Showing posts with label வசுமனஸ். Show all posts
Showing posts with label வசுமனஸ். Show all posts

Wednesday, February 28, 2018

அதிகார உறுதி! - சாந்திபர்வம் பகுதி – 94

The confirmation of power! | Shanti-Parva-Section-94 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 94)


பதிவின் சுருக்கம் : உறுதியான அதிகாரம் படைத்த மன்னன் எவன்? வெற்றின் கனிகளைச் சுவைக்கக்கூடிய மன்னன் எவன்? என்பவை குறித்து வசுமனஸுக்குச் சொன்ன வாமதேவர்; அந்த உரையாடலில் வாமதேவர் சொன்னவற்றைக் கடைப்பிடிக்கும்படி யுதிஷ்டிரனைக் கேட்டுக் கொண்ட பீஷ்மர்...


வாமதேவர் {கோசல நாட்டு மன்னன் வசுமனஸிடம்} சொன்னார், "மன்னன் போர்கள் இல்லாமலேயே வெற்றிகளை வென்றெடுக்க வேண்டும். ஓ! ஏகாதிபதி {வசுமனஸே}, போர்களின் மூலம் அடையப்படும் வெற்றிகள் ஞானியரால் புகழப்படுவதில்லை.(1) அரசின் சொந்த பலம் உறுதியாகாதபோது, அவன் புதிய பொருட்களை {உரிமைகளை} அடைவதில் முனையக் கூடாது. அதிகாரம் வலுப்பெறாத மன்னன் அவ்வாறு பொருட்களை {உரிமைகளை} அடைவதில் முனைவது முறையாகாது.(2) எவனுடைய ஆட்சிப்பகுதிகள் பரந்ததாகவும், செல்வம் நிறைந்ததாகவும் இருக்கிறதோ, எவன் பெரும் எண்ணிக்கையிலான அதிகாரிகளைக் கொண்டிருக்கிறானோ, அந்த மன்னனின் அதிகாரமே உறுதியானது என்று சொல்லப்படுகிறது.(3) எந்த மன்னனின் படைவீரர்கள் (ஊதியம் மற்றும் பரிசுகளால்) மனம் நிறைந்தவர்களாக, பகைவர்களை வஞ்சிக்கத் தகுந்தவர்களாக இருக்கிறார்களோ அவன் சிறு படையையே கொண்டிருந்தாலும் மொத்த உலகத்தையும் அடக்குவான்.(4) எந்த மன்னனின் குடிமக்கள், நகரங்களைச் சார்ந்தவர்களாகவோ, மாகாணங்களைச் சார்ந்தவர்களாகவோ இருப்பினும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களாகவும், செல்வம் மற்றும் தானியங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ அவனது அதிகாரமே உறுதியானது என்று சொல்லப்படுகிறது.(5) ஒரு மன்னன், தன் பலம் எதிரியின் பலத்தைவிடப் பெரியது என்று நினைக்கும்போது, தன் நுண்ணறிவின் துணையுடன், பின்னவனின் ஆட்சிப்பகுதிகளையும், செல்வத்தையும் அடைய அவன் முயல வேண்டும்.(6)

Tuesday, February 27, 2018

அரசதர்மம்! - சாந்திபர்வம் பகுதி – 93

The duties of the king! | Shanti-Parva-Section-93 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 93)


பதிவின் சுருக்கம் : மன்னனின் நடத்தை இருக்க வேண்டியதெவ்வாறு? மன்னன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்வதெப்போது? மன்னனின் கண்காணிப்பு இருக்க வேண்டியதெப்படு என்பதை வசுமனஸுக்குச் சொன்ன வாமதேவர்...


கோசல நாட்டு மன்னன் வசுமனஸ் - தவசி வாமதேவர்
வாமதேவர் {கோசல நாட்டு மன்னன் வசுமனஸிடம்} தொடர்ந்தார், "பலமிக்கவனான மன்னன், பலவீனரிடம் நீதியில்லாமல் நடந்து கொள்ளும்போது, அவனது குலத்தில் பிறந்தோரும் அதே நடத்தையே பின்பற்றுவார்கள்.(1) மேலும், பாவம் செய்யும் அந்த இழிந்தவனைப் பிறரும் பின்பற்றுவார்கள். அவ்வாறு பின்பற்றும் மனிதன் {மன்னன்}, கட்டுப்பாடுகளால் அடக்கப்படவில்லையென்றால், அவனது அத்தகு செயலே விரைவில் நாட்டுக்கு அழிவைக் கொண்டுவரும்.(2) தனக்குரிய கடமைகளை நோக்கும் மன்னனின் நடத்தையானது, பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டாக மனிதர்களால் பொதுவாக ஏற்கப்படுகிறது. எனினும், தன் கடமைகளில் இருந்து வீழும் ஒரு மன்னன், தன் உறவினர்களால் கூடப் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டான்[1].(3) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள ஆணைகளை அலட்சியம் செய்யும் முரட்டு மன்னன், தன் நாட்டில் வரம்பைமீறிச் செயல்பட்டு, மிகவிரைவில் அழிவை அடைகிறான்.(4)

Monday, February 26, 2018

வாமதேவரும், வசுமனஸும்! - சாந்திபர்வம் பகுதி – 92

Vamadeva and Vasumanas! | Shanti-Parva-Section-92 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 92)


பதிவின் சுருக்கம் : செங்கோலின் சிறப்பு மற்றும் கொடுங்கோலின் இழிவு ஆகியவை குறித்து வாமதேவர் வசுமனசுக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அறத்தின் பாதையைப் பின்பற்ற விரும்பும் ஒரு நீதிமிக்க மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, ஓ! பாட்டா {பீஷ்மரே}, கேட்கும் எனக்குப் பதில் அளிப்பீராக" என்று கேட்டான்.(1)

Monday, January 08, 2018

அரசனின் இன்றியமையாத்தன்மை! - சாந்திபர்வம் பகுதி – 68

The importance of a king! | Shanti-Parva-Section-68 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 68)


பதிவின் சுருக்கம் : மன்னர்கள் தேவர்களுக்கு இணையாகப் போற்றப்படுவது ஏன் என்று கேட்ட யுதிஷ்டிரன்; ஒரு நாட்டுக்கு மன்னன் ஏன் அவசியம் என்று வசுமனஸுக்குப் பிருஹஸ்பதி சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் ஒரு தேவன் என்று ஏன் பிராமணர்கள் சொன்னார்கள்?" என்று கேட்டான்.(1)

Tuesday, June 09, 2015

சொர்க்கத்திற்கு உயர்ந்த யயாதி! - உத்யோக பர்வம் பகுதி 122

Yayati ascended to Heaven ! | Udyoga Parva - Section 122 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –51)

பதிவின் சுருக்கம் : மாதவியின் மகன்களான வசுமனஸ், பிரதர்த்தனன், சிபி மற்றும் அஷ்டகன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக  தங்கள் புண்ணியங்களை யயாதிக்கு அளிப்பது; அவர்களது புண்ணியங்களைப் பெற்றுக் கொண்ட யயாதி சொர்க்கத்திற்கு உயர்வது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "மனிதர்களில் காளையான அந்த மன்னன் யயாதி அந்த அறம்சார்ந்த மனிதர்களை அடையாளம் கண்டுகொண்ட பிறகு, பூமியின் பரப்பைத் தொட வேண்டிய அவசியமே இல்லாமல் மீண்டும் சொர்க்கத்திற்கு எழுந்தான். அவன் {யயாதி} தனது தேவ உருவை மீண்டும் அடைந்து, கவலைகள் அனைத்தில் இருந்தும் முழுமையாக விடுபட்டான். தெய்வீக மாலைகள், அங்கிகள், தெய்வீக ஆபரணங்கள் ஆகியவை பூட்டப்பட்டு, தெய்வீக நறுமணப் பொருட்கள் தெளிக்கப்பட்டு, தெய்வீகப் பண்புகள் நிறைந்து, பூமியைத் தனது காலால் தொட வற்புறுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் மீண்டும் எழுந்தான்.


அதே வேளையில், ஈகைகுணத்துக்காக உலகத்தில் கொண்டாடப்படும் வசுமனஸ், உரத்த குரலில், அந்த மன்னனிடம் {யயாதியிடம்} முதலில் பேசினான். அவன் {வசுமனஸ் யயாதியிடம்}, "அனைத்து வகை மனிதர்களிடமும் பழியற்ற வகையில் நடந்து கொண்டு, நான் வென்ற தகுதியை {புண்ணியத்தை} உமக்குத் தருகிறேன். ஓ! மன்னா {யயாதியே}, அது முழுமையாக உமதே ஆகட்டும். ஈகை மற்றும் மன்னிக்கும் குணம் {பொறுமை} ஆகியவற்றால் ஒருவன் அடையும் தகுதி {புண்ணியம்}, நான் செய்த வேள்விகளின் விளைவாக நான் அடைந்த தகுதி ஆகியவை அனைத்தும் உமதாகட்டும்" என்றான் {வசுமனஸ்}.

அதன் பிறகு, க்ஷத்திரியர்களில் காளையான பிரதர்த்தனன் {யயாதியிடம்}, "போரைப் போலவே அறத்திற்கும் எப்போதும் அர்ப்பணிப்புடன், ஒரு க்ஷத்திரியனானதன் விளைவால், வீரனாக நான் அடைந்த புகழ் (உண்மையில் நான் எதற்காக அறியப்படுகிறேனோ அந்தப் புகழ்) அனைத்தும் உமதாகட்டும்" என்றான் {பிரதர்த்தனன்}.

அதன் பிறகு, உசீநரனின் புத்திசாலி மகனான சிபி, இனிய வார்த்தைகளில் {யயாதியிடம்}, "கேலிக்காகக் குழந்தைகளிடமோ பெண்களிடமோ, ஆபத்திலோ, துயரிலோ, பகடையிலோ நான் பொய் பேசியதே இல்லை. நான் தியாகம் செய்யாத அந்த உண்மையை {சத்தியத்தைக்} கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக. ஓ! மன்னா {யயாதியே}, என்னால், ஆசைக்குகந்த, இன்பத்துக்குகந்த பொருட்கள் அனைத்தையும் கைவிட முடியும். எனது நாட்டையே ஏன் உயிரையும் கூடக் கைவிட முடியும், ஆனால் உண்மையை {சத்தியத்தை} ஒருபோதும் கைவிடேன். அந்த உண்மையைக் கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக. எந்த உண்மையைக் கொண்டு தர்மனையும் {தர்மதேவனையும்}, எந்த உண்மையைக் கொண்டு அக்னியையும், எந்த உண்மையைக் கொண்டு நூறு வேள்விகள் செய்தவனையும் {இந்திரனையும்} நான் மன நிறைவு கொள்ளச் செய்தேனோ, அந்த உண்மையைக் கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக", என்றான் {மன்னன் சிபி சக்கரவர்த்தி}.

இறுதியாக, குசிகரின் மகன் {விஸ்வாமித்ரர்} மற்றும் மாதவியின் மகனும், அரச முனியுமான அஷ்டகன், பல நூறு வேள்விகளைச் செய்த நகுஷனின் மகன் யயாதியிடம், "ஓ! தலைவா, புண்டரீகம், கோசவம், வாஜபேயம் ஆகிய வேள்விகளை நான் நூற்றுக் கணக்கில் செய்திருக்கிறேன். அந்தத் தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் நீர் எடுத்துக் கொள்ளும். வேள்விகள் செய்வதற்காக நான் செல்வம், ரத்தினங்கள், ஆடைகள் ஆகிய எதையும் விட்டு வைத்ததில்லை. அந்த உண்மையைக் {சத்தியத்தைக்} கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக" என்றான் {விஸ்வாமித்திரர் மகன் அஷ்டகன்}.

பூமியை விட்டு அகன்ற அந்த மன்னன் {யயாதி}, தனது மகளின் {மாதவியின்} மகன்கள் ஒருவர் பின் ஒருவராக இவ்வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல மேலும் மேலும் சொர்க்கத்தை நோக்கி உயரத் தொடங்கினான்.

இப்படியே சொர்க்கத்தில் இருந்து வீசப்பட்ட யயாதியை, தங்கள் நற்செயல்கள் மூலம் அந்த மன்னர்கள் விரைவாகக் காத்தனர். இப்படியே நான்கு அரச மரபுகளில் பிறந்தவர்களும், {யயாதியின்} மகளின்  மகன்களும் {மகள் வழிப் பேரன்களும்}, தங்கள் குலத்தைப் பெருக்குபவர்களுமான அந்த மன்னர்கள் தங்கள் அறங்கள், வேள்விகள், கொடைகள் மூலமாகத் தங்கள் தாய்வழி பாட்டனை {யயாதியை} மீண்டும் சொர்க்கத்திற்கு உயர்த்தினார்கள். அந்த ஏகாதிபதிகள் அனைவரும் ஒருமித்தபடி, "அரசப் பண்புகள் மற்றும் அனைத்து அறங்களையும் கொண்ட நாங்கள், ஓ! மன்னா {யயாதி}, உமது மகளின் {மாதவியின்} மகன்களாவோம் {தௌஹித்ரர்களாவோம் - மகள்வழிப் பேரன்களாவோம்}. (எங்கள் நற்செயல்களின் புண்ணியத்தால்) நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக" என்றனர்.


Tuesday, July 08, 2014

நம் ஐவரில் சிறந்தவன் சிபியே! - வனபர்வம் பகுதி 197

Sivi is the best among the five of us! | Vana Parva - Section 197 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

அஷ்டகன் முதலிய மன்னர்களில் தானத்தில் சிறந்தவன் யார் என்று நாரதர் சொன்னதை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொல்லியது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} மீண்டும் மார்க்கண்டேயரிடம், "மன்னர்களில் பெரும் நற்பேறு பெற்றவர்களைக் குறித்து மீண்டும் எங்களுக்குச் சொல்லும்" என்று கேட்டான். அதற்கு மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "விஸ்வாமித்திர குல மன்னன் அஷ்டகனின் குதிரை வேள்விக்குப் பல மன்னர்கள் வந்திருந்தனர். அவ்வேள்விக்கு அம்மன்னனின் {அஷ்டகனின்} மூன்று சகோதரர்களான பிரதர்த்தனன், வசுமனஸ் மற்றும் உசீனரனின் மகனான சிபியும் வந்திருந்தனர். வேள்வி முடிந்ததும் அஷ்டகன் தனது சகோதரர்களுடன் தேரில் சென்று கொண்டிருந்தபோது, வழியில் நாரதைக் கண்டு, அந்தத் தெய்வீக முனிவரிடம் {நாரதரிடம்}, "தேரில் எங்களுடன் நீரும் பயணியும்" என்றான் {அஷ்டகன்}. "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன நாரதர் தேரில் ஏறினார். அந்த மன்னர்களில் ஒருவன் அந்தப் புனிதமான தெய்வீக முனிவரான நாரதரைத் திருப்தி செய்து, "ஓ! புனிதமானவரே {நாரதரே}, நான் உம்மிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்" என்றான். அதற்கு அம்முனிவர் {நாரதர்}, "கேள்" என்றார். இப்படி அனுமதி அளிக்கப்பட்ட அம்மனிதன் {மன்னன்}, "நாங்கள் நால்வரும் நீண்ட வாழ்நாள் அருளப்பட்டு, அனைத்து அறங்களும் கொண்டவர்கள். எனவே, நிச்சயம் நாங்கள் சொர்க்கத்தில் நீண்ட நாள் வசிப்போம். இருப்பினும், எங்களில் எவர் அங்கிருந்து முதலில் விழுவர்" என்று கேட்டான்.


இப்படிக் கேட்கப்பட்ட முனிவர் {நாரதர்}, "இந்த அஷ்டகனே முதலில் இறங்குவான்" என்றார். கேள்வி கேட்டவன், "என்ன காரணத்துக்கா?" என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர் {நாரதர்}, "நான் அஷ்டகனின் வசிப்பிடத்தில் சில நாள் தங்கியிருந்தேன். அவன் (ஒரு நாள்) என்னைத் தனது தேரில் நகரத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே நான் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமாகப் பல வண்ணங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பசுக்களைக் கண்டேன். அந்தப் பசுக்களைக் கண்ட நான் மன்னன் அஷ்டகனிடம், "இவை யாருடையவை" என்று கேட்டேன். அதற்கு அஷ்டகன், "நானே இப்பசுக்களைத் தானமாகக் கொடுத்தேன்" என்றான். இந்தப் பதிலால் தனது தற்பெருமையை அவன் வெளிப்படுத்தினான். இந்தப் பதிலுக்காகவே "அஷ்டகன் இறங்குவான்" என்றார்.

இப்படி நாரதர் சொன்னதும், அவர்களில் ஒருவன் மீண்டும், "எங்களில் மூவர் சொர்க்கத்தில் தங்கியிருப்போம். எங்கள் மூவரில் யார் முதலில் கீழே இறங்குவான்?" என்று கேட்டான். அதற்கு முனிவர் {நாரதர்}, "பிரதர்த்தனன்" என்றார். விசாரிப்பவன், "என்ன காரணத்திற்காக?" என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர் {நாரதர்}, "நான் சில நாட்கள் பிரதர்த்தனன் வசிப்பிடத்திலும் வாழ்ந்தேன். அவன் ஒருநாள் என்னை அவனது தேரில் அழைத்துச் சென்றான். அப்படிப் போகும்போது ஒரு அந்தணர் அவனிடம் {பிரதர்த்தனனிடம்}, "ஒரு குதிரையைக் கொடு!" என்று கேட்டார். அதற்குப் பிரதர்த்தனன், "{சென்று} திரும்பியதும், நான் உமக்கு ஒன்றைக் {ஒரு குதிரையைக்} கொடுக்கிறேன்" என்றான். அதற்கு அந்த அந்தணர், "அது எனக்கு விரைவாகக் கொடுக்கப்படட்டும்" என்றார். அந்த அந்தணர் இவ்வார்த்தைகளைப் பேசிய பிறகு, அம்மன்னன் {பிரதர்த்தனன்}, தேரின் வலது சக்கரத்தில் கட்டப்பட்டிருந்த குதிரையை அவருக்குக் கொடுத்தான். பிறகு குதிரை பெற விரும்பி மற்றொரு அந்தணரும் அங்கே வந்தார். முன்பு போலவே பேசிய மன்னன், அவருக்கு இடது சக்கரத்தில் கட்டப்பட்டிருந்த குதிரையைக் கொடுத்தான். அந்தக் குதிரையை அவருக்குக் {அந்த அந்தணருக்குக்} கொடுத்த மன்னன் தனது பயணத்தைத் தொடர்ந்தான். அப்போது அங்கே மற்றொரு அந்தணர் குதிரை பெற விரும்பி வந்தார். மன்னன் உடனே தனது தேரின் முன்னணியில் இடதுபுறத்தில் இருந்த குதிரையைக் கழற்றிக் கொடுத்தான். அப்படிச் செய்த பிறகு மன்னன் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தான். அப்போது அங்கே மற்றொரு அந்தணர் குதிரை பெற விரும்பி வந்தார். மன்னன் அவரிடம், "{சென்று} திரும்பியதும், நான் உமக்கு ஒரு குதிரையைக் கொடுக்கிறேன்" என்றான். ஆனால் அந்த அந்தணர், "குதிரை எனக்கு விரைவாகக் கொடுக்கப்படட்டும்" என்றார். பிறகு மன்னன், தான் வைத்திருந்த ஒரு குதிரையை அவருக்குக் கொடுத்தான். பிறகு, தேரின் நுகத்தடியைத் தானே பற்றி, அம்மன்னன் இழுக்க ஆரம்பித்தான். அப்படி அவன் செய்த போது, அவன் {பிரதர்த்தனன்}, "இப்போது, அந்தணர்களுக்கு எதுவுமில்லை" என்றான். மன்னன் {அனைத்தையும்} தானம் செய்துவிட்டான், அது உண்மையே, இருப்பினும், அவற்றைக் கறையுடனே {அசூயையுடனே} செய்தான். அந்தப் பேச்சுக்காகவே, அவன் சொர்க்கத்தில் இருந்து விழ வேண்டியதிருக்கும்" என்றார் {நாரதர்}.

முனிவர் {நாரதர்} சொன்னதும், மீதம் இருந்த இருவரில் ஒருவர், "எங்கள் இருவரில் யார் விழுவார்?" என்று கேட்டான். அதற்கு முனிவர் {நாரதர்}, "வசுமனஸ்" என்றார். விசாரித்தவன், "என்ன காரணத்திற்காக?" என்று கேட்டான். அதற்கு நாரதர், "எனது பயணங்களின் போது ஒரு சமயம், நான் வசுமனசின் வசிப்பிடத்திற்குச் சென்றேன். அப்போது அங்கே மலர்நிறைந்த ரதத்திற்கான ஸ்வாதிவாசனம் என்ற சடங்கை அந்தணர்கள் செய்து கொண்டிருந்தார்கள்1. நான் மன்னனை அணுகினேன். அந்தணர்கள் சடங்கை முடித்து, மலர்நிறைந்த ரதம் அவர்களுக்குக் காட்சி அளித்தது. நான் அந்த ரதத்தைப் புகழ்ந்தேன். அதன் காரணமாக மன்னன் {வசுமனஸ்} என்னிடம், "புனிதமானவரே {நாரதரே}, உம்மால் இந்த ரதம் புகழப்பட்டது. எனவே, இந்த ரதம் உமதாகட்டும்" என்று சொன்னான். அதற்குப் பிறகு நான், எனக்கு {மலர்} ரதத்தின் தேவையிருந்த போது, மற்றொரு முறை வசுமனசிடம் சென்றேன். நான் அந்த ரதத்தைப் பாராட்டினேன். மன்னன் {வசுமனஸ்} "இது உமதே" என்றான். நான் மூன்றாம் முறையாக மன்னனிடம் {வசுமனசிடம்} சென்று, அந்த ரதத்தை மீண்டும் பாராட்டினேன். மன்னன் அந்த மலர் ரதத்தை அந்தணர்கள் முன் காட்சிப் படுத்திய பிறகு, கண்களை என்னிடம் திருப்பி, "ஓ! புனிதமானவரே {நாரதரே}, நீர் போதுமான அளவு மலர் ரதத்தைப் புகழ்ந்துவிட்டீர்" என்றான். இவ்வார்த்தைகளை மட்டும் சொன்ன மன்னன், எனக்கு அந்த ரதத்தைப் பரிசளிக்கவில்லை. இதற்காகவே அவன் {வசுமனஸ்} சொர்க்கத்தில் இருந்து விழுவான்" என்றார் {நாரதர்}.

மேலும் அவர்களில் {அஷ்டகன், பிரதர்த்தனன், வசுமனஸ், சிபி ஆகிய நால்வரில்} ஒருவன், "உம்முடன் வரப்போகும் ஒருவனோடு சேர்த்துப் பார்த்தால், உங்களில் யார் செல்வார்கள், யார் விழுவார்கள்?" என்று கேட்டன். அதற்கு நாரதர், "சிபி செல்வான், ஆனால் நான் விழுவேன்" என்றார். "என்ன காரணத்திற்காக?" என்று கேட்டான், விசாரித்தவன். அதற்கு நாரதர், "நான் சிபிக்கு சமமானவன் கிடையாது. ஒருநாள் ஒரு அந்தணர் சிபியிடம் வந்து, "ஓ சிபியே, நான் உன்னிடம் உணவுக்காக வந்திருக்கிறேன்" என்று சொன்னார். அதற்குச் சிபி, "நான் என்ன செய்ய வேண்டும்? உமது கட்டளைகளை நான் பெறுவேன்" என்றான். அதற்கு அந்த அந்தணர், "பிருகதகர்ப்பன் என்ற பெயர் கொண்ட இந்த உனது மகன் கொல்லப்பட வேண்டும். ஓ! மன்னா {சிபியே}, இவனையே எனது உணவாகச் சமைப்பாயாக" என்றார். இதைக் கேட்டதும், அடுத்த என்ன நடக்கும் என்று காண நான் காத்திருந்தேன். சிபி தனது மகனைக் {பிருகதகர்ப்பனைக்}  கொன்று, அவனை முறையாகச் சமைத்து, அந்த உணவைப் பாத்திரத்தில் வைத்து, அதைத் தனது தலையில் சுமந்தபடி, அந்த அந்தணரைத் தேடிச் சென்றான். அந்த அந்தணரை சிபி தேடிக் கொண்டிருந்த போது, யாரோ ஒருவன், "நீர் தேடிக் கொண்டிருக்கும் அந்தணர், நகரத்துக்குள் நுழைந்து உமது வீட்டை நெருப்பிட்டு கொளுத்துகிறார். மேலும் அவர் கோபத்துடன் உமது கருவூலத்திற்கும், ஆயுதக் கிடங்கிற்கும், அந்தப்புரத்திற்கும், குதிரை லாயத்திற்கும் மற்றும் யானைக்கொட்டத்திற்கும் நெருப்பிட்டு அவற்றைக் கொளுத்துகிறார்" என்றான்.

நிறம் மாறாமல் இவையாவையும் சிபி கேட்டான், பிறகு நகரத்துக்குள் நுழைந்து அவ்வந்தணரிடம், "ஓ! புனிதமானவரே, உணவு சமைக்கப்பட்டுவிட்டது" என்றான். இதைக் கேட்ட அந்தணர் ஒருவார்த்தையும் பேசாமல், ஆச்சரியமடைந்து தாழ்ந்த பார்வையுடன் நின்றார் {தலை குனிந்து நின்றார்}. சிபி அந்த அந்தணரைத் திருப்தி செய்யும் நோக்குடன், "ஓ! புனிதமானவரே, இதை உண்ணும்" என்றான். அந்த அந்தணர், சிபியை ஒருக்கணம் பார்த்துவிட்டு, "நீயே அதை உண்பாயாக" என்றார். அதற்குச் சிபி, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, மகிழ்ச்சியுடம் தனது தலையில் இருந்த பாத்திரத்தை எடுத்து, அதை உண்ண விரும்பினான். அப்போது அந்த அந்தணர், சிபியின் கரங்களைப் பற்றி, அவனிடம் {மன்னன் சிபியிடம்}, "நீ கோபத்தை வென்றாய். அந்தணர்களுக்கு நீ கொடுக்க இயலாதது எதுவும் இல்லை" என்றார்.

இதைச் சொன்ன அந்த அந்தணர் சிபியைப் புகழ்ந்தார். சிபி அவரை நோக்கிய போது, அவன் {சிபி} தனது மகன் {பிருகதகர்ப்பன்} தேவர்களின் பிள்ளையைப் போல, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, உடலில் நறுமணத்துடன் நிற்பதைக் கண்டான். இதையெல்லாம் செய்த அந்த அந்தணர், தன்னைக் காட்சிப்படுத்தினார். அந்த அரசமுனியை {சிபியை} சோதிப்பதற்காக விதத்திரியே அந்த மாற்றுருவில் வந்திருந்தான். பிறகு அந்த விதத்திரி மறைந்தவுடன், அவனின் {சிபியின்} ஆலோசகர்கள் அம்மன்னனிடம் {சிபியிடம்}, "நீர் அனைத்தையும் அறிந்தவர். இவையாவற்றையும் நீர் எதற்காகச் செய்தீர்?" என்று கேட்டனர். அதற்குச் சிபி, "புகழுக்காகவோ, செல்வத்திற்காகவோ, இன்ப நுகர் பொருட்களை அடைய விரும்பியோ நான் இவையாவற்றையும் செய்யவில்லை. இது பாவத்தின் வழி கிடையாது. இதற்காகவே நான் இவையாவற்றையும் செய்தேன். அறம்சார்ந்தவர்கள் சுவடு பதிக்கும் பாதை புகழத்தக்கது. எனது இதயம் எப்போதும் அது போன்ற வழிகளுக்கே மேல்நோக்கிச் செல்லும்" என்றான். சிபியின் உயர்ந்த அருள் நிலையை நான் அறிவேன். எனவே, நான் அதை உரிய முறையில் விவரித்தேன்" என்றார் {நாரதர்}. 


1. ஸ்வாதிவாசனம் என்பது வரவிருக்கும் சடங்கில், அந்தணர்கள், தேவர்களின் அருளைப் பெறுவதற்காக, கொதிக்க வைக்கப்பட்ட அரிசியை [சோற்றை] தரையில் தூவி ஜபிப்பதாகும். மலர்ரதம் [புஷ்பவாகனம்] என்பது, ஆடம்பர சடங்குகள் செய்து சொர்க்கத்தில் இருந்து பெறப்படும் தெய்வீக ரதமாகும். இவை சில நேரங்களில் மக்கள் பார்வையிலும் செய்யப்பட்டன. அதற்கு [ரதத்தைக் காட்டுவதற்கு] முன்புதான் சுவாதிவாசனம் என்ற சடங்கு செய்யப்படும்.

குறிப்பு: சிபி சக்கரவர்த்தி எழுப்பிய கோயிலான திருச்சி அருகில் உள்ள திருவெள்ளறை பற்றி சிறு குறிப்பு:
திருச்சி - துறையூர் சாலையில் அமைந்துள்ளது திருவெள்ளறை. திருச்சியிலிருந்து 20 கிலோமீட்டர். ஆலயத்துக்கு அருகிலேயே நிற்கின்றன பேருந்துகள். கோயில் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறை மீது அமைந்துள்ளதால் திருவெள்ளறை.

மூலவர் - புண்டரீகாட்சன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். 
உற்சவர் - செந்தாமரைக்கண்ணன். 
தாயார் - பங்கயச் செல்வி, செண்பகவல்லி. 
தல மரம் - வில்வம். 
பொய்கை - மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்மப் பொய்கை. 
பாடியவர்கள் - திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார்.

தலத்தின் பண்டைய பெயர்கள் - ஆதி திருவெள்ளறை, வேதகிரி. 

தலவரலாறு: புறாவுக்குத் தன் தொடையைக் கொடையாகத் தந்த சிபிச் சக்கரவர்த்தி ஆண்ட காலம். இந்தியாவின் தென்பகுதியில் அரக்கர்கள் தொல்லை அதிகமாக, அவர்களை அழிக்கச் சிபிசக்கரவர்த்தி புறப்படுகிறான். எதிரில் பன்றி ஒரு தோன்றித் தடங்கல் ஏற்படுத்தியது. படைவீரர்களால் பன்றியைப் பிடிக்க இயலவில்லை. சக்கரவர்த்தியே பிடிக்க முயலுகிறான். பன்றி இங்குள்ள மலையில் மறைந்து கொள்கிறது. 

மலையைச் சுற்றிவரும் சிபி, இங்குள்ள ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுந்தவம் இருப்பதைக் கண்டு அவரிடம் நடந்ததைக் கூறினான். அவர், “நீ மிகவும் பேறு பெற்றவன். நாராயணனைக் காணத்தான் நான் தவம் இருக்கிறேன். ஆனால், அவன் உனக்கு வராக (பன்றி) உருவில் காட்சி தந்திருக்கிறான். பன்றி ஒளிந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய்” என்கிறார். மன்னனும் அவ்வண்ணமே செய்ய, திருமால் அனைவருக்கும் காட்சியளிக்கிறார். 

முனிவர் “உனக்கு தரிசனம் தந்த பெருமாளுக்கு இங்கே ஓர் ஆலயம் எழுப்புக” என்கிறார். மன்னனும் ஆலயத் திருப்பணிக்காக 3,700 குடும்பங்களை அழைத்து வருகிறான். அதில் ஒருவர் இறந்துவிடப் பெருமாளே 3700 ல் ஒருவராக வந்து மன்னனின் கணக்கை நேர் செய்கிறார். 

தலத்தின் சிறப்புகள்!

திருவரங்கத்தைவிடப் பழமையான திருத்தலம் என்பதால் ஆதித் திருவெள்ளரை எனப்படுகிறது.

பெருமாளைத் தரிசிக்க 18 படிகள் கடக்க வேண்டும். இவை பகவத் கீதையின் 18 அத்தியாயங்களைக் குறிப்பது. அடுத்த கோபுர வாயிலில் உள்ள நான்கு படிகள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. பலிபீடத்துக்கு அடுத்துள்ள ஐந்து படிகள் பஞ்சபூதங்கள். 

செந்தாமரைக் கணணனைத் தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளன. உத்தராயணம் (தை முதல் ஆனி வரை திறந்திருக்கும்.) தட்சணாயணம் (ஆடி முதல் மார்கழி வரை!)

இரவில் நேரம் கழித்து வந்த பெருமாளைத் தாயார் ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்ட நாழி கேட்டான் வாசல் உண்டு!

கற்தூண்களும், சுதைச் சிற்பங்களும் சிறப்பானவை!

திருமங்கை ஆழ்வார் மற்றும் பெரியார்வார் இந்தப் பெருமாளைக் குறித்துப் பாடியவை மொத்தம் 24 பாடல்கள். 


பெரியாழ்வாரின் பிள்ளைத்தமிழ்!
 

கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த
பிள்ளையரசே. நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளிஉடை வெள்ளறை நின்றாய்.
பள்ளி கொள் போது இதுவாகும் பரமனே. காப்பிடவாராய்.
 

துளக்கமில் சுடரை அவுணனுடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே. 

திருமங்கை ஆழ்வார்.
 




இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்