Friday, March 31, 2017

பாசறையை அடைந்த யுதிஷ்டிரன்! - கர்ண பர்வம் பகுதி – 63

Yudhishthira repaired to the Pandava camp! | Karna-Parva-Section-63 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கணைகளால் சிதைக்கப்பட்டுப் பாண்டவப் பாசறையை நோக்கி சென்று கொண்டிருந்த யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்று தாக்கிய கர்ணன்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்று, அவனது தலைப்பாகையையும் வீழ்த்திய கர்ணன்; சகாதேவனின் தேரில் ஏறிக்கொண்ட நகுலனும், யுதிஷ்டிரனும்; யுதிஷ்டிரனைவிட்டு அர்ஜுனனைத் தாக்குமாறு கர்ணனிடம் சொன்ன சல்லியன்; யுதிஷ்டிரனையே தொடர்ந்து தாக்கிய கர்ணன்; பீமனிடம் துரியோதனன் சிக்கியிருப்பதைக் கர்ணனுக்கு உணர்த்திய சல்லியன்; யுதிஷ்டிரனை விட்டகன்று பீமனிடம் சென்ற கர்ணன்; யுதிஷ்டிரனைப் பாசறையில் விட்டுவிட்டுப் பீமனிடம் திரும்பிய நகுலனும், சகாதேவனும்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் கர்ணன், தன் முன்னே நின்றவர்களும் வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தக் கைகேயர்களைத் தன் கணைமாரிகளால் பீடிக்கத் தொடங்கினான்.(1) உண்மையில், அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன்னை அந்தப் போரில் தடுத்துக் கொண்டிருந்த அந்தப் போர்வீரர்களில் ஐநூறு பேரை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(1) அந்தப் போரில் தடுக்கப்பட முடியாதவனாக இருக்கும் ராதையின் மகனைக் {கர்ணனைக்} கண்ட அந்தப் போர்வீரர்கள், தங்களைத் தாக்குபவனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, பீமசேனனின் முன்னிலையை வந்தடைந்தனர்.(3) அந்தத் தேர்ப்படையைத் தன் கணைகளால் பல பகுதிகளாகப் பிளந்த கர்ணன், ஒரே தேரில் தனியொருவனாகச் சென்று, கணைகளால் அதிகம் சிதைக்கப்பட்டவனும், கிட்டத்தட்ட உணர்வை இழந்திருந்தவனும், தன் இரு பக்கங்களிலும் நகுலன் மற்றும் சகாதேவனை நிறுத்திக் கொண்டு பாண்டவப் பாசறையை அடைவதற்காக மெதுவாகச் சென்று கொண்டிருந்தவனுமான யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்தான்.(4,5)

கர்ணனிடம் புறமுதுகிட்ட யுதிஷ்டிரன்! - கர்ண பர்வம் பகுதி – 62

Yudhishthira retreated from Karna! | Karna-Parva-Section-62 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை முற்றுகையிட்ட துரியோதனன்; யுதிஷ்டிரனை மீட்க விரைந்த பாண்டவப் படை; அந்தப் பாண்டவப் படை முழுவதையும் தனியொருவனாகத் தடுத்த கர்ணன்; சகாதேவனால் தாக்கப்பட்ட துரியோதனன்; சினம் கொண்ட கர்ணன் பாண்டவத் துருப்புகளை விரட்டியது; யுதிஷ்டிரனைத் தாக்கிய கர்ணன்; கௌரவப் படையைப் பிளந்த யுதிஷ்டிரன்; கர்ணனால் தாக்கப்பட்டு அவனிடம் இருந்து பின்வாங்கிச் சென்ற யுதிஷ்டிரன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது அந்த அழகிய அர்ஜுனன், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், நாராயணனாலேயே {கிருஷ்ணனால்} செலுத்தப்பட்டதுமான அந்த முதன்மையான தேரில் {அங்கே} காட்சியளித்தான்.(1) பெருங்கடலைக் கலங்கடிக்கும் சூறாவளியைப் போல, ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, விஜயன் {அர்ஜுனன்} அந்தப் போரில் குதிரைவீரர்கள் நிறைந்த உமது படையைக் கலங்கடித்தான்.(2) வெண்குதிரைகளைக் கொண்டவனான அர்ஜுனன் வேறு காரியத்தில் {போரில்} ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, உமது மகன் துரியோதனன், சினத்தால் நிறைந்து, பழிவாங்கும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டு, தன் துருப்புகளில் பாதி அளவு சூழச் சென்று, முன்னேறி வந்து கொண்டிருந்த யுதிஷ்டிரனைத் திடீரென முற்றுகையிட்டான்.(3) பிறகு அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, எழுபத்துமூன்று கத்தி தலைக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்தான். இதனால் கோபத்தால் தூண்டப்பட்டவனும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரன்,(4) முப்பது அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} உமது மகனை {துரியோதனனை} வேகமாகத் தாக்கினான். அப்போது, யுதிஷ்டிரனைப் பிடிப்பதற்காகக் கௌரவத் துருப்புகள் மிக வேகமாக விரைந்தன.(5)

Thursday, March 30, 2017

பீமனின் அருஞ்செயல்கள்! - கர்ண பர்வம் பகுதி – 61

The feats of Bhima! | Karna-Parva-Section-61 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : பீமனிடம் இருந்து தப்பி ஓடிய படையை மீண்டும் அணிதிரட்டிய கர்ணன்; கர்ணனுடன் மோதிய சிகண்டி, குதிரைகளையும், சாரதியையும் இழந்து தப்பி ஓடியது; திருஷ்டத்யும்னனுடன் வீரமாகப் போரிட்ட துச்சாசனன்; விருஷசேனனுடன் மோதிய நகுலன்; உலூகனை விரட்டிய சகாதேவன்; சகுனியை எளிதாக வென்ற சாத்யகி; பீமனிடம் புறமுதுகிட்ட துரியோதனன்; கிருபரிடம் இருந்து பின்வாங்கிச் சென்ற யுதாமன்யு; கிருதவர்மனால் விரட்டப்பட்ட உத்தமௌஜஸ்; யானைப் படையைக் கலங்கடித்து, தேர்வீரர்களைப் புறமுதுகிடச் செய்து, ருத்திரனைப் போலத் தெரிந்த பீமசேனன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பீமனும், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதும், என் துருப்புகள் பாண்டுக்களாலும், சிருஞ்சயர்களாலும் கொல்லப்படும் போதும்,(1) உண்மையில் என் பரந்த படையானது, பிளக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் உற்சாகத்தை இழந்தபோதும், ஓ! சஞ்சயா, கௌரவர்கள் என்ன செய்தனர் என்று எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(2)

Wednesday, March 29, 2017

கிருஷ்ணனின் நேரடிப் போர் வர்ணனை! - கர்ண பர்வம் பகுதி – 60

Live war commentary of Krishna! | Karna-Parva-Section-60 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களிடம் செல்லுமாறு சொன்ன அர்ஜுனனுக்கு யுதிஷ்டிரனின் நிலையைச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணன்; போரை நேரடியாக வர்ணித்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைக் காத்து நின்ற சாத்யகியும், பீமனும்; ஒருவேளை யுதிஷ்டிரர் இறந்திருக்கக்கூடும் என்று ஐயமெழுப்பிய கிருஷ்ணன்; பீமனின் வீரத்தை எடுத்துரைத்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரன் உயிரோடுதான் இருக்கிறான் என ஐயந்தெளிந்த கிருஷ்ணன்; நிஷாத இளவரசன் ஒருவனைக் கொன்ற பீமன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் குந்தியின் மகனான பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குச்} சுட்டிக் காட்டிய கிருஷ்ணன், அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(2) “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கவர்களும், தார்தராஷ்டிரர்களில் பெரும் வில்லாளிகளுமான பலர், அதோ உன் அண்ணனை (யுதிஷ்டிரரைப்) பின்தொடர்ந்து செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் அவரைக் கொல்லும் விருப்பத்தைக் கொண்டவர்களாவர்.(2) போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களும் வலிமைமிக்கவர்களுமான பாஞ்சாலர்கள், உயர் ஆன்ம யுதிஷ்டிரரை மீட்கும் விருப்பத்தால் அவரை நோக்கிச் செல்கின்றனர்.(3) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, மொத்த உலகின் மன்னனான துரியோதனன், கவசம்பூண்டு, பெரும்படை ஒன்றின் துணையுடன் அதோ பாண்டவ மன்னரை {யுதிஷ்டிரரைப்} பின்தொடர்ந்து செல்கிறான்.(4) தன் எதிராளியைக் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்கத் துரியோதனன், ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, நஞ்சுமிக்கப் பாம்புகளின் தீண்டலையுடைய ஆயுதங்களைக் கொண்டவர்களும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான தன் தம்பிகளின் துணையுடன் அவரைப் பின்தொடர்ந்து செல்கிறான்.(5)

Tuesday, March 28, 2017

மீண்டும் அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன்! - கர்ண பர்வம் பகுதி – 59

Arjuna made Ashwatthama to swoon once again! | Karna-Parva-Section-59 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : தனியனான கர்ணனுக்கும், பாண்டவப் படையினருக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்த போர்; திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்த கர்ணன்; கர்ணனைத் தடுத்த சாத்யகி; திருஷ்டத்யும்னனை எதிர்த்து வந்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனும், திருஷ்டத்யும்னனும் கடுமொழியில் பேசிக் கொண்டது; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைத் தேரற்றவனாகச் செய்து, அவனைக் கொல்வதற்காக இழுத்துச் சென்ற அஸ்வத்தாமன்; அந்தக் காட்சியைக் காட்டி, அஸ்வத்தாமனிடம் இருந்து திருஷ்டத்யும்னனைக் காக்குமாற அர்ஜுனனிடம் சொன்ன கிருஷ்ணன்; அஸ்வத்தாமனைத் தாக்கிய அர்ஜுனன்; மீண்டும் தேரில் ஏறிய அஸ்வத்தாமன்; திருஷ்டத்யும்னனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட சகாதேவன்; அர்ஜுனனால் தாக்கப்பட்டு மீண்டும் மயக்கமடைந்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைக் களத்தைவிட்டுக் கொண்டு சென்ற அவனது சாரதி; மீண்டும் சம்சப்தகர்களை நோக்கிச் செல்ல விரும்பிய அர்ஜுனன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில், யுதிஷ்டிரனின் தலைமையில் பார்த்தர்களும், சூதன் மகன் {கர்ணன்} தலைமையில் நாங்களும் இருந்தபோது, குருக்களும், சிருஞ்சயர்களும் அச்சமில்லாமல் ஒருவரோடொருவர் மீண்டும் மோதிக் கொண்டனர்.(1) அப்போது, கர்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில், யமனின் அரசாங்கத்தைப் பெருகச் செய்வதும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதுமான ஒரு பயங்கரமான போர் தொடங்கியது.(2) துணிச்சல்மிக்கச் சம்சப்தகர்களில் சொற்பமானவர்களே கொல்லப்படாமல் எஞ்சிய போது, குருதிப்புனலை உண்டாக்கிய அந்த மூர்க்கமான போர் தொடங்கியதும்,(3) ஓ! ஏகாதிபதி (திருதராஷ்டிரரே}, (பாண்டவத் தரப்பு) மன்னர்கள் அனைவருடன் கூடிய திருஷ்டத்யும்னன், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள் ஆகியோர் அனைவரும் கர்ணனை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.(4) பெரும் அளவிலான நீர்த்தாரைகளை ஏற்கும் மலையைப் போல எவரின் துணையும் இல்லாத கர்ணன், மகிழ்ச்சியால் நிறைந்தவர்களும், வெற்றிக்காக ஏங்கியவர்களும், அந்தப் போரில் முன்னேறி வருபவர்களுமான அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் {தனியாக} எதிர்கொண்டான்.(5) கர்ணனோடு மோதிய அந்த வலிமைமிக்க வீரர்கள், மலையுடன் மோதி அனைத்துப் பக்கங்களிலும் சிதறும் நீர்த்திரள்களைப் போலச் சிதறி பிளந்தனர்.(6) எனினும், அவர்களுக்கும், கர்ணனுக்கும் இடையில் நடந்த அந்தப் போர் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

களநிலவரம் விவரித்த கிருஷ்ணன்! - கர்ண பர்வம் பகுதி – 58

Krishna’s description of the field situation! | Karna-Parva-Section-58 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைக் குறித்துக் கவலையடைந்த அர்ஜுனன் அதைக் கிருஷ்ணனிடம் தெரிவிப்பது; கள நிலவரத்தை அர்ஜுனனுக்கு எடுத்துரைத்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனிடம் செல்லுமாறு கிருஷ்ணனைத் தூண்டிய அர்ஜுனன்; களநிலவரத்தை மீண்டும் விவரித்தபடியே யுதிஷ்டிரன் இருக்குமிடத்திற்குத் தேரைச் செலுத்திய கிருஷ்ணன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அர்ஜுனன், கர்ணன் மற்றும் பாண்டுவின் மகனான பீமசேனன் ஆகியோர் கோபத்தை அடைந்தபோது பூமியின் தலைவர்களுக்கு இடையே நடந்த அந்தப் போரானது இவ்வாறே நடந்தது.(1) துரோணர் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, பெரும் தேர்வீரர்களான பிறரையும் வென்ற அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(2) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, பாண்டவப் படை தப்பி ஓடுவதைப் பார். இந்தப் போரில் கர்ணன், நமது பெரும் தேர்வீரர்களைக் கொல்வதைப் பார்.(3) ஓ! தசார்ஹ குலத்தோனே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரை நான் காணவில்லை. மேலும், ஓ! போர்வீரர்களின் முதன்மையானவனே, தர்மன் மகனின் {யுதிஷ்டிரரின்} கொடிமரத்தையும் காணவில்லை.(4) ஓ! ஜனார்த்தனா, நாளின் மூன்றாவது பகுதி இன்னும் இருக்கிறது. தார்தராஷ்டிரர்களில் எவரும் என்னை எதிர்த்துப் போரிட வரவில்லை.(5) 

Monday, March 27, 2017

அஸ்வத்தாமனின் சபதம்! - கர்ண பர்வம் பகுதி – 57

The oath by Ashwatthama! | Karna-Parva-Section-57 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கௌரவர்களுக்கு உற்சாகமளித்த துரியோதனன்; திருஷ்டத்யும்னன் செய்த அநீதியை நினைவுகூர்ந்த அஸ்வத்தாமன் ஒரு சபத்தைச் செய்தது; போர்க்களத்தின் முதன்மையான போர்வீரர்களைக் காண வந்த தேவர்களும், அப்சரஸ்களும்; அப்சரஸ்கள் சிந்திய தெய்வீக நறுமணத்தை நுகர்ந்த வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு இறந்தது; மூர்க்கமடைந்த போர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது துரியோதனன், ஓ! பாரதர்களின் தலைவரே, கர்ணனிடம் சென்று, அவனிடமும், மத்ரர்களின் ஆட்சியாளனிடமும், அங்கே இருந்த பூமியின் தலைவர்களிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “எம்முயற்சியும் செய்யாமலேயே சொர்க்கத்தின் வாயில்கள் அகலத் திறந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பமானது {நமக்கு} வாய்த்திருக்கிறது. ஓ! கர்ணா, இத்தகு போரை அடைந்த க்ஷத்திரியர்கள் மகிழ்ச்சியையே அடைகிறார்கள்.(2) ஓ! ராதையின் மகனே {கர்ணா}, வலிமையிலும், ஆற்றலிலும் தங்களுக்கு நிகரான துணிச்சல்மிக்க க்ஷத்திரியர்களுடன் போரிடும் அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் பெரும் நன்மையையே அடைகிறார்கள். இந்தச் சந்தர்ப்பம் அவ்வாறே வாய்த்திருக்கிறது.(3) இந்தத் துணிச்சல்மிக்க க்ஷத்திரியர்கள் போரில் பாண்டவர்களைக் கொன்று அகன்ற பூமியை அடையட்டும், அல்லது எதிரியால் போரில் கொல்லப்பட்டு, வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அருள் உலகங்களை வெல்லட்டும்” என்றான் {துரியோதனன்}.(4) துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த க்ஷத்திரியக் காளைகள், உற்சாக நிறைவுடன் உரத்த முழக்கங்களைச் செய்து, தங்கள் இசைக்கருவிகளை இசைத்து, முழக்கினர்.(5)

Sunday, March 26, 2017

அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன்! - கர்ண பர்வம் பகுதி – 56

Arjuna made Ashwatthama to swoon! | Karna-Parva-Section-56 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : அர்ஜுனன், பீமன் மற்றும் கர்ணன் ஆகியோர் ஏற்படுத்திய பேரழிவு; நகுலன் மற்றும் சகாதேவனோடு போரிட்ட துரியோதனன்; துரியோதனனைத் தடுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனின் வில்லை மீண்டும் மீண்டும் அறுத்த துரியோதனன்; துரியோதனனைத் தேரற்றவனாகச் செய்த திருஷ்டத்யும்னன்; துரியோதனைக் காத்த தண்டதாரன்; பாஞ்சாலத் தலைவர்களைக் கொன்ற கர்ணன்; கர்ணனோடு போரிட முன்னேறிய யுதிஷ்டிரன்; கர்ணனைத் தாக்கிய பாண்டவக்கூட்டம்; பீமனைக் கண்ட அச்சத்தால் உயிரைவிட்ட தேர்வீரர்கள்; சம்சப்தகர்களை வென்ற அர்ஜுனன்; கௌரவப் படையை அழித்த அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அர்ஜுனனைத் தடுத்த அஸ்வத்தாமன்; அர்ஜுனனை விஞ்சி நின்ற அஸ்வத்தாமன்; அர்ஜுனனைக் கண்டித்த கிருஷ்ணன்; அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன்; காயம் காரணமாக வெகுதூரம் விலகிச் சென்று ஓய்வெடுத்த யுதிஷ்டிரன்


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதே வேளையில் வைகர்த்தனன் {கர்ணன்}, பாஞ்சாலர்களாலும், சேதிகளாலும், கைகேயர்களாலும் ஆதரிக்கப்பட்ட பீமசேனனைத் தடுத்துக் கணைகள் பலவற்றால் அவனை மறைத்தான்.(1) அந்தப் போரில் பீமன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சேதிகள், காருஷர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகியோரில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைக் கர்ணன் கொன்றான்.(2) அப்போது பீமசேனன், தேர்வீரர்களில் சிறந்தவனான கர்ணனைத் தவிர்த்துவிட்டு, உலர்ந்த புற்களை நோக்கிச் செல்லும் சுடர்மிக்க நெருப்பைப் போலக் கௌரவத் துருப்புகளை எதிர்த்துச் சென்றான்.(3) சூதன் மகனும் {கர்ணனும்} அந்தப் போரில் பாஞ்சாலர்கள், கைகேயர்கள் மற்றும் சிருஞ்சயர்களில் ஆயிரக்கணக்கான வலிமைமிக்க வில்லாளிகளைக் கொல்லத் தொடங்கினான்.(4) உண்மையில், மூன்று வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தன் {அர்ஜுனன்}, விருகோதரன் {பீமன்} மற்றும் கர்ணன் ஆகியோர் முறையே சம்சப்தகர்கள், கௌரவர்கள் மற்றும் பாஞ்சாலர்களைக் கொல்லத் தொடங்கினர்.(5) உமது தீய கொள்கையின் {ஆலோசனைகளின்} விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் அந்த மூன்று பெரும் போர்வீரர்களின் சிறந்த கணைகளால் எரிக்கப்பட்டு, அந்தப் போரில் அழியத் தொடங்கினர்.(6)

Saturday, March 25, 2017

யுதிஷ்டிரனோடு மோதிய அஸ்வத்தாமன்! - கர்ண பர்வம் பகுதி – 55

Ashwatthama encountered Yudhishthira! | Karna-Parva-Section-55 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : நன்கு பாதுகாக்கப்பட்ட யுதிஷ்டிரனை உற்சாகமாக எதிர்த்துச் சென்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைத் தாக்கிய சாத்யகியும், திரௌபதியின் மகன்களும்; பதிலுக்கு அவர்களைத் தாக்கிய அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த சாத்யகி; சாத்யகியின் சாரதியைக் கொன்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனிடம் பேசிய யுதிஷ்டிரன் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றது; அஸ்வத்தாமனும் விலகிச் சென்றது; கௌரவப் படையை எதிர்த்துச் சென்ற யுதிஷ்டிரன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சிநியின் பேரனாலும் {சாத்யகியாலும்} திரௌபதியின் வீர மகன்களாலும் பாதுகாக்கப்பட்ட யுதிஷ்டிரனைக் கண்டு, மன்னனை {யுதிஷ்டிரனை} உற்சாகமாக எதிர்த்துச் சென்று,(1) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கடுங்கணைகள் பலவற்றை இறைத்தபடியே, தன் தேரில் பல்வேறு வழிமுறைகளையும், தான் அடைந்த பெரும் திறனையும், தனது அதீத கரநளினத்தையும் வெளிக்காட்டினான்.(2) தெய்வீக ஆயுதங்களின் சக்தியால் ஈர்க்கப்பட்ட கணைகளைக் கொண்டு மொத்த ஆகாயத்தையே அவன் {அஸ்வத்தாமன்} நிறைத்தான்.(3) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளால் ஆகாயம் மறைக்கப்பட்டதால் எதையும் காண முடியவில்லை. அஸ்வத்தாமனுக்கு முன்பு இருந்த பரந்த வெளியானது, கணைகளின் ஒரே பரப்பாக ஆனது.(4) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அடர்த்தியான கணைமாரியால் இவ்வாறு மறைக்கப்பட்ட ஆகாயமானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, தங்கத்தால் சித்திர வேலைப்பாடு செய்யப்பட்ட கூடாரம் ஒன்று அங்கே விரிக்கப்பட்டதைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(5) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பிரகாசமான கணைமாரியால் மறைக்கப்பட்ட ஆகாயத்தில், மேகங்களைப் போன்ற ஒரு நிழல் அந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றியது.(6) இவ்வாறு கணைகளின் ஒரே பரப்பாக இருந்த வானத்தில் வானுலாவும் உயிரினமேதும் பறக்க முடியாததை அற்புதம் நிறைந்த காட்சியாக நாங்கள் கண்டோம்.(7)

Friday, March 24, 2017

சுகேதுவைக் கொன்ற கிருபர்! - கர்ண பர்வம் பகுதி – 54

Kripa killed Suketu! | Karna-Parva-Section-54 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : சிருஞ்சயர்களைக் கொன்ற கிருபர்; கிருபரை எதிர்த்த சிகண்டி; சிகண்டியைத் தேரிழக்கச் செய்த கிருபர்; சிகண்டியைக் காக்க விரைந்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைத் தடுத்த கிருதவர்மன்; சிகண்டியின் கேடயத்தை வெட்டிய கிருபர்; கிருபரை எதிர்கொண்ட பாஞ்சால இளவரசன் சுகேது; பின்வாங்கிய சிகண்டி; சுகேதுவைக் கொன்ற கிருபர்; கிருதவர்மனின் சாரதியை வீழ்த்தி வென்ற திருஷ்டத்யும்னன் கௌரவர்களைத் தடுக்கத் தொடங்கியது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மன், கிருபர், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சூதன் மகன் {கர்ணன்}, உலூகன், சுபலன் மகன் (சகுனி), தன்னுடன் பிறந்த சகோதரர்களுடன் கூடிய மன்னன் {துரியோதனன்} ஆகியோர்,(1) பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} அச்சத்தில் பீடிக்கப்பட்டுப் பெருங்கடலில் உடைந்த மரக்கலமொன்றைப் போல ஒன்றாக நிற்க முடியாத நிலையில் இருக்கும் (குரு) படையைக் கண்டு, பெரும் வேகத்துடன் அதை மீட்க முயன்றனர்.(2) மீண்டும் நடந்த போரானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} ஒரு குறுகிய காலத்திற்கு மிகக் கடுமையானதாகவும், மருண்டோரின் அச்சங்களையும், துணிவுமிக்கோரின் இன்பத்தையும் அதிகரிக்கும் வண்ணம் நடந்தது.(3) அந்தப் போரில் கிருபரால் ஏவப்பட்ட அடர்த்தியான கணை மாரியானது, அடர்த்தியான விட்டிற்பூச்சிகளைப் போலச் சிருஞ்சயர்களை மறைத்தது.(4)

Thursday, March 23, 2017

நாகாஸ்திரம் ஏவிய அர்ஜுனன்! - கர்ண பர்வம் பகுதி – 53

Arjuna sped a weapon called Naga! | Karna-Parva-Section-53 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களோடு போரிட்ட அர்ஜுனன்; நெருக்கமாகப் போரிட்ட அந்தப் போர்வீரர்கள் அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் பிடித்துக் கொண்டது; நாகாஸ்திரத்தை ஏவிய அர்ஜுனன்; அதனால் கட்டுண்ட சம்சப்தகர்கள்; கருடாஸ்திரத்தை ஏவிய சுசர்மன்; சம்சப்தகர்களின் கட்டுகள் விலகியது; ஐந்திராயுதத்தை ஏவி சம்சப்தகர்களை அழித்த அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அச்சம் நிறைந்ததாக அமைந்த போர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “க்ஷத்திரியர்கள் பலர் மூழ்கிக் கொண்டிருந்த அந்தப் போர் நடந்து கொண்டிருக்கும்போது, ஓ! ஐயா, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஆரவாரத்திற்கும் மேலாகக் காண்டீவத்தின் உரத்த நாணொலியானது, சம்சப்தகர்கள், கோசலர்கள், மற்றும் நாராயணப் படைகளைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} எங்குக் கொன்று கொண்டிருந்தானோ, அங்கே கேட்டுக் கொண்டிருந்தது.(1,2) சினத்தால் நிரம்பியும், வெற்றிக்கான விருப்பத்துடனும் இருந்த சம்சப்தகர்கள் அந்தப் போரில் அர்ஜுனனின் தலையில் கணைமாரியைப் பொழியத் தொடங்கினர்.(3) எனினும், பலமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா, அந்தக் கணைமாரியை வேகமாகத் தடுத்து, அந்தப் போரில் தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரைக் கொல்லத் தொடங்கினான்.(4) அந்தத் தேர்ப் படைப்பிரிவுக்குள் மூழ்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, கூராக்கப்பட்டதும், கங்க இறகுகளைக் கொண்டதுமான கணைகளின் உதவியுடன் கூடியவனாகச் சிறந்த ஆயுதங்களைக் கொண்டிருந்த சுசர்மனிடம் வந்தான்.(5)

Wednesday, March 22, 2017

பலவீனமடைந்த கௌரவப் படை! - கர்ண பர்வம் பகுதி – 52

The Kaurava army became strenghless! | Karna-Parva-Section-52 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : இரு படைகளுக்கும் இடையில் நடந்த கடும்போர்; உயிரினங்களின் ருத்ரசூனைக்கு ஒப்பான பயங்கரத்தை அடைந்த போர்க்களம்; நால்வகைப் படைகளும் தங்களுக்குள் மோதிக்கொண்ட விதம்; பலவீனமடைந்த கௌரவப் படை...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் எதிர்த்துப் பகை உணர்வுகளை வளர்த்து வந்தவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான க்ஷத்திரியர்கள், அந்தப் போரில் ஒருவரையொருவர் கொல்லத் தொடங்கினர்.(1) ஓ! மன்னா, தேர்க்கூட்டங்கள், குதிரைகளின் பெரும்படைகள், காலாட்படைப்பிரிவுகள், பெரும் எண்ணிக்கையிலான யானைகள் ஆகியவை அந்தப் போரில் ஒன்றோடொன்று கலந்தன.(2) அந்தப் பயங்கரப் போரில், ஒருவர் மீதொருவர் வீசிக்கொண்ட கதாயுதங்கள், முள் பதித்த தண்டங்கள் {பரிகங்கள்}, குணபங்கள் {சக்திகள்}, வேல்கள் {பராசங்கள்}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, ஏவுகணைகள் {முசுண்டிகள்} ஆகியவை விழுவதை நாங்கள் கண்டோம்.(3) காணப் பயங்கரமான கணைமாரிகள், விட்டிற்பூச்சிகளைப் போலப் பறந்தன. யானைகளை அணுகிய யானைகள், ஒன்றையொன்று முறியடித்தன.(4)

Tuesday, March 21, 2017

பீமனின் பராக்கிரமம்! - கர்ண பர்வம் பகுதி – 51

The prowess of Bhima! | Karna-Parva-Section-51 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கர்ணனைக் காப்பதற்குத் தன் தம்பிகளை அனுப்பிய துரியோதனன்; திருதராஷ்டிரன் மகன்களில் அறுவரைக் கொன்ற பீமன்; பீமனோடு மீண்டும் மோதிய கர்ணன்; பீமனின் வில்லை அறுத்த கர்ணன்; பீமனால் தாக்கப்பட்டு உடல் நடுங்கிய கர்ணன்; பீமனின் கொடிமரம், சாரதி மற்றும் தேரை அழித்த கர்ணன்; தன் கதாயுதத்தால் எழுநூறுக்கும் மேற்பட்ட யானைகளைக் கொன்ற பீமன்; பீமனைக் கண்டு அஞ்சி ஓடிய கௌரவர்கள்; மூவாயிரம் குதிரைவீரர்களைத் தன் கதாயுதத்தாலேயே கொன்ற பீமன்; கர்ணனிடம் இருந்து தப்பி ஓடிய யுதிஷ்டிரன்; கர்ணன் யுதிஷ்டிரனைத் தொடர்வதைத் தடுத்து அவனோடு மோதிய பீமன்; பீமனின் துணைக்கு வந்த சாத்யகி; சூரியன் நடுவானை அடைந்தது...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தக் கர்ணனை நெடுஞ்சாண் கிடையாக அவனது தேரில் கிடக்கச் செய்த பீமனின் சாதனையானது அடைவதற்கு மிக அரிதானது.(1) “சிருஞ்சயர்களோடு சேர்த்துப் பாண்டவர்களைக் கொல்வதற்குக் கர்ணன் ஒருவனே இருக்கிறான்” என்பதையே, ஓ! சூதா {சஞ்சயா}, துரியோதனன் என்னிடம் அடிக்கடி சொல்வது வழக்கம்.(2) எனினும், போரில் இப்போது பீமனால் வீழ்த்தப்பட்ட ராதையின் மகனைக் {கர்ணனைக்} கண்டு, என் மகன் துரியோதனன் அடுத்ததாக என்ன செய்தான்?” என்று கேட்டான்.(3)

Monday, March 20, 2017

கர்ணனை வீழ்த்திய பீமன்! - கர்ண பர்வம் பகுதி – 50

Bhima defeated Karna! | Karna-Parva-Section-50 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : பீமனை எதிர்த்து விரைந்த கௌரவர்கள்; பீமனை நோக்கிச் சென்ற கர்ணன்; யுதிஷ்டிரனைச் சாத்யகியிடமும், திருஷ்டத்யும்னனிடம் அடைக்கலமாய் விட்டுச் சென்ற பீமன்; கர்ணனை எதிர்த்த பீமன்; அர்ஜுனன் வரக்கூடும் என்பதால், பீமனைத் தாக்கப் போவதாகச் சொன்ன கர்ணன்; ஆமோதித்த சல்லியன்; கணைகளால் பீமனின் நடுமார்பைத் தாக்கி அவனது வில்லை அறுத்த கர்ணன்; கர்ணனைக் கொல்ல விரும்பி பீமன் ஏவிய கடுங்கணை ஒன்றால் தாக்கப்பட்டுத் தன் தேரில் மயக்கமடைந்து விழுந்த கர்ணன்; போர்க்களத்தைவிட்டுக் கர்ணனைக் கொண்டு சென்ற சல்லியன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவ வீரர்கள் உமது படையை நோக்கி மூர்க்கமாக விரைவதைக் கண்ட துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, தன் படையின் போர்வீரர்களை {அவர்கள் புறமுதுகிடாதபடி} அனைத்துப் பக்கங்களிலும் தடுத்தான். எனினும், உமது மகன் {துரியோதனன்} தன் குரலின் உச்சியில் கதறினாலும், ஓ! மன்னா, தப்பி ஓடும் அவனது துருப்புகள், ஓடுவதை நிறுத்த மறுத்தன.(1,2) அப்போது அந்தப் படையின் ஒரு சிறகும், அந்தச் சிறகுகளின் எல்லைகளில் இருந்தோரும், சுபலனின் மகன் சகுனியும், கௌரவர்களும், நன்கு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு அந்தப் போரில் பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.(3) மன்னர்கள் அனைவருடன் கூடிய தார்தராஷ்டிரப் படையானது புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்ட கர்ணனும், மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “பீமனை நோக்கித் தேரைச் செலுத்துவீராக” என்றான்.(4) இவ்வாறு கர்ணனால் தூண்டப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அன்னங்களின் வண்ணத்தில் இருந்த அந்த முதன்மையான குதிரைகளை விருகோதரன் {பீமன்} இருக்கும் இடத்தை நோக்கித் தூண்டத் தொடங்கினான்.(5) இவ்வாறு போர்க்கள ரத்தினமான சல்லியனால் தூண்டப்பட்ட அந்தக் குதிரைகள், பீமசேனனின் தேரை அணுகிப் போரில் கலந்தது.(6)

Sunday, March 19, 2017

யுதிஷ்டிரனை எள்ளிநகையாடிய கர்ணன்! - கர்ண பர்வம் பகுதி – 49

Karna mocked disparagingly unto Yudhishthira! | Karna-Parva-Section-49 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை நோக்கி விரைந்த கர்ணன்; கர்ணனை அறைகூவி அழைத்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனால் தாக்கப்பட்டுத் தன் தேரில் மயக்கமடைந்து விழுந்த கர்ணன்; விரைவில் உணர்வு மீண்ட கர்ணன், யுதிஷ்டிரனின் தேர்ச்சக்கரத்தைப் பாதுகாத்த சந்திரதேவன் மற்றும் தண்டதாரன் ஆகியோரைக் கொன்றது; யுதிஷ்டிரனின் மேனியில் கர்ணன் ஆழமான காயத்தை உண்டாக்கியது; பிரம்மாஸ்திரத்தை ஏவிய கர்ணன்; யுதிஷ்டிரனின் வில்லையும் கவசத்தையும் அறுத்த கர்ணன்; கர்ணனை வேல்களால் தாக்கி அவனுக்குக் குருதியைக் கொப்பளிக்க வைத்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் தேரை அழித்த கர்ணன்; புறமுதுகிட்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனைத் தொடர்ந்து சென்று, அவனது தோள்களைத் தீண்டி, எள்ளி நகையாடிய கர்ணன்; யுதிஷ்டிரனை விடுவித்த கர்ணன்; சுரூதகீர்த்தியின் தேரில் ஏறிக் கொண்ட யுதிஷ்டிரன்; போரின் கோரத்தை வர்ணித்த சஞ்சயன்; களத்தில் பாய்ந்த குருதிப்புனல்; திரும்பி வந்த பீமசேனன் மற்றும் சாத்யகியின் தலைமையிலான பாண்டவ வீரர்களிடம் புறமுதுகிட்டோடிய கௌரவப்படை...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவப்படையின் ஊடாகச் சென்ற கர்ணன், ஆயிரக்கணக்கான தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள் ஆகியோரால் சூழப்பட்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான்.(1) எதிரிகளால் தன் மீது ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான ஆயுதங்களைத் தன் நூற்றுக்கணக்கான கடுங்கணைகளால் வெட்டிய விருஷன் {கர்ணன்}, அச்சமில்லாமல் அப்படையைத் துளைத்துச் சென்றான்.(2) உண்மையில், சூதனின் மகன் {கர்ணன்}, தன் எதிரிகளின் தலைகளையும், கரங்களையும், தொடைகளையும் வெட்டினான், அவர்களும் உயிரை இழந்து கீழே பூமியில் விழுந்தனர்.(3) சாத்யகியால் தூண்டப்பட்ட திராவிட, அந்தக, நிஷாத காலாட்படை வீரர்கள், கர்ணனைக் கொல்ல விரும்பி, அந்தப் போரில அவனை நோக்கி மீண்டும் விரைந்தனர்.(4) கரங்கள், தலைக்கவசங்கள் ஆகியவற்றை இழந்து, கர்ணனின் கணைகளால் கொல்லப்பட்ட அவர்கள், (கோடரியால்) வெட்டப்பட்ட சாலமரக் காட்டைப் போல அடுத்தடுத்து கீழே விழுந்தனர்.(5)

Saturday, March 18, 2017

தடுக்கப்பட முடியாத கர்ணன்! - கர்ண பர்வம் பகுதி – 48

The irresistible Karna! | Karna-Parva-Section-48 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்ற கர்ணன், பிரபத்ரகர்கள், பாஞ்சாலர்கள், மற்றும் சேதிகளைக் கொன்றது; கர்ணனின் மகனான பானுசேனனைக் கொன்ற பீமசேனன்; கௌரவர்களைப் பீடித்த பீமன்; கர்ணனின் மற்றொரு மகனான சுஷேணனுக்கும் நகுலசகாதேவர்களுக்கும் இடையில் நடந்த போர்; கர்ணனின் மற்றொரு மகனான விருஷசேனனைத் தேரற்றவனாக, ஆயுதமற்றவனாகச் செய்த சாத்யகி; விருஷசேனனைக் காத்த துச்சாசனன்; துச்சாசனனைத் தேரற்றவனாகச் செய்த சாத்யகி; பாண்டவ வீரர்களைக் கலங்கடித்த கர்ணன், தடுக்கப்பட முடியாதவனாக யுதிஷ்டிரனின் படைப்பிரிவை அடைந்தது; யுதிஷ்டிரனைத் தாக்கிய கர்ணன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “கர்ணன், ஓ! சஞ்சயா, பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் ஊடுருவி, பேரழிவை ஏற்படுத்திய பிறகு, மன்னன் யுதிஷ்டிரனைத் தாக்கிப் பீடித்தது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வாயாக.(1) கர்ணனைத் தடுத்த பார்த்தர்களில் முதன்மையான வீரர்கள் யாவர்? அதிரதன் மகன் {கர்ணன்}, யுதிஷ்டிரனைப் பீடிப்பதில் வெல்வதற்கு முன்னர், அவனால் நொறுக்கப்பட்ட வீரர்கள் யாவர்?” என்று கேட்டான்.(2)

Friday, March 17, 2017

பேரழிவை உண்டாக்கிய கர்ணன்! - கர்ண பர்வம் பகுதி – 47

The great slaughter caused by Karna! | Karna-Parva-Section-47 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களை எதிர்த்துச் சென்ற அர்ஜுனன்; கர்ணனைப் பாதுகாத்த துரியோதனன்; பாஞ்சாலர்களுக்குப் பேரழிவை உண்டாக்கிய கர்ணன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “முறையாக அணிவகுக்கப்பட்ட அந்தப் படைகள் இரண்டும் போரிடுவதற்காக இவ்வாறு ஒன்றுகலந்த போது, ஓ!சஞ்சயா, பார்த்தன் {அர்ஜுனன்} சம்சப்தகர்களையும், கர்ணன் பாண்டவர்களையும் எவ்வாறு எதிர்த்தனர்?(1) உரைப்பதில் திறனுள்ளவனாக நீ இருப்பதால், போர் நிகழ்வுகளை எனக்குச் சொல்வாயாக. போரில் வீரர்களின் ஆற்றல்களைக் குறித்துக் கேட்பதில் நான் எப்போதும் முழு நிறைவையடைவதில்லை” என்று கேட்டான்.(2)

பதினேழாம் நாள் போர்த் தொடக்கம்! - கர்ண பர்வம் பகுதி – 46

The seventeenth day war commenced! | Karna-Parva-Section-46 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : பதினேழாம் நாள் போர் தொடங்கியதும், பாண்டவர்களின் வியூகத்தைக் கண்டு எதிர்வியூகம் அமைத்த கர்ணன், யுதிஷ்டிரனைத் தாக்கி வீழ்த்தியதாகத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்; அர்ஜுனன் இருக்கும்போது கர்ணனால் எவ்வாறு யுதிஷ்டிரனைத் தாக்க முடிந்தது எனச் சஞ்சயனிடம் விசாரித்த திருதராஷ்டிரன்; வியூகங்களில் போர்வீரர்கள் ஏற்ற நிலைகளை வர்ணித்த சஞ்சயன்; அர்ஜனனிடம் பேசிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனுக்கு உறுதியளித்த அர்ஜுனன்; அர்ஜுனனின் தேரைக் கண்ட சல்லியன், அவனது திறனைக் குறித்தும், காணப்படும் தீய சகுனங்களைக் குறித்தும் கர்ணனிடம் சொன்னது; சல்லியனிடம் சம்சப்தகார்களால் மறைக்கப்பட்ட அர்ஜுனனைக் காட்டிய கர்ணன்; அர்ஜுனனை யாராலும் வெல்ல முடியாது என்று சொன்ன சல்லியன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பகைவரின் படைகள் அனைத்தையும் தடுக்கவல்லதும், திருஷ்டத்யும்னனால் அமைக்கப்பட்டதுமான பார்த்தர்களின் ஒப்பற்ற வியூகத்தைக் கண்ட கர்ணன்,(1) சிங்க முழக்கங்களைச் செய்தபடியும், தன் தேரில் உரத்த சடசடப்பொலியை எழுப்பியபடியும் சென்றான். மேலும் அவன் {கர்ணன்}, இசைக்கருவிகளின் உரத்த ஆரவாரத்தால் பூமியை நடுங்கச் செய்தான்.(2) போரில் எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த வீரன் சினத்தில் நடங்குவதாகத் தெரிந்தது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளை எதிர் வியூகத்தில் முறையாக அணிவகுக்கச் செய்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த வீரன் {கர்ணன்},(3) அசுரர் படையைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போலப் பாண்டவப் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கினான். கணைகள் பலவற்றால் யுதிஷ்டிரனைத் தாக்கிய அவன், பாண்டுவின் அந்த மூத்த மகனைத் தன் வலப்புறத்தில் நிறுத்தினான்.”(4)

Wednesday, March 15, 2017

மத்ரகர்களைப் பழித்த கல்மாஷபாதன்! - கர்ண பர்வம் பகுதி – 45

Kalmashapada’s censure of Madrakas! | Karna-Parva-Section-45 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : காந்தாரர்கள், மத்ரகர்கள் பாஹ்கீலகர்ளைக் குறித்து ஒரு பிராமணர் சொன்னதைச் சஞ்சயனுக்கு விளக்கிச் சொன்ன கர்ணன்; ஆரட்டர்கள் மீது விழுந்த, கற்புடைய பெண் ஒருத்தியின் சாபம்; கல்மாஷபாதன் என்ற ஒரு ராட்சசன் மத்ரகர்களைக் குறித்துச் சொன்னதைச் சல்லியனுக்குச் சொன்ன கர்ணன்; அதைத் தொடர்ந்து மேலும் மத்ரகர்களைப் பழித்த கர்ணன்; அனைவரையும் பழிக்கலாகாது எனக் கர்ணனுக்கு எடுத்துச் சொன்ன சல்லியன்; மேற்கொண்டு கர்ணனும், சல்லியனும் வாக்குவாதம் செய்யாதவாறு தடுத்த துரியோதனன்; கர்ணனும், சல்லியனும் போரிட ஒரே தேரில் புறப்பட்டது...


கர்ணன் {சல்லியனிடம்} தொடர்ந்தான், “ஓ! சல்லியரே, இவை யாவையும் நீர் அறிந்திருக்க வேண்டும். எனினும் நான் உமக்கு மீண்டும் சொல்கிறேன். நான் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்பீராக.(1) ஒரு காலத்தில் ஒரு பிராமணர் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார். எங்கள் நடைமுறைகளைக் கண்டு மிகவும் மனம் நிறைந்த அவர், எங்களிடம்,(2) “நான் நீண்ட காலம் இமயச் சிகரமொன்றில் தனியாக வசித்திருந்தேன். அப்போதிருந்தே பல்வேறு அறங்களைப் பின்பற்றும் பல்வேறு நாடுகளை நான் கண்டிருக்கிறேன்.(3) எனினும், ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் நேர்மையில்லாமல் செயல்படுவதை நான் கண்டதே இல்லை. நான் சந்தித்த அனைத்து குலத்தவரும் வேதங்களை அறிந்தோரால் அறிவிக்கப்பட்டதே உண்மையான அறம் என்று ஏற்கிறார்கள்.(4) பல்வேறு அறங்களைப் பின்பற்றும் பல்வேறு நாடுகளின் வழியாகப் பயணித்த நான், ஓ! மன்னா {கர்ணா}, இறுதியாகப் பாஹ்லீகர்களுக்கு மத்தியில் சென்றேன்.(5)

Tuesday, March 14, 2017

பாஹ்லீக நடைமுறைகளைப் பழித்த கர்ணன்! - கர்ண பர்வம் பகுதி – 44

Karna censured the practices of the Vahlikas! | Karna-Parva-Section-44 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனுடைய அவையில் பல்வேறு நாடுகளைக் குறித்துப் பேசுகையில் பாஹ்லீக நாடு குறித்துப் சொல்லப்பட்டதைச் சல்லியனுக்குச் சொன்ன கர்ணன்; பாஹ்லீகர்களின் நடைமுறை மற்றும் ஒழுக்கங்களைக் குறித்தும், பாஹ்லீக மகளிரின் நடத்தைகள் மற்றும் குடிவெறியைக் குறித்தும் பழித்துப் பேசிய கர்ணன்; இழிகுணங்கள் கொண்ட அந்தப் பாஹ்லீகர்களுக்கு மத்தியில் எவனும் வாழலாமா என்று கேட்டது; பிராமணர்கள் மற்றும் ராட்சசப் பெண்மணிகள் பாஹ்லீகர்களைக் குறித்துச் சொன்னதை எடுத்துரைத்துச் சல்லியனைப் பழித்த கர்ணன்...


சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, எதிரி குறித்து நீ சொல்லும் இவை வெறும் பிதற்றல்களே! என்னைப் பொறுத்தவரை, ஆயிரம் கர்ணர்கள் இல்லாமலேயே நான் எதிரியைப் போரில் வெல்லவல்லவனாவேன்” என்றான்.(1)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்