The gold in Munjaban! | Aswamedha-Parva-Section-08 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : இமயத்தில் உள்ள முஞ்சவான் மலையில் இருக்கும் தங்கத்தைக் குறித்து மருத்தனுக்குச் சொன்ன ஸம்வர்த்தர்; அங்கே சென்று சிவனைத் துதித்து தங்கத்தை அடைந்த மருத்தன்; கவலையடைந்த பிருஹஸ்பதி; பிருஹஸ்பதியிடம் சென்ற இந்திரன்...
சம்வர்த்தர் {மருத்தனிடம்}, "இமய மலையின் உச்சியில் முஞ்சவான் என்ற பெயரில் ஒரு சிகரம் இருக்கிறது. அங்கே உமையின் துதிக்கத்தக்க தலைவன் (மஹாதேவன்) தொடர்ந்து தவம் செய்து கொண்டிருக்கிறான். வலிமைமிக்கவனும், வழிபடத்தகுந்தவனும், பெரும் பலம் கொண்டவனுமான அந்தத் தேவன் திரிசூல தாரியாக, பல வகைப் பூதகணங்களால் சூழப்பட்டவனாக, அங்கே பெரும் காட்டு மரங்களின் நிழலிலோ, குகைகளிலோ, அந்தப் பெரும் மலையின் முரட்டுச் சிகரங்களிலோ தன் மனைவியான உமையுடன் தன் விருப்பம் போல் திரிந்து கொண்டிருக்கிறான்.(2,3) ருத்திரர்கள், ஸாத்யர்கள், விஷ்வேதேவர்கள், வசுக்கள், யமன், வருணன், தன் பணியாட்களுடன் கூடிய குபேரன்,(4) பூதங்கள், பிசாசங்கள், அஸ்வினி தேவர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், யக்ஷர்கள், தெய்வீக முனிவர்கள்,(5) சூரிய தேவர்கள் {ஆதித்யர்கள்}, காற்றுகளுக்குத் தலைமை தாங்கும் தேவர்கள் {மருத்துகள்}, அனைத்து வகையான ராட்சசர்கள் ஆகியோர் அங்கே பல்வேறு பண்புகளைக் கொண்டவனும், உயர்ந்த ஆன்மாவுமான உமையின் தலைவனை வழிபடுகின்றனர்.(6)