Showing posts with label விஷ்ணு. Show all posts
Showing posts with label விஷ்ணு. Show all posts

Friday, July 05, 2019

ரகசிய தர்மங்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 134

Mysteries in religion! | Anusasana-Parva-Section-134 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 134)


பதிவின் சுருக்கம் : ஸ்கந்தன்; அறங்கள் அனைத்தையும் புகழ்ந்த விஷ்ணு...


ஸ்கந்தன், "என்னால்அங்கீகரிக்கப்பட்ட கடமையை இப்போது அறிவிக்கப் போகிறேன். குவிந்த கவனத்துடன் கேட்பீராக. நீல {கறுப்பு} நிறக் காளையின் கொம்புகளில் இருந்து சிறிதளவு மண்ணை எடுத்து தன் மேனியில் மூன்று நாட்கள் பூசிக்கொண்டு அதன் பிறகு நீராடும் ஒருவன் பெரும் பலன்களை அடைகிறான். அந்தப் பலன்கள் எவை என்பதைக் கேட்பீராக. அத்தகைய செயலின் மூலம் ஒருவன் ஒவ்வொரு களங்கத்தையும், தீமையையும் கழுவிக் கொண்டு, மறுமையில் அரசுரிமையை அடைந்து ஆள்கிறான்.(2) எத்தனை முறை அவன் இவ்வுலகில் பிறக்கிறானோ, அவ்வளவு முறை அவன் தனது வீரத்திற்காகக் கொண்டாடப்படுகிறான். யாரும் அறியாத மற்றொரு புதிரை இப்போது கேட்பீராக.(3)

Tuesday, July 02, 2019

பரமரகசியங்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 126

Great Mysteries! | Anusasana-Parva-Section-126 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 126)


பதிவின் சுருக்கம் : ஸ்ரீ ஹரியை நிறைவடையச் செய்யும் செயல்கள்; ஏழைகளும் வேள்வி செய்த பலன்களை அடைய செய்ய வேண்டிய செயல்கள்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பித்ருக்கள் பேசுவதை நிறுத்தியதும், தேவர்களின் தலைவனான இந்திரன், பலமிக்க ஹரியிடம், "ஓ! தலைவா, எந்தச் செயல்களின் மூலம் நீ நிறைவடைகிறாய். உண்மையில், மனிதர்கள் உன்னை நிறைவடையச் செய்வதில் எவ்வாறு வெல்கிறார்கள்" என்று கேட்டான்.(1)

Monday, December 10, 2018

ஹயக்ரீவனும் மதுகைடபர்களும்! - சாந்திபர்வம் பகுதி – 348

Hayagriva and Madhukaitabhas! | Shanti-Parva-Section-348 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 175)


பதிவின் சுருக்கம் : பிரம்மனைப் படைத்த நாராயணன்; ஹயக்ரீவ வடிவத்தை ஏற்றது; மது கைடபர்கள் என்ற அசுரர்களைக் கொன்று வேதத்தை மீட்ட வரலாறு...


ஜனமேஜயன் {அல்லது சௌனகர்}, "தெய்வீகமான பரமாத்மாவின் மகிமையை நான் உம்மிடம் இருந்து கேட்டேன். தர்மனின் இல்லத்தில், நரன் மற்றும் நாராயணரின் வடிவத்தில் பரமதேவன் பிறந்ததையும் கேட்டேன்.(1) (மூழ்கிப் போன பூமியை உயர்த்துவதற்காகப் பரமதேவன் ஏற்ற வடிவமான) வலிமைமிக்கப் பன்றியில் இருந்து பிண்டம் தோன்றியதையும் கேட்டேன். பிரவிருத்தி அறம் மற்றும் நிவிருத்தி அறம் ஆகியவற்றுக்காக விதிக்கப்பட்ட தேவர்கள் மற்றும் முனிவர்களைக் குறித்தும் நான் உம்மிடம் இருந்து கேட்டேன்.(2) ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, நீர் எங்களுக்கு வேறு கதைகளையும் சொல்லியிருக்கிறீர். பெருங்கடலின் வடகிழக்கில் தோன்றிய வடிவமும், வேள்விக் காணிக்கைகள் மற்றும் ஆகுதிகளை உண்பவனும், குதிரைத் தலை கொண்டவனும், பெருவடிவம் கொண்டவனுமான விஷ்ணுவைக் குறித்தும் நீர் எங்களுக்குச் சொன்னீர். பரமேஷ்டி என்ற பெயரில் அறியப்படும் சிறப்புமிக்கப் பிரம்மனால் அந்த வடிவம் காணப்பட்டது.(3,4)

Tuesday, August 11, 2015

அண்டத்தில் படர்ந்து ஊடுருவி இருப்பவன்!- பீஷ்ம பர்வம் பகுதி - 008

The one that pervadeth the Universe! | Bhishma-Parva-Section-008 | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 8)

பதிவின் சுருக்கம் : ரோமணகம், ஹிரண்யமயம், ஐராவதம் ஆகிய வர்ஷங்களைக் குறித்துச் சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குச் சொல்வது; பாற்கடலின் வடக்கில் இருக்கும் விஷ்ணுவின் மகிமையைச் சஞ்சயன் சொல்வது; காலமே பெரியதென்றும், அனைத்திலும் ஊடுருவி படர்ந்திருக்கும் காலத்தையே, வைகுண்டன் எனத் தேவர்களும், விஷ்ணு என மனிதர்களும் அழைக்கிறார்கள் என்று திருதராஷ்டிரன் சொல்வது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, அனைத்து வர்ஷங்கள், அனைத்து மலைகள் அனைத்தின் பெயர்களையும், அந்த மலைகளில் வசிப்போர் அனைவரின் பெயர்களையும் உண்மையில் எனக்குச் சொல்வாயாக"


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஸ்வேதத்திற்கு {ஸ்வேத மலைக்குத்} தெற்காகவும், நிஷதத்திற்கு வடக்காகவும், ரோமணகம் {ரமணகம்} என்று அழைக்கப்படும் வர்ஷம் இருக்கிறது. அங்கே பிறக்கும் மனிதர்கள் அனைவரும் வெள்ளை நிறம் கொண்டோராகவும், நல்ல தாய் தந்தையரை உடையவராகவும், அழகிய குணநலன்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அங்கே பிறப்பவர்கள் அனைவரும் எதிரிகளற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கே {ரோமணகத்தில்} அவர்கள் பதினோராயிரத்து ஐநூறு {11,500) ஆண்டுகள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் வாழ்கிறார்கள்.

நிஷதத்திற்குத் தெற்கே ஹிரண்யமயம் என்று அழைக்கப்படும் வர்ஷம் இருக்கிறது. அங்கே ஹைரண்யவதி என்று அழைக்கப்படும் நதி ஒன்று இருக்கிறது. அங்கேதான், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பறவைகளின் முதன்மையானவன் எனப் பெயர் கொண்டவனான கருடன் வாழ்கிறான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே இருக்கும் மக்கள் அனைவரும் யக்ஷர்களைப் பின்பற்றுபவர்களாகவும், செல்வந்தர்களாகவும், அழகிய குணநலன்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அங்கே இருக்கும் மனிதர்கள் பலம் கூடியவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்தைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பனிரெண்டாயிரத்து ஐநூறு {12,500} ஆண்டுகள் வாழ்கிறார்கள். அதுவே அவர்களது வாழ்வின் அளவாகும்.

ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, சிருங்காவத மலைகள் மூன்று அழகிய சிகரங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தங்கத்தாலும், {ஒன்று} ரத்னங்களாலும் ஆனது. மற்றொன்று அனைத்து வகை ரத்தினங்களாலும் செய்யப்பட்டு மிக அற்புதமானதாக இருக்கிறது. அது பெரிய மாளிகைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அங்கேதான் சாண்டிலி என்ற பெயர் கொண்டவளும், சுய காந்தி கொண்டவளுமான மங்கை எப்போதும் வாழ்கிறாள்.

சிருங்காதவதத்திற்கு வடக்கே கடலின் எல்லை வரை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஐராவதம் என்று அழைக்கப்படும் வர்ஷம் இருக்கிறது. அங்கே இந்த ரத்தினமயமான மலையிருப்பதால், இந்த வர்ஷம் அனைத்திலும் மேன்மையானதாக இருக்கிறது. அங்கே சூரியன் வெப்பத்தைக் கொடுப்பதில்லை. மனிதர்கள் அங்கே கிழட்டுத் தன்மைக்கு ஆளாவதில்லை. நட்சத்திரங்களுடன் கூடிய நிலவுதான் அங்கே வெளிச்சத்துக்கான ஒரே தோற்றுவாயாக (ஆகாயத்தை) மூடிக் கொண்டிருக்கிறது. தாமரையின் நிறம் மற்றும் பிரகாசத்தைக் கொண்டவர்களும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர்களுமான அங்கே பிறக்கும் மனிதர்கள், தாமரையின் மணத்தையும் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள். சிமிட்டாத கண்களும், (தங்கள் உடல்களில் இருந்து வெளிவரும்) இனிமையான நறுமணமும் கொண்ட அவர்கள் உணவின்றித் தங்கள் புலன்களை அடக்கி வாழ்பவர்களாவர். அவர்கள் அனைவரும் தேவர்களின் பகுதியில் இருந்து விழுந்தவர்களாவர். மேலும் அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எந்தவிதமான பாவத்தையும் செய்யாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள் பதிமூன்றாயிரம் {13,000} ஆண்டுகளுக்கு அந்த வாழ்வை வாழ்கிறார்கள். ஓ பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அதுவே அவர்களது வாழ்வின் அளவாகும்.

அப்படியே பாற்கடலின் வடக்கில், அளவிலா வலிமை கொண்டவனான தலைவன் ஹரி {விஷ்ணு}, தனது தங்கத்தேரில் {பொற்சகடத்தில்} வசிக்கிறான். அந்த வாகனம், எட்டு சக்கரங்களையுடையதும், இயல்புக்குமிக்க எண்ணிலா உயிரினங்களைக் {பூதங்களைக்} கொண்டதும், மனோ வேகம் கொண்டதாகவும் இருக்கிறது. நெருப்பு போன்ற நிறமும், வலிமைமிக்க சக்தியும் கொண்ட அது ஜம்பூநதத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துயிர்களுக்கும் தலைவனான அவன் {ஹரி}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன்னில் அனைத்து வகைச் செழிப்பையும் கொண்டிருக்கிறான். (பிரளயம் ஏற்படும்போது) அவனிலேயே இந்த அண்டம் கலக்கிறது. (படைப்பின் விருப்பம் அவனைப் பீடிக்கும்போது) அவனிலிருந்தே அது மீண்டும் உற்பத்தியாகிறது. செயல்படுபவனாகவும், அனைவரையும் செயல்பட வைப்பவனாகவும் இருப்பவன் அவனே {விஷ்ணுவே}. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நிலமாகவும், நீராகவும், வெளியாகவும் {ஆகாயமாகவும்}, காற்றாகவும், நெருப்பாகவும் இருப்பவன் அவனே. அனைத்துயிர்களுக்கும் வேள்வியின் வடிவமாக இருப்பவன் அவனே. நெருப்பு {அக்னியே} அவனது {விஷ்ணுவின்} வாயாக இருக்கிறது {இருக்கிறான்}" என்றான் {சஞ்சயன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சஞ்சயனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த உயர் ஆன்ம மன்னன் திருதராஷ்டிரன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தனது மகன்களைக் குறித்த {நினைவில்} தியானத்தில் ஆழ்ந்தான். பெரும் சக்தி கொண்ட அவன் {திருதராஷ்டிரன்}, {இப்படிச்} சிந்தித்த பிறகு, இந்த வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! சூதனின் மகனே {சஞ்சயா}, அண்டத்தை அழிப்பது காலமே என்பதில் ஐயமில்லை. அனைத்தையும் மீண்டும் படைப்பதும் காலமேயாகும். இங்கே எதுவும் நிலையானதில்லை {நித்தியமில்லை}. அனைத்திலும் ஊடுருவி பரந்திருக்கும் தன்மை பெற்ற {சர்வ வியாபிகளான} நரன் மற்றும் நாராயணனே அனைத்து உயிர்களையும் அழிப்பவர்களாவர். தேவர்கள் அவனை வைகுண்டன் (அளவிலா வலிமை கொண்டவன்) என்று சொல்கின்றனர். அதே வேளையில் மனிதர்கள் அவனை விஷ்ணு (அண்டத்தில் படர்ந்து ஊடுருவி இருப்பவன்) என்று அழைக்கின்றனர்" என்றான் {திருதராஷ்டிரன்}.


ஆங்கிலத்தில் | In English

Friday, May 22, 2015

காலவரின் புலம்பல்! - உத்யோக பர்வம் பகுதி 107

Galava's lament! | Udyoga Parva - Section 107 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –36)

பதிவின் சுருக்கம் : விஸ்வாமித்ரர் கேட்ட குருதட்சணையால் கவலையடைந்த காலவர் அழுது புலம்புவது; தனது நண்பனான காலவருக்கு உதவி செய்வதற்காகக் கருடன் அங்கே வந்தது; காலவருக்காக விஷ்ணுவிடம் பரிந்து பேசியதாகக் கருடன் சொல்வது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "பெரும் புத்திக்கூர்மை கொண்ட விஸ்வாமித்ரரால் இப்படிச் சொல்லப்பட்ட காலவர், அமரவோ, படுக்கவோ, உண்ணவோ முடியாத அளவுக்குத் துயரால் நிறைந்தார். பதற்றம் மற்றும் வருத்தத்திற்கு இரையாகி, மனங்கசந்து புலம்பி, குற்றவுணர்வால் ஏற்பட்ட வருத்ததால் எரிச்சலடைந்த காலவர் நிறம் மங்கி எலும்புக்கூடாய் மெலிந்தார். கவலையால் அடிக்கபட்ட அவர், ஓ! சுயோதனா {துரியோதனா}, தனது புலம்பல்களில், "செல்வாக்கு மிக்க நண்பர்களை நான் எங்குக் காண்பேன்? செல்வத்தை எங்கே அடைவேன்? என்ன சேமிப்புகளை நான் கொண்டிருக்கிறேன்? சந்திர வெளுப்பில் எண்ணூறு {800} குதிரைகளை நான் எங்கே காண்பேன்? உண்பதில் என்ன மகிழ்ச்சியை நான் அடைவேன்? இன்பநுகர் பொருட்களில்தான் எனக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கும்?


எனக்கு உயிரின் மேற் கொண்ட ஆசையும் போய்விட்டது. உயிரைக்கொண்டு எனக்குத் தேவை என்ன இருக்கிறது? பெருங்கடலின் அடுத்தக் கரைக்குச் சென்று, அல்லது பூமியில் நெடுந்தொலைவுக்குச் சென்று எனது உயிரைக் கைவிடுவேன். இந்த உயிரால் எனக்கு என்ன பயன்? ஏழையாய் இருந்து, கடும் முயற்சியற்று, வெற்றியடையாமல், வாழ்வின் அனைத்து நல்ல பொருட்களையும் இழந்து, கடனைச் சுமக்கும் ஒருவனுக்கு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? நட்பின் மூலம் நண்பனின் செல்வத்தை அனுபவித்து, அந்த நண்பனுக்குப் பதிலுதவி செய்ய முடியாதவனைப் பொறுத்தவரை, வாழ்வை விட மரணமே அவனுக்குச் சிறந்ததாகும்.

ஒரு செயலைச் செய்வதாக உறுதிகூறிய பின் அதைச் செய்யத் தவறும் ஒரு மனிதனின் அறச் செயல்கள் எல்லாம் அந்தப் பொய்மையின் விளைவால் பலன் இழக்கின்றன. பொய்மை எனும் கறை படிந்தவன், அழகு, பிள்ளைகள், பலம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை அடைய முடியாது. எனவே, அப்படிப்பட்ட ஒருவனால் எப்படி அருள்நிலையை அடைய முடியும்? நன்றிகெட்ட எந்த மனிதன்தான் புகழை ஈட்டியிருக்கிறான்? உண்மையில், அவனுக்கு இடம்தான் ஏது? மகிழ்ச்சிதான் ஏது?

ஒரு நன்றிகெட்ட மனிதனால் ஒருபோதும் மரியாதையையும், பாசத்தையும் பெற முடியாது. முக்தியும் எப்போதும் அவனுடையதாகாது. செல்வமற்ற ஒருவன், வாழக்கூட முடியாத இழிந்தவனாவான். அப்படிப்பட்ட இழிந்தவனால் தனது உறவினர்களையோ நண்பர்களையோ தாங்க முடியாது. தான் பெற்ற நன்மைகளுக்கான பதிலுதவியைச் செய்ய முடியாமல், அவன் அழிவைச் சந்திக்கிறான். என் நோக்கங்களை எனது ஆசானிடம் இருந்து அடைந்த பிறகும், அவர் கேட்பதை என்னால் கொடுக்க முடியாததால், பொய்மையின் கறை படிந்த, வளங்கள் அற்ற, நன்றிகெட்ட இழிந்தவனே நான்.

முடிந்தவரை முயற்சித்த பிறகு, நான் எனது உயிரை விடுவேன். இதற்கு முன்னர் நான் தேவர்களிடம்கூட எதையும் கேட்டதில்லை. வேள்வி செய்யும் இடத்தில் இதற்காக என்னைத் தேவர்கள் கௌரவிப்பார்கள். நானோ, மூவுலகங்களின் தெய்வீகத் தலைவனான விஷ்ணுவிடம், பாதுகாப்பினால் அருளப்பட்டிருக்கும் அனைவருக்கும் அடைக்கலமாக இருப்பவனான அந்தக் கிருஷ்ணனிடம் சென்று எனது பாதுகாப்பைக் கோரப்போகிறேன். அவனிடம் சென்று பணிந்து, துறவிகள் அனைவரிலும் உயர்ந்த நித்தியமானவனும், தேவர்கள் மற்றும் அசுரர்களின் இன்பங்கள் மற்றும் உடைமைகள் அனைத்துக்கும் காரணமானவனுமான கிருஷ்ணனைக் காண நான் விரும்புகிறேன்" என்றார் {காலவர்}.

காலவர் இப்படி அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது, அவரது {காலவரின்} நண்பனான வினதையின் மகன் கருடன் அங்கே தோன்றினான். அவருக்கு நன்மையைச் செய்ய விரும்பிய கருடன், அவரிடம் மகிழ்ச்சியாக, "நீ எனது அன்புக்குரிய நண்பனாவாய். செழிப்போடிருக்கையில், நண்பர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதில் கவனம் செலுத்த வேண்டியது ஒரு நண்பனின் கடமையாகும். ஓ! அந்தணா, நான் கொண்டிருக்கும் செழிப்பு வாசவனின் {இந்திரனின்} தம்பியான விஷ்ணுவுடையது. இதற்கு முன் நான் அவனிடம் {விஷ்ணுவிடம்} உனக்காகப் பரிந்து பேசினேன். அவன் எனது விருப்பங்களால் மகிழ்ந்தான். வா, இப்போதே நாம் இருவரும் சேர்ந்து செல்வோம். கடலின் அடுத்தக் கரைக்கோ, அல்லது பூமியில் கடைசி எல்லைக்கோ நான் உன்னை வசதியாகச் சுமந்து செல்வேன். ஓ! காலவா, தாமதிக்காதே வா" என்றான் {கருடன்}.


Thursday, May 21, 2015

செருக்கழிந்த கருடன்! - உத்யோக பர்வம் பகுதி 105

Garuda's pride cured! | Udyoga Parva - Section 105 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –34)

பதிவின் சுருக்கம் : சுமுகனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்த இந்திரனிடம் கருடன் கோபித்துக் கொள்வது; கருடன் விஷ்ணுவை அவமதித்துப் பேசுவது; கருடன் செருக்கழிந்து, விஷ்ணுவின் பாதம் பணிவது; இந்தக் கதையைச் சொல்லி துரியோதனனுக்குக் கண்வர் புத்தி புகட்டுவது; துரியோதனன் கண்வரை அவமதிக்கும் வகையில் தொடையில் அறைந்து கொள்வது...

கண்வர் {துரியோதனனிடம்} சொன்னார், "அதேவேளையில், ஓ! பாரதா {துரியோதனா}, நாகனான சுமுகனுக்குச் சக்ரன் {இந்திரன்} நீண்ட ஆயுளைக் கொடுத்ததைப் பலமிக்கக் கருடன் கேள்விப்பட்டான். பெரும் கோபத்தால் தூண்டப்பட்ட ஆகாய உலாவியான அந்தச் சுபர்ணன் {கருடன்}, தனது சிறகையடித்து எழுப்பப்பட்ட புயலால் மூன்று உலகங்களையும் அடித்தபடி வாசவனிடம் {இந்திரனிடம்} விரைந்து வந்தான்.


அந்தக் கருடன் {இந்திரனிடம்}, "ஓ! ஒப்பற்றவனே, என்னை அவமதித்து, எனது வாழ்வாதாரத்தில் நீ ஏன் தலையிடுகிறாய்? உனது சுயவிருப்பத்தின் படி எனக்கு வரத்தை அளித்துவிட்டு, பிறகு அதை நீ ஏன் பறிக்கிறாய்? எது எனது உணவு என, அனைத்து உயிரினங்களின் தலைவனால் {பிரம்மனால்} முன்பே விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தெய்வீக கட்டளையின் குறுக்கே நீ ஏன் நிற்கிறாய்? நான் இந்தப் பெரும் நாகனைத் {சுமுகனைத்} தேர்ந்தெடுத்து, {அவனுக்கான} காலத்தையும் குறித்திருக்கிறேன். ஏனெனில், ஓ! தேவா {இந்திரா}, அவனது உடலின் இறைச்சியை எனது எண்ணற்ற பிள்ளைகளின் உணவாக்க நான் நினைத்திருந்தேன். அவன் உன்னிடம் வரத்தைப் பெற்றுவிட்டதால், என்னால் அழிக்கப்பட முடியாதவன் ஆகிவிட்டான். எனவே, அவனது இனத்தைச் சேர்ந்த வேறொருவனை நான் இனிமேல் எவ்வாறு கொல்லத்துணிவேன்? ஓ! வாசவா {இந்திரா}, உனது விருப்பப்படி, இப்படியெல்லாம் நீ விளையாடுகிறாயா? இதனால், நானும் எனது குடும்ப உறுப்பினர்களும், என் இல்லத்தில் {இல்லத்தின் வேலைகளில்} நான் ஈடுபடுத்தியிருக்கும் எனது பணியாட்களும் இறந்துவிடுவோம். ஓ! வாசவா {இந்திரா}, அஃது உன்னை நிறைவாக்கும் என நான் நினைக்கிறேன். [1]

[1] இந்த இடத்தில் கங்குலி சிலவற்றை விட்டிருக்க வேண்டும். வேறு ஒரு பதிப்பில் கீழ்கண்ட சம்பவம் சுட்டப்படுகிறது.

கருடனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட சுமுகன் தூமுகன் ஆனான். அதாவது விகார முகம் கொண்டவனான். அவன் நிறம் மாறி, பாம்பின் உருவத்தை அடைந்தான். பிறகு, விஷ்ணுவின் அருகில் சென்று, அவனது பாதத்தைச் சுற்றிக் கொண்டான். அப்போது இந்திரன், "ஓ! கருடா! இஃது என் செயலில்லை. நீ என்னிடம் கோபம் கொள்ளாதே. சுமுகனை விஷ்ணுவே பாதுகாத்தான்" என்றான். இனி கீழ்க்கண்டவை கங்குலியில் இருந்து... அதைத் தொடர்ந்து கருடன் பின்வருமாறு பேசுகிறான்.

உண்மையில், ஓ! வலனையும் விருத்திரனையும் கொன்றவனே {இந்திரா}, பலத்தால் மூன்று உலகங்களுக்கும் தலைவனாக இருக்கும் தகுதி இருந்தும், இன்னொருவனுக்குப் பணியாளாய் இருக்கச் சம்மதித்த எனக்கு இவை அனைத்தும் தகும். {இன்னமும் தகும்}. எனினும், ஓ! மூவுலகங்களின் ஏகாதிபதியே {இந்திரா}, எனது இந்தத் தாழ்மைக்கு விஷ்ணுவே காரணம். ஏனெனில், ஓ! வாசவா {இந்திரா}, நான் உனக்குச் சமமானவனாக இருந்தும், ஓ! தேவர்களின் தலைவா, மூவலகங்களின் அரசுரிமையும் உன்னிடம் இருக்கிறதல்லவா?

உன்னைப்போலவே, நானும் தக்ஷனின் மகளை {வினதையை} [2] எனக்குத் தாயாகவும், காசியபரை எனக்குத் தந்தையாகவும் கொண்டிருக்கிறேன். உன்னைப் போலவே, எந்தக் களைப்பும் இல்லாமல் மூவுலகங்களின் சுமையை என்னாலும் சுமக்க முடியும். எந்த உயிரினத்தாலும் தடுக்கப்பட முடியாத அளவிட முடியாத பலத்தை நானும் கொண்டிருக்கிறேன். தைத்தியர்களுக்கு எதிரான போரில் நானும் பெரும் செயல்களைச் செய்திருக்கிறேன். திதியின் மகன்களில் சுரூதஸ்ரீ, சுரூதசேனன், விவஸ்வான், ரோசனாமுகன், பிரசருதன், காலகாக்ஷன் ஆகியோர் என்னால் கொல்லப்பட்டனர்.

[2] இந்திரனின் தாய், தக்ஷனின் மகளான அதிதி ஆவாள். கருடனின் தாய் தக்ஷனின் இன்னொரு மகளான வினதையாவாள்.

உனது தம்பியுடைய {விஷ்ணுவுடைய} தேரின் கொடிக்கம்பத்தில் அமர்ந்து, நான் அதைக் {அந்தத் தேரைக்} கவனமாகப் போரில் பாதுகாக்கிறேன். சில சமயங்களில், நான் உனது தம்பியை {விஷ்ணுவை} எனது முதுகில் சுமக்கிறேன். இதன்காரணமாகத் தான் நீ என்னை அவமதிக்கிறாயோ? அவ்வளவு பாரமிக்கச் சுமைகளைச் சுமக்கும் வல்லமை இந்த அண்டத்தில் எவனுக்கு இருக்கிறது? எவன் என்னைவிடப் பலவானாக இருக்கிறான்? மேன்மையானவனான நான், உனது தம்பியையும் {விஷ்ணுவையும்}, அவனது நண்பர்களையும் எனது முதுகில் சுமக்கிறேன். எனினும் {நான் மேன்மையானவனாக இருப்பினும்}, எனது முதுகில் தன்னைச் சுமக்கச் செய்து, இதுவரை என்னை அவமதித்து வரும் உனது தம்பியைப் {விஷ்ணுவைப்} போலவே, எனது உணவில் தலையிட்டு, என்னை அவமதித்து, எனது கௌரவத்தை நீ அழித்துவிட்டாய். {என்று இந்திரனிடம் சொன்ன கருடன், பிறகு விஷ்ணுவிடம் திரும்பி}, உன்னைப் பொறுத்தவரை, ஓ! விஷ்ணுவே, அதிதியின் கருவறையில் பிறந்தவர்களான ஆற்றல் மிக்கவர்களும் பலமிக்கவர்களுமான அனைவரைக் காட்டிலும், பலத்தில் நீ மேன்மையானவனாகவே இருக்கிறாய். இருப்பினும், எனது இறகுகளில் ஒன்றைக் கொண்டே, எந்தக் களைப்பையும் அறியாமல், நான் உன்னைச் சுமக்கிறேன். ஓ! சகோதரா {விஷ்ணுவே}, நம்மில் யார் பலவான் என்று ஆற அமர சிந்தித்துப் பார்!" என்றான் {கருடன்}.

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "ஆபத்தை அறிவிக்கின்ற அந்தப் பறவையானவனின் செருக்கு நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட சக்கரந்தாங்கி {விஷ்ணு}, தார்க்ஷியனை {கருடனை} மேலும் தூண்டும்படி, "ஓ! கருடா, மிகப் பலவீனமான நீ, ஏன் உன்னைப் பலவானாகக் கருதிக் கொள்கிறாய்? ஓ முட்டையிடும் இனத்தோனே {கருடா}, எங்கள் முன்னிலையில் இப்படித் தற்பெருமையடித்துக் கொள்வது உனக்குத் தகாது. மூன்று உலகமும் ஒன்று சேர்ந்தாலும் கூட, எனது உடலின் எடையை அவற்றால் தாங்க முடியாது. எனது சொந்த எடையையும், உனது எடையையும் தாங்குவது நானே. இப்போது வா, எனது வலது கரத்தின் எடையைத் தாங்கிவிடு {பார்ப்போம்}. உன்னால் இதை மட்டும் தாங்க முடிந்துவிட்டால், உனது தற்பெருமை அறிவுள்ளதாகக் {சரியானது என்றே} கருதப்படும்" என்றான் {விஷ்ணு}.

இதைச் சொன்ன அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, தனது கரத்தைக் அந்தக் கருடனின் தோள் மீது வைத்தான். பின்னவன் {கருடன்}, அதன் {அக்கரத்தின்} எடையால் பீடிக்கப்பட்டு, வெட்கமடைந்து, புலனுணர்வை இழந்து, கீழே விழுந்தான். மலைகளுடன் கூடிய பூமியின் முழு எடையினளவுக்கு விஷ்ணுவின் ஒரு கரத்து எடையே இருப்பதைக் கருடன் உணர்ந்தான். எனினும், எல்லையில்லா பெரும்பலமுடைய விஷ்ணு, அவனை மிகவும் துன்புறுத்தவில்லை. உண்மையில், அச்யுதன் {விஷ்ணு} அவனது {கருடனின்} உயிரை எடுக்கவில்லை.

அந்த விண்ணதிகாரி {கருடன்}, தாங்கமுடியாத சுமையால் பீடிக்கப்பட்டு, மூச்சுத் திணறி, தனது இறகுகளை உதிர்க்கத் தொடங்கினான். தன் ஒவ்வொரு அங்கமும் பலவீனமடைந்து, முழுதாய் கலக்கமடைந்த கருடன், கிட்டத்தட்ட தன் சுயநினைவையே இழந்தான். அந்தச் சிறகு படைத்த வினதையின் பிள்ளை {கருடன்}, இப்படியே கலக்கமடைந்து, கிட்டத்தட்ட நினைவற்றுப் போய், முழுதும் ஆதரவற்ற நிலையில், தன் சிரம் தாழ்த்தி விஷ்ணுவை வணங்கியபடி, அவனிடம் {விஷ்ணுவிடம்}, "ஓ! ஒப்பற்ற தலைவா, அண்டத்தையே தாங்கும் பலத்தின் சாரம், உனது இந்த உடலிலேயே வசிக்கிறது. எனவே, உனது ஒற்றைக் கரத்தால், உன் விருப்பப்படி நான் பூமியில் நசுக்கப்பட்டேன், அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? ஓ! தெய்வீகத் தலைவா, உனது கொடிக்கம்பத்தில் அமர்பவனும், பலத்தின் செருக்கால் போதையுண்டவனும், தற்போது முழுதும் ஆதரவற்ற நிலையில் இருப்பவனுமான இந்தச் சிறகு படைத்த உயிரினத்தை {கருடனான என்னை} நீ மன்னிப்பதே தகும். ஓ! தெய்வீகத் தலைவா {விஷ்ணுவே}, உனது பெரும் பலத்தை இதற்கு முன்னர் நான் அறிந்ததில்லை. அதன் காரணமாகவே எனது சொந்த பலம் நிகரற்றது என நான் கருதினேன்" என்றான் {கருடன்}.

இப்படிச் சொல்லப்பட்ட ஒப்பற்ற விஷ்ணு, மனம் நிறைந்து, கருடனிடம் பாசத்துடன், "உனது நடத்தை மீண்டும் இது போல ஆகாதிருக்கட்டும்" என்றான். இப்படிச் சொன்ன உபேந்திரன் {விஷ்ணு}, தனது பாதத்தின் கட்டைவிரலால் சுமுகனை கருடனின் மார்பில் தூக்கி எறிந்தான். ஓ! மன்னா {துரியோதனா}, அக்காலம் முதல், கருடன் அந்தப் பாம்புடன் {சுமுகனுடன்} நட்புடன் வாழ்ந்தான். இப்படியே, ஓ! மன்னா {துரியோதனா}, பலவானும், வினதையின் மகனுமான அந்த ஒப்பற்ற கருடன், விஷ்ணுவின் பலத்தால் பீடிக்கப்பட்டு, தனது செருக்கழிந்தான்"

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இதே வழியில், ஓ! காந்தாரியின் மகனே, ஓ மகனே {துரியோதனா}, நீ எவ்வளவு நாள் பாண்டுவின் வீர மகன்களைப் போரில் அணுகாதிருக்கிறாயோ, அவ்வளவு நாள் வாழ்வாய். வாயுவின் பலமிக்க மகனும், அடிப்பவர்களில் முதன்மையானவனுமான பீமனாலும், இந்திரனின் மகனான தனஞ்சயனாலும் {அர்ஜுனனாலும்} போரில் கொல்லப்பட முடியாதவன் எவன் இருக்கிறான்? விஷ்ணு, வாயு, தர்மன், அசுவினிகள் ஆகிய இந்தத் தேவர்களும் கூட உனது எதிரிகளாகவே இருக்கின்றனர். அவர்களோடு நீ மோதுவது இருக்கட்டும், களத்தில் நிற்கும் அவர்களை நீ பார்க்கக்கூடத் திறனற்றவனாவாய்.

எனவே, ஓ! இளவரசே {துரியோதனா}, போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாதே; வாசுதேவன் {கிருஷ்ணன்} மூலமாகச் சமாதானம் ஏற்படட்டும். இப்படியே நீ உனது குலத்தைக் காப்பதே உனக்குத் தகும். இந்தப் பெரும் முனிவரான நாரதர், விஷ்ணுவின் பெருமையை உணர்த்தும் (நான் சொன்ன} அந்தச் சம்பவத்தைத் தனது சொந்தக் கண்களால் கண்டிருக்கிறார். சக்கரத்தையும், கதையையும் தாங்குபவனான அந்த விஷ்ணு இந்தக் கிருஷ்ணனே  ஆவான் என்பதை அறிவாயாக" என்றார் {கண்வர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அந்த முனிவரின் {கண்வரின்} வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், தனது புருவங்களைச் சுருக்கி, பெருமூச்சு விடத்தொடங்கினான். பிறகு, ராதையின் மகன் {கர்ணன்} மீது கண்களைச் செலுத்திய அவன், உரக்கச் சிரித்தான். அந்த முனிவரின் வார்த்தைகளை வீணாகச் செய்தவனும், இழிந்தவனுமான அந்தத் தீயவன் {துரியோதனன்}, யானையின் துதிக்கையைப் போன்றிருந்த தனது தொடையில் அறையத் தொடங்கினான். பிறகு அந்த முனிவரிடம், அவன், "ஓ பெரும் முனிவரே, படைத்தவன் எப்படிப் படைத்தானோ அப்படியே நான் இருக்கிறேன். எது நேருமோ, அது நடந்தே தீரும். எனது வழக்கில் என்ன நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதுவே நடக்க வேண்டும், என்னால் வேறுமாதிரியாகச் செயல்பட முடியாது. எனவே, முட்டாள்தனமான இந்தப் பிதற்றல்களால் {என்னை} என்ன செய்துவிட முடியும்?" என்றான் {துரியோதனன்} [3]

[3] கங்குலி இந்தக் காட்சியை இங்கேயே முடித்து, அடுத்தப் பகுதியில் நாரதர் பேச்சுக்குச் சென்று விடுகிறார். ஆனால் வேறு பதிப்புகளில் இன்னும் ஒரு சம்பவம் இந்தக் காட்சியில் இருக்கிறது. அது பின்வருமாறு.

கோபத்தால் அறிவிழந்து இருக்கும் துரியோதனனைக் கண்ட கண்வர், "நீ இப்படித் தொடையில் அறைந்து கொள்வதால், தொடையொடிந்தே நீ இறப்பாய்" என்று அவனைச் சபித்ததாக வேறு பதிப்புகளில் இப்பகுதி நிறைவடைகிறது.



Wednesday, May 20, 2015

குணகேசியை மணந்த சுமுகன்! - உத்யோக பர்வம் பகுதி 104

Sumukha married Gunakesi! | Udyoga Parva - Section 104 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –33)

பதிவின் சுருக்கம் : ஆர்யகனிடம் நாரதர் மாதலியை அறிமுகப்படுத்தியது; மாதலி தன் மகள் குணகேசியை ஆர்யகனின் பேரன் சுமுகனுக்கு மணமுடித்துக் கொடுக்க விரும்புவதாகச் சொல்வது; கருடன் மீது கொண்ட அச்சத்தால் ஆர்யகன் தயங்கியது; மாதலி சுமுகனையும், ஆர்யகனையும் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றது; அங்கே இந்திரனுடன் விஷ்ணுவையும் காண்பது; இந்திரன் சுமுகனுக்கு நீண்ட ஆயுளை வழங்குவது; சுமுகன் குணகேசி திருமணம் நடந்தேறுவது...

பிறகு நாரதர் {ஆர்யகனிடம்} சொன்னார், "இவன் மாதலி என்ற பெயரையுடைய தேரோட்டியாவான். அது தவிர, இவன் {மாதலி} சக்ரனின் {இந்திரனின்} அன்புக்குரிய நண்பனாவான். தூய்மையான நடத்தை கொண்ட இவன் {மாதலி} அற்புதமான மனநிலையையும், எண்ணற்ற நற்பண்புகளையும் கொண்டிருக்கிறான். மனோபலமும், பெரும் சக்தியும் பலமும் கொண்டவன் இவன். இவன் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நண்பனும், ஆலோசகனும், தேரோட்டியுமாவான். அனைத்துப் போர்களிலும் இவனுக்கும் வாசவனுக்கு {இந்திரனுக்கும்}, ஆற்றல் மற்றும் பலத்தைப் பொறுத்தவரையில் சிறு வித்தியாசமே காணப்பட்டிருக்கிறது.


தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையில் நடைபெற்ற அனைத்துப் போர்களிலும், ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படுவதும், எப்போதும் வெற்றிகரமானதுமான இந்திரனின் தேரை, தனது மனதை மட்டுமே கொண்டு, மாதலியே இயக்கி வருகிறான். இவனது குதிரைகளை ஓட்டும் திறனால், வாசவன் {இந்திரன்} தேவர்களின் பகைவர்களை அடக்கியிருக்கிறான். ஏற்கனவே மாதலியிடம் தோல்வியுற்ற அசுரர்கள், அதன் தொடர்ச்சியாக இந்திரனால் கொல்லப்பட்டார்கள்.

உலகில் ஒப்பற்ற அழகுடன் கூடிய அற்புத மகள் ஒருத்தியை மாதலி கொண்டிருக்கிறான். உண்மைநிறைந்தவளும், அனைத்து குணங்களும் நிரம்பியவளுமான அவள், குணகேசி என்ற பெயரால் அறியப்படுகிறாள். இவன் {மாதலி} தகுந்த மணமகனுக்காக மூவுலகங்களிலும் தேடிக் கொண்டிருந்தான். ஓ! தெய்வீக காந்தியைக் கொண்டவனே {ஆர்யகா}, உனது பேரனான சுமுகன் இவனது {மாதலியின்} மகளுக்கு {குணகேசிக்குத்} தகுந்த கணவனாக இருப்பான்.

ஓ! பாம்புகளில் சிறந்தவனே {ஆர்யகா}, இந்த முன்மொழிவு உனக்கு ஏற்புடையதாக இருப்பின், ஓ! ஆர்யகா, உனது பேரனுக்குரிய பரிசாக இவனது மகளைப் பெற, விரைந்து முடிவெடுப்பாயாக. விஷ்ணுவின் இல்லத்தில் இருக்கும் லட்சுமியைப் போல, அல்லது அக்னியின் இல்லத்தில் உள்ள சுவாகாவைப் போல, கொடியிடை கொண்ட குணகேசி உனது குலத்தில் ஒரு மனைவியாக இருக்கட்டும். எனவே, சச்சியைப் பெறத் தகுந்த வாசவனைப் {இந்திரனைப்} போல இருக்கும் உனது பேரன் {சுமுகன்} குணகேசியை ஏற்கட்டும். இந்த இளைஞன் தனது தந்தையை இழந்திருப்பினும், இவனது நற்குணங்கள், ஐராவதன் மற்றும் உன் மேல் கொண்ட மதிப்பு ஆகியவற்றின் காரணமாகவே நாங்கள் இவனைத் தேர்ந்தெடுத்தோம்.

உண்மையில், சுமுகனின் சிறப்புகள் {புண்ணியங்கள்}, அவனது மனநிலை, தூய்மை, தன்னடக்கம் மற்றும் பிற தகுதிகளின் விளைவாக, மாதலி தனது மகளை அவனுக்குக் கொடுக்க விரும்புகிறான். எனவே, நீ மாதலியைப் பெருமைப்படுத்துவதே தகும்" என்றார் {நாரதர்}.

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "நாரதரால் இப்படிச் சொல்லப்பட்ட ஆர்யகன், தனது பேரன் {சுமுகன்} மணமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டு, தனது மகனின் மரணத்தையும் நினைத்து, ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாலும், துயரத்தாலும் நிறைந்தான். அவன் {ஆர்யகன்} நாரதரிடம், "ஓ! தெய்வீக முனிவரே {நாரதரே}, குணகேசியை மருமகளாக்கிக் கொள்ள நான் எப்படி விரும்ப முடியும்? ஓ! பெரும் முனிவரே, இதனால், உமது வார்த்தைகளை நான் உயர்வாக மதிக்கவில்லை என்றாகாது. ஏனெனில், இந்திரனின் நண்பனுடன் {மாதலியுடன்} சம்பந்தம் வைத்துக் கொள்ள எவன்தான் விரும்பமாட்டான்?

எனினும், ஓ! பெரும் முனிவரே, உறுதியற்ற தன்மையின் விளைவால் அந்தச் சம்பந்தம் வெகுநாளைக்கு நீடிக்காது என்பதாலேயே நான் தயங்குகிறேன். ஓ! பெரும் பிரகாசம் கொண்டவரே, இந்த இளைஞனைப் படைத்த எனது மகன் {சிகுரன்}, கருடனால் விழுங்கப்பட்டுவிட்டான். நாங்கள் அதன் காரணமாகத் துயரத்தில் இருக்கிறோம். ஓ! தலைவா {நாரதரே}, ஆனால் அதற்கு மேலும் மோசமான நிலையென்னவென்றால், அந்த வினதையின் மகன் {கருடன்} இந்தப் பகுதியை விட்டுச் செல்லும்போது, "ஒரு மாதத்திற்குப் பிறகு நான் இந்தச் சுமுகனையும் விழுங்குவேன்" என்றான். அவன் {கருடன்} சொன்னது போலவே அது நிச்சயம் நடக்கும். ஏனெனில் நாங்கள் யாரைச் சமாளிக்க வேண்டும் என்று நாங்கள் அறிவோம். சுபர்ணனின் {கருடனின்} இவ்வார்த்தைகளால் நாங்கள் மகிழ்ச்சியற்றுப் போனோம்" என்றான் {ஆர்யகன்}.

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "பிறகு மாதலி ஆர்யகனிடம், "நான் ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறேன். இந்த உனது பேரன் {சுமுகன்}, என்னால் எனது மருமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். என்னுடனும் நாரதருடனும் இந்த நாகன் {சுமுகன்} சொர்க்கத்தின் தலைவனான தேவர்களின் தலைவனிடம் {இந்திரனிடம்} வரட்டும். பிறகு நான் சுபர்ணனின் {கருடனின்} வழியில் தடைகளை உண்டாக்க முயல்வேன். நீ அருளப்பட்டிருப்பாயாக. எனவே, ஓ! நாகா {ஆர்யகா}, தேவர்கள் தலைவனின் முன்னிலைக்குச் சுமுகன் என்னுடன் வரட்டும்" என்றான் {மாதலி}. இதைச் சொன்ன அவர்கள் சுமுகனைத் தங்களோடு அழைத்துச் சென்றனர். பெரும் பிரகாசத்துடன் கூடிய அந்த நால்வரும், விண்ணுலகம் வந்து, பெரும் புகழுடன் அமர்ந்திருந்த தேவர்கள் தலைவனான சக்ரனைக் {இந்திரனைக்} கண்டனர். நான்கு கரங்களைக் கொண்ட ஒப்பற்ற விஷ்ணுவும் அந்த இடத்தில் இருக்கும்படி அப்போது நேர்ந்தது. பிறகு, நாரதர் மாதலியையும் அவனது {மணமகன்} தேர்வையும் குறித்த முழுக் கதையையும் சொன்னார்."

கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "நாரதர் சொன்ன அனைத்தையும் கேட்ட விஷ்ணு, அண்டத்தின் தலைவனான புரந்தரனிடம் {இந்திரனிடம்}, "இந்த இளைஞனுக்கு {சுமுகனுக்கு} அமிர்தம் கொடுக்கப்படட்டும், இவனும் தேவர்களைப் போல இறவாதவனாகட்டும். ஓ! வாசவா {இந்திரா}, மாதலி, நாரதர், சுமுகன் ஆகிய அனைவரின் விருப்பமும் உனது அருளால் நிறைவேறட்டும்" என்றான்.

எனினும், வினதை மகனின் {கருடனின்} ஆற்றலை எண்ணிய புரந்தரன் {இந்திரன்}, விஷ்ணுவிடம், "உன்னாலேயே அமிர்தம் அவனுக்கு வழங்கப்படட்டும்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட விஷ்ணு, "அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்துக்கும் தலைவன் நீ. ஓ தலைவா {இந்திரா}, உன்னால் கொடுக்கப்படும் பரிசை மறுப்பவன் எவன் இருக்கிறான்?" என்றான்.

{விஷ்ணுவின்} இந்த வார்த்தைகளால் சக்ரன் அந்த நாகனுக்கு {சுமுகனுக்கு} நீண்ட ஆயுளைக் கொடுத்தான். வலனையும் விருத்திரனையும் கொன்றவனான அவன் {இந்திரன்}, அவனை {சுமுகனை} அமிர்தத்தைக் குடிக்கச் செய்யவில்லை. {நீண்ட ஆயுளெனும்} அந்த வரத்தைப் பெற்ற சுமுகன், தனது முகத்தில் மகிழ்ச்சியின் அறிகுறிகளைப் பரவவிட்டதால், (உண்மையிலேயே) அவன் சுமுகன் [1] ஆனான். மாதலியின் மகளை {குணகேசியைத்} திருமணம் செய்து கொண்ட அவன் {சுமுகன்}, மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பினான். தங்கள் நோக்கம் நிறைவேறிய நாரதரும், ஆர்யகனும் மகிழ்ச்சியால் நிறைந்து, பெருமைமிக்கத் தேவர்கள் தலைவனை {இந்திரனை} வழிபட்டுவிட்டுத் தங்கள் வழியே சென்றனர்" என்றார் {கண்வர்}.

[1] அழகிய அற்புதமான முகம் கொண்டவன் என்று பொருள்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்