் காக்கும் காரணத்தால் அவன் மகாதேவன் என்று அழைக்கப்படுகிறான்.(130)

அவன் பெரியவன், பழமையானவன், உயிரின் பிறப்பிடமாகவும், அதன் தொடர்ச்சியாகவும் இருப்பவன் என்பதாலும், அவனது லிங்கச் சின்னம் எப்போதும் நீடித்திருக்கும் என்ற காரணத்தாலும் அவன் ஸ்தாணு என்று அழைக்கப்படுகிறான்.(131)

உலகில் தோன்றும் சூரிய மற்றும் சந்திர ஒளிக் கதிர்கள் அந்த முக்கண்ணனில் நிலைபெற்ற கேசமாகப் பேசப்படும் காரணத்தால் அவன் வியோமகேசன் என்று அழைக்கப்படுகிறான்.(132)

பிரம்மன், இந்திரன், வருணன், யமன் மற்றும் குபேரன் ஆகியோரைப் பீடித்து அவர்களை முற்றாக அழித்த காரணத்தால் அவன் ஹரன் என்று அழைக்கப்படுகிறான்.(133)

அவனே கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் என்பதாலும், உண்மையில் அனைத்தும் அவனே என்பதாலும், கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் ஆகியவற்றின் பிறப்பிடம் அவனே என்ற காரணத்தாலும் அவன் பவன் என்று அழைக்கப்படுகிறான்.(134)

கபி என்ற சொல் தலைசிறந்தது என்ற பொருளைக் கொண்டது என்றும், விருஷம் என்பது அறம் என்ற பொருளைக் கொண்டது என்றும் சொல்லப்படுகிறது. எனவே தேவர்களின் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் விருஷாகபி என்று அழைக்கப்படுகிறான்.(135)

அந்த மகேஸ்வரன், (தியானத்தில்) இரண்டு கண்களையும் மூடி, சுத்தமான சித்த சக்தியால் தன் நெற்றில் மூன்றாவது கண்ணை உண்டாக்கிக் கொண்ட காரணத்தால் அவன் முக்கண்ணன் என்று அழைக்கப்படுகிறான்.(136)

வாழும் உயிரினங்களின் உடல்களில் என்னவெல்லாம் நோயிருக்குமோ, அவற்றில் என்னவெல்லாம் நோயின்மை இருக்குமோ அவை அந்தத் தேவனையே பிரதிபலிக்கின்றன. உயிரினங்களில் நோயுற்றவற்றையும் சேர்த்து அனைத்தின் உடல்களிலும் உள்ள பிராணன், அபானன் (மற்றும் வேறு பிறவாக) அழைக்கப்படும் முக்கிய வாயுக்களான காற்றும் அவனே[5].(137) அந்த உயர் ஆன்ம தேவனின் எந்த வடிவத்தையோ, லிங்கச் சின்னத்தையோ எப்போதும் வழிபடும் ஒருவன், அச்செயலால் பெரும் செழிப்பை அடைகிறான்.(138) அவனது இரண்டு தொடைகளில் இருந்து கீழ்நோக்கி இருப்பவை நெருப்புமயமானவை {அக்னிமயமானவை}, மங்கலகரமாக இருக்கும் அந்த உடலில் பாதிச் சந்திரமயமானவை. எனவே அவனது பாதி ஆன்மா நெருப்பாகவும், மறுபாதி சந்திரனாகவும் இருக்கிறது.(139) சக்தி நிறைந்த அவனது மங்கல வடிவமானது, மற்ற தேவர்களின் வடிவங்களைவிட அதிகம் சுடர்மிக்கதாகும். மனிதர்களுக்கு மத்தியில் அவனது சுடர்மிக்கப் பயங்கர வடிவமே நெருப்பு {அக்னி} என்று அழைக்கப்படுகிறது.(140) அந்த மங்கல வடிவிலேயே அவன் பிரம்மச்சரியம் பயில்கிறான். அவன் கொண்டிருக்கும் வேறு பயங்கர வடிவத்தால் அந்த உயர்ந்த தலைவன் அனைத்தையும் விழுங்குகிறான்.(141) அவன் எரிப்பவன் என்பதாலும், அவன் ஆர்வமிகுந்தவன் என்பதாலும், அவன் மூர்க்கமானவன் என்பதாலும், அவன் பெரும் ஆற்றலைக் கொண்டவன் என்பதாலும், சதை, குருதி, ஊனீர் ஆகியவற்றை அவன் விழுங்குகிறான் என்பதாலும் அவன் ருத்ரன் என்று அழைக்கப்படுகிறான்.(142)

[5] வேறொரு பதிப்பில், “இவ்வுலகில் பிராணிகளுடைய சரீரங்களில் வெவ்வேறு விதமான பத்துரூபங்களோடிருந்து கொண்டு சமமாயிருப்பவரும், புண்யபாப முதலியவற்றால் வெவ்வேறு விதமாயிருக்கும் பிராணிகளிடத்தில் பிராணன் அபானனென்னும் வாயு ரூபமாயிருப்பவரும் இவரே” என்றிருக்கிறது.

மகாதேவன் என்று அழைக்கப்படுபவனும், பினாகைதாரியுமான இந்தத் தேவனையே, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உனது எதிரிகளைக் கொன்றபடி உன் தேருக்கு முன்பாகச் செல்லும்போது நீ கண்டிருக்கிறாய்.(143) ஓ! பாவமற்றவனே, சிந்துக்களின் ஆட்சியாளனைக் {ஜெயத்ரதனைக்} கொல்லப்போவதாக நீ சபதமேற்றதும், முதன்மையான மலைகளின் உச்சியில் அமர்ந்திருக்கும் இந்தத் தேவனையே உனது கனவில் கிருஷ்ணன் உனக்குக் காட்டினான்.(144) அந்தச் சிறப்புமிக்கத் தேவனே போரில் உனக்கு முன்பாகச் செல்கிறான். நீ எந்த ஆயுதங்களைக் கொண்டு தானவர்களைக் கொன்றாயோ அவற்றை உனக்குக் கொடுத்தவன் அவனே.(145)

சிறப்பானதும், புகழ்மிக்கதும், வாழ்வை மேம்படுத்துவதும், புனிதமானதும், தேவர்களின் தேவனைப் பெருமைப்படுத்துவதும், வேதங்களால் அங்கீகரிக்கப்பட்ட பாடலுமான சதருத்ரியமே இப்போது உனக்கு விளக்கப்பட்டது[6].(146) நான்கு பிரிவுகளைக் கொண்ட இந்தப் பாடலானது {துதியானது}, அனைத்து நோக்கங்களையும் சாதிக்கவல்லதும், புனிதமானதும், பாவங்கள் அனைத்தையும் அழிப்பதும், களங்கள் அனைத்தையும் விரட்டத்தகுந்ததும், கவலைகள் அனைத்தையும், அச்சங்கள் அனைத்தையும் கொல்லத்தகுந்ததுமாகும். இதை எப்போதும் கேட்கும் ஒரு மனிதன், தன் எதிரிகள் அனைவரையும் வெல்வதிலும், உயர்ந்த மதிப்பைக் கொண்ட ருத்ரனின் உலகை அடைவதிலும் வெல்வான்.(147,148) சிறந்ததும், மங்கலகரமானதும், சிறப்புமிக்க அந்தத் தேவனின் போர் தொடர்பானதுமான இந்த விவரிப்பைப் படிப்பவனும், அல்லது உரைக்கும்போது கேட்பவனும், அண்டத்தின் அந்தச் சிறப்புமிக்கத் தலைவனை அர்ப்பணிப்புடன் வழிபடுபவனும் தேவனான முக்கண்ணன் அவனிடம் கொள்ளும் நிறைவின் விளைவால், தான் விரும்பும் உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் அடைவான்.(149,150) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உன்தரப்பில் ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} ஆலோசகனாகவும், பாதுகாவலனாகவும் கொண்டிருக்கும் உனக்குத் தோல்வியே கிடையாது. சென்று போரிடுவாயாக” என்றார் வியாசர்.(151)

[6] வேறொரு பதிப்பில், “செல்வத்தைப் பெருக்குவதும், புகழை உண்டுபண்ணுவதும், ஆயுளை விருத்தி பண்ணுவதும், பரிசுத்தமானதும், வேதங்களோடு ஒப்பிடப்பட்டதுமான தேவதேவரான ஈஸ்வரருடைய சதருத்ரியமானது உனக்கு விரித்துரைக்கப்பட்டது” என்றிருக்கிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனிடம் இவ்வார்த்தைகளைப் பேசிய அந்தப் பராசரர் மகன் {வியாசர்}, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, தான் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்றுவிட்டார்” {என்றான் சஞ்சயன்}[7].(152)

[7] வேறொரு பதிப்பில், இதன் பிறகு "சூத குலத்திற்பிறந்தவனான சஞ்சயன், அரசனுக்கு இவை அனைத்தையும் உரைத்துவிட்டுக் கர்ணனுடைய வதத்தைப் பார்ப்பதற்காகச் சேனை தங்கியிருக்கும் இடத்தைக் குறித்தே சென்றான்" என்று இந்தப் பகுதி முடிகிறது.
---------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 203-ல் உள்ள சுலோகங்கள் : 152

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்