Agni's Love and Sahadeva's Battle | Sabha Parva - Section 30B | Mahabharata In Tamil
(திக்விஜய பர்வத் தொடர்ச்சி)
சகாதேவனின் தெற்கு நோக்கி படையெடுப்பு; சகாதேவன் அடக்கிய நாடுகளின் விவரம்
வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஜனமேஜயா, அக்னிதேவன் மஹிஷ்மதியில் வசித்து வந்தபோது, ஒரு காதலனாகப் புகழ்பெற்றான். மன்னன் நீலனுக்கு பெரும் அழகு படைத்த ஒரு மகள் இருந்தாள். அவள் எப்போதும் வேள்வி நெருப்பின் அருகில் தனது தந்தையுடன் இருந்து, அதை {அக்னியை} வீரியத்துடன் சுடர்விட்டு எரியவைத்தாள். மன்னன் நீலனின் வேள்வியில் நெருப்பு மூட்ட விசிறினாலும் எரியாமல், அந்த மங்கையின் அழகான இதழ்க் குவித்து ஊதிய மென்மையான காற்றினால் மட்டுமே அந்த அக்னி எரிந்தான். அக்னி அந்த அழகான மங்கையை தனக்கு மணமகளாக விரும்பினான். அந்த மங்கையும் அவனை {அவனை} ஏற்றுக் கொண்டாள்.
ஒரு நாள் அந்த அக்னிதேவன் ஒரு அந்தண உருவைக் கொண்டு, அந்த அழகானவளின் சமூகத்தை இன்பமாக அனுபவித்த போது மன்னன் நீலனால் கண்டறியப்பட்டான். ஆகையால், அந்த அறம்சார்ந்த மன்னன், அந்த அந்தணனுக்கு சட்டப்படி தண்டனை கொடுக்க கட்டளையிட்டான். இதனால் அந்த சிறப்பு வாய்ந்த தேவன் {அக்னி தேவன்} மிகுந்த கோபத்துக்குள்ளானான். இதைக் கண்ட அந்த மன்னன் மிகவும் வியந்து, தரையளவு சிரம் தாழ்த்தினான். பிறகு சிறிது காலம் கழித்து தனது மகளை அந்தண உருவில் இருந்த அக்னி தேவனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். அந்த தேவன் விபபசு (அக்னி), மன்னன் நீலனின் மகளான அந்த அழகிய புருவம் கொண்டவளை ஏற்றுக் கொண்டு, அந்த ஏகாதிபதியை {மன்னன் நீலனை} நினைத்து அருள் கொண்டான். பிறகு, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் அக்னி, அம்மன்னனைத் {நீலனை} தன்னிடம் ஏதாவது வரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சொன்னான். அந்த மன்னன் {நீலன்}, எப்போதும் போரில் தனது துருப்புகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்ற வரத்தைக் கேட்டான். அந்த நேரத்திலிருந்து, ஓ மன்னா {ஜனமேஜயா}, இதை அறியாமல் நீலனின் நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்த ஏகாதிபதிகள் அனைவரும் ஹுதாசனனால் {அக்னியால்} உட்கொள்ளப்பட்டார்கள். அந்த நேரத்தில் இருந்து, ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {ஜனமேஜயா}, மகிஷ்மதி என்ற அந்த நகரத்தில் இருந்த பெண்கள் மற்றவர்களால் (மனைவியாக) ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அக்னிதேவன் அவர்களுக்கு, அவர்கள் நினைத்தவாறு நடந்து கொள்ளவும், ஒரு குறிப்பிட்ட கணவனுக்கு கட்டுப்படாமலும் இருக்க, தனது வரத்தின் மூலம், கலவியில் சுதந்திரம் அளித்தான். மேலும், ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயனே}, அந்த நேரத்தில் இருந்து (மற்ற நாட்டு) ஏகாதிபதிகள், அக்னியின் மேல் கொண்ட பயத்தால் அந்த நகரத்தின் {மகிஷ்மதி நகரத்தின்} பக்கம் திரும்பாமல் இருந்தார்கள். அறம்சார்ந்த
சகாதேவன், நெருப்பால் சூழப்பட்டு, பயத்தால் பீடிக்கப்பட்ட தனது துருப்பு வீரர்களைக் கண்டு, மலையென அசையாது இருந்தான். பிறகு தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு, தண்ணீரைத் தொட்டு, அந்த வீரன் (
சகாதேவன்) அனைத்தையும் தவசிப்படுத்தும் அக்னியிடம் இந்த வார்த்தைகளில் பேசினான்:
"ஓ, புகையால் நீ வந்து சென்ற தடத்தைப் பதிப்பவனே, நான் உன்னை வணங்குகிறேன். இந்த எனது முயற்சிகள் எல்லாம் உனக்காகவே செய்யப்படுகின்றன. ஓ அனைத்தையும் தவசிம் செய்பவனே {அக்னியே}, நீயே தேவர்களுக்கு வாயாக இருக்கிறாய், நீயே வேள்வியாகவும் இருக்கிறாய். நீ அனைத்தையும் புனிதமாக்குவதால் பாவகன் என்றும் அழைக்கப்படுகிறாய். உன்னிடத்தில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யைச் சுமந்து செல்வதால் நீ ஹவ்யவாஹனன் என்றும் அழைக்கப்படுகிறாய். உன்னிடம் பேசவே வேதங்கள் வந்தன. ஆகையால் நீ ஜடவேதன் என்று அழைக்கப்படுகிறாய். தேவர்களுக்குத் தலைவனாக இருக்கும் நீ சித்திரபானு, அனலா, விபாவசு, ஹுதாசனா, ஜுவாலனா, சிக்கி, வைஸ்வனரா, பிங்கேசா, பிளவங்கா, பூரிதேஜா என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறாய். குமரனுக்கு (கார்த்திகேயனுக்கு) {முருகனுக்கு} நீயே ஆதிமூலமாய் இருக்கிறாய். நீ புனிதமானவன், ருத்ரகர்வனும், ஹிரண்யகிரீதனும் நீயே. ஓ அக்னி, எனக்கு சக்தியைக் கொடு, வாயு எனக்கு உயிரைக் கொடுக்கட்டும், பூமி எனக்கு பலத்தையும் ஊட்டத்தையும் கொடுக்கட்டும், நீர் எனக்கு வளமையைக் கொடுக்கட்டும். ஓ அக்னி, நீர் {தண்ணீர்} பிறக்க முதன்மைக் காரணம் நீயே, பெரும் தூய்மை உடையவன் நீயே, தேவர்களில் முதன்மையானவன் நீயே, நீயே அவர்களுக்கு வாயாகவும் இருக்கிறாய். ஓ அக்னி, நீ என்னை உனது உண்மையால் சுத்தப்படுத்து. முனிவர்களும், அந்தணர்களும், தேவர்களும், அசுரர்களும், தினமும் தெளிந்த நெய்யை வேள்வியில் விதிப்படி ஊற்றுகின்றனர். அந்த வேள்விகளில் காட்சி அளிக்கும் உன்னிலிருந்து பிரகாசிக்கும் உண்மை எனும் கதிர்கள் என்னை சுத்திகரிக்கட்டும். புகையைக் கொடியாகக் கொண்டு, வாயுவால் ஏற்படும் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுவிப்பவனே, நீ அனைத்து உயிர்களிலும் இருக்கிறாய். ஓ அக்னி, உனது உண்மை எனும் சுடர்களால் என்னைச் சுத்தப்படுத்து. அப்படி உன்னால் சுத்திகரிக்கப்பட்ட நான், ஓ மேன்மையானவனே {அக்னியே}, உன்னிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓ அக்னி, நீ எனக்கு மனநிறைவு, செழிப்பு, அறிவு மற்றும் மகிழ்ச்சியை அருள்", என்று வேண்டினான் {
சகாதேவன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மேற்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஒருவன் அக்னிக்குள் {நெருப்புக்குள்} தெளிந்த நெய்யை ஊற்றினால், அவன் எப்போதும் செழிப்பும், தனது முழுகட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஆன்மாவும் அருளப்பட்டு, அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.
சகாதேவன் மறுபடியும் அக்னியிடம், "ஓ தவசிப் படையல்களைச் சுமந்து செல்பவனே, நீ ஒரு வேள்வியைத் தடை செய்யாதிரு!" என்றான். இதைச் சொன்ன மனிதர்களில் புலியான மாத்ரியின் மகன் {
சகாதேவன்}, பீதியிலிருந்த தனது துருப்புகளுக்கு முன்னிலையில், பூமியில் குசப்புற்களை விரித்து நெருப்பை எதிர்பார்த்து அதன் மேல் அமர்ந்தான். கண்டங்களை மீறாத கடலைப் போல அக்னி அவன் தலை மீது விழவில்லை. ஆனால் மறுபுறம் சகாதேவனிடம் அந்த குருகுல இளவரசனிடம் மனிதர்களுக்கு கடவுளான அக்னி அமைதியாக வந்து அனைத்து உறுதிகளையும் கொடுத்து, "ஓ குருரு குலத்தவனே {சகாதேவா}, இந்த கோலத்திலிருந்து எழுந்திரு. ஓ எழுந்திரு. நான் உன்னிடம் ஒரு முயற்சியையே செய்தேன். நான் உனது நோக்கத்தையும், தர்மனின் மகனது {
யுதிஷ்டிரனது} நோக்கத்தையும் அறிவேன். ஆனால், ஓ பாரத குலத்தவரில் சிறந்தவனே {சகாதேவனே}, மன்னன் நீலனின் வழித்தோன்றல்களில் ஒருவன் இருக்கும்வரை, இந்த நகரம் என்னால் பாதுகாக்கப்பட்டிருக்கும். இருப்பினும், ஓ பாண்டுவின் மகனே {சகாதேவனே}, நான் உனது இதய விருப்பத்தை ஈடேற்றுகிறேன்," என்றான். அக்னியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ பாதர குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்த மாத்ரியின் மகன் இதயத்தில் மகிழ்ச்சியுடன் எழுந்தான். தனது கரங்களைக் குவித்து, சிரம் தாழ்த்தி அனைத்தையும் புனிதமாக்கும் நெருப்புக் கடவுளை வணங்கினான். கடைசியாக அக்னி மறைந்ததும், அந்தத் தெய்வத்தின் {அக்னி தேவனின்} கட்டளையால் மன்னன் நீலன் அங்கு வந்து மனிதர்களில் புலியான, போர்க்களத்தில் குருவான சகாதேவனை முறைப்படி வணங்கினான்.
சகாதேவன் அவனது வணக்கங்களைப் பெற்றுக் கொண்டு, அவனை {நீலனை} தனக்குக் கப்பம் கட்ட வைத்தான். மன்னன் நீலனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அந்த வெற்றியாளனான மாத்ரியின் மகன் {
சகாதேவன்}, மேலும் தெற்கு நோக்கி சென்றான். அந்த நீண்ட கரம் கொண்ட வீரன் பெரும் சக்தி கொண்ட திரிபுராவின் {இன்றைய திரிபுரா அல்ல} மன்னனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். பிறகு தனது படைகளை பௌரவ நாட்டுக்கு எதிராகத் திருப்பி, அந்த ஏகாதிபதியை வீழ்த்தி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். பின்பு பெரும் முயற்சி செய்து சௌராஷ்டிராவின் மன்னன் அக்ரிதியையும், கௌசிகர்களின் குருவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அந்த அறம் சார்ந்த இளவரசன் {
சகாதேவன்}, சௌராஷ்டிர நாட்டில் தங்கி இருந்த போது, போஜகடத்தின் பீஷ்மகனுக்கும், புத்திகூர்மையுள்ள, இந்திரனின் நண்பனான அவனது மகன் ருக்மிக்கும் ஒரு தூதுவனை அனுப்பினான். தனது மகனுடன் கூடிய அந்த ஏகாதிபதி {பீஷ்மகன்} கிருஷ்ணனுடனான உறவை நினைத்துப் பார்த்து, பாண்டு மகனின் {சகாதேவனின்} கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டான். பிறகு போர்க்களத்தின் குரு {
சகாதேவன்}, மன்னன் ருக்மியிடம் இருந்து நகைகளையும் செல்வத்தையும் பெற்றுக் கொண்டு மேலும் தெற்கு நோக்கி படை நடத்தினான். பிறகு பெரும் சக்தியும் பலமும் கொண்ட அந்த வீரன் சுர்பாரகனையும் தலகடனையும், தண்டகர்களையும் அடக்கினான். பிறகு அந்த குரு வீரன், கடற்கரையில் வாழும் கணக்கிலடங்கா மிலேச்ச இனக்குழுக்களையும், நிஷாதர்களையும், கர்ணபிரவணர்கள் என்ற நரமாமிசம் உண்பவர்களையும், ராட்சதர்களும் மனிதர்களும் கலந்து பிறந்த காளாமுகர்களையும், கோல மலையையும், சுரபிபட்ணம், தாமிரத்தீவு, ரமக மலை ஆகியவற்றை வென்றான். அந்த உயர் ஆன்ம வீரன், மன்னன் திமிங்கிலனையும், ஒற்றைக் கால் மனிதர்களான கேரகர்கள் என்ற காட்டுமிராண்டிக் கூட்டத்தையும் வென்றான். அந்தப் பாண்டுவின் மகன் {
சகாதேவன்}, சஞ்சயந்தி என்ற நகரத்தையும், பாஷாண்டம், காரஹதகம் என்ற நாடுகளுக்கும் தனது தூதுவர்களை மட்டுமே அனுப்பி, அவர்களைக் கப்பம் கட்ட வைத்தான். அந்த வீரன் {
சகாதேவன்} பௌந்திரயர்களையும், திராவிடர்களையும், உத்திர கேரளர்களையும் {வடகேரளர்களையும்}, ஆந்திரர்களையும், தலவாணர்களையும், கலிங்கர்களையும், உஷ்தரகர்ணிகர்களையும், யவனர்களின் காண்பதற்கினிய அதாவி நகரத்தையும் தனது கட்டுப்பாட்டில், கொண்டு வந்து அவர்களிடம் இருந்து கப்பம் வாங்கினான். ஓ மன்னர் மன்னா {ஜனமேஜயா}, அந்த எதிரிகளைக் கொல்பவன் {
சகாதேவன்}, மாத்ரியின் மகனான புத்திகூர்மையுள்ளவன் கடற்கரைக்கு வந்து, பெரும் உறுதிகள் கொடுத்து புலஸ்தியரின் பேரனனான சிறப்பு மிகுந்த விபீஷணனிடம் தனது தூதுவர்களை அனுப்பினான். காலத்தின் செயலை மதிப்புடன் நினைத்துப் பார்த்த அந்த மேன்மையான ஏகாதிபதி {விபீஷணன்} விருப்பத்துடன் பாண்டு மகனின் {சகாதேவனின்} கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டான். அவன் {விபீஷணன்}, பாண்டுவின் மகனுக்கு பலதரப்பட்ட நகைகளையும், ரத்தினங்களையும், சந்தனத்தையும், பல தரப்பட்ட தெய்வீக ஆபரணங்களையும், விலையுயர்ந்த ஆடைகளையும், விலையுயர்ந்த முத்துகளையும் அனுப்பி வைத்தான். புத்திசாலித்தனம் கொண்ட
சகாதேவன், அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, தனது சொந்த நாட்டுக்குத் {இந்திரப்பிரஸ்தம்} திரும்பினான்.
ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே, அந்த எதிரிகளை அழிப்பவன் {
சகாதேவன்}, சமாதானத்தாலும், போராலும் பல மன்னர்களை வீழ்த்தி, அவர்களைத் தனக்குக் கப்பம் கட்டச் செய்து தனது சொந்த நகரத்திற்குத் {இந்திரப்பிரஸ்தம்} திரும்பினான். ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, தான் கொண்டு வந்த அனைத்து செல்வத்தையும் நீதிமானான
யுதிஷ்டிரனிடம் கொடுத்து, தன்னை வெற்றியாளனாகக் கருதி, தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தான் {
சகாதேவன்}.