Showing posts with label கருடன். Show all posts
Showing posts with label கருடன். Show all posts

Thursday, February 11, 2021

நாகவேள்வி - மென்னட்டை அச்சுநூல் (Paperback)

Nagavelvi

மையக் கதையான பாண்ட கௌரவப் போருடன் சேர்த்து மஹாபாரதத்தில் ஏராளமான கிளைக்கதைகளும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான கதைகளைத் தனி நூல்களாகக் கொண்டு வரும் விருப்பத்தின் காரணமாக, "நாக வேள்வி" என்ற இந்த முதல் புத்தகம் வெளிவருகிறது. அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறேன்.

Sunday, June 25, 2017

கருடனும்! அமுதமும்!! (கிண்டில் பதிப்பு)


கருடனும்!அமுதமும்!! - ₹.56.00
மஹாபாரதத்தின் ஆதிபர்வ உபபர்வமான ஆஸ்தீக பர்வத்தில் வரும் இந்தக் கதையைக் கேட்பவனும், படிப்பவனும், உரைப்பவனும் நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள். கருடனின் அருஞ்செயல்களை ஒப்பிப்பவன் பெறற்கரிய நற்பேறுகளைப் பெறுவான் என்று இந்தக் கதையின் முடிவில் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

Saturday, June 06, 2015

கடனைத் தீர்த்த காலவர்! - உத்யோக பர்வம் பகுதி 119

Galava payed his debt! | Udyoga Parva - Section 119 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –48)

பதிவின் சுருக்கம் : காலவரைக் கண்ட கருடன், மேலும் இருநூறு குதிரைகளை அடைய முயற்சிக்க வேண்டாம் என்று தடுத்தது; குதிரைகள் ஏன் கிடைக்காது என்பதற்கு ஒரு பழங்காலக் கதையைக் கருடன் சொன்னது; காலவர் மாதவியை விஸ்வாமித்ரருக்கு அளிப்பது; விஸ்வாமித்ரர் மாதவியிடம் அஷ்டகனைப் பெறுவது; கடன் தீர்ந்த காலவர் மாதவியை அவளது தந்தையிடம் திரும்ப ஒப்படைப்பது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "காலவரைக் கண்ட வினதையின் மகன் {கருடன்} புன்னகையுடன் அவரிடம் {காலவரிடம்}, "ஓ! அந்தணா, நற்பேறாலேயே, நான் உன்னை வெற்றிகரமானவனாகக் காண்கிறேன்" என்றான். எனினும், கருடன் பேசிய வார்த்தைகளைக் கேட்ட காலவர், காரியத்தின் நான்காவது பகுதி இன்னும் நிறைவேறாமல் இருப்பதை அவனுக்கு {கருடனுகுச்} சுட்டிக் காட்டினார்.

பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையான கருடன், காலவரிடம், "(மீதம் உள்ள இருநூறு குதிரைகளை அடைய) எந்த முயற்சியும் செய்யாதே. ஏனெனில் அதில் நீ வெல்ல மாட்டாய். பழங்காலத்தில், கான்யகுப்ஜ நாட்டில் காதியின் மகளாகிய சத்தியவதியைத் தனது மனைவியாக்கிக் கொள்ள {விரும்பிய} ரிசீகர் {தனது விருப்பத்தைக் காதியிடம்} கேட்டார். ஓ! காலவா, அதன் பேரில், காதி அந்த முனிவரிடம் {ரிசீகரிடம்}, "ஓ! புனிதமானவரே {ரிசீகரே}, சந்திரப் பிரகாசம் கொண்டவையும், ஒரு காதில் கருப்பு நிறம் கொண்டவையுமான ஆயிரம் குதிரைகள் எனக்கு {சுல்கமாக} வழங்கப்படட்டும்" என்று கேட்டான் {காதி}. இப்படிக் கேட்கப்பட்ட ரிசீகர் {காதியிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார். பிறகு வருணனின் உறைவிடத்தில் உள்ள மாபெரும் குதிரைகள் அங்காடிக்குச் (அஸ்வதீர்த்தத்திற்குச்) சென்ற அந்த முனிவர் {ரிசீகர்}, அவன் {காதி} கேட்டதை அடைந்து, அவற்றை அந்த மன்னனிடம் {காதியிடம்} கொடுத்தார்.



புண்டரீகம் என்ற பெயர் கொண்ட வேள்வி ஒன்றை நடத்திய அந்த ஏகாதிபதி {காதி}, அக்குதிரைகளை (தக்ஷிணையாக) அந்தணர்களுக்குக் கொடுத்துவிட்டான். நீ ஏற்கனவே கோரிக்கை வைத்த அந்த மூன்று மன்னர்கள் ஒவ்வொருவரும், ஆளுக்கு இருநூறு {200} குதிரைகளை அந்த அந்தணர்களிடம் இருந்து கொள்முதல் செய்தார்கள். ஓ! அந்தணர்களில் சிறந்தவனே {காலவா}, மீதம் நானூறும் {400-நானூறு குதிரைகளும்}, ஆற்றைக் கடக்கும்போது விதஸ்தையால் [1] எடுத்துக் கொள்ளப்பட்டன.

[1] //இந்தச் சுலோகத்தின் பிற்பாதி பலவாறாகப் படிக்கப்படுகிறது. "நியாமனனி சந்தரே ஹ்ருதன்யாசன் விதஸ்தயா {Niyamanani Santare Hritanyasan Vitastaya}" என்பதே சரியான உரை என எனக்குத் தோன்றுகிறது. "கடந்து சென்ற போது, விதஸ்தை (நதியால்) இழுத்துக் கொள்ளப்பட்டன" என்பதே அதன் பொருளாகும். விதஸ்தை, பஞ்சாபின் ஐந்து நதிகளில் ஒன்றாகும்.// என்கிறார் கங்குலி.

எனவே, ஓ! காலவா, பெறமுடியாத ஒன்றை, உன்னால் பெற முடியாது. ஓ! அறம்சார்ந்தவனே {காலவா}, நீ ஏற்கனவே அடைந்திருக்கும் அறுநூறு {600} குதிரைகளையும், மேலும், இருநூறு {200} குதிரைகளுக்கு இணையாக இந்தக் கன்னிகையையும் விஸ்வாமித்ரருக்குக் கொடுத்துவிடு. ஓ! அந்தணர்களில் சிறந்தவனே {காலவா}, பிறகு நீ துன்பத்தில் இருந்து விடுபட்டு வெற்றியால் மகுடம் சூட்டப்படுவாய்" என்றான் {கருடன்}.

பிறகு காலவர், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, குதிரைகளையும், அந்தக் கன்னிகையையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, கருடனையும் தனது துணைக்கு அழைத்துக் கொண்டு விஸ்வாமித்ரரிடம் சென்றார். அவரது {விஸ்வாமித்ரரின்} முன்னிலைக்கு வந்த காலவர், "நீர் கோரிய வகையில் அறுநூறு {600} குதிரைகள் இங்கு இருக்கின்றன. மீதம் உள்ள இருநூறுக்காக {200} இந்தக் கன்னிகையை நான் காணிக்கையாக்குகிறேன். இவை அனைத்தும் உம்மால் ஏற்கப்படட்டும். இந்தக் கன்னிகையிடம் மூன்று அரச முனிகள் அறம்சார்ந்த மகன்கள் மூவரைப் பெற்றிருக்கிறார்கள். நான்காவதும், அனைவருக்கும் முதன்மையானவனுமான மகனை நீர் இவளிடம் பெறுவீராக. இப்படியே எண்ணூறு {800} குதிரைகள் என்ற எண்ணிக்கை நிறைவடைந்ததாக உம்மால் கருதப்படட்டும். நானும் கடனில் இருந்து விடுபட்டு, நான் விரும்பும் தவ நோன்புகளைப் பயிலச் செல்ல அனுமதிப்பீராக" என்றார் {காலவர்}.

அந்தப் பறவை {கருடன்} மற்றும் உயர்ந்த அழகுடைய கன்னிகை {மாதவி} ஆகியோரின் துணையுடன் இருக்கும் காலவரைக் கண்ட விஸ்வாமித்ரர், "ஓ! காலவா, நீ ஏன் முன்பே இந்த மங்கையை எனக்குக் கொடுக்கவில்லை? எனது குலத்தை விருத்திச் செய்யும் நான்கு மகன்கள் எனக்கு மட்டுமே இருந்திருப்பார்களே. இவளிடம் ஒரு மகனைப் பெறுவதற்காக நான் இந்த உனது கன்னிகையை {மாதவியை} ஏற்கிறேன். குதிரைகளைப் பொறுத்தவரை, அவற்றை எனது துறவில்லத்தில் {ஆசிரமத்தில்} மேய விடுவாயாக" என்றார் {விஸ்வாமித்ரர்}.

இதைச் சொன்ன பெரும் காந்திபடைத்த விஸ்வாமித்ரர் அவளுடன் {மாதவியுடன்} தனது நேரத்தை இன்பமாகக் கழிக்கத் தொடங்கினார். மாதவி, அஷ்டகன் என்ற பெயரில் அவருக்கு {விஸ்வாமித்திரருக்கு} ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். அந்த மகன் பிறந்ததும், பெரும் முனிவரான விஸ்வாமித்ரர் அறம் பொருள் ஆகிய இரண்டையும் உரைத்து, அறுநூறு {600} குதிரைகளையும் அவனிடமே {அஷ்டகனிடமே} கொடுத்தார்.

பிறகு, சோமனின் {சந்திரனின்} நகரத்தைப் போன்ற பிரகாசமிக்க நகரத்திற்கு அஷ்டகன் சென்றான். குசிகரின் மகனான விஸ்வாமித்ரர் அந்தக் காரிகையைத் {மாதவியைத்} தனது சீடனிடம் {காலவரிடம்} ஒப்படைத்துவிட்டு, காட்டுக்குச் சென்றுவிட்டார். தனது ஆசான் கோரிய கட்டணத்தைக் கொடுப்பதில் வென்ற காலவரும், அவரது நண்பனான சுபர்ணனுடன் {கருடனுடன்} சேர்ந்து மகிழ்ச்சிகரமான இதயத்துடன் அந்தக் கன்னிகையிடம் {மாதவியிடம்}, "மிகுந்த ஈகை குணம் உள்ள ஒருவனையும், மிகுந்த வீரம் கொண்டவன் ஒருவனையும், உண்மைக்கும், நீதிக்கும் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஒருவனையும், பெரும் வேள்விகளைச் செய்யும் ஒருவனையும் நீ மகன்களாகப் பெற்றாய். ஓ! அழகிய கன்னிகையே {மாதவி}, நீ இந்த மகன்களால், உனது தந்தையை மட்டுமல்ல, நான்கு மன்னர்களையும், என்னையும் காத்திருக்கிறாய். ஓ! கொடியிடையாளே, இப்போது நீ செல்லலாம்" என்றார். இதைச் சொன்ன காலவர், பாம்புகளை உண்ணும் கருடனுக்கு விடைகொடுத்தனுப்பி, அந்தக் கன்னிகையை {மாதவியை} அவளது தந்தையிடம் {யயாதியிடம்} ஒப்படைத்துவிட்டு காட்டுச் சென்றுவிட்டார்" என்றார் {நாரதர்}.

Wednesday, May 27, 2015

யயாதியைச் சந்தித்த கருடனும் காலவரும்! - உத்யோக பர்வம் பகுதி 114

Garuda and Galava met Yayati | Udyoga Parva - Section 114 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –43)

பதிவின் சுருக்கம் : கருடன் தனது நண்பனான யயாதி குறித்துக் காலவரிடம் சொன்னது; காலவரை  யயாதியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்து, காலவர் கேட்கும் குதிரைகளைத் தானமாகக் கொடுக்கும்படி யயாதியிடம் கேட்டது....

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "பிறகு, சிறகு படைத்த உயிரினங்களில் முதன்மையானவனான கருடன், உற்சாகமற்றிருந்த காலவரிடம், "பூமிக்கடியில் அக்னியினால் உண்டாக்கப்பட்டு, வாயுவினால் சோதிக்கப்படுவதாலும், பூமியே ஹிரண்மயமாயிருக்கிறது என்று சொல்லப்படுவதாலும், அந்தச் செல்வம் {தங்கம்} ஹிரண்யம் என்று அழைக்கப்படுகிறது. அந்தச் செல்வமே {தங்கமே} உலகத்தைத் தாங்கி வாழ்வை நிலைக்க வைக்கிறது. எனவே, அது தனம் என்று அழைக்கப்படுகிறது.


இத்தனை சேவைகளுக்காகவே அந்தத் தனம் {செல்வம்}, ஆதியில் இருந்து மூவுலகிலும் நிலைத்திருக்கிறது. குபேரனின் கையிருப்பை அதிகரிக்கும்பொருட்டு, பூரட்டாதியும் உத்திரட்டாதியும் கூடிய வெள்ளிக்கிழமையில் அக்னி தனது விருப்பத்தின் ஆணையால் செல்வத்தை உண்டாக்கி மனிதர்களிடம் அளித்தான். பூமிக்கடியில் இருக்கும் அந்தச் செல்வம் அஜைகபாதர்கள் மற்றும் அஹிர்ப்புதனியர் என்று அழைக்கப்படும் தேவர்களாலும், குபேரனாலும் காக்கப்படுகிறது. எனவே, ஓ! அந்தணர்களில் காளையே {காலவா}, அடைவதற்கு அரிதான அது மிக அரிதாகவே அடையப்படுகிறது. செல்வமில்லாமல், நீ வாக்குறுதியளித்திருக்கும் குதிரைகளை அடைவது இயலாது. எனவே, அரச முனிவர்களின் குலத்தில் பிறந்திருப்பவனும், தனது குடிமக்களை ஒடுக்காதவனுமான ஏதாவது ஒரு மன்னனிடம் {செல்வத்தை} இரந்து கேட்டு நமது நோக்கத்தில் வெற்றியடைவாயாக.

சந்திர குலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் எனது நண்பனாக இருக்கிறான். நாம் அவனிடம் செல்வோம். ஏனெனில், பூமியில் உள்ளோர் அனைவரை விடவும், அவனே பெரும் செல்வத்தைக் கொண்டிருக்கிறான். அந்த அரச முனி யயாதி என்ற பெயரால் அறியப்படுகிறான். அவன் நகுஷனின் மகனுமாவான். அவனது ஆற்றல் கலங்கடிக்கப்பட முடியாததாக இருக்கிறது. நேரடியாக நீ கேட்டு, நானும் அதை நிர்பந்தித்தால், நாம் கேட்பதை அவன் {யயாதி} கொடுப்பான். ஏனெனில், பொக்கிஷத்தலைவனான குபேரன் கொண்டுள்ளதற்கு நிகரான அளவு அபரிமிதமான செல்வத்தை அவன் {யயாதி} கொண்டிருக்கிறான். ஓ! கற்றவனே, இப்படியே கொடையை ஏற்று, உனது ஆசானின் கடனை அடைப்பாயாக" என்றான் {கருடன்}.

இப்படியே பேசிக்கொண்டு, என்ன செய்யப்பட வேண்டும் என்பதைச் சிந்தித்த கருடனும் காலவனும், பிரதிஷ்டானம் என்று அழைக்கப்படும் தனது தலைநகரில் இருந்த மன்னன் யயாதியிடம் சேர்ந்தே சென்றனர். விருந்தோம்பலுடன் அவர்களை வரவேற்ற அந்த மன்னன் {யயாதி} அவர்களுக்கு அற்புதமான ஆர்கியாவையும், அவர்களது பாதங்களைக் கழுவி கொள்ள நீரையும் கொடுத்தான். பிறகு அந்த மன்னன் அவர்கள் வந்த காரணத்தைக் கேட்டான்.

அதன்பேரில் கருடன், "ஓ! நகுஷனின் மகனே {யயாதி}, காலவன் என்று அழைக்கப்படும் இந்தத் தவக்கடல் எனது நண்பனாவான். ஓ! ஏகாதிபதி, இவன் {காலவன்} விஸ்வாமித்ரரிடம் பல்லாயிரம் வருடங்களாகச் சீடனாக இருந்தான். இந்தப் புனித அந்தணன் {காலவன்}, தான் செல்ல விரும்பும் இடத்திற்கு விடைகொடுத்து விஸ்வாமித்ரரால் அனுப்பப்பட்ட போதும், அந்நேரத்தில் தனது ஆசானிடம், தனது குருதட்சணையைக் கொடுத்துவிட்டுச் செல்வதாகச் சொன்னான்.

இவனது  ஏழ்மையை அறிந்து கொண்ட விஸ்வாமித்ரர் இவனிடம் {காலவனிடம்} எதையும் கேட்கவில்லை. ஆனால் இந்த அந்தணன் {காலவன்} மீண்டும் மீண்டும் கல்விக் கட்டணத்தைக் குறித்துச் சொன்னதும், சற்றே கோபப்பட்ட அந்த ஆசான் {விஸ்வாமித்திரர்}, "நல்ல வம்சாவளியைக் கொண்டதும், சந்திரப் பிரகாசம் கொண்டதும், ஒரு காதில் மட்டும் கருப்பு நிறம் கொண்டதுமான எண்ணூறு {800} குதிரைகளை எனக்குக் கொடு. ஓ! காலவா, நீ உனது ஆசானுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், இதையே நீ கொடுப்பாயாக", என்று சொல்லிவிட்டார். இப்படியே தவத்தைச் செல்வமாகக் கொண்ட விசுவாமித்ரர் இவனிடம் கோபத்தில் சொல்லிவிட்டார்.

அதனால், இந்த அந்தணர்களில் காளை {காலவன்} பெரும் துயரத்தில் இருக்கிறான். தனது ஆசானின் {விஸ்வாமித்ரரின்} ஆணையை நிறைவேற்ற முடியாததால், இப்போது உனது பாதுகாப்பை நாடி வந்திருக்கிறான். ஓ! மனிதர்களில் புலியே {யயாதி}, அவற்றை உன்னிடம் இருந்து பிச்சையாகப் பெற்று, மீண்டும் மகிழ்ச்சியை அடைந்து, தனது ஆசானுக்குக் கொடுக்க வேண்டிய கடனை அடைத்து, தன்னை இவன் தவநோன்புகளுக்கு அர்ப்பணித்துக் கொள்வான். 

எனவே, அரச முனியாக இருக்கும் உனக்கு, தான் கொண்டிருக்கும் தவச் செல்வத்தில் ஒரு பகுதியைக் கொடுப்பதால், அவ்வகைச் செல்வத்தில் மேலும் செல்வந்தனாக இந்த அந்தணன் உன்னை ஆக்குவான். ஓ! மனிதர்களின் தலைவா, ஒரு குதிரையின் உடலில் எத்தனை மயிர்கள் இருக்கின்றனவோ, ஓ! பூமியின் ஆட்சியாளா, அவ்வளவு அருள் உலகங்களையும், ஒரு குதிரையைக் கொடுப்பவன் அடைவான். இவன் {காலவன்} உன்னிடம் கொடை பெறுவதற்குத் தகுதியுடையவன் ஆவான். எனவே, சங்குக்குள் சேகரிக்கப்பட்ட பாலைப் போல உனது கொடை இந்த நேரத்தில் அவனுக்கு அமையட்டும்" என்றான் {கருடன்}.


சாண்டிலி என்ற பெண்! - உத்யோக பர்வம் பகுதி 113

A lady called Sandili! | Udyoga Parva - Section 113 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –42)

பதிவின் சுருக்கம் : கருடனும் காலவரும் ஓய்வெடுக்க ரிஷப மலையில் இறங்குவது; அங்கே தவம் செய்யும் சாண்டிலியைக் கண்டது; சாண்டிலியின் விருந்தோம்பல்; கருடனின் சிறகுகள் பறிபோனது; தூய நடத்தையின் பெருமையைச் சாண்டிலி சொல்வது; கருடன் மீண்டும் சிறகுகளைப் பெற்றது; ரிஷப மலையில் இருந்து அவர்கள் புறப்பட்டதும், வழியில் காலவரை விஸ்வாமித்ரர் சந்தித்தது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "பிறகு ரிஷப மலையின் சிகரத்தில் இறங்கிய அந்த அந்தணரும் {காலவரும்}, அந்தப் பறவையும் {கருடனும்}, அங்கே தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சாண்டிலி என்ற அந்தணப் பெண்ணைக் கண்டனர். காலவரும், கருடனும் தங்கள் சிரம் தாழ்த்தி அவளை {சாண்டிலியை} வணங்கி வழிபட்டனர். அதன்பேரில், அந்த மங்கை அவர்களது நலன் விசாரித்து அவர்களுக்கு {அமர} இருக்கை கொடுத்தாள். உணவைச் சமைத்த அந்த மங்கை முதலில் மந்திரங்களால் அதைத் தேவர்களுக்குக் காணிக்கையாக்கினாள். இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இருவரும் {காலவரும், கருடனும்}, அந்த மங்கையால் {சாண்டிலியால்} தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அந்த உணவை உண்டனர். உணவை உண்ட பிறகு தங்களைத் தரையில் கிடத்திக் கொண்ட அவர்கள் {காலவரும், கருடனும்} இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தனர்.


விழித்ததும் அந்த இடத்தைவிட்டு செல்ல முயன்ற கருடன், தனது சிறகுகள் விழுந்துவிட்டதைக் கண்டான். உண்மையில், அவன் தலையும் கால்களும் மட்டும் உள்ள ஒரு சதைப் பிண்டம் {சதைகளால் ஆன உருண்டை} போல இருந்தான். அவனுக்கு நேர்ந்த இந்த அவலநிலையைக் கண்ட காலவர் மிகுந்த வருத்தத்துடன், "பயணம் மேற்கொண்டு இங்கே வந்ததன் விளைவாகத்தான் இந்த அவல நிலை உனக்கு வந்ததா? ஐயோ, இன்னும் எவ்வளவு காலம் நாம் இங்கே வசிக்க வேண்டியதிருக்கும்? உனது மனதில் தீமையான பாவ சிந்தனையை ஏதும் கொண்டாயா? நீ குற்றமுள்ள மனமுடன் இருப்பதால், அந்தப் பாவம் அற்பமானதாக இராது என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்" என்றார் {காலவர்}.

இப்படிச் சொல்லப்பட்ட கருடன், அந்த அந்தணரிடம் {காலவரிடம்}, "உண்மையில், ஓ! மறுபிறப்பாளனே {பிராமணனே-காலவா}, தவ வெற்றியால் மகுடம் சூட்டபட்டிருக்கும் இந்தப் பெண்மணியை இந்த இடத்தில் இருந்து, எங்கே படைப்பாளன் இருக்கிறானோ, எங்கே தெய்வீகமான மகாதேவன் {சிவன்} இருக்கிறானோ, எங்கே நித்தியமான விஷ்ணு இருக்கிறானோ, எங்கே அறமும் வேள்வியும் சேர்ந்து இருக்கிறதோ அங்கே தூக்கிச் சென்றுவிட வேண்டும் எனக்கருதினேன். ஏனெனில், இந்தப் பெண்மணி அங்கேயே வாழ வேண்டும் என நான் நினைத்தேன். இப்போது நான், எனக்கு நன்மை வேண்டி, இந்தப் புனிதமான பெண்மணியின் முன்பு நெடுஞ்சாண் கிடையாக விழுவேன், என்று சொல்லி பரிதாபம் நிறைந்த இதயத்துடன் அந்தப் பெண்மணியிடம் {சாண்டிலியிடம்}, "உண்மையில் நான் என் மனதில் இப்படியே நினைத்தேன். நான் சரியாகச் செயல்பட்டிருந்தாலும், தவறிழைத்திருந்தாலும், இதுவே எனது விருப்பமாக இருந்தது. அஃது உனது விருப்பத்திற்கு எதிரானது என்பது தெளிவு என்றாலும், உன் மீது கொண்ட மரியாதையின் நிமித்தமாகவே நான் அவ்வாறு நினைத்தேன். எனவே, உனது இதயத்தின் உன்னதத் தன்மையால் எனக்கு மன்னிப்பை அளிப்பதே உனக்குத் தகும்" என்றான் {கருடன்}.

அந்தப் பறவைகளின் இளவரசனிடமும், அந்த அந்தணர்களில் காளையிடமும் அந்தப் பெண்மணி மனநிறைவு கொண்டாள். அவள் {சாண்டிலி}, கருடனிடம், "ஓ! அழகிய இறகுகள் கொண்டவனே {கருடா}, அஞ்சாதே. உனது சிறகுகள் திரும்பும், உனது அச்சங்களை விலக்கு. உன்னால் நான் அவமதிக்கப்பட்டேன் {இகழ்வாகக் கருதப்பட்டேன்}. ஆனால், நான் இகழ்ச்சியை மன்னிப்பதில்லை என்பதை அறிந்து கொள்வாயாக. எந்தப் பாவி என்னை அவமதிப்பானோ, அவன் அருள் உலகங்கள் அனைத்தில் இருந்தும் வேகமாக விழுவான். என் மேல் எந்த ஓர் அமங்கலக் குறியும் இன்றி, முற்றிலும் பழியற்று இருக்கும் நான், எனது நடத்தையில் கொண்ட தூய்மையின் விளைவாக உயர்ந்த தவ வெற்றியை அடைந்திருக்கிறேன்.

தூய நடத்தையானது {ஆசாரமானது}, தனது கனியாக அறத்தைத் தாங்கி வருகிறது. தூய நடத்தையானது, தனது கனியாகச் செல்வத்தைத் தாங்கி வருகிறது. அந்தத் தூய நடத்தையே, செழிப்பையும் கொண்டு வருகிறது. அந்தத் தூய நடத்தையே {ஆசாரமே}, மங்கலமற்ற அனைத்து அறிகுறிகளையும் விரட்டி விடுகிறது. ஓ! பறவைகளின் அருளப்பட்ட இளவரசனே {கருடா}, இந்த இடத்தில் இருந்து நீ எங்கு விரும்புகிறாயோ அங்கே செல். என்னை இகழும் நினைப்பை ஊக்குவிக்காதே. உண்மையில் பழிக்கத்தக்க பெண்களும் இருக்கலாம். அவர்களைக் கூட நீ அவமதிக்காமல் கவனமாக இருப்பாயாக. முன்பைப் போலவே, நீ மீண்டும் பலத்தையும் சக்தியையும் பெறுவாய்" என்றாள் {சாண்டிலி}.

அந்தப் பெண்மணியின் வார்த்தைகளின் பேரில் கருடன் மீண்டும் சிறகுகளை அடைந்து, முன்பை விட அதிகப் பலவான் ஆனான். பிறகு சாண்டிலியிடம் விடைபெற்ற கருடன், காலவரை முதுகில் சுமந்த படி அங்கிருந்து {ரிஷப மலையிலிருந்து} சென்றான். ஆனால் தாங்கள் தேடி வந்த வகைக் குதிரைகளைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் தோல்வியுற்றனர். அப்போது வழியில் காலவரை விஸ்வாமித்ரர் சந்திக்க நேர்ந்தது.

வினதையின் மகன் {கருடன்} முன்னிலையிலேயே அந்தப் பேச்சாளர்களில் முதன்மையானவர் {விஸ்வாமித்ரர்}, காலவரிடம், "ஓ! மறுபிறப்பாளனே {காலவா}, நீ உன் சுயவிருப்பத்தின் படியே வாக்குறுதியளித்திருந்த செல்வத்தைக் கொடுக்க வேண்டிய நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நீ என்ன செய்வாய் என்பதை நான் அறியவில்லை. நான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். நான் இன்னும் சில காலம் காத்திருப்பேன். (வாக்குறுதி கொடுத்த காரியத்தில்) நீ வெற்றியடைத்தக்க வழியைத் தேடுவாயாக" என்றார் {விஸ்வாமித்ரர்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட கருடன், துயரத்தில் மூழ்கி உற்சாகமற்று இருந்த காலவரிடம், "உன்னிடம் விஸ்வாமித்ரர் முன்பே சொன்னதை, இப்போது என் முன்னிலையிலும் சொல்லக் கேட்டேன். எனவே, ஓ காலவா, அந்தணர்களில் சிறந்தவனே, வா, இக்காரியம் குறித்துத் தீர்மானிப்போம். (உன்னால் வாக்குறுதி அளிக்கப்பட்ட படி) உனது ஆசானுக்கு முழுச் செல்வத்தையும் அளிக்காமல், நீ அமரவும் கூடாது" என்றான் {கருடன்}.


Tuesday, May 26, 2015

"மரணமே கடவுள்!" என்ற கருடன்! - உத்யோக பர்வம் பகுதி 112

"Death is God himself!" said Garuda! | Udyoga Parva - Section 112 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –41)

பதிவின் சுருக்கம் : கிழக்கு திசையை நோக்கிச் செல்லுமாறு கருடனிடம் காலவர் கேட்டுக் கொண்டது; கருடன் தனது முதுகில் காலவரை ஏற்றிக் கொண்டது; கருடனின் வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத காலவர் அதைக் கருடனிடம் சொன்னது; ரிஷப மலையில் ஓய்ந்து போகலாம் என்று கருடன் சொன்னது...

காலவர் {கருடனிடம்} சொன்னார், "ஓ கருடா, பாம்புகளில் முதன்மையானோரைக் கொல்பவனே, ஓ! அழகிய சிறகுகள் கொண்டவனே, ஓ! வினதையின் மகனே {கருடனே}, ஓ! தார்க்கியா {தார்க்ஷயா}, தர்மத்தின் கண்கள் இரண்டும் எங்கு விழித்தனவோ, அந்தக் கிழக்குத் திசைக்கு என்னைச் சுமந்து செல்வாயாக. எங்கே தேவர்கள் எப்போதும் இருப்பார்கள் என்று நீ முதலில் சொன்னாயோ, அந்தக் கிழக்குத் திசைக்கு என்னை அழைத்துச் செல். உண்மையும், அறமும் அங்கே வசிக்கின்ற என்று நீ சொல்லியிருக்கிறாய். தேவர்கள் அனைவரையும் நான் சந்திக்க விரும்புகிறேன். எனவே, அருணனின் தம்பியே {கருடா}, நான் தேவர்களைக் காணும் வகையில் என்னை அங்கே {கிழக்குத் திசைக்கு} அழைத்துச் செல்" என்றார் {காலவர்}.


நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்ட வினதையின் மகன் {கருடன்}, அந்த அந்தணரிடம் {காலவரிடம்}, "என் முதுகில் ஏறுவாயாக" என்றான். பிறகு, காலவ முனிவர் கருடனின் முதுகில் ஏறினார்.

காலவர் {கருடனிடம்}, "ஓ! பாம்புகளை உண்பவனே {கருடா}, நீ பறந்து செல்கையில், ஆயிரம் கதிர்களைக் கொண்டவனும், நாள் படைப்பனுமான சூரியன் காலை வேளையில் இருப்பதைப் போன்ற அழகுடன் இருக்கிறாய். ஓ! விண்ணதிகாரியே {கருடா}, உனது சிறகடிப்பால் உண்டான புயல் காற்றில் மரங்களே உடைந்து உனது பாதையில் தொடரும் அளவுக்கு உனது வேகம் பெரியதாக இருக்கிறது.

ஓ! வானவாசியே {கருடா}, உனது சிறகுகளால் உண்டான புயலைக் கொண்டு கடல்களில் இருக்கும் நீர், மலைகள், காடுகளுடன் கூடிய பூமியையே இழுத்துவிடுவாய்ப் போலிருக்கிறது. உண்மையில், உனது சிறகுகளின் அசைவால் உண்டான பெருங்காற்று, மீன்கள், பாம்புகள் மற்றும் முதலைகள் நிரம்பிய கடல் நீரை ஆகாயத்தின் மத்தியப்பகுதி வரை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஒரே முகம் கொண்ட மீன்களும், மனித முகங்களைக் கொண்ட திமிகள், திமிங்கலங்கள் மற்றும் பாம்புகளும் உனது சிறகுகள் எழுப்பும் பெருங்காற்றால் நசுக்கப்படுகின்றன. அந்த ஆழ்ந்த கர்ஜனையால் எனது காதுகள் செவிடாகின்றன. எதையும் கேட்கவோ, பார்க்கவோ முடியாதபடி நான் மலைத்துப் போயிருக்கிறேன். உண்மையில், எனது சொந்த நோக்கத்தைக்கூட நான் மறந்து விட்டேன்.

ஓ! விண்ணதிகாரியே {கருடா}, ஓர் அந்தணனின் உயிர் ஆபத்தில் இருப்பதை நினைவுகூர்ந்து உனது வேகத்தைத் தளர்த்துவாயாக. ஓ! ஐயா, சூரியனையோ, திசைப்புள்ளிகளையோ, வானத்தையோ கூட என்னால் பார்க்க முடியவில்லை. என்னைச் சுற்றிலும் ஓர் அடர்த்தியான இருளையே நான் காண்கிறேன். உடலை என்னால் காண முடியவில்லை. ஓ! முட்டையிடும் இனத்தவனே {கருடா}, ஒளிமிக்க இரண்டு ரத்தினங்களைப் போல ஒளிரும் உனது கண்கள் இரண்டை மட்டுமே நான் காண்கிறேன். என்னால் உனது உடலையோ, எனது உடலையோ காண முடியவில்லை.

ஒவ்வொரு அடியிலும் உனது உடலில் இருந்து தீப்பொறி பறப்பதை நான் காண்கிறேன். இந்தத் தீப்பொறிகளை விரைவில் நிறுத்து, மேலும் உனது கண்களின் ஒளிர்வையும் நிறுத்து. ஓ! வினதையின் மகனே {கருடா}, உனது வழியில் நீ செல்லும் இந்த அபரிமித வேகத்தைத் தளர்த்துவாயாக. சந்திரப் பிரகாசத்துடனும், ஒரு காதில் கருப்பு நிறத்துடனும் கூடிய எண்ணூறு {800} குதிரைகளை எனது ஆசானுக்கு {விசுவாமித்திரருக்கு} கொடுப்பதாக நான் வாக்களித்திருக்கிறேன். ஓ! முட்டையிடும் இனத்தோனே {கருடா}, எனது வாக்குறுதியை நிறைவேற்றும் எந்த வழியையும் நான் காணவில்லை. ஆனால் ஒரு வழியை என்னால் காண முடிகிறது. அஃது எனது உயிரை விடுவதுதான். எனக்குச் சுயமாக எந்தச் செல்வமும் இல்லை, செல்வமிக்க எந்த நண்பரும் எனக்குக் கிடையாது, மேலும் அபரிமிதமான செல்வத்தாலும் எனது நோக்கத்தை அடைய துணை நிற்க முடியாது" என்றார் {காலவர்}.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இதையும் இன்னும் பிற சோகமான வார்த்தைகளையும் சொன்ன காலவரிடம், வினதையின் மகன் {கருடன்}, தனது வேகத்தைக் குறைக்காமல் சிரித்துக் கொண்டே, "ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவா {காலவா}, உனது வாழ்வுக்கு ஒரு முடிவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் உனக்குச் சிறுமதியே இருக்கிறது. ஒருவனது முயற்சியால் அவனுக்கு மரணம் ஏற்படாது. உண்மையில் மரணமே கடவுள். உனது நோக்கத்தை இதற்கு முன் நீ எனக்கு ஏன் சொல்லவில்லை? இவை அனைத்தையும் சாதிக்கப் பல அற்புத வழிகள் இருக்கின்றன. இங்கே கடலின் அருகே ரிஷபம் என்றழைக்கப்படும் ஒரு மலை இருக்கிறது. அங்கே சிறிது நேரம் நாம் ஓய்வெடுப்போம். உணவால் புத்துணர்ச்சி பெற்ற பிறகு, ஓ! காலவா மீண்டும் நான் திரும்புவேன்" என்றான் {கருடன்}.


Monday, May 25, 2015

வடதிசையை விவரித்த கருடன்! - உத்யோக பர்வம் பகுதி 111

Garuda described the north! | Udyoga Parva - Section 111 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –40)

பதிவின் சுருக்கம் : வடக்குத் திசையின் தன்மைகளையும், அங்கே முற்காலத்தில் நடைபெற்ற செயல்களையும் காலவருக்குக் கருடன் எடுத்துரைத்தது...

கருடன் {முனிவர் காலவரிடம்} சொன்னான், "ஓ! அந்தணா, ஒருவன் இங்கே முக்தி அடைவதால் இந்தத் திசை பாவத்தில் இருந்து அவனைக் காக்கிறது. இதற்காகவே இத்திசை சக்திவாய்ந்தது (உத்தாரணம் = தீங்கிலிருந்து மீட்டல் = uttarana) என்பதற்காகவே இத்திசை வடக்கு (உத்தரம்) என்று அழைக்கப்படுகிறது. ஓ! காலவா, செல்வங்கள் அனைத்தின் வசிப்பிடம் இங்கே கிழக்காகவும் மேற்காகவும் வடக்கில் நீண்டு கிடப்பதால், சில சமயங்களில் இந்த வடக்குப் பகுதி மத்திய பகுதி (மத்திமம்) என்றும் அழைக்கப்படுகிறது.


ஓ! இருபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} காளையே {காலவா}, இந்தப்பகுதியே அனைத்துக்கும் மேன்மையானது. இனிமையற்றவர்களோ, கட்டற்ற உணர்வுகள் கொண்டவர்களோ, அநீதிமிக்கவர்களோ இங்கே வாழ இயலாது. இங்கேதான், பதரி என்று அழைக்கப்படும் ஆசிரமத்தில், நாராயணனின் சுயமான கிருஷ்ணனும், மனிதர்களில் மேன்மையான ஜிஷ்ணுவும் {அர்ஜுனனும்}, (படைப்பாளனான) பிரம்மனும் நித்தியமாக வசிக்கிறார்கள். {நரன், நாராயணன், பிரம்மன் ஆகியோர் வசிக்கின்றனர்}.

இங்கே, இமயத்தின் மார்பில், யுகத்தின் முடிவில், நெருப்பு போன்ற பெரும் பிரகாசத்துடன் மகேஸ்வரன் சுடர்விட்டு எரிகிறான். புருஷனாக {காலப் புருஷனாக}, அவன் பிராக்ருதியுடன் (அண்டத்தின் தாயுடன்) விளையாடிக் கொண்டிருக்கிறான். நரன் மற்றும் நாராயணனைத் தவிர முனிவர்களின் பல்வேறு வர்க்கங்களாலோ, வாசவனைத் {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களாலோ, கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ, சித்தர்களாலோ காணமுடியாதவனாக அவன் {அந்த சிவன்} இங்கே இருக்கிறான். மாயையால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தாலும், ஆயிரம் தலைகளும், ஆயிரம் கால்களும் கொண்ட நித்தியமான விஷ்ணு மட்டுமே {நரன் மற்றும் நாராயாணனைத் தவிர்த்து} அவனைக் காண முடியும்.

இங்கேதான் மறுபிறப்பாள வகை {அந்தண வகை} முழுவதற்கும் அரசனாகச் சந்திரன் நியமிக்கப்பட்டான். ஓ! பிரம்மத்தை அறிந்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே {காலவா}, இங்கேதான் கங்கையைத் தனது தலைக்குள் முதலில் ஏற்றிய மஹாதேவன் {சிவன்}, பிறகு, (புனித ஓடையாக) சொர்க்கத்தில் இருந்து மனிதர்களின் உலகில் அவளை {கங்கையை} விழ வைத்தான். இங்கேதான் (உமா) தேவி, மகேஸ்வரனை (தனது தலைவனாக அடைய) அடையும் தனது விருப்பத்தால் கடும் தவம் செய்தாள். இந்தப் பகுதியில்தான் காமன், (சிவனின்) கோபம், இமயம், உமை ஆகிய அனைவரும் ஒன்றாகிப் பிரகாசமாக ஒளிர்ந்தனர்.

இங்கேதான், கயிலாயத்தின் மார்பில், ஓ! காலவா, ராட்சசர்கள், யக்ஷர்கள் மற்றும் கந்தர்வர்களை ஆள குபேரன் நிறுவப்பட்டான். இந்தப் பகுதியில்தான் (அந்தக் குபேரனின் நந்தவனமான) சித்திரரதம் இருக்கிறது. இங்கேதான் வைகனசர்களின் {என்ற முனிவர்களின்} ஆசிரமம் அமைந்திருக்கிறது.

ஓ! இருபிறப்பாளர்களில் காளையே {காலவா}, இங்கேதான் மந்தாகினி என்றழைக்கப்படும் தெய்வீக ஓடையும், மந்தர மலையும் காணப்படுகின்றன. ராட்சசர்களால் எப்போதும் பாதுகாக்கப்படும் சௌகந்த கனகம் என்று அழைக்கப்படும் நந்தவனம் இங்கேதான் இருக்கிறது. இங்கேதான் புசுமையான புல்லால் மூடப்பட்டிருக்கும் பல சமவெளிகளும், வாழைமரக் காடுகளும், சொதனகங்கள் என்று அழைக்கப்படும் தெய்வீக மரங்களும் இருக்கின்றன. இந்தப் பகுதியில்தான் ஓ! காலவா, தங்கள் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும், எப்போதும் விருப்பப்படி விளையாடுபவர்களுமான சித்தர்களின் வசிப்பிடங்கள் இருக்கின்றன. அவற்றில் இன்பத்திற்கான அனைத்துவிதமான பொருட்களும் நிறைந்திருக்கும்.

இங்கேதான் ஏழு முனிவர்களையும் {சப்தரிஷிகளையும்} அருந்ததியையும் காண முடியும். இங்கே தான் சுவாதி நட்சத்திரக்கூட்டத்தைக் காண முடியும். இங்கேதான் அது {சுவாதி நட்சத்திரம்} முதலில் காட்சியில் எழுகிறது {கண்ணுக்குத் தெரிகிறது}. இந்தப் பகுதியில் தான் பெரும்பாட்டனான பிரம்மன் யக்ஞத்தின் அருகில் {வேள்வி பொருந்திய வடிவில்} வசிக்கிறான். இந்தப் பகுதியில் தான் சூரியன், சந்திரன் மற்றும் பிற ஒளியுடல்கள் {நட்சத்திரங்கள், கோள்கள்} சுழல்வது தொடர்ச்சியாகக் காணப்படுகிறது.

ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, இந்தப் பகுதியில்தான், ஒப்பற்றவர்களும், உண்மை பேசுபவர்களுமான, தர்மர்கள் என்ற பெயரில் அறியப்படும் முனிவர்கள் கங்கையின் ஊற்றுக்கண்ணைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முனிவர்களின் தோற்றம், உருவத்தின் தன்மைகள், தவநோன்புகளை யாரும் அறிய மாட்டார்கள். அவர்களால் சுயமாகத் தங்கள் விருப்பத்தின் பேரில் படைக்கப்படுவதும், விருந்தோம்பலுக்காக வழங்கப்படுவதும், பரிமாறப்பட்டு, பயன்படுத்தப்படுவதுமான ஆயிரம் உணவு வகைகளின் தயாரிப்பு {அனைவருக்கும்} புதிராகவே இருக்கின்றன. ஓ! காலவா, இந்த முனிவர்களால் {தர்மர்களால்} பாதுகாக்கப்படும் இடத்தைக் கடக்க முயல்பவர்கள், ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே, அழிவார்கள் என்பது நிச்சயம். ஓ! அந்தணர்களில் காளையே {காலவா}, தெய்வீகமான நாராயணன் மற்றும் ஜிஷ்ணு என்று அழைக்கப்படும் நித்தியமான நரனைத் தவிர வேறு யாராலும் இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதியைக் கடக்க முடியாது.

ஐலவிலனின் (குபேரனின்) வசிப்பிடமான கயிலாய மலைகள் இந்தப் பகுதிகளில்தான் இருக்கின்றன. வித்யுத்பிரபைகள் என்று அறியப்படும் பத்து அப்ரசஸ்களின் தோற்றம் இங்கேதான் நிகழ்ந்தது. ஓ! அந்தணா {காலவா}, (அசுர மன்னனான) பலியின் வேள்வியில் மூன்று அடிகளால் உலகை அளந்த விஷ்ணு, இந்த வடக்குப் பகுதி முழுமையையும் அளந்தான். அதனால் இந்த இடம் விஷ்ணுபாதம் என்று அழைக்கப்படுகிறது. அச்சந்தர்ப்பத்தில் அது விஷ்ணுவின் கால்தடம் என்றும் அழைக்கப்பட்டது.

ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, இங்கே, இந்தப் பகுதியில் உள்ள உசிரவிஜம் என்று அழைக்கப்படும் இடத்தில், தங்கத் தடாகத்தின் அருகில், மன்னன் மருத்தன், ஒரு வேள்வியைச் செய்தான். இங்கேதான் இமயம் தன்னிடம் உள்ள தங்கச்சுரங்கங்களை ஒப்பற்ற மறுபிறப்பாள முனிவரான ஜிமுதருக்குத் வெளிக்காட்டியது. அந்த ஜிமுதர் அந்தச் செல்வங்கள் அனைத்தையும் அந்தணர்களுக்கே கொடுத்தார். அவற்றைக் கொடுத்த பிறகு, அந்தப் பெரும் முனிவர், அவர்கள் அனைவரிடமும், அவை {அந்தத் தங்கங்கள்} தன் பெயராலே அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதுமுதல், அந்தச் செல்வங்கள் ஜைமுத தங்கம் என்ற பெயரால் அறியப்படுகின்றன.

இங்கே, இந்தப் பகுதியில்தான், ஓ! பாரதர்களில் காளையே [1], ஓ! காலவா, தினமும் காலையிலும் மாலையிலும், லோகபாலகர்கள், "எந்த நபரின் எந்தக் காரியத்தை நாம் பார்க்கலாம்?" என்று பிரகடனம் செய்து கொள்கின்றனர். இதற்காகவும், இன்னும் பிற சம்பவங்களுக்காகவும், ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, வடக்குப் பகுதி மற்ற பகுதிகள் அனைத்தையும் விட மேன்மையானதாக இருக்கிறது. இந்தப் பகுதி அனைத்திலும் மேன்மையானது (உத்தரம்) என்பதாலேயே, இது வடக்கு (உத்தரம்) என்று அழைக்கப்படுகிறது. ஓ! ஐயா, இப்படியே நான் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து திசைகளையும் உனக்கு விவரித்துவிட்டேன். எந்தப் பகுதியை நோக்கி நீ செல்ல விரும்புகிறாய்? ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {காலவா}, பூமியின் அனைத்துப் பகுதிகளையும் உனக்குக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்" என்றான் {கருடன்}.

[1] அந்தணர் ஒருவர், பாரதர்களில் காளையே என்று அழைக்கப்படுவதை அநேகமாக இங்கேதான் காண்கிறோம் என நினைக்கிறேன்.


மேற்கை விவரித்த கருடன்! - உத்யோக பர்வம் பகுதி 110

Garuda described the west! | Udyoga Parva - Section 110 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –39)

பதிவின் சுருக்கம் : மேற்குத் திசையின் தன்மைகளையும், அங்கே முற்காலத்தில் நடைபெற்ற செயல்களையும் காலவருக்குக் கருடன் எடுத்துரைத்தது...

கருடன் {முனிவர் காலவரிடம்} தொடர்ந்தான், "இந்தத் திசை {மேற்குத் திசை}, கடலின் ஆட்சியாளனான மன்னன் வருணனுக்குப் பிடித்த திசையாகும். உண்மையில், நீர்நிலைகளின் தலைவன் {வருணன்} இங்கேதான் தோன்றினான். இங்கே தான் அவனது ஆட்சியும் நடக்கிறது. நாளின் இறுதியில் (பச்சாத்தில் [paschat) = பகலின் பின்பாகத்தில்} இத்திசையிலிருந்து சூரியன் தனது கதிர்களை வெளியிடுவதால், ஓ! இருபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே {காலவா}, இது மேற்கு (பச்சிமை) என்று அழைக்கப்படுகிறது. நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் ஆள்வதற்கும், நீர்நிலைகளின் பாதுகாப்புக்காகவும் தெய்வீகமான காசியபர் வருணனை இங்கே {இந்த மேற்கு திசையின் மன்னனாக} நிறுவினார்.


வருணனின் ஆறு சாறுகள் {சுவைகள்} அனைத்தையும் பருகுபவனும் இருளை அகற்றுபவனுமான சந்திரன், முதல் இரு வாரங்களில் {வளர்பிறையில்} அதிக இளமையுடன் வெளியே வருகிறான். ஓ! அந்தணா {காலவா}, இந்தப் பகுதியில் தான் வாயுத் தேவனால் தைத்தியர்கள் நிலைகுலையச் செய்யப்பட்டுக் கட்டப்பட்டனர். பலத்த பெரும் காற்றால் பீடிக்கப்பட்டு, (புறமுதுகிட்டு ஓடியதால்) மூச்சு வாங்கிய அவர்கள் {தைத்தியர்கள்}, இறுதியில் இந்தப் பகுதியில்தான் (விழிப்பை அறியாத தூக்கத்தில்) உறங்கினர்.

இங்கே தான் மாலை நேர சந்திப் பொழுதுக்குக் காரணமாக இருக்கும் அஸ்தம் என்று அழைக்கப்படும் மலை, சூரியனைத் (தினமும்) தன்னை நோக்கி அன்போடு வரவேற்கிறது. இந்தப் பகுதியில்தான் இரவு மற்றும் உறக்கம் ஆகிய இரண்டும், நாளின் இறுதியில் வெளிவந்து, வாழும் உயிரினங்களுக்கான வாழ்நாளைத் திருடிக் கொள்வது போல, முழுவதும் பரவி கொள்கின்றன.

இங்கேதான் சக்ரன் {இந்திரன்}, (தனது மாற்றாந்தாயான) திதி தேவி, தனது கர்ப்ப காலத்தில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அந்தக் கருவை (நாற்பத்தொன்பது துண்டுகளாக) வெட்டிப் போட்டு, அதிலிருந்து (நாற்பத்தொன்பது) மருதர்கள் {மருத்துக்கள்} எழுந்தனர். இந்தத் திசையை நோக்கித் தான் இமயத்தின் வேர்கள் (கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கும்) நித்தியமான மந்தரத்தை நோக்கி நீள்கின்றன. ஒருவன் ஆயிரம் வருடங்கள் பயணம் செய்தாலும் இந்த வேர்களின் இறுதியை அடைய முடியாது.

இந்தப் பகுதியில்தான் (பசுக்களின் தாயான) சுரபி {காமதேனு} தங்கத் தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பரந்த தடாகத்தின் கரைகளுக்குச் சென்று, தனது பாலைப் பொழிகிறாள். இங்கேதான் சூரியன், சந்திரன் ஆகிய இருவரையும் எப்போதும் விழுங்க முனைபவனான ஒப்பற்ற சுவர்ணபானுவின் (ராகுவின்) தலையற்ற உடல் கடலுக்கு மத்தியில் காணப்படுகிறது. இங்கேதான் ஒப்பற்றவரும், அளவிலா சக்தி படைத்தவரும், நிலையான பச்சை நிற மயிர் {நரையில்லாத கறுத்த மயிர்} கொண்டவருமான சுவர்ணசிரர் எனும் முனிவர் பெரிய ஒலியுடன் வேதங்களைப் பாடிக் கொண்டிருப்பது கேட்கப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் ஹரிமேதஸ் எனும் முனிவருடைய மகள் {தவஜ்வதி}, சூரியனால் "நில்!", "நில்!" என்று கட்டளையிடப்பட்டதன் விளைவால் அந்தரத்திலேயே நின்றாள்.

ஓ! காலவா, இங்கேதான் காற்று, நெருப்பு, பூமி, நீர் ஆகிய அனைத்தும் தங்கள் வலிநிறைந்த உணர்வுகளில் இருந்து பகல் இரவு ஆகிய இரண்டிலும் விடுபட்டுள்ளனர். இந்தப் பகுதியில் இருந்துதான் சூரியனின் பாதை நேரான பாதையில் இருந்து விலகுகிறது {குறுக்கே திரும்புகிறது}. இந்தத் திசையில்தான் ஒளியுருவங்கள் அனைத்தும் {all luminous bodies - விண்மீன் கூட்டங்கள்} சூரிய கோளத்திற்குள் {மண்டலத்திற்குள்} நுழைகின்றன. இருபத்தெட்டு இரவுகள் சூரியனோடு சுற்றிவிட்டு, மறுபடியும் சந்திரனுடைய சேர்கையில் இருந்து மீண்டு சூரியனிலிருந்து அவை வெளி வருகின்றன.

இந்தத் {மேற்கு} திசையில்தான் கடலுக்கு உணவூட்டும் ஆறுகள் தங்கள் ஊற்றுக்கண்களைக் கொண்டிருக்கின்றன. இங்கே இருக்கும், வருணனின் இல்லத்தில்தான் மூன்று உலகங்களின் நீர்நிலைகளும் உள்ளன. இந்தப் பகுதியில்தான் பாம்புகளின் இளவரசனான அனந்தனின் இல்லம் அமைந்திருக்கிறது. ஆதியும் அந்தமும் இல்லாத விஷ்ணுவின் ஒப்பற்ற வீடும் இங்கேதான் இருக்கிறது. இந்தப் பகுதியில்தான் மரீசி முனிவரின் மகனான காசியப முனிவரின் இல்லமும் இருக்கிறது. இப்படியே மேற்குப் பகுதியின் பல்வேறு தன்மைகளை உனக்கு உரைத்துள்ளேன். ஓ! காலவா, இப்போது சொல், ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே, நாம் எந்தப் பக்கத்தை நோக்கிச் செல்லலாம்?" என்றான் {கருடன்}.


Sunday, May 24, 2015

தென்திசையை விவரித்த கருடன்! - உத்யோக பர்வம் பகுதி 109

Garuda described the south! | Udyoga Parva - Section 109 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –38)

பதிவின் சுருக்கம் : தெற்குத் திசையின் தன்மைகளையும், அங்கே முற்காலத்தில் நடைபெற்ற செயல்களையும் காலவருக்குக் கருடன் எடுத்துரைத்தது...

கருடன் {முனிவர் காலவரிடம்}தொடர்ந்தான், "பழங்காலத்தில், ஒரு வேள்வியைச் செய்த விவஸ்வான் {சூரியன்}, இந்தத் திசையைத் {தெற்கு திசையைத்} தனது ஆசானுக்குக் கொடையாக (தக்ஷிணையாகக்) கொடுத்தான், இதன் காரணமாகவே, இந்தத் திசை தக்ஷிணம் (தெற்கு) என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் மூவுலகங்களின் பித்ருக்களும் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டுள்ளனர்.


ஓ! அந்தணா {காலவா}, இங்கே புகையை மட்டுமே உண்டு வாழும் தேவர்களில் ஒரு வர்க்கத்தினர் {ஊஷ்மபர் என்ற தேவர்கள்} வாழ்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அனைத்து உலகங்களிலும் வேள்விகளில் வழிபடப்படும் இவர்கள் பித்ருக்களுடன் சமமான பாகத்தை அடைகிறார்கள். இந்தத் திசை யமனின் இரண்டாவது வாயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கேதான், மனிதர்களுக்கு ஒதுக்கப்பட்ட காலத்தின் கணக்கானது திருதியாகவும் லவகமாகவும் கணக்கிடப்படுகிறது. [1]

[1] காலத்தின் சிறு பிரிவுகள்

இந்தப் பகுதியில்தான் தெய்வீக முனிவர்களும், பித்ருலோக முனிவர்களும், அரசமுனிகளும் பெரும் மகிழ்ச்சியுடன் வசிக்கின்றனர். அறமும், உண்மையும் {சத்தியமும்} இங்கேதான் இருக்கின்றன. (மனிதர்களின்) செயல்களுக்கான கனிகள் இங்கேதான் வெளிப்படுகின்றன. ஓ! இரு பிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே {காலவா}, இறந்தோரின் செயல்களுக்கான இலக்காக இந்தப் பகுதி இருகிறது. {இறந்தோரின் இருவினைப் பயனை அனுபவிக்கக்கூடிய இடமாக இஃது இருக்கிறது}. ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே {காலவா}, இதுவே அனைவரும் {இறுதியில்} அடைய வேண்டிய திசையாகும். எனவே, அனைத்து உயிரினங்களும் இருளில் {அஞ்ஞானத்தால் [மூடத்தனத்தால்]} மூழ்கியிருப்பதால், அருளுடன் அவைகளால் இந்த இடத்திற்கு வரமுடியாது. ஓ! மறுபிறப்பாளர்களில் காளையே {காலவா}, பாவிகளால் காணப்பட வேண்டிய தீய ராட்சசர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இங்கு இருக்கின்றனர்.

ஓ! அந்தணா, இங்கே மந்தர மலையில் உள்ள புதர்களிலும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களின் இல்லங்களிலும், இதயத்தையும் புத்தியையும் கொள்ளைகொள்ளும் பாடல்கள் கந்தர்வர்களால் பாடப்படுகின்றன.. இங்கேதான், இனிமையான குரலில் சாம {வேத} பாடல்கள் பாடப்படுவதைக் கேட்டு {கதைகளுடன் பாடப்பட்ட பாடல்களைக் கேட்டு}, தனது மனைவி, நண்பர்கள் மற்றும் நாட்டையும் விட்டு ரைவதன் (என்கிற தைத்தியன்} காட்டுக்கு ஓய்ந்து போனான்.

ஓ! அந்தணா {காலவா}, மனுவும் {சாவாணிமனுவும்}, யவக்ரீதருடைய மகனும் சேர்ந்து சூரியன் தாண்டிச்செல்லாதவாறு ஓர் எல்லையை இந்தப் பகுதியில்தான் வகுத்தனர். இங்கேதான், புலஸ்தியரின் ஒப்பற்ற வழித்தோன்றலான ராட்சசர்களின் மன்னன் ராவணன், கடும்தவத்தில் ஈடுபட்டு, தேவர்களிடம் இருந்து இறவாத் தன்மையை யாசித்தான் (வரமாகக் கேட்டான்).

இங்கேதான் {அசுரன்) விருத்திரன், தன் தீய நடத்தையின் விளைவால் சக்ரனுடன் {இந்திரனுடன்} பகைமை பாராட்டினான். இந்தப் பகுதியில்தான் பல்வேறு உருவங்களில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் வந்து, (தங்களுக்குள் உள்ளடங்கிய} ஐம்பூதங்களில் இருந்து தங்களை விலக்கிக் கொள்கின்றன. ஓ! காலவா, இந்தப் பகுதியில்தான், தீச்செயல்கள் செய்யும் மனிதர்கள் (சித்திரவதைகளால்) வாட்டப்படுகின்றனர். நரகத்திற்குச் செல்ல நிந்திக்கப்பட்ட மனிதர்களின் உடல்கள் நிறைந்த வைதரணீ நதி இங்கேதான் ஓடுகிறது.

இங்கே வரும் மனிதர்கள் ஆதீத மகிழ்ச்சியையும் துன்பத்தையும் அடைகின்றனர். இந்தப் பகுதியை அடையும் சூரியன் இனிய நீரைப் பொழிகிறான், பிறகு வசிஷ்டரின் பெயரால் அழைக்கப்படும் திசைக்குச் {வடதிசைக்குச்} செல்லும் அவன் {சூரியன்} பனியைப் பொழிகிறான். இங்கேதான், ஒரு முறை, போராடிக்கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய யானையையும், ஒரு மகத்தான ஆமையையும் (உணவுக்காக) நான் அடைந்தேன். இங்கேதான் பெருமுனிவரான சக்ரதனு, சூரியனிடமிருந்து தனது பிறப்பை அடைந்தார். பிறகு அந்தத் தெய்வீக முனிவர் கபிலர் என்ற பெயரால் அறியப்பட்டார். அவராலேயே சகரனின் (அறுபதாயிரம்) மகன்களும் பாதிக்கப்பட்டனர்.

இங்கேதான் அந்தணர்களில் ஒரு வர்க்கத்தினரும் வேதங்களில் முழு நிபுணத்துவம் கொண்டவர்களுமான சிவர்கள் என்ற பெயர் கொண்ட அந்தணர்கள் (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டனர். வேதங்கள் அனைத்தையும் கற்ற பிறகு அவர்கள் முக்தியை அடைந்தனர்.

வாசுகி, நாகன் தக்ஷகன் மற்றும் ஐராவதன் ஆகியோரால் ஆளப்பட்டதும், போகவதி என்று அழைக்கப்படுவதுமான ஒரு நகரம் இந்தப் பகுதியில்தான் இருக்கிறது. (மரணத்திற்குப் பிறகு) தங்கள் பயணத்தை மேற்கொள்வோர்கள் இங்கே அடர்த்தியான இருளைச் சந்திக்க வேண்டியிருக்கும். சூரியனாலோ, அக்னியாலோ ஊடுருவ இயலாதபடி அந்த இருள் மிகுந்த அடர்த்தியாக இருக்கும். வழிபடத்தகுந்தவனான நீயும் இந்தச் சாலையைக் கடக்க வேண்டியிருக்கும். {தெற்கு திசையாகிய} இந்தத் திசையை நோக்கி நீ செல்ல வேண்டுமா என்பதை எனக்குச் சொல். அல்லது மேற்கு திசை குறித்து நான் விவரிப்பதைக் கேள்" என்றான் {கருடன்}.


Saturday, May 23, 2015

கிழக்கை விவரித்த கருடன்! - உத்யோக பர்வம் பகுதி 108

Garuda described the east! | Udyoga Parva - Section 108 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –37)

பதிவின் சுருக்கம் : கருடன் காலவரிடம் நான்கு திசையில் எந்தத் திசையில் செல்லலாம் எனக் கேட்டது; கிழக்குத் திசையின் தன்மைகளையும், அங்கே முற்காலத்தில் நடைபெற்ற செயல்களையும் காலவருக்குக் கருடன் எடுத்துரைத்தது...

கருடன் {காலவரிடம்} சொன்னான், "ஓ! காலவா, அனைத்து அறிவுக்கும் காரணமான தேவனால் நான் கட்டளையிடப்பட்டிருக்கிறேன். நான் உன்னைக் கேட்கிறேன். அந்தத் திசையில் என்ன இருக்கிறது என்பதைக் காண நான் உன்னை எந்தத் திசைக்கு அழைத்துச் செல்லட்டும்? கிழக்கா? தெற்கா? மேற்கா? வடக்கா, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, ஓ! காலவா, நான் எங்கே செல்லட்டும்?" என்று கேட்டான்.


எத்திசையில் அண்டத்திற்கு ஒளியூட்டுபவனான சூரியன் உதிக்கிறானோ; எங்கே மாலை நேரங்களில் சத்யஸ்கள் தங்கள் தவத்துறவுகளில் ஈடுபடுகிறார்களோ; எங்கே அண்டம் முழுவதும் ஊடுருவியிருக்கும் அறிவு முதலில் எழுகிறதோ. எங்கே தர்மனும் அவனது இரு கண்களும் நிலைத்திருக்கின்றனவோ; எங்கே முதலில் வேள்வியில் ஊற்றப்பட்ட தெளிந்த நெய் அதன்பிறகு சுற்றிலும் வழிகிறதோ; அத்திசையிலேயே {கிழக்கு திசையிலேயே}, ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே {காலவா}, நாள் மற்றும் காலத்தின் கதவுகள் இருக்கின்றன.

அங்கேதான் புராதனமான காலங்களில், தக்ஷனின் மகள்கள் தங்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். அங்கேதான் காசியபரின் பிள்ளைகள் முதலில் பெருகினர். அந்தத் திசைதான் தேவர்களின் அனைத்துச் செழிப்புக்கும் ஊற்றுக்கண்ணாகும், ஏனெனில், இங்கேதான் சக்ரன் {இந்திரன்} தேவர்களின் தலைவனாக முடிசூட்டப்பட்டான். ஓ! மறுபிறப்பாள முனிவா {காலவா}, இந்திரனும் தேவர்களும் இங்கேதான் தங்கள் தவங்களை இயற்றினர். ஓ! அந்தணா {காலவா}, அதன் காரணமாகவே இந்தத் திசை (முதலில்) பூர்வம் என்று அழைக்கப்பட்டது. காலங்களின் ஆதியில் இத்திசையில் சூரர்கள் {தேவர்கள்} பரவியிருந்ததன் காரணமாகவே இது பூர்வம் என்று அழைக்கப்பட்டது. செழிப்பை விரும்பிய தேவர்கள் தங்கள் அறச்சடங்குகள் அனைத்தையும் இங்கேயே செய்தனர். இங்கேதான் தெய்வீகப் படைப்பாளன் {பிரம்மன்} வேதங்களை முதலில் பாடினார்.

புனித பாடல்களை ஓதுவோருக்கு இங்கேதான் சூரியன் முதலில் காயத்ரியைப் {காயத்ரி மந்திரத்தைப்} போதித்தான். ஓ! அந்தணர்களில் சிறந்தவனே {காலவா}, இங்கேதான் சூரியன் {யாக்ஞவல்கியருக்கு} யஜூர் வேதத்தை வழங்கினான். வரங்களால் புனிதப்படுத்தப்பட்ட சோமச்சாறு {சோமபானம்}, இங்கேதான் வேள்விகளில் சூரர்களால் {தேவர்களால்} முதலில் பருகப்பட்டது. (மந்திரங்களால் நிறைவடைந்த) ஹோம நெருப்புகளால் இங்கே தான் உறவுள்ள தோற்றமுடைய {உடன்பிறந்த} பொருட்கள் முதலில் பருகப்பட்டன [1].

[1] வேள்வியில் நீர்க்காணிக்கைகளாகப் பயன்படுத்தப்படும் தெளிந்த நெய், பால் மற்றும் {சோமம் போன்ற} பிற பொருட்களே உறவுள்ள தோற்றமுடைய {உடன்பிறந்த} பொருட்களாகும்.

இங்கேதான் வருணன் முதலில் பாதாள உலகத்திற்குச் சென்று தனது செழிப்பு அனைத்தையும் அடைந்தான். ஓ! இரு பிறப்பாளர்களில் {பிராமணர்களில்} காளையே {காலவா}, இங்கேதான், பழங்கால வசிஷ்டரின் பிறப்பு, வளர்ச்சி, மரணம் ஆகியன நேரிட்டன. இங்கேதான் முதலில் நூறு பல்வேறு கிளைகளைக் கொண்ட ஓம் வளர்ந்தது [2]. {இங்கேதான் ஓங்காரத்தின் பதினாயிரம் வழிகள் உண்டாயின}.

[2] அனைத்தின் தோற்றமும், புதிர் நிறைந்ததுமான {ஓம் என்ற} பிரணவ மந்திரத்தின் உப பிரிவுகள் அனைத்தும் இங்கேதான் {கிழக்கு திசையில்தான்} முதலில் பிரகடனப்படுத்தப்பட்டன என்பதே இங்கே பொருள். ஆனால், வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவையும் மற்றும் சுருதிகளிலும் ஸ்ம்ருதிகளிலும் உள்ள பல்வேறு கிளைகளின் தோற்றத்தையும் இது குறிக்கிறது என நீலகண்டர் கருதுகிறார் என்று கங்குலி சொல்கிறார்.

இங்கேதான் புகையை உண்ணும் {தூம்பர்கள் என்ற} முனிவர்கள் வேள்வி நெருப்புகளில் புகையாக {தூமமாக} இருக்கின்றனர். இந்தப் பகுதியில்தான் கூட்டங்கூட்டமாகப் பன்றிகளும், பிற விலங்குகளலும், சக்ரனால் {இந்திரனால்} கொல்லப்பட்டு, அவை தேவர்களுக்கு வேள்விப்பாகமாகக் காணிக்கையாக்கப்பட்டன. இங்கேதான் ஆயிரங்கதிர் கொண்ட சூரியன் சினத்துடன் எழுந்து, மனிதர்களில் தீயவர்களையும், நன்றிகெட்டவர்களையும், அசுரர்களையும் விழுங்குகிறான். இதுவே {கிழக்கு திசையே} மூன்று உலகங்களின் வாயிலாக இருக்கிறது. இதுவே சொர்க்கத்திற்கும் இன்ப நிலைக்கும் வழியாகும். இந்தத் திசையே பூர்வம் {கிழக்குத் திசை} என்று அழைக்கப்படுகிறது.

உனக்கு விருப்பம் இருந்தால் நாம் அங்கே செல்வோம். நான் எப்போதும் எனக்கு நண்பனாய் இருப்பவர்களுக்கு ஏற்புடையதையே செய்வேன். ஓ! காலவா, சொல். வேறு ஏதாவது திசையில் உனக்கு விருப்பமிருந்தால், நாம் அங்கே செல்லலாம். மற்றொரு திசையைக் குறித்தும் நான் சொல்வதைக் கேள்" என்றான் {கருடன்}.

Friday, May 22, 2015

காலவரின் புலம்பல்! - உத்யோக பர்வம் பகுதி 107

Galava's lament! | Udyoga Parva - Section 107 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –36)

பதிவின் சுருக்கம் : விஸ்வாமித்ரர் கேட்ட குருதட்சணையால் கவலையடைந்த காலவர் அழுது புலம்புவது; தனது நண்பனான காலவருக்கு உதவி செய்வதற்காகக் கருடன் அங்கே வந்தது; காலவருக்காக விஷ்ணுவிடம் பரிந்து பேசியதாகக் கருடன் சொல்வது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "பெரும் புத்திக்கூர்மை கொண்ட விஸ்வாமித்ரரால் இப்படிச் சொல்லப்பட்ட காலவர், அமரவோ, படுக்கவோ, உண்ணவோ முடியாத அளவுக்குத் துயரால் நிறைந்தார். பதற்றம் மற்றும் வருத்தத்திற்கு இரையாகி, மனங்கசந்து புலம்பி, குற்றவுணர்வால் ஏற்பட்ட வருத்ததால் எரிச்சலடைந்த காலவர் நிறம் மங்கி எலும்புக்கூடாய் மெலிந்தார். கவலையால் அடிக்கபட்ட அவர், ஓ! சுயோதனா {துரியோதனா}, தனது புலம்பல்களில், "செல்வாக்கு மிக்க நண்பர்களை நான் எங்குக் காண்பேன்? செல்வத்தை எங்கே அடைவேன்? என்ன சேமிப்புகளை நான் கொண்டிருக்கிறேன்? சந்திர வெளுப்பில் எண்ணூறு {800} குதிரைகளை நான் எங்கே காண்பேன்? உண்பதில் என்ன மகிழ்ச்சியை நான் அடைவேன்? இன்பநுகர் பொருட்களில்தான் எனக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கும்?


எனக்கு உயிரின் மேற் கொண்ட ஆசையும் போய்விட்டது. உயிரைக்கொண்டு எனக்குத் தேவை என்ன இருக்கிறது? பெருங்கடலின் அடுத்தக் கரைக்குச் சென்று, அல்லது பூமியில் நெடுந்தொலைவுக்குச் சென்று எனது உயிரைக் கைவிடுவேன். இந்த உயிரால் எனக்கு என்ன பயன்? ஏழையாய் இருந்து, கடும் முயற்சியற்று, வெற்றியடையாமல், வாழ்வின் அனைத்து நல்ல பொருட்களையும் இழந்து, கடனைச் சுமக்கும் ஒருவனுக்கு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? நட்பின் மூலம் நண்பனின் செல்வத்தை அனுபவித்து, அந்த நண்பனுக்குப் பதிலுதவி செய்ய முடியாதவனைப் பொறுத்தவரை, வாழ்வை விட மரணமே அவனுக்குச் சிறந்ததாகும்.

ஒரு செயலைச் செய்வதாக உறுதிகூறிய பின் அதைச் செய்யத் தவறும் ஒரு மனிதனின் அறச் செயல்கள் எல்லாம் அந்தப் பொய்மையின் விளைவால் பலன் இழக்கின்றன. பொய்மை எனும் கறை படிந்தவன், அழகு, பிள்ளைகள், பலம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை அடைய முடியாது. எனவே, அப்படிப்பட்ட ஒருவனால் எப்படி அருள்நிலையை அடைய முடியும்? நன்றிகெட்ட எந்த மனிதன்தான் புகழை ஈட்டியிருக்கிறான்? உண்மையில், அவனுக்கு இடம்தான் ஏது? மகிழ்ச்சிதான் ஏது?

ஒரு நன்றிகெட்ட மனிதனால் ஒருபோதும் மரியாதையையும், பாசத்தையும் பெற முடியாது. முக்தியும் எப்போதும் அவனுடையதாகாது. செல்வமற்ற ஒருவன், வாழக்கூட முடியாத இழிந்தவனாவான். அப்படிப்பட்ட இழிந்தவனால் தனது உறவினர்களையோ நண்பர்களையோ தாங்க முடியாது. தான் பெற்ற நன்மைகளுக்கான பதிலுதவியைச் செய்ய முடியாமல், அவன் அழிவைச் சந்திக்கிறான். என் நோக்கங்களை எனது ஆசானிடம் இருந்து அடைந்த பிறகும், அவர் கேட்பதை என்னால் கொடுக்க முடியாததால், பொய்மையின் கறை படிந்த, வளங்கள் அற்ற, நன்றிகெட்ட இழிந்தவனே நான்.

முடிந்தவரை முயற்சித்த பிறகு, நான் எனது உயிரை விடுவேன். இதற்கு முன்னர் நான் தேவர்களிடம்கூட எதையும் கேட்டதில்லை. வேள்வி செய்யும் இடத்தில் இதற்காக என்னைத் தேவர்கள் கௌரவிப்பார்கள். நானோ, மூவுலகங்களின் தெய்வீகத் தலைவனான விஷ்ணுவிடம், பாதுகாப்பினால் அருளப்பட்டிருக்கும் அனைவருக்கும் அடைக்கலமாக இருப்பவனான அந்தக் கிருஷ்ணனிடம் சென்று எனது பாதுகாப்பைக் கோரப்போகிறேன். அவனிடம் சென்று பணிந்து, துறவிகள் அனைவரிலும் உயர்ந்த நித்தியமானவனும், தேவர்கள் மற்றும் அசுரர்களின் இன்பங்கள் மற்றும் உடைமைகள் அனைத்துக்கும் காரணமானவனுமான கிருஷ்ணனைக் காண நான் விரும்புகிறேன்" என்றார் {காலவர்}.

காலவர் இப்படி அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது, அவரது {காலவரின்} நண்பனான வினதையின் மகன் கருடன் அங்கே தோன்றினான். அவருக்கு நன்மையைச் செய்ய விரும்பிய கருடன், அவரிடம் மகிழ்ச்சியாக, "நீ எனது அன்புக்குரிய நண்பனாவாய். செழிப்போடிருக்கையில், நண்பர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதில் கவனம் செலுத்த வேண்டியது ஒரு நண்பனின் கடமையாகும். ஓ! அந்தணா, நான் கொண்டிருக்கும் செழிப்பு வாசவனின் {இந்திரனின்} தம்பியான விஷ்ணுவுடையது. இதற்கு முன் நான் அவனிடம் {விஷ்ணுவிடம்} உனக்காகப் பரிந்து பேசினேன். அவன் எனது விருப்பங்களால் மகிழ்ந்தான். வா, இப்போதே நாம் இருவரும் சேர்ந்து செல்வோம். கடலின் அடுத்தக் கரைக்கோ, அல்லது பூமியில் கடைசி எல்லைக்கோ நான் உன்னை வசதியாகச் சுமந்து செல்வேன். ஓ! காலவா, தாமதிக்காதே வா" என்றான் {கருடன்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்