ஞாயிறு, 19 மே, 2013

சந்தனுவின் மைந்தர்கள் | ஆதிபர்வம் - பகுதி 101



(சம்பவ பர்வ தொடர்ச்சி)

வைசம்பாயணர் சொன்னார், "ஓ ஏகாதிபதியே, திருமணச் சடங்குகள் முடிந்ததும், மன்னன் சந்தனு, அந்த அழகான மணமகளை தனது இல்லத்தில் அமர்த்தினான். விரைவில் சத்தியவதிக்கு புத்திக்கூர்மையுள்ள வீர மைந்தனாக ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு சந்தனு, சித்திராங்கதன் என்று பெயரிட்டான். அவன் பெரும் சக்தியுடன் திறமை வாய்ந்தவனாக இருந்தான்.

பயங்கரமானவன் | ஆதிபர்வம் - பகுதி 100



(சம்பவ பர்வ தொடர்ச்சி)

வைசம்பாயணர் சொன்னார், "தேவர்களாலும் அரச முனிகளாலும் புகழப்பட்ட அந்த ஏகாதிபதி சந்தனு, தனது ஞானத்திற்காகவும், அறச்செயல்களுக்காகவும், உண்மை நிறைந்த பேச்சுக்காகவும் எல்லா உலகங்களிலும் அறியப்பட்டிருந்தான். தன்னடக்கம், தயாளம், மன்னிக்கும் குணம், புத்திகூர்மை, அதிகாரத்தில் மென்மை, பொறுமை, அதீத சக்தி ஆகிய குணங்கள் அந்த மனிதர்களில் எருதைப் போன்றவனிடம் (சந்தனு) வசித்தன. அறம், பொருள் ஆகியவற்றில் சரளமாக இருந்து, பரத குலத்தையும், மனித குலத்தையும் காத்து வந்தான் அந்த ஏகாதிபதி. அவனது கழுத்தில் சங்கில் (சங்கு) உள்ளது போல மூன்று கோடுகள் இருந்தன. அவனது தோள் அகலமாக இருந்தது. மதங்கொண்ட யானையின் வீரத்தை அவன் பிரதிபலித்துக் கொண்டிருந்தான்.

வியாழன், 16 மே, 2013

மஹாபாரத வம்ச வரலாறு - படத்துடன்

ஆதிபர்வம் 95ம் பகுதியான அறம் வளர்க்கும் குல வரலாறு என்ற பதிவில் திரு.ஜெயவேலன் என்ற நண்பர் ஒருவர், 50 பெயர்களுடன் ஒரு வம்ச வரலாறை பட்டியலிட்டு மறுமொழியாகக் கொடுத்திருந்தார். மொழிபெயர்த்த எனக்குக்கூட அதில் 50 பெயர்கள் இருந்தது தெரியாது. மஹாபாரதத்தில் மொத்தம் எத்தனை மனிதர்கள்தான் வருவார்கள் என்று நினைத்தேன். அது ஒரு வரைபடமாகக் கிடைக்காதா என்று எண்ணினேன்.  இணையத்தில் தேடியதில் ஆங்கிலத்தில் ஒரு அருமையான படம் கிடைத்தது. அதுவும் முழுமையானது அல்ல. சுருக்கம் தான். பல தலைமுறைகளைக் காண்பிக்காமலேயே படமளித்திருந்தனர். அதை அப்படியே தமிழில் மொழிமாற்றம் செய்து கீழே தருகிறேன்.

புதன், 15 மே, 2013

உண்மையை வெளிப்படுத்தினாள் கங்கை - பகுதி 99



(சம்பவ பர்வ தொடர்ச்சி)

சந்தனு, "வசுக்களின் குற்றம் என்ன? அபர்வா என்பது யார்? யாருடைய சாபத்தால் வசுக்கள் மனிதர்கள் மத்தியில் பிறந்தனர்? இந்த உனது குழந்தை கங்கதத்தன், மனிதர்களுடன் வாழும்படி என்ன செய்தான்? ஜானுவின் மகளே, எனக்கு முழுமையாகச் சொல்." என்றான்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "இப்படிக் கேட்கப்பட்ட ஜானுவின் தெய்வீக மகள் கங்கை, தனது கணவனான, மனிதர்களில் எருதைப் போன்ற அந்த ஏகாதிபதியிடம், " பரத குலத்தில் சிறந்தவரே, வருணனால் மகனாகப் பெறப்பட்டவரே வசிஷ்டர், அந்த முனிவர் பிற்காலத்தில் அபர்வர் என்று அறியப்பட்டார். அவரது ஆசிரமம், மலைகளின் மன்னன் மேருவின் மார்பில் வீற்றிருந்தது. அந்த இடம் பல பறவைகளுடனும், மிருகங்களுடனும் புனிதமானதாக இருந்தது. அங்கே எல்லா காலங்களிலும், அந்தந்த காலங்களுக்கு ஏற்ற வகையில் மலர்கள் பூத்துக் குலுங்கும். பரதகுலத்தில் சிறந்தவரே, அறம்சார்ந்த மனிதர்களில் முன்னவரான அந்த வருணனின் மகன், தனது ஆன்மிக நோன்புகளை இனிய கிழங்குகளும் நீரும் நிறைந்திருந்த அந்தக் கானகத்திலேயே செய்து வந்தார்.

குழந்தைகளைக் கொன்றாள் கங்கை - பகுதி 98



(சம்பவ பர்வ தொடர்ச்சி)



வைசம்பாயணர் சொன்னார், "அந்த மங்கை, இனிமையான மெலிதான வார்த்தைகளைப் பேசி புன்னகைத்து நிற்கும் ஏகாதிபதியைக் கண்டு, வசுக்களிடம் தான் செய்த உறுதியை நினைத்துப் பார்த்து, மன்னனிடம் மறுமொழி கூறினாள். குற்றமற்ற குணம் கொண்ட அந்த மங்கை, தனது ஒவ்வொரு வார்த்தையாலும், இதயத்தை ஊடுருவும் இன்பத்தை மன்னனுக்குக் கொடுத்தாள்.  

திங்கள், 13 மே, 2013

சந்தனு கங்கையைச் சந்தித்தான் - பகுதி 97



(சம்பவ பர்வ தொடர்ச்சி)



வைசம்பாயணர் சொன்னார், "அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டும், பிரதீபன் என்றொரு மன்னன் இருந்தான். அவன், பல வருடங்களாக தனது ஆன்மிக நோன்புகளை கங்கையின் பிறப்பிடத்தில் செய்து வந்தான். ஒரு நாள், அழகும் திறமையும் நிறைந்த கங்கை, பெண்ணுரு கொண்டு, நீரிலிருந்து எழுந்து மன்னனை அணுகினாள். அந்த கவர்ச்சிகரமான அழகான தேவலோக மங்கை, தனது ஆன்மிகக் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த அரச முனியின் ஆண்மை மிக்க சால மரத்தைப் போன்ற வலது தொடையில் அமர்ந்தாள்.  

சனி, 11 மே, 2013

கங்கை - மஹாபிஷன் மோகம் - பகுதி 96



(சம்பவ பர்வ தொடர்ச்சி)



வைசம்பாயணர் சொன்னார், "இக்ஷவாகு குலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் மஹாபிஷன் என்ற பெயருடன் இருந்தான். அவன் முழு உலகத்திற்கும் அதிபதியாக இருந்தான். அவன் உண்மையான வீரத்துடனும், உண்மை நிறைந்த பேச்சுடையவனாகவும் இருந்தான். ஆயிரம் குதிரை வேள்விகளையும் (அஸ்வமேத யாகங்களையும்), நூறு ராஜசூய வேள்விகளையும் செய்து தேவர்கள் தலைவனைத் திருப்திப் படுத்தி சொர்க்கத்தை அடைந்தான்.

அறம் வளர்க்கும் குல வரலாறு - பகுதி 95



(சம்பவ பர்வ தொடர்ச்சி)

ஜனமேஜயன், " பிராமணரே, நான் இதுவரை எனது மூதாதையர்களின் பெரும் வரலாறுகளைக் கேட்டறிந்தேன். இந்த குலத்தில் பிறந்த பெரும் ஏகாதிபதிகளைப் பற்றியும் அறிந்தேன். இருப்பினும் நான் திருப்தி கொள்ளவில்லை. அந்தப் பெரும் வரலாறுகள் சுருக்கமாகவே உரைக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், பிராமணரே, அந்த வரலாறுகளை படைப்பு கர்த்தா மனுவில் தொடங்கி விபரமாகத் தெரிவிக்கவும். யார் தான் இந்த வரலாறுகளைப் புனிதமாகக் கருதமாட்டார்கள்? அவர்கள் கடைப்பிடித்த அறங்கள், சாதனைகள், உயர்ந்த குணம் ஆகியவற்றால் அந்த ஏகாதிபதிகளின் புகழ் மூவுலகங்களுக்கும் பரவும்படி உயர்ந்தது. அவர்களின் தயாளம், வீரம், உடல் பலம், மனோ பலம், சக்தி, நிலைத்த தன்மை ஆகியவற்றை தேன் போன்ற இனிமையான உங்கள் சொற்களால் கேட்டேன். இருப்பினும் நான் திருப்தி கொள்ளவில்லை." என்றான்.
 

Copyrighted

Copyrighted.com Registered & Protected 
HYKG-390M-3GAP-JKFB

MyFreeCopyright

MyFreeCopyright.com Registered & Protected
mahabharatham.arasan.info. இயக்குவது Blogger.