Desire, wrath and cupidity! | Shanti-Parva-Section-295 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் பர்வம் - 122) (பராசர கீதை - 5)
பதிவின் சுருக்கம் : மனிதர்களின் உடலுக்குள் புகுந்து காமம், குரோதம் மற்றும் லோபத்தைத் தூண்டிய அசுரர்கள்; சிவனிடம் தேவர்கள் செய்த முறையீடு; முப்புரமெரித்த சிவன்; சப்தரிஷிகளில் இருந்து ஆட்சியாளர்கள் தோன்றியது; பூமியில் மீண்டும் அறம் தழைத்தது ஆகியவற்றை ஜனகனுக்குச் சொன்ன பராசரர்...

பராசரர் {ஜனகனிடம்}, "கொடையேற்பதன் மூலம் பிராமணனாலும், போரில் வெல்லப்பட்ட வெற்றியால் க்ஷத்திரியனாலும், தன் வகைக்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் வைசியனாலும், பிற மூன்று வகையினருக்கும் தொண்டு செய்வதன் மூலம் சூத்திரனாலும் ஈட்டப்படும் செல்வம், அளவில் சிறியதாக இருப்பினும் புகழத் தக்கதாகும். மேலும் அறமீட்டுவதில் செலவிடப்படும்போது, பெரும் நன்மைகளை அது விளைவிக்கும். பிற மூன்று வகையினருக்கும் சூத்திரனே நிலையான தொண்டாற்றுபவனாகச் சொல்லப்படுகிறான்.(2) வாழ்வின் அழுத்தத்தில், ஒரு பிராமணன் க்ஷத்திரிய, வைசிய வகைகளின் கடமைகளைச் செய்தால், அவன் அறத்தில் இருந்து வீழ்ந்தவனாக மாட்டான். எனினும், ஒரு பிராமணன் தாழ்ந்த வகையின் {சூத்திரனின்} கடமைகளைச் செய்யும்போது, நிச்சயம் அவன் வீழவே செய்கிறான்.(3) ஒரு சூத்திரன், பிற மூன்று வகையினரிடம் செய்யும் தொண்டில் இருந்து வாழ்வாதாரத்தை ஈட்டமுடியவில்லையெனில், விதிப்படியே அவன் வணிகம், கால்நடை வளர்த்தல், சிற்பக் கலைகள் ஆகிவற்றைப் பின்பற்றலாம்.(4) உலகில் நிந்திக்கத்தக்கவையாகக் கருதப்படுபவையான அரங்க நாடகங்களில் தோன்றுதல், பல்வேறு வடிவங்களில் வேடந்தரித்தல், பதுமையாட்டம் {பொம்மலாட்டம்}, மது மற்றும் இறைச்சி விற்பனை, இரும்பு மற்றும் தோல் விற்பனை ஆகிய தொழில்களில் ஏற்கனவே ஈடுபடாத {தன் முன்னோர்கள் செய்யாத மேற்கண்ட தொழில்களில் இதுவரை ஈடுபடாத} ஒருவன், தன் வாழ்வாதரத்தை ஈட்டுவதற்காக அவற்றை ஒருபோதும் செய்யக்கூடாது. இவற்றில் ஈடுபடுவோர், அவற்றைக் கைவிட்டால் பெரும் தகுதியை ஈட்டலாம் என்றே நாம் கேள்விப்படுகிறோம்.(5,6)