Showing posts with label அக்னி. Show all posts
Showing posts with label அக்னி. Show all posts

Saturday, January 11, 2020

நெடும்பயணம்! - மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 1

The long journey! | Mahaprasthanika-Parva-Section-1 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : பரிக்ஷித்துக்கு முடிசூட்டி, யுயுத்சுவிடம் நாட்டை ஒப்படைத்த யுதிஷ்டிரன்; நகரவாசிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தம்பியருடனும், திரௌபதியுடனும் புறப்பட்டது; அக்னியின் சொற்படி காண்டீவத்தையும், அம்பறாதூணியையும் கடலில் போட்ட அர்ஜுனன்...


ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "விருஷ்ணி மற்றும் அந்தகக் குல வீரர்களுக்கிடையில் இரும்பு உலக்கைகளை {முசலங்களைக்} கொண்டு நடந்த மோதலைக் கேட்டும், கிருஷ்ணன் சொர்க்கத்திற்கு உயர்ந்ததை அறிந்து கொண்டும் பாண்டவர்கள் என்ன செய்தனர்?" என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விருஷ்ணிகளின் பெரும் படுகொலையைக் குறித்துக் கேட்ட கௌரவ மன்னன் {யுதிஷ்டிரன்} உலகை விட்டுச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். அவன் அர்ஜுனனிடம்,(2) "ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, காலன் (தன் கொதிகலனில்) அனைத்து உயிரினங்களையும் சமைக்கிறான். (எது நம் அனைவரையும் கட்டுகிறதோ அந்தக்) காலப் பாசத்தினாலேயே {கயிறுகளாலேயே} இது நடந்திருக்கிறது என நான் நினைக்கிறேன். இதைக் காண்பதே உனக்கும் தகும்" என்றான்.(3)

Saturday, November 30, 2019

நாகலோகம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 58

The world of Nagas! | Aswamedha-Parva-Section-58 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 43)


பதிவின் சுருக்கம் : அடையாளம் பெற்று வந்து ராணியிடம் கொடுத்துக் குண்டலங்களைப் பெற்ற உதங்கர்; குண்டலங்களைக் கவர்ந்து சென்ற நாகன்; இந்திரனின் துணையால் நாகலோகம் சென்று அவற்றைப் பெற்றது; அஹல்யையிடம் குண்டலங்களைக் கொடுத்த உதங்கர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உதங்கர், தன் நண்பர்களிடம் எப்போதும் நல்ல மனநிலையில் உள்ள மன்னன் சௌதாஸனிடம் திரும்பி, (தாம் உண்மையில் மன்னனிடம் இருந்தே வந்தார் என்று மதயந்தியை நம்பச் செய்ய) ஏதாவதொரு அடையாளத்தைத் தருமாறு வேண்டினார். இக்ஷாகு குலத்தில் முதன்மையான அவன் ஓர் அடையாளத்தை அவரிடம் கொடுத்தான்.(1)

Saturday, September 28, 2019

அக்னியின் அச்சம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 09

The fear of Agni! | Aswamedha-Parva-Section-09 | Mahabharata In Tamil

(அஸ்வமேதிக பர்வம் - 09)


பதிவின் சுருக்கம் : பிருஹஸ்பதியின் வருத்தம்; பிருஹஸ்பதியை ஏற்றுக்கொள்ளும்படி அக்னி தேவன் மூலம் மருத்தனிடம் சொன்ன இந்திரன்; மருத்தனின் மறுப்பு; அக்னியின் மறுப்பு...


{வியாசர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, "இந்திரன், "ஓ! பிருஹஸ்பதி, நீர் அமைதியாக உறங்குகிறீரா? உமது பணியாட்கள் உமக்கு ஏற்புடையவற்றைச் செய்கிறார்களா? நீர் தேவர்களின் நன்மையை நாடுகிறீரா? ஓ! பிராமணரே, தேவர்கள் உம்மைப் பாதுகாக்கிறார்களா?" என்றான்.(1)

Tuesday, July 02, 2019

பரமரகசியங்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 126

Great Mysteries! | Anusasana-Parva-Section-126 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 126)


பதிவின் சுருக்கம் : ஸ்ரீ ஹரியை நிறைவடையச் செய்யும் செயல்கள்; ஏழைகளும் வேள்வி செய்த பலன்களை அடைய செய்ய வேண்டிய செயல்கள்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பித்ருக்கள் பேசுவதை நிறுத்தியதும், தேவர்களின் தலைவனான இந்திரன், பலமிக்க ஹரியிடம், "ஓ! தலைவா, எந்தச் செயல்களின் மூலம் நீ நிறைவடைகிறாய். உண்மையில், மனிதர்கள் உன்னை நிறைவடையச் செய்வதில் எவ்வாறு வெல்கிறார்கள்" என்று கேட்டான்.(1)

Wednesday, June 05, 2019

பொன் வரலாறு! - அநுசாஸனபர்வம் பகுதி – 85அ

History of gold! | Anusasana-Parva-Section-85a | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 85)


பதிவின் சுருக்கம் : அக்னியை விரட்டிச் சென்று பிடித்த தேவர்கள்; தேவர்களால் வேண்டப்பட்ட அக்னி; அக்னி கங்கையைக் கருவூட்டியது; அதை மேருமலையின் சாரலில் விட்ட கங்கை; தத்தெடுத்துக் கொண்ட கிருத்திகை தேவி; தங்கமும், கந்தனும் பிறந்த கதை...


தேவர்கள் {பிரம்மனிடம்}, "ஓ! பலமிக்கவரே, உம்மிடம் இருந்து வரங்களைப் பெற்றவனும், தாரகன் என்ற பெயரைக் கொண்டவனுமான அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் பீடித்து வருகிறான். அவனுக்கு மரணத்தை விதிப்பீராக.(1) ஓ! பெரும்பாட்டனே, ஓ! சிறப்புமிக்கவரே, அவனிடம் இருந்த எழும் பேரச்சத்திலிருந்து எங்களை மீட்பீராக. உம்மைத் தவிரே வேறு புகலிடம் எங்களுக்குக் கிடையாது" என்றனர்.(2)

Thursday, September 07, 2017

அக்னி, குபேரத் தீர்த்தங்கள்! - சல்லிய பர்வம் பகுதி – 47

Agni and Kuvera Tirthas! | Shalya-Parva-Section-47 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 16)


பதிவின் சுருக்கம் : நீர்நிலைகளின் தலைவனாக வருணனை நிறுவிய தேவர்கள்; அக்னி தீர்த்தம் மற்றும் கௌபேர தீர்த்தம் ஆகியவற்றுக்குச் சென்ற பலராமன்; அத்தீர்த்தங்களின் மகிமை...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, முறையான சடங்குகளுடன் ஸ்கந்தன் பட்டமேற்றதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து கேட்ட இந்த வரலாறு மிக அற்புதமானதாகும்.(1) ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, இந்த விவரிப்பைக் கேட்டதனால் தூய்மையடைந்தவனாக என்னை நான் கருதுகிறேன். என் மனம் மிகவும் உற்சாகமடைவதால், எனக்கு மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது.(2) குமாரனின் பட்டமேற்பையும், தைத்தியர்களின் அழிவையும் கேட்ட பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனினும், எனக்கு மற்றொரு காரியம் குறித்து மிகுந்த ஆவல் ஏற்படுகிறது.(3) பழங்காலத்தில் நீர்நிலைகளின் தலைவன் {வருணன்} எவ்வாறு அந்தத் தீர்த்ததில் வைத்து பட்டமேற்கச் செய்யப்பட்டான்? ஓ மனிதர்களில் சிறந்தவரே, பேரறிவையும், உரைப்பதில் திறனையும் கொண்டுள்ள நீர் அவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(4)

Friday, September 01, 2017

கார்த்திகேயன் பிறப்பு! - சல்லிய பர்வம் பகுதி – 44

The birth of Kartikeya! | Shalya-Parva-Section-44 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 13)


பதிவின் சுருக்கம் : : சிவனிடம் உண்டாகி அக்னியில் விழுந்த ஸ்கந்தன்; ஸ்கந்தனைக் கங்கையில் விட்ட அக்னி; ஸ்கந்தனை இமயத்தில் விட்ட கங்கை; கார்த்திகைப் பெண்டிர் ஸ்கந்தனுக்கு முலையூட்டியது; சிவனைக் கண்டு அணுகிய ஸ்கந்தன்; பூதகணங்களின் தோற்ற வேறுபாடுகள்; நான்கு வடிவங்களாகத் தன்னைப் பிரித்துக் கொண்ட ஸ்கந்தன்; ஸ்கந்தனுக்கு ஆட்சியுரிமை கோரிய நால்வர்; ஸ்கந்தனைத் தேவர்களின் படைத்தலைவனாக்கிய பிரம்மன்; சமந்தபஞ்சகத்துக்கு வந்த தேவர்கள்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, சரஸ்வதியின் தகுதிகளைக் குறித்து விவரித்தீர். குமாரன் {முருகன்}, ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, (தேவர்களின் மூலம்) {படைத் தலைவனாக} பதவியேற்றுக் கொண்டதை விளக்குவதே உமக்குத் தகும்.(1) நான் என்னுள் பெரிய ஆவலை உணர்கிறேன். எனவே, போற்றுதலுக்குரியவனும், பலமிக்கவனுமான தலைவன் ஸ்கந்தன், (தேவர்களின் படைத்தலைவனாக) பதவியேற்ற காலம், இடம் மற்றும் தன்மை குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, அவனைப் பதவியேற்கச் செய்தது யார்? உண்மையான சடங்குகளைச் செய்தது யார்? அந்தத் தேவர்களின் படைத்தலைவன் {முருகன்} எவ்வாறு தைத்தியர்களுக்குப் பேரழிவை உண்டாக்கினான்?" என்று கேட்டான்.(2,3)

Monday, January 19, 2015

வேள்விப் பங்கைப் பெற்ற அக்னி! - உத்யோக பர்வம் பகுதி 16

Agni received his share in sacrifices! | Udyoga Parva - Section 16 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 16)

பதிவின் சுருக்கம் : அக்னியைப் புகழ்ந்த பிருஹஸ்பதி; பிருஹஸ்பதியின் துதியை ஏற்ற அக்னி, நீர்நிலைகளில் இந்திரனைத் தேடப் புறப்பட்டது; தாமரைத்தண்டின் இழைகளுக்குள் மறைந்து கிடந்த இந்திரனைக் கண்ட அக்னி, பிருஹஸ்பதியிடம் அதைத் தெரிவிப்பது; தேவர்களுடன் அந்த இடத்திற்கு விரைந்த பிருஹஸ்பதி, இந்திரனைத் துதிப்பது; துதியால் பலம் பெற்ற இந்திரன்; லோகபாலர்கள் இந்திரன் இருந்த இடத்திற்கு வருவது; அவர்களின் உதவியை இந்திரன் கோருவது; வேள்விப் பங்குகளையும், ஆட்சியுரிமைகளையும் அந்த லோகபாலர்களுக்கு இந்திரன் வழங்குவது ...

பிருஹஸ்பதி {அக்னியிடம்} சொன்னார், “ஓ! அக்னியே, தேவர்கள் அனைவருக்கும் வாய் நீயே. புனித காணிக்கைகளைச் சுமப்பவன் நீயே. ஒரு சாட்சியைப் போல, அனைத்து உயிர்களின் அந்தரங்க ஆன்மாக்களை அணுகக்கூடியவன் நீயே. தனியன் என்றும், {கர்ஹபத்ய, ஆஹவநீய, தக்ஷிணாக்னி என்று} மூன்று விதங்களில் இருப்பவன் என்றும், புலவர்களால் சொல்லப்படுபவன் நீயே. ஓ! எரிந்த காணிக்கைகளை {ஹவிஸை} உண்பவனே {அக்னியே}, உன்னால் கைவிடப்பட்டால், இந்த அண்டம் உடனே அழிந்துவிடும். உன்னை வணங்குவதால், அந்தணர்கள், தங்கள் நற்செயல்களால் அடையப்பட்ட வெகுமதியைத் தங்கள் மனைவியரோடும், பிள்ளைகளோடும் நித்தியமான உலகத்தில் பெறுகிறார்கள். ஓ! அக்னியே, புனிதக் காணிக்கைகளைத் தாங்குபவன் நீயே.


ஓ! அக்னி, தன்னளவில் சிறந்த காணிக்கையானவன் நீயே. உயர்ந்த வகையிலான வேள்விச் சடங்கில், அபரிமிதமான பரிசுகளுடனும், காணிக்கைகளுடனும் வழிபடப்படுபவன் நீயே. ஓ! காணிக்கைகளைச் சுமப்பவனே, மூவுலகங்களையும் படைத்து, நேரம் வரும்போது, தூண்டப்படாத வடிவம் கொண்டு அவற்றை அழிப்பவனும் நீயே. இந்த முழு அண்டத்துக்கும் தாய் நீயே; அதே போலே, ஓ! அக்னி, அவற்றின் அழிவும் நீயே. ஞானிகள் உன்னை மேகங்களோடும் மின்னலோடும் ஒப்பிடுகின்றனர். உன்னிலிருந்து வெளியேறும் சுடர்கள் அனைத்து உயிர்களையும் தாங்குகின்றன. அனைத்து நீர்நிலைகளும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. அதே போல இந்த முழு உலகமும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. ஓ! பரிசுத்தம் செய்பவனே, மூவுலகங்களிலும் நீ அறியாதது எதுவும் இல்லை. தன் முன்னோடியை {முன்னோடியான உன்னை} அனைத்தும் அன்பாகவே ஏற்றுக் கொள்ளும். வேதங்களின் நித்திய பாடல்களால் உன்னை நான் பலமாக்குகிறேன்” என்றார் {பிருஹஸ்பதி}.

இப்படித் துதிக்கப்பட்டதால், எரிந்த காணிக்கைகளைத் தாங்குபவனான அந்தக் கவிகளிற்சிறந்தவன் {அக்னி}, மிகவும் மகிழ்ந்து, பாராட்டத்தக்க சொற்களைப் பிருஹஸ்பதியிடம் பேசினான். பிறகு அவன் {அக்னி பிருஹஸ்பதியிடம்}, “நான் இந்திரனை உமக்குக் காட்டுகிறேன். இதை நான் உண்மையாகவே உமக்குச் சொல்கிறேன்” என்றான் {அக்னி}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு அக்னி, கடல்களிலும் சிறு குளங்களிலும் நுழைந்து, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்தத் தடாகத்திற்கு வந்து, தாமரை மலர்களில் தேடிய போது, அங்கே ஒரு தாமரைத் தண்டின் இழையினுள் கிடக்கும் தேவர்கள் மன்னனை {இந்திரனைக்} கண்டான். பிறகு விரைந்து திரும்பிய அவன் {அக்னி}, நுண்ணிய வடிவம் கொண்டு தாமரைத் தண்டின் இழைகளில் எப்படி இந்திரன் தஞ்சமடைந்திருக்கிறான் என்பதைப் பிருஹஸ்பதியிடம் தெரிவித்தான். பிறகு தேவர்கள், துறவிகள், கந்தர்வர்கள் ஆகியோருடன் கூடிய பிருஹஸ்பதி அங்கே சென்று, வலனைக் கொன்றவன் {இந்திரன்} முன்பு செய்த செயல்களைச் சுட்டிக்காட்டி அவனை {இந்திரனை} மகிமைப்படுத்தினார்.

அவர் {பிருஹஸ்பதி இந்திரனிடம்}, “ஓ! இந்திரா, பெரும் அசுரனான நமுச்சி உன்னால் கொல்லப்பட்டான். பயங்கர வலிமை கொண்ட சம்பரன், வலன் என்ற அசுரர்கள் இருவரும் அப்படியே உன்னால் கொல்லப்பட்டார்கள். ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரா}, பலத்தில் வளர்ந்து, உனது எதிரிகளைக் கொல்வாயாக. ஓ! இந்திரா, எழு! இங்கே கூடியிருக்கும் தேவர்களையும் துறவியரையும் பார். ஓ! இந்திரா, ஓ! பெரும் தலைவா, அசுரர்களைக் கொன்று உலகங்களை விடுவிப்பவன் நீயே. விஷ்ணுவின் சக்தியைக் கொண்ட நீர் நுரைகளால் பலம் கொண்டு முன்பு விருத்திரனைக் கொன்றவன் நீயே. அனைத்து உயிர்களுக்கும் புகலிடமும், வணங்கத்தக்கவனும் நீயே. உனக்கு நிகரான எவனும் இல்லை. ஓ! இந்திரா, அனைத்து உயிர்களும் உன்னாலேயே தாங்கப்படுகின்றன. தேவர்களின் பெருமைகளை எழுப்பியவன் நீயே. ஓ! பெரும் இந்திரா, உனது சுயபலத்தை அடைந்து உலகங்களையும், {அதிலுள்ள} அனைவரையும் காப்பாயாக!” என்றார் {பிருஹஸ்பதி}.

இப்படித் துதிக்கப்பட்ட இந்திரன் சிறிது சிறிதாக வளர்ந்தான். பிறகு தனது சுய உருவை அடைந்து, பலத்தில் வளர்ந்த அவன் {இந்திரன்}, தன் முன்னிலையில் நின்ற ஆசான் பிருஹஸ்பதியிடம் பேசினான். அவன் {இந்திரன் பிருகஸ்பதியிடம்}, “பெரும் அசுரர்களான துவஷ்டிரியின் {துவஷ்டாவின்} மகனும் {திரிசிரனும்}, மிகப்பெரிய வடிவம் கொண்டவனும் உலகங்களை அழித்தவனுமான விருத்திரனும் கொல்லப்பட்டுவிட்டனரே. உமக்கு இன்னும் வேறு என்ன காரியம் மீதமிருக்கிறது?” என்று கேட்டான் {இந்திரன்}. அதற்குப் பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “மனிதனான நகுஷன் என்ற மன்னன், தெய்வீகத் துறவியருடைய சக்தியின் அறத்தால் சொர்க்கத்தின் அரியணையை அடைந்து, எங்களுக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கிறான்” என்றார் {பிருகஸ்பதி}.

இந்திரன் {பிருகஸ்பதியிடம்}, “அடைவதற்கு அரிதான சொர்க்கத்தின் அரியணையை நகுஷன் அடைந்தது எப்படி? அவன் பயின்ற தவங்கள் என்னென்ன? ஓ! பிருஹஸ்பதி, அவனது வலிமை எவ்வளவு பெரியது?” என்று கேட்டான். அதற்குப் பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “சொர்க்கத்தின் ஆட்சியாளனுக்குரிய உயர்ந்த கண்ணியத்தை நீ இழந்ததால், அச்சமடைந்த தேவர்கள் சொர்க்கத்திற்கு ஒரு மன்னனை விரும்பினர். பிறகு, ஓ! இந்திரா, தேவர்களும், அண்டத்திலுள்ள பித்ருக்களும், துறவியரும், முக்கியமான கந்தர்வர்களும் ஒன்றுகூடி நகுஷனிடம் சென்று, “அண்டத்தைக் காப்பவனாகவும், எங்களுக்கு மன்னனாகவும் நீ ஆவாயாக!” என்று சொன்னார்கள். அவர்களிடம் நகுஷன், “நான் திறனற்றவனாக இருக்கிறேன். உங்கள் சக்தியாலும், உங்கள் தவங்களின் அறத்தாலும் என்னை நிரப்புங்கள்” என்று சொன்னான்.

இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள், ஓ! தேவர்களின் மன்னா {இந்திரா}, அவனைப் {தங்கள் தவங்களின் அறத்தால்} பலவானாக்கினார்கள். பிறகு, நகுஷன் பயங்கரப் பலம் கொண்டவனாக ஆனான். இப்படியே மூன்று உலகங்களின் ஆட்சியாளனாக ஆன அவன் {நகுஷன்}, பெரும் துறவிகளைப் (தனது தேரில்} பூட்டினான். இப்படியே {முனிவர்களை வாகனமாகப் பயன்படுத்திய} அந்த இழிந்தவன் {நகுஷன்} உலகம் விட்டு உலகம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறான். பயங்கரமான நகுஷனை நீ பார்த்துவிடாதே. அவன் தனது கண்களில் இருந்து நஞ்சை உமிழ்ந்து, அனைவரின் சக்தியையும் உறிஞ்சி விடுகிறான். தேவர்கள் அனைவரும் மிகவும் பயந்திருக்கின்றனர். அவன் மீது தங்கள் பார்வையைச் செலுத்தாமல் அவர்கள் {தேவர்கள்} மறைந்தே செல்கின்றனர்” என்றார்.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அங்கீரஸ் குலத்தில் சிறந்தவர் {பிருஹஸ்பதி} அப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, உலகத்தின் காப்பாளர்களான {திக்பாலர்களான} குபேரனும், சூரியனின் மகனான யமனும், பழந்தேவனான சோமனும் {சந்திரனும்}, வருணனும் அங்கே வந்தனர். அங்கே வந்த அவர்கள் {திக்பாலர்கள்} பெரும் இந்திரனிடம், “நற்பேறாலேயே துவஷ்ட்ரியின் {துவஷ்டாவின்} மகனும் {திரிசிரனும்}, விருத்திரனும் கொல்லப்பட்டனர். ஓ! இந்திரா, உனது எதிரிகள் கொல்லப்பட்ட பிறகும், பாதுகாப்பாகவும், பலமாகவும் நீ இருப்பதும் நற்பேறாலேயேதான்” என்றனர். உலகத்தின் காவலர்களான {லோகபாலர்களான} அவர்கள் அனைவரையும் வரவேற்ற இந்திரன், நகுஷன் தொடர்பாக அவர்களிடம் முறையான வடிவில் கோரிக்கை வைக்கும் நோக்கில், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவர்களை வாழ்த்தினான். பிறகு, அவன் {இந்திரன்}, “கடுமுகம் கொண்ட நகுஷன் தேவர்களின் மன்னனாக இருக்கிறான். அதன் நிமித்தமாக உங்கள் உதவி எனக்குத் தாருங்கள்” என்று கேட்டான்.

அதற்கு அவர்கள் {திக்பாலர்கள்}, “நகுஷன் கோர முகம் கொண்டவன்; ஓ! தேவா {இந்திரா}, நஞ்சே அவனது பார்வை. நாங்கள் அவனை அஞ்சுகிறோம். நீ நகுஷனை வீழ்த்தினால், ஓ! இந்திரா, வேள்விக் காணிக்கைகளில் எங்களுக்குரிய பங்குகளைப் பெற நாங்கள் உரிமையுடையவர்கள் ஆவோம்” என்றனர். அதற்கு இந்திரன், “அப்படியே ஆகட்டும். என்னுடன் சேர்த்து, நீரின் ஆட்சியாளனான நீயும் {வருணனும்}, யமனும், குபேரனும் இன்றே முடிசூட்டப்படுவீர்கள். தேவர்கள் அனைவரின் துணையுடன், பயங்கரப் பார்வை கொண்ட எதிரியான நகுஷனை நாம் வீழ்த்துவோமாக” என்றான். பிறகு அக்னி, இந்திரனிடம், “வேள்விக் காணிக்கைகளில் எனக்கும் ஒரு பங்கைத் தா. நான் எனது துணையை உனக்கு அளிப்பேன்” என்றான். அவனிடம் {அக்னியிடம்} இந்திரன், “ஓ அக்னி, பெரும் வேள்விகளில் நீயும் ஒரு பங்கைப் பெறுவாய். (அப்படிப்பட்ட நேரங்களில்), இந்திரன் அக்னி ஆகிய இருவருக்கும் ஒரே பங்கு கிடைக்கும்” என்றான்.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பகனைத் தண்டித்தவனும், வரங்களை அளிப்பவனுமான ஒப்பற்ற தலைவனான இந்திரன், இவ்விதம் ஆலோசித்து, யக்ஷர்கள் மீதான ஆட்சி மற்றும் உலகத்தின் அனைத்து செல்வங்களையும் குபேரனுக்கும்; பித்ருக்கள் மீதான ஆட்சியை யமனுக்கும், நீர்நிலைகள் மீதான ஆட்சியை வருணனுக்கும் அளித்தான்.

************************************

இந்திரன் – இந்திராணி - நகுஷன் – சம்பந்தப்பட்ட இந்தக் கதை இன்னும் விரிவாக தேவி பாகவதத்தில் உள்ளது. http://www.sacred-texts.com/hin/db/bk06ch07.htm


இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, January 17, 2015

இந்திரனைத் தேடிய அக்னி! - உத்யோக பர்வம் பகுதி 15

Agni searched for Indra! | Udyoga Parva - Section 15 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 15)

பதிவின் சுருக்கம் : நகுஷனின் பலம் குறித்து இந்திரன் சச்சியிடம் சொன்னது; சச்சி முனிவர்களால் இழுக்கப்படும் தேரில் நகுஷனை வரச்சொன்னது; நகுஷன் முனிவர்களைத் தேரில் பூட்டியது; சச்சி பிருஹஸ்பதியிடம் இந்திரனை விரைவாகத் தேடச் சொன்னது; பிருஹஸ்பதி அக்னியைக் கொண்டு இந்திரனைத் தேடியது; அக்னியால் இந்திரனைக் காண முடியாதது; அக்னி தனது இயலாமையைப் பிருஹஸ்பதியிடம் சொன்னது ...

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “சச்சியால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த ஒப்பற்ற தேவன் {இந்திரன்} அவளிடம் {சச்சியிடம்}, மீண்டும், “இது வீரத்தைக் காட்ட வேண்டிய நேரமன்று. நகுஷன் என்னைவிடப் பலவானாக இருக்கிறான். ஓ! அழகிய மங்கையே {சச்சி}, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் முனிவர்களால் கொடுக்கப்பட்ட காணிக்கைகளின் தகுதியால் {பலத்தால்} அவன் {நகுஷன்} பலமூட்டப்பட்டிருக்கிறான். இது சம்பந்தமாக நான் ஒரு கொள்கையை {தீர்மானத்தை} எட்டியிருக்கிறேன். ஓ! தேவி {சச்சி}, நீயே அதனைச் செய்ய வேண்டியிருக்கும். ஓ! மங்கையே {சச்சியே}, நீ அதைக் கமுக்கமாகச் செய்ய வேண்டும். மேலும் அதை யாரிடமும் நீ சொல்லக்கூடாது. ஓ! அழகிய இடை கொண்ட மங்கையே {சச்சியே}, நகுஷனிடம் தனிமையில் சென்று, அவனிடம், “ஓ! அண்டத்தின் தலைவா {நகுஷா}, முனிவர்களால் சுமக்கப்படும் அழகிய வாகனத்தில் ஏறி நீர் என்னைச் சந்திக்க வேண்டும். அப்படிச் செய்தால் நான் மகிழ்ந்து, என்னை உம்மிடம் கொடுப்பேன்” என்று நீ சொல்ல வேண்டும்” என்றான் {இந்திரன்}.


தேவர்கள் மன்னனால் {இந்திரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தாமரைக் கண் கொண்ட அவனது மனைவி {சச்சி}, அதற்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்து நகுஷனிடம் சென்றாள். அவளை {சச்சியைக்} கண்ட நகுஷன், புன்னகையுடன் அவளிடம், “ஓ! அழகிய தொடைகளைக் கொண்ட மங்கையே {சச்சி}, உனக்கு நல்வரவு. ஓ! இனிய புன்னகை கொண்டவளே, உனக்கு இன்பமானது எது? ஓ! நற்பார்வை கொண்ட மங்கையே, உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட என்னை நீ ஏற்றுக் கொள்வாயாக. ஓ! உற்சாகமானக் காரிகையே {சச்சி}, உன் விருப்பம் என்ன? ஓ! நற்பார்வை கொண்ட மங்கையே, கொடியிடையாளே, நான் உனது விருப்பத்தையே செய்வேன். ஓ! அழகிய இடை கொண்டவளே, நீ வெட்கமடையத் தேவையில்லை. என்னிடம் நீ நம்பிக்கை வைப்பாயாக. ஓ! தேவி, உண்மையின் {சத்தியத்தின்} பேரால், நீ சொல்வதையே நான் செய்வேன்” என்றான் {நகுஷன்}.

அதற்குச் சச்சி {நகுஷனிடம்}, “ஓ! அண்டத்தின் தலைவா {நகுஷரே}, நீர் எனக்கு நிர்ணயித்திருக்கும் காலமே எனக்கு வேண்டியது. அதன்பிறகு, ஓ! தேவர்களின் தலைவா, நீர் எனது கணவனாகலாம். எனக்கு ஒரு விருப்பமிருக்கிறது. ஓ! தேவர்களின் மன்னா, அதைக் கவனித்துக் கேட்பீராக. ஓ! மன்னா, நான் சொல்வதை நீர் செய்ய வேண்டும் என்றே நான் சொல்வேன். நீர் என் மீது கொண்டிருக்கும் அன்பின் நிமித்தமாகவே இதை நான் கோருகிறேன். நீர் அதை அருளினால், நான் உம் வசம் இருப்பேன். இந்திரர் தன்னைச் சுமக்க, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களை வைத்திருந்தார். ஓ! தேவர்கள் மன்னா, விஷ்ணு, ருத்ரன் {சிவன்}, அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோர் யாரிடமும் இல்லாத புதுமையான ஒரு வாகனத்தை நீர் கொண்டிருக்க வேண்டும் என்று, ஓ! தலைவா, நான் விரும்புகிறேன். கண்ணியமிக்க உயர்ந்த முனிவர்கள் ஒன்றுகூடி, உம்மைப் பல்லக்கில் வைத்து சுமக்கட்டும். எனக்குத் தோன்றுவது இதுவே. அசுரர்களுக்கோ, தேவர்களுக்கோ சமமானவராக நீர் உம்மைக் கருதக்கூடாது. யாரையெல்லாம் நீர் பார்க்கிறீரோ அவர்களின் பலத்தையெல்லாம் நீர் கிரகித்துக் கொள்கிறீர். உம் முன்னிலையில் நிற்கும் பலமுடையவர் யாரும் இல்லை” என்றாள் {சச்சி}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிச் சொல்லப்பட்ட நகுஷன் மிகவும் மகிழ்ந்தான். பிறகு அந்தத் தேவர்கள் தலைவன் {நகுஷன்}, அந்தக் களங்கமற்ற மங்கையிடம் {சச்சியிடம்}, “ஓ! அழகிய நிறம் கொண்ட மங்கையே, இதற்கு முன் கேள்விப்படாத ஒரு வாகனத்தையே நீ சொல்லியிருக்கிறாய். ஓ! தேவி, நான் அதை மிகவும் விரும்புகிறேன். ஓ அழகிய முகம் கொண்டவளே, நான் உனது கட்டுப்பாட்டில் இருக்கிறேன். தன்னைத் தாங்குவதற்கு முனிவர்களை ஈடுபடுத்துபவன் பலவீனனாக இருக்க முடியாது. நான் தவங்கள் பயின்றவன், மேலும் நான் பெரும் பலமிக்கவனுமாவேன். இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்களுக்கு நானே தலைவன். நான் சினமுற்றால் இந்த அண்டமே இல்லாது போய்விடும். இந்த முழு அண்டமும் என்னிலேயே நிறுவப்பட்டுள்ளது. ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோர் ஒன்றுகூடியிருந்தாலும், ஆத்திரம் கொள்ளும் என்னை அவர்கள் அனைவராலும் சமாளிக்க முடியாது. எவனை நான் பார்த்தாலும், அவனது ஆற்றல் அவனிடம் இருந்து அகன்றுவிடும். ஓ! தேவி, உனது கோரிக்கை நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களும் என்னைச் சுமக்கட்டும். ஓ! அழகிய நிறம் கொண்ட மங்கையே, எந்தன் பெருமையையும், காந்தியையும் நீ காண்பாய்” என்றான் {நகுஷன்}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அழகிய முகம் கொண்ட அந்தத் தேவியிடம் {சச்சியிடம்} இப்படிப் பேசிய அவன் {நகுஷன்}, அவளுக்கு விடை கொடுத்தனுப்பி, தவப்பயிற்சிக்குத் தங்களை அர்ப்பணித்திருந்த எண்ணற்ற துறவிகளைத் தனது தெய்வீகத் தேரில் பூட்டினான். பலம் கொண்டவனும், கர்வத்தால் போதை கொண்டவனும், நிலையற்றவனும், இழிந்த ஆன்மா கொண்டவனும், அந்தணர்களை அலட்சியம் செய்பவனுமான அவன் {நகுஷன்}, தன்னைச் சுமக்கத் துறவியரை நியமித்தான். அதே வேளையில், நகுஷனால் அனுப்பப்பட்ட சச்சி, பிருஹஸ்பதியிடம் சென்று, “நகுஷன் எனக்கு அளித்திருக்கும் காலத்தில் சொற்பமே மீதம் இருக்கிறது. உம்மை மதிக்கும் என்னிடம் கருணை கொண்டு, இந்திரரை விரைவில் கண்டுபிடிப்பீராக!” என்றாள் {சச்சி}.

அதற்கு ஒப்பற்ற பிருஹஸ்பதி அவளிடம் {சச்சியிடம்}, “மிக்க நன்று. ஓ! தேவி, தீய ஆன்மா கொண்ட நகுஷனிடம் நீ அஞ்ச வேண்டாம். அவன் {நகுஷன்} தனது சக்தியை நீண்ட காலம் பெற்றிருக்க மாட்டான். ஓ! அழகிய காரிகையே, தன்னைச் சுமக்கப் பெரும் துறவியரை நியமித்த காரணத்தால், உண்மையில், அறத்தைக் கருதிப் பார்க்காத அந்த இழிந்தவன் ஏற்கனவே வீழ்ந்துவிட்டான். அந்த இழிந்த தீயவன் அழிவடைய, நான் ஒரு வேள்வியைச் செய்வேன். இந்திரனை நான் கண்டுபிடிப்பேன். அஞ்சாதே. உனக்கு நன்மையே விளையட்டும்” என்றார் {பிருஹஸ்பதி}.

அதன்பேரில் மதிப்புமிக்கத் தேவனான எரிந்த காணிக்கைகளை உண்பவன் {அக்னி}, தன்னுருவை விட்டு, பெண்ணுருக் கொண்டு, அந்த இடத்தில் இருந்து உடனே மறைந்து போனான். மனோ வேகம் கொண்ட அவன் {அக்னி}, மலைகள், காடுகள், பூமி, வானம் ஆகிய அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பிருஹஸ்பதியிடம் திரும்பி வந்தான்.

பிறகு அக்னி பிருஹஸ்பதியிடம், இவ்விடங்களில் எல்லாம் தேவர்களின் மன்னனை {இந்திரனை} என்னால் காண முடியவில்லை. நீர் கொள்ளிடங்கள் மட்டுமே தேட வேண்டியதில் மீதம் இருக்கின்றன. நீருக்குள் நுழைவதில் நான் எப்போதும் பின்தங்குவேன். அதற்குள் செல்வதற்கு எனக்கு வழி கிடையாது. ஓ! அந்தணரே, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அந்தத் தேவர்களின் ஆசான் {பிருஹஸ்பதி}, அவனிடம் {அக்னியிடம்}, “ஓ! ஒப்பற்ற தேவா {அக்னி}, நீருக்குள் நீ நுழைவாயாக” என்றார்.

அதற்கு அக்னி {பிருஹஸ்பதியிடம்}, “என்னால் நீருக்குள் நுழைய முடியாது. அங்கே எனக்கு அழிவு காத்திருக்கிறது. ஓ! பெரும் பிரகாசம் கொண்டவரே, நான் என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். நீர் எனக்கு நன்மையைச் செய்வீராக! கல்லில் இருந்து, இரும்பு பிறந்தது போலவும், புரோகித சாதியில் இருந்து, போர்ச்சாதி உதித்தது போலவும், நீரிலிருந்தே நெருப்பு உதித்தது. அனைத்துப் பொருட்களையும் ஊடுருவும் இவற்றின் சக்தி, தாங்கள் உதித்த தோற்றுவாயிடம் எடுபடுவதில்லை” என்றான் {அக்னி}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, September 06, 2014

மந்தரை என்ற கூனி ! - வனபர்வம் பகுதி 274

Manthara called as hunchback!  | Vana Parva - Section 274 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

ராவணன் செய்யும் தீமைகளைப் பொறுக்காத அக்னி, ராவணனின் அழிவைக் குறித்துப் பிரம்மனிடம் கேட்பது; பிரம்மன் முக்கியமான தேவர்கள் அனைவரையும் பூமியில் குரங்குகளாகவும், கரடிகளாகவும் பிறக்கச் சொன்னது; குரங்குகள் மற்றும் கரடிகளில் முதன்மையான தங்கள் மனைவியரிடம் தேவர்கள் பிள்ளைகளைப் பெறுவது; பூசல்களை உருவாக்க பிரம்மன், துந்துபி என்ற கந்தர்வியை, பூமியில் கூனியான மந்தரையாகப் பிறக்கச் செய்தது...


மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பின்னர்ப் பிரம்ம முனிவர்கள், சித்தர்கள், தேவமுனிவர்கள், ஆகியோர் ஹவ்யவாகனனை {அக்னியைத்} தங்கள் பேச்சாளனாகக் கொண்டு பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள். அக்னி {பிரம்மனிடம்}, “விஸ்ரவசின் சக்திமிக்க மகனான பத்துத் தலையனை {ராவணனை}, உமது வரத்தின் காரணமாகக் கொல்ல முடியவில்லை. பெரும் பலம் கொண்ட அவன் {ராவணன்} பூமியில் உள்ள உயிரினங்களை ஒடுக்குகிறான். ஓ! போற்றுதலுக்குரியவரே! எனவே எங்களைக் காப்பாற்றும்! எங்களைக் காப்பாற்ற உம்மைத் தவிர வேறு யாரும் இல்லை" என்று சொன்னான்.

Sunday, August 03, 2014

கந்தனுக்கு அமுதூட்டிய அன்னையர்! - வனபர்வம் பகுதி 225

The mothers who nursed Skanda!  | Vana Parva - Section 225 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

சுவாகா ஸ்கந்தனிடம் தானே அவனது தாய் என்பதைச் சொன்னது; ஏழு முனிவர்களும் தங்கள் மனைவியரைத் தள்ளிவைத்தது; அனைத்தையும் அறிந்த விஸ்வாமித்திர் ஸ்கந்தனைத் தஞ்சமடைந்து பிறப்புச் சடங்குகளைச் செய்து வைத்தது; தேவர்கள் இந்திரனிடம் ஸ்கந்தனைக் கொல்லும்படி சொல்வது; இந்திரன் அஞ்சுவது; லோகமாதாக்கள் ஸ்கந்தனிடம் சென்றது; அவனைத் தங்களது பிள்ளையாகச் சுவீகரித்து அமுதூட்டியது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்தப் பலமிக்க, உயர்ஆன்மா கொண்டவன் {ஸ்கந்தன்} பிறந்த போது, பல்வேறு வகையான அச்சம் தரும் நிகழ்வுகள் நடந்தன. ஆண்கள் மற்றும் பெண்களின் இயல்புள், வெப்பம் மற்றும் குளிர், மேலும் இதுபோன்ற முரண்பட்ட ஜோடிகளின் இயல்புகள் தலைகீழாக மாறின. கோள்கள், திசைப்புள்ளிகள், ஆகாயம் ஆகியன வெளிச்சத்தால் ஒளிர்ந்தன. பூமியும் கதறத் தொடங்கியது. உலக நன்மையை விரும்பும் முனிவர்களும் கூட இந்தப் பயங்கர அதிசயங்களை எல்லாப் புறமும் கண்டு, அண்டத்தின் அமைதியை மீண்டும் நிலைநாட்ட இதயப்பூர்வமாக முனைந்தனர். சைத்திரரத வனத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும், "ஏழு முனிவர்களின் ஆறு மனைவிகளுடன் கூடிய அக்னியினால் நமக்கு இந்த மிக மோசமான நிலை ஏற்பட்டது" என்றனர்.


அந்தத் தேவி {சுவாகா} பறவை உருவை அடைந்ததைக் கண்ட பிறர், "இந்தத் தீமை ஒரு பறவையால் ஏற்பட்டது" என்றனர். எவருமே சுவாகாதான் இந்தத் தீங்குக்குக் காரணமானவள் என்பதை நினைக்கவில்லை. ஆனால் (புதிதாகப் பிறந்த) ஆண்பிள்ளை தனதென்று கேள்விப்பட்ட அவள் {சுவாகா} ஸ்கந்தனிடம் சென்றாள். படிப்படியாக அவனிடம் அவளே அவனது {ஸ்கந்தனின்} அன்னை என்ற உண்மையை வெளிப்படுத்தினாள். அந்த ஏழு முனிவர்களும், (அவர்களுக்கு) ஒரு பலமிக்க மகன் பிறந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டனர். அந்தக் காட்டில் வசிக்கும் அனைவரும் {முனிவர்களின் மனைவியரான} அறுவரும்தான், அந்தப் பிள்ளை பிறக்கக் காரணம் என்று சொல்லி எதிர்த்ததால், அம்முனிவர்கள், வழிபடத்தகுந்த அருந்ததியைத் தவிர்த்துத் தங்கள் ஆறு மனைவியரையும் தள்ளி வைத்தார்கள் {divorced என்கிறார் கங்குலி}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏழு முனிவர்களிடம் சுவாகா, "துறவிகளே {சப்தரிஷிகளே}, இந்தப் பிள்ளை என்னுடையவன். உங்கள் மனைவியர் இவனுக்குத் தாயில்லை" என்று மீண்டும் மீண்டும் சொன்னாள்.

அந்த ஏழு முனிவர்களின் வேள்விகள் முடிந்ததும், பெரும் முனிவரான விஸ்வாமித்திரர், அக்னி தேவன் காமத்தால் துன்பப்பட்டபோது, அவனை {அக்னியை} அவனறியாது பின்தொடர்ந்து சென்றார். எனவே, நடந்தது என்ன என்பது அனைத்தையும் அவர் {விஸ்வாமித்திரர்} அறிவார். மஹாசேனனிடம் {ஸ்கந்தனிடம்} பாதுகாப்புக் கோரியவர்களில் முதல் மனிதன் அவரே. மஹாசேனனுக்கு தெய்வீக துதிகளைக் காணிக்கையாக்கிய பிறகு, பிள்ளைப்பருவத்திற்குரிய, பிறப்பு சார்ந்த பதிமூன்று மங்களச் சடங்குகளும் அந்தப் பெருமுனிவரால் {விஸ்வாமித்திரரால்} அந்தப் பிள்ளைக்குச் {ஸ்கந்தனுக்குச்} செய்யப்பட்டன. பிறகு உலகத்தின் நன்மைக்காக அவர், ஆறு முகம் கொண்ட ஸ்கந்தனுக்குரிய நற்பண்புகளை {அவனுக்கு} அறிவித்தார். சேவல், சக்தி தேவி மற்றும் ஸ்கந்தனின் தொண்டர்களுக்கு மரியாதை செய்யும் சடங்குகளை நடத்தி வைத்தார். {சேவலைக் கொடியாகவும், சக்தியை வேலாகவும், தொண்டர்களைப் பரிவாரங்களாகவும் வைத்துக் கொள்ள வேண்டிய சடங்குகளைச் செய்வித்தார்}. இந்தக் காரணத்திற்காக அவர் அந்தத் தெய்வீக இளைஞனுக்கு மிகவும் பிடித்தமானவராக ஆனார். அந்தப் பெரும் முனிவர் {விஸ்வாமித்திரர்}, அந்த ஏழு முனிவர்களுக்கும் {சப்தரிஷிகளுக்கும்}, சுவாகா மாற்றுரு கொண்டதைச் சொல்லி, அவர்களது மனைவியர் அப்பாவிகள் என்பதையும் சொன்னார். ஆனால், அந்த ஏழு முனிவர்களும் இதை அறிந்து கொண்ட பிறகும் கூடத் தங்கள் துணைகளை நிபந்தனையற்ற முறையில் கைவிட்டனர்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஸ்கந்தனின் பராக்கிரமத்தைக் கேள்விப்பட்ட தேவர்கள் வாசவனிடம் {இந்திரனிடம்} சென்று, "ஓ! சக்ரா {இந்திரா}, தாமதமின்றி அந்த ஸ்கந்தனைக் கொல், அவனது பராக்கிரமம் தாங்க முடியாததாக இருக்கிறது. அவனை நீ அழிக்கவில்லையென்றால், அவன் நம்முடன் கூடிய மூவுலகங்களையும் வென்று, உன்னை வீழ்த்தி, தானே தேவர்கள் தலைவன் ஆகிவிடுவான்" என்றனர். மனதால் குழம்பிய சக்ரன், அவர்களிடம், "இந்தப் பிள்ளை பெரும் பராக்கிரமத்தைக் கொண்டிருக்கிறான். போர்க்களத்தில் தனது பலத்தைக் கொண்டு அண்டத்தைப் படைத்தவனையே {பிரம்மாவையே} இவன் அழித்துவிடுவான். எனவே, அவனிடம் செல்லத் துணிய மாட்டேன்" என்றான். அதற்குத் தேவர்கள் {இந்திரனிடம்}, "உன்னிடம் ஆண்மையில்லாததால் நீ இவ்வகையில் பேசுகிறாய். இந்த அண்டத்தின் பெரும் அன்னையர் {லோகமாதாக்கள்} இன்று ஸ்கந்தனிடம் செல்லட்டும். அவர்கள் எப்படிப்பட்ட சக்தியையும் அடக்குவார்கள். அதன் பிறகு இந்தப் பிள்ளைக் கொல்லப்படட்டும்" என்றனர். அந்தத் தாய்மாரும், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார்கள்.

பிறகு அவர்கள் {லோகமாதாக்கள்} சென்றுவிட்டனர். ஆனால் அவனைக் {ஸ்கந்தனைக்} கண்ட மாத்திரத்தில் அவர்கள் ஊக்கமிழந்து, அவன் வெல்லப்பட முடியாதவன் என்று கருதி, அவனை {ஸ்கந்தனை} தஞ்சம் அடைந்து, அவனிடம் {ஸ்கந்தனிடம்}, "ஓ! பலமிக்கவனே, நீ எங்கள் (வளர்ப்பு) மகனாவாய். நாங்கள் உன்னிடம் பாசத்தால் நிறைந்திருக்கிறோம். உனக்குப் பால் கொடுக்க விரும்புகிறோம் {desirous of giving thee suck}. இதோ எங்கள் மார்புகளில் பால் சுரக்கிறது" என்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட பலமிக்க மஹாசேனன் {ஸ்கந்தன்}, அவர்களது முலையுண்ண விரும்பி, அவர்களை மரியாதையுடன் வரவேற்று, அவர்களது கோரிக்கைகளை ஏற்றான். பிறகு அந்தப் பலசாலிகளில் பலசாலியானவன் {ஸ்கந்தன்} தனது தந்தையான அக்னி தன்னை நோக்கி வருவதைக் கண்டான். நல்லது அனைத்தையும் செய்யும் அந்தத் தேவன், அவனது தாயார்களுடன் இருந்த தனது மகனால் உரிய முறையில் மதிக்கப்பட்டு, அவனை {ஸ்கந்தனை} வளர்க்க அவனது பக்கத்திலேயே தங்கினான். அந்தத் தாய்மாரில் கோபத்துக்குப் பிறந்தவள் [1], {குரோதசமுத்பவை} கைகளில் சூலத்தை ஏந்தி, தனது சொந்த வாரிசைக் காப்பது போலவே ஸ்கந்தனைக் கண்காணித்தாள். {லோஹிதம் என்கிற} கடலின் மகளானவள் {கரூரை}, சிவப்பு நிறத்துடன், எளிதில் கோபம் கொள்பவளாக இருந்தாள். இரத்தத்தை உண்டு வாழும் அவள், மஹாசேனனை {கந்தனை} மார்போடு அணைத்து தாயைப் போல அவனுக்குப் பாலூட்டினாள். அக்னி, பல பிள்ளைகள் தன்னைத் தொடர, ஆட்டுவாய்க் கொண்ட ஒரு வணிகனைப் போலத் தன்னை மாற்றிக் கொண்டான். தன் வசிப்பிடமான அந்த மலையில் பொம்மைகளைக் கொண்டு அந்தப் பிள்ளையைத் {ஸ்கந்தனைத்} திருப்தி செய்யத்தொடங்கினான்.

[1] தெய்வமாக உருவகப்படுத்தப்பட்ட கோபம் = குரோதசமுத்பவை
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Thursday, July 31, 2014

அத்புத நெருப்பு! - வனபர்வம் பகுதி 221

Adbhuta Fire!  | Vana Parva - Section 221 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

அத்புத நெருப்பின் மகிமையை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சுவாகா என்ற {இங்கு குறிப்பிடப்படுவது ஆண்பால் - மற்ற பதிப்புகளில் ஸஹன் என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது} நெருப்பின் விருப்பமான மனைவியான முதிதை, நீரில் வாழ்பவள் ஆவாள். பூமி மற்றும் வானத்தின் பிரதிநிதியான சுவாகா, தனது மனைவியிடத்தில், அத்வந்தன் {Advanta} என்ற உயர்ந்த புனிதமான நெருப்பைப் பெற்றான். இந்த நெருப்பானவன் {அத்வந்தன்}, அனைத்து உயிரினங்களுடைய அக ஆன்மாவின் ஆட்சியாளன் எனக் கற்றறிந்த அந்தணர்களுக்கு மத்தியில் ஒரு மரபு {ஐதீகம்} உள்ளது. அவன் {அத்வந்தன்} வழிபடத்தகுந்தவன், பிரகாசமுடையவன், இங்குள்ள அனைத்து பெரும் பெரும் பூதங்களின் தலைவனுமாவான். கிரகபதி {Grihapati} என்று அழைக்கப்படும் நெருப்பானவன், அனைத்து வேள்விகளிலும் எப்போதும் வழிபடப்பட்டு, இவ்வுலகில் படைக்கப்படும் காணிக்கைகள் அனைத்தையும் தெரிவிப்பவனாவான். சுவாகாவின் பெருமைமிக்க மகனான பெரும் அத்புதன் {Adbhuta} என்ற நெருப்பு நீர்நிலைகளின் {கடலின்} ஆன்மாவாகவும், வானின் இளவரசனாகவும், பெரியன அனைத்துக்கும் தலைவனாகவும் இருக்கிறான்.

Sunday, July 27, 2014

அக்னியும்! அங்கிரசும்!! - வனபர்வம் பகுதி 216

Agni and Angiras!  | Vana Parva - Section 216 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் அக்னியின் தவம் மற்றும் அங்கிரஸ் முனி அக்னியாகச் செயல்பட்ட வரலாறு ஆகியவற்றைச் சொன்னது; அக்னி அங்கிரஸ் உரையாடல்; அங்கிரஸ் அக்னியையே மீண்டும் நெருப்புக் கடவுளாகத் தொடரச் சொன்னது;

அங்கிரஸ் முனிவர்
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன், இந்த அற்புதமான அறச் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, மீண்டும் மார்க்கண்டேய முனிவரிடம், "பழங்காலத்தில் நெருப்புக் கடவுள் {அக்னி தேவன்} ஏன் தன்னை நீருக்குள் ஒளித்துக் கொண்டான்? அவன் {அக்னி} மறைந்த போது, பெரும் பிரகாசம் கொண்ட அந்த அங்கிரஸ், {தானப்பலிகளில்} காணிக்கைகளைத் தெரிவிப்பதற்கு {தேவர்களுக்கு எடுத்துச் செல்லப்} பயன்பட்டு [1], நெருப்புக் கடவுளாக {மற்றுமொரு அக்னி தேவனாக} ஏன் அலுவல் புரிந்தார்? இருப்பது ஒரே நெருப்புதான். ஆனால், அதன் செயல்களின் இயல்புக்கு ஏற்ப, அது பலவாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதைக் காண முடிகிறதே. ஓ! வழிபடத்தகுந்த ஐயா {மார்க்கண்டேயரே}, குமரன் {முருகன்} [2] எப்படிப் பிறந்தான்? அவன் அக்னியின் {நெருப்பு தேவனின்} மகன் என்று எப்படி அறியப்பட்டான்? அவன் ருத்திரனாலோ, கங்கையாலோ, கிருத்திகையாலோ எப்படிப் பெறப்பட்டான்? இவை யாவையும் குறித்து நான் ஞானமடைய நெடுங்காலமாக விரும்புகிறேன். ஓ! பிருகு குலத்தின் உன்னத வாரிசே {மார்க்கண்டேயரே}, நடந்ததை நடந்தவாறே கற்க நான் விரும்புகிறேன். ஓ! பெரும் முனிவரே, நான் பெரும் ஆவலால் நிறைந்திருக்கிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.



அதற்கு மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "கோபத்தால் நிறைந்திருந்த, தானங்களைச் சுமந்து செல்பவன் (அக்னித் தேவன்), தவமிருப்பதற்காகக் கடலின் நீருக்குள் எப்படிச் சென்றான்? புகழத்தக்க அங்கிரஸ் தன்னை அக்னித் தேவனாக மாற்றிக் கொண்டு, இருளை அழித்து, அவரது சுட்டெரிக்கும் கதிர்களால் எப்படி உலகை விரக்தியடையச் செய்தார்? என்பது தொடர்பாகக் கற்றோர் இந்தப் பழங்கதையைச் சொல்கின்றனர். ஓ! நீண்ட கரம் கொண்ட வீரனே {யுதிஷ்டிரா} பழங்காலத்தில், பெரும் அங்கிரஸ், தனது ஆசிரமத்தில் ஓர் அற்புதமான தவத்தைச் செய்தார்; அதனால் அவர் தானங்களைச் சுமப்பவனான நெருப்பு தேவனையும் {அக்னித் தேவனை} பிரகாசத்தில் விஞ்சி, அந்த நிலையிலேயே முழு அண்டத்துக்கும் ஒளியூட்டினார்.

அந்நேரத்தில் அக்னித் தேவனும் ஒரு தவத்தைச் செய்து கொண்டிருந்தான். அவரது {அங்கிரசின்} பிரகாசத்தால் அவன் பெரும் விரக்தியடைந்திருந்தான். அவன் {அக்னி} விரக்தியடைந்திருந்தானே ஒழிய என்ன செய்வது என்பதை அறியவில்லை. பிறகு, அந்த வழிபடத்தகுந்த தேவன் {அக்னி} தனக்குள்ளேயே, "இந்த அண்டத்திற்காகப் பிரம்மன் மற்றுமொரு அக்னி தேவனைப் படைத்துவிட்டான். நான் தவம் மேற்கொண்டிருப்பதால், நெருப்பில் உறையும் தேவனான எனது சேவைகள் முடிந்துவிட்டனவே" என்று நினைத்து, தன்னை எப்படி மீண்டும் நெருப்புத் தேவனாக நிறுவி கொள்வது என்பதைக் குறித்துச் சிந்தித்தான்.

முழு அண்டத்துக்கும் நெருப்பைப் போல வெப்பத்தைத் தந்து கொண்டிருந்த அந்தப் பெரும் முனிவரை {அங்கிரசை} அவன் கண்டு, அச்சத்துடன் மெதுவாக அவரை அணுகினான் {அக்னித் தேவன்}. ஆனால் அங்கிரஸ் அவனிடம் {அக்னி தேவனிடம்}, "அண்டத்தை அசைவூட்டி விரைவாக நீ மீண்டும் உன்னை நிறுவிக் கொள். உறுதியான மூன்று உலகங்களிலும் நீ நன்று அறியப்பட்டிருக்கிறாய். மேலும், இருளை விலக்க நீயே முதலில் பிரம்மனால் படைக்கப்பட்டவன். ஓ! இருளை அழிப்பவனே, உனக்கு உரிய இடத்தை நீ விரைவாக ஆக்கிரமித்துக் கொள்" என்றார் {அங்கிரஸ்}.

அக்னி {அங்கிரஸிடம்}, "என் புகழுக்கு இப்போது இவ்வுலகில் பழுது ஏற்பட்டுள்ளது. நீரே நெருப்பு தேவன் ஆகிவிட்டீர். மக்கள் உம்மையே அறிவர். என்னை அறியமாட்டார்கள். நான் நெருப்பு என்ற நல்ல நிலையைத் துறந்துவிட்டேன். நீரே புராதான நெருப்பாகிக் கொள்ளும். நான் இரண்டாவதாகவோ பிரஜாபத்ய நெருப்பாகவோ {பிரஜாபத்யாக்னியாகவோ} அலுவல் புரிகிறேன்" என்றான் {அக்னி}. அதற்கு அங்கிரஸ் {அக்னி தேவனிடம்}, "நீயே நெருப்பு தேவனாகவும் {அக்னித் தேவனாகவும்}, இருளை விலக்குபவனாகவும் ஆகு. மனிதர்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியைச் சுத்தப்படுத்தும் புனிதமான உனது கடமையைச் செய். ஓ! தலைவா {அக்னி தேவா}, என்னை விரைவாக உனது மூத்த பிள்ளையாகச் செய்" என்றார் {அங்கிரஸ்}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அங்கிரசின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அக்னி தேவன் விரும்பியவாறே செய்தான். ஓ! மன்னா, அங்கிரஸ் பிருஹஸ்பதி என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றிருந்தார். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அக்னியால், அங்கிரசுக்கு உண்டான முதல் மகன் அவர் {பிருஹஸ்பதி} என்பதை அறிந்த தேவர்கள், அங்கு வந்து அந்தப் புதிரைக் குறித்து விசாரித்தனர். இப்படித் தேவர்களால் கேட்கப்பட்ட அவர் {அங்கிரஸ்} அவர்களுக்கு அவ்விஷயத்தில் ஞானத்தைக் கொடுத்தார். தேவர்களும் அங்கிரசின் விளக்கத்தை ஏற்றனர். இது தொடர்பாக, ஒவ்வொரு பயன்களுக்காக, அந்தணர்களால் பல்வேறு வகையில் அறியப்படும், பெரும் பிரகாசம் கொண்ட நெருப்பின் {அக்னியின்}, அற {தர்ம} வகைகளைக் {Religious sorts} குறித்து நான் உனக்கு விவரிக்கிறேன். 



[1] தேவர்களுக்காக வழங்கப்படும் தானங்களை அக்னியே {அ} நெருப்பே வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் கங்குலி.

[2]இங்கு குமரன் என்றால் சிறுவன் என்று பொருள் என்கிறார் கங்குலி

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Thursday, March 20, 2014

புறாவுக்குத் தசையீந்த உசீநரன்! - வனபர்வம் பகுதி 131

Usinara gave his flesh for the pigeon! | Vana Parva - Section 131 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

இந்திரன் பருந்தாகவும், அக்னி புறாவாகவும் உருவம் கொண்டு மன்னன் உசீநரனிடம் வருதல்; மன்னன் புறாவைப் பாதுகாத்தல்; புறாவுக்கீடாக மன்னனின் தசையைப் பருந்து கேட்டல்; மன்னனுன் உவகையுடன் தனது தசையை அறுத்துத் துலாக்கோலில் வைத்தல்; புறாவின் எடை கூட இருந்ததால் மன்னன் முழுமையாகத் தன்னைக் கொடுத்தல்...

பருந்து{இந்திரன்} {உசீநராவிடம்}, "பூமியின் அனைத்து மன்னர்களும் உன்னைப் பக்தியுள்ள ஆட்சியாளன் என்று சொல்கின்றனர். ஓ! இளவரசே {உசீநரா}, அப்படிப்பட்ட நீ, விதி எனக்கு அனுமதித்திருக்கும் செயலை ஏன் தடுத்தாய்? நான் பசியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அறத்திற்குச் சேவை செய்வதாக நினைத்துக் கொண்டு தெய்வத்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட இரையைப் {எனக்குக் கொடுக்காமல்} பறிக்காதே. அப்படிச் செய்தால் நீ அறத்தைக் கைவிட்டவனாவாய்" என்று சொன்னது.


அதற்கு அந்த மன்னன் {உசீநரன்}, "ஓ! இறகு படைத்த குலத்தில் சிறந்தவனே {பருந்தே}, உன்மீது கொண்ட பயத்தால் பாதிக்கப்பட்டு, உனது கரங்களில் இருந்து தப்பிய இந்தப் பறவை {புறா}, அவசரத்துடன் என்னிடம் உயிர்ப்பிச்சைக் கேட்டு வந்திருக்கிறது. இவ்வகையில் இந்தப் புறா எந்தன் பாதுகாப்பைக் கோரியிருக்கும்போது, அதை நான் உனக்குத் தராமல் இருப்பதே உயர்ந்த அறம் என்பதை ஏன் நீ காணவில்லை? இப்புறா, பயத்தால் நடுங்கி, துயரத்துடன், என்னிடம் உயிர்ப்பிச்சை கேட்டிருக்கிறது. ஆகையால் இதைக் {புறாவைக்} கைவிடுவது நிச்சயமாகப் பழியையே கொடுக்கும். அந்தணனைக் கொல்பவனும், அனைத்து உலகங்களுக்கும் தாயான பசுவைக் கொல்பவனும், தன்னிடம் பாதுகாப்பு கோரியவனைக் கைவிடுபவனும் சம பங்கு பாவிகளே" என்றான் {உசீநரன்}.

அதற்கு அந்தப் பருந்து {இந்திரன்}, "ஓ! பூமியின் தலைவா, உணவாலேயே அனைத்து உயிரினங்களும் வாழ்வைப் பெற்று வளர்கின்றன. உயிரைத் தக்க வைத்துக் கொள்கின்றன. ஒரு மனிதன் தனக்கு மிகவும் விருப்பமானதைக் கைவிட்டு நீண்ட காலம் வாழ்ந்து விடலாம். ஆனால் உணவைத் தவிர்த்துவிட்டு அவனால் வாழ முடியாது. ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {உசீநரா}, உணவை இழந்த நான் நிச்சயம் எனது உடலைவிட்டு, இது போன்ற தொல்லைகளை அற்ற அறிய முடியாத உலகங்களை அடைந்துவிடுவேன். ஓ! பக்தியுள்ள மன்னா {உசிநரா}, ஆனால், நீ இந்த ஒரு புறாவைக் காப்பாற்றுவதால் ஏற்படும் எனது மரணத்தினால், எனது மனைவியும் மக்களும் அழிந்து போவார்கள். ஓ இளவரசே! அப்போது நீ பல உயிர்களைக் காக்காமல் விடுகிறாய். அறத்தின் பாதையில் குறுக்கே நிற்கும் மற்றொரு அறம் நிச்சயம் அறமாகாது. உண்மையில் அது நேர்மையற்ற செயலாகும். ஆனால், ஓ மன்னா {உசீநரா}, சத்தியத்தைப் பராக்கிரமமாகக் கொண்டவனே, எந்த அறம் மற்ற அறங்களுக்குக் குறுக்கே நிற்காமல் இருக்குமோ அதுவே அறம் என்ற பெயருக்குத் தகுதி வாய்ந்ததாகும். ஓ! பெரும் இளவரசே {உசீநரா}, எதிர்க்கும் {முரண்பட்ட} அறங்களுக்கிடையே ஒரு ஒப்பாய்வைச் செய்த பிறகு, ஒவ்வொன்றின் நன்மைகளையும் கருத்தில் கொண்டு, எது தீமையில்லையோ அந்த அறத்தைக் கைக்கொள்ள வேண்டும். ஓ! மன்னா, ஆகையால், அறங்களைத் துலாக்கோலில் ஏற்றி, முதன்மையானதை {நல்லறத்தை} ஏற்றுக் கொள்" என்றது {பருந்து-இந்திரன்}.

இதற்கு அம்மன்னன் {உசிநரன் பருந்திடம்}, "ஓ பறவைகளில் சிறந்தவனே, நீ மிகவும் நன்மை நிறைந்த வார்த்தைகளைப் பேசுவதால், நீ பறவைகளின் ஏகாதிபதியான சுபர்ணன் {கருடன்} என்று நினைக்கிறேன். நீ அறத்தின் வழிகளைக் குறித்து முழுதும் அறிந்தவன் என்பதைத் தீர்மானிக்க நான் சிறிதும் தயக்கப்பட வேண்டியதில்லை. நீ அறம் குறித்து ஆச்சரியப்படும் வகையில் பேசுவதால், நீ அறியாத எதுவும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். உதவி நாடி வந்தவனைக் கைவிடும் ஒருவனை எப்படி அறம்சார்ந்தவன் என்று நீ கருத முடியும்? ஓ! விண்ணதிகாரியே, இக்காரியத்தில் உனது முயற்சி உணவைத் தேடுவதுதானே. உன்னால் வேறு உணவையோ, வேறு அதிகமான உணவையோ உண்டு உனது பசியைப் போக்கிக் கொள்ள முடியுமே. மாடு, பன்றி, மான் அல்லது எருமை என இன்னும் சுவைநிறைந்த வேறு எந்த உணவைக் கேட்டாலும் நான் அதை உனக்காகப் பெற்றுத்தரத் தயாராக இருக்கிறேன்" என்றான்.

அதற்கு அந்தப் பருந்து {உசிநராவிடம்}, "ஓ! பெரும் மன்னா, பன்றி, மாடு அல்லது வேறு எந்த வகையின் விலங்கையும் {விலங்கின் இறைச்சியையும்} உண்ண விரும்பவில்லை. வேறு வகை உணவால் எனக்கு என்ன பயன்? ஆகையால், க்ஷத்திரியர்களில் காளையே, சொர்க்கத்திலிருந்து இன்று எனக்கான உணவாக விதிக்கப்பட்ட அந்தப் புறாவை எனக்குக் கொடு. ஓ! பூமியின் தலைவா {உசீநரா}, புறாக்களைப் பருந்துகள் தின்பது என்பது தொன்றுதொட்ட வழக்கம்தானே. ஓ! இளவரசே, வாழைமரத்தின் பலத்தை அறியாமல், ஆதரவுக்காக அதைக் {வாழைமரத்தைக்} கட்டிப்பிடிக்காதே.

அதற்கு அம்மன்னன் {உசிநரன் பருந்திடம்}, "விண்ணதிகாரியே, நான் எனது குலத்துக்குச் சொந்தமான நாட்டின் வளங்களை உனக்கு அளிக்க விரும்புகிறேன். அல்லது நீ விரும்பும் எதையும் கொடுக்கச் சித்தமாகி இருக்கிறேன். எனது பாதுகாப்பை நாடி வந்திருக்கும் இந்தப் புறாவை மட்டும் விட்டுவிட்டு, நீ எதைக்கேட்டாலும் நான் மகிழ்ச்சியுடன் கொடுப்பேன். இந்தப் பறவையின் {புறாவின்} விடுதலைக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குத் தெரிவி. ஆனால் எச்சந்தர்ப்பத்திலும் இதை {இப்புறாவை} நான் உனக்கு அளிக்க மாட்டேன்" என்றான்.

அதற்கு அந்தப் பருந்து , "ஓ மனிதர்களின் பெரும் ஆட்சியாளா, உனக்கு இந்தப் புறாவின் மீது அவ்வளவு ஆசை இருந்தால், உனது தசையின் ஒரு பகுதியை அறுத்து, அந்தப் புறாவின் எடைக்கேற்ப துலாக்கோலில் நிறுத்து. புறாவின் எடைக்குத் தக்க துலாக்கோல் நிற்பதாக நீ கருதினால் அதுவே எனக்குத் திருப்தியைக் கொடுத்துவிடும்" என்றது. அதற்கு அந்த மன்னன், "ஓ! பருந்தே, இந்த உனது கோரிக்கையை, எனக்கான உதவியாக நான் கருதுகிறேன். ஆகையால், துலாக்கோலில் நிறுத்திய பிறகு நான் எனது தசையை உனக்குக் கொடுப்பேன்" என்றான்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இதைச் சொன்ன பிறகு, உயர்ந்த அறம் சார்ந்த அந்த மன்னன் {உசிநரன்} தனது தசைப்பகுதியை வெட்டியெடுத்து, புறாவின் எடைக்கெதிராகத் துலாக்கோலில் நிறுத்தினான். தனது தசையை விடப் புறவின் எடை அதிகமாக இருப்பதாகக் கண்டான். பிறகு மேலும் தனது தசை அறுத்து, ஏற்கனவே இருப்பதோடு வைத்தான். பகுதிக்குப் பின் பகுதியாக அவன் வைத்தாலும் புறாவே எடை கூடியதாக இருந்தது. அவனது உடலில் வேறு தசையும் இல்லை. ஆகையால் தசைகளற்ற அவன் தானே அந்தத் துலாக்கோலில் ஏறி அமர்ந்து கொண்டான்.

பிறகு அந்தப் பருந்து {உசிநராவிடம்}, "ஓ அறம்சார்ந்த மன்னா, நான் இந்திரன். தெளிந்த வேள்வி நெய்யைச் சுமப்பவனான அக்னியே இந்தப் புறா. உனது தகுதியைச் சோதிப்பதற்காகவே நாங்கள் இந்த வேள்விக்களத்திற்கு வந்தோம். நீ உனது உடலில் இருந்து உனது தசையை அறுத்துக் கொடுத்ததால், உனது புகழ் எப்போதும் நிலைத்திருப்பதோடு மட்டுமின்றி, இந்த உலகத்தில் மற்ற அனைவரின் புகழை விடவும் விஞ்சியே நிற்கும். ஓ மன்னா, மனிதர்கள் உன்னைக் குறித்துப் பேசும் காலம் வரை, உனது புகழும் ஓங்கி உயர்ந்து நிற்கும். நீ உயர்ந்த புனிதமான உலகங்களில் வசிப்பாய்" என்றான். மன்னனிடம் இதைச் சொன்ன இந்திரன் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். அந்த அறம்சார்ந்த மன்னன் உசீநரன், தனது பக்தி நிறைந்த செயல்களால் சொர்க்கத்தையும் பூமியையும் நிறைத்து, ஒளிரும் உடலுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த உன்னத இதயம் கொண்ட ஏகாதிபதியின் {உசீநரனின்} வசிப்பிடத்தைப் பார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இங்கே புனிதமான தவசிகளும், தேவர்களும் ஒன்றாக அறம்சார்ந்த உயர் ஆன்ம அந்தணர்களுடன் காணப்படுவார்கள்" என்றார் {லோமசர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்